Friday, November 28, 2008

தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து




தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து
தமிழில் : ஜீவா ரகுநாத்

வயது : மூன்று - ஐந்து வயதினருக்குட்பட்டது


இந்தப் புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்து என் மகளின் கண்களால் வாசிக்கத் தொடங்கினேன். 16 பக்கங்கள். முடிக்கும்போது, நானே ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

வெகு எளிமையான புத்தகம். கோட்டுச்சித்திரங்கள் போன்ற எளிமையான படங்களுடன் இயல்பான வார்த்தைகளுடன் கூடிய புத்தகம். அபுவின் பந்து உதைக்கப்படும்போது அது பயணிக்கும் திசைகளில், சுழன்று விழும் இடங்களையும் சுவைப்பட சொல்லிச் செல்கிறது ஒருவித தாள கதியில்.

திந்தக்கம் திந்தக்கம் திந்தக்கம் தா என்றும் தரிகிட்ட தகிட்ட தரிகிட்ட தகிட்ட தா என்றும் பரதத்தின் தாளத்தில் சொல்லும் பாங்கு குழந்தைகளை ஈர்ப்பதாயிருக்கிறது. சில வாக்கியங்கள் முடியும்போது ஒரே மாதிரி வார்த்தைகளால் முடிவதால், பப்புவும் என்னோடு சேர்ந்து சொல்ல ஏதுவாயிருக்கிறது. பந்து செல்லும் ஒவ்வொரு இடமும் நமது கற்பனைக்கேற்றவாறு காட்சிகளை விரிக்கலாம்.

மேலும் மெயின் கதாபாத்திரம் அபு மற்றும் பந்து. அபுவின் காலடியிலிருந்து எழும்பிய பந்து
ஊரின் பல இடங்களை சுற்றி அவனது காலடிக்கே எப்படி, யார் யாரை சந்தித்து வருகிறது என்பது கதை.

ஒவ்வொரு பக்கமும் அதிகபட்சம் 15 வார்த்தைகளில் இருப்பதால், எழுத்துக்களை கற்கும்போதும் உபயோகமாக இருக்கும். இரண்டு வயதினருக்குக் கூட படித்துக்காட்டலாம்.

குழந்தைகளுக்கு எந்தப் புத்தகம் பிடிக்குமென்று தெரிந்துக் கொள்வது எளிதல்ல. அவர்களாக படிக்க துவங்கும் வரையில், தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம் வரும்வரை பெற்றோர்களாக நாம்தான் புத்தகங்களை தெரிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. அதாவது, நாம் அவர்களுக்கு இது பிடிக்கலாமென்று எண்ணி மட்டுமே தெரிவு செய்கிறோம். அது சில சமயங்களில் சரியாகவும், சில சமயங்களில் தவறாகவும் போய்விடுகிறது. இந்த புத்தகம் அப்படி சரியான ஒன்றாக, நீண்ட நாள் நினைவில் நிற்கக் கூடியதாக இருக்கும் என நம்புகிறேன்.


மூலக்கதை மலையாளத்தில் : ஜேகப் சாம்சன் முட்டடா

பதிப்பகம் : தூலிகா

8 comments:

Thamiz Priyan said...

நல்ல அறிமுகம்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

//அபுவின் காலடியிலிருந்து எழும்பிய பந்து
ஊரின் பல இடங்களை சுற்றி அவனது காலடிக்கே எப்படி, யார் யாரை சந்தித்து வருகிறது ///


வித்தியாசமா அதே சமயம் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்போல!

ஆயில்யன் said...

//குழந்தைகளுக்கு எந்தப் புத்தகம் பிடிக்குமென்று தெரிந்துக் கொள்வது எளிதல்ல. அவர்களாக படிக்க துவங்கும் வரையில், தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம் வரும்வரை பெற்றோர்களாக நாம்தான் புத்தகங்களை தெரிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. அதாவது, நாம் அவர்களுக்கு இது பிடிக்கலாமென்று எண்ணி மட்டுமே தெரிவு செய்கிறோம். அது சில சமயங்களில் சரியாகவும், சில சமயங்களில் தவறாகவும் போய்விடுகிறது.///


சரிதான்!

பட் குழந்தைகளை - இந்த காலக்கட்டத்தில்- புத்தகம் படிக்கவைப்பது என்பதே பாராட்டுக்குரிய பணிதானே!

Vidhya Chandrasekaran said...

முல்லை அப்படியே புத்தகம் கிடைக்குமிடத்தையூம் கூறுங்களேன்.

சந்தனமுல்லை said...

வித்யா, நான் வாங்கியது லேண்ட்மார்க் புத்தகக்கடையில். ஆனால் தூலிகாவின் இணைய பக்கத்தில் ஆன்லைனில் வாங்க முடியும் என்று தோன்றுகிறது.

ரிதன்யா said...

அப்படியே ஒரு பாடலை(ஐந்தாறு வரிகள்)
எழுதிடிருந்தால் நன்றாக இருக்கும்.

Thamira said...

எப்ப ஆரம்பிச்சீங்க இதை.. சொல்லவேயில்ல..? நடத்துங்க.. நடத்துங்க.. வாழ்த்துகள்.

ஆகாய நதி said...

ம்ம்ம்.... அத பத்தி கேக்கவே ரொம்ப நல்லாருக்கே! :)பாடல்களைக் கேட்டால்...!:)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger