Friday, December 31, 2010

Happy New Year 2011 :-)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....

Sunday, December 19, 2010

மகனே லட்சுமணா !...

ஆராயாத செய்கையும் அவகாச அழுகையும் : (சிறுகதை - Moral story )

ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது மனைவியான லக்ஷ்மியும் போகாத சேத்திரங்கள் இல்லை வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஒரு குழந்தைக்காக பல காலம் தவமிருந்தனர் .ஆனாலும் அவர்களது அழகான் வீட்டில் குழந்தை இல்லாத நிலையே தொடர்ந்து நீடித்தது ,

இந்த சந்தர்பத்தில் ஒரு நாள் வயலுக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தணர் தான் வந்து கொண்டிருந்த பாதையோரம் ஒரு கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்ட காயங்களோடு துவண்டு கிடப்பதைக் காண்கிறார். அந்த கீரிப்பிள்ளைக்கு மனமிரங்கி "ஐயோ பாவம் சின்னஞ்சிறு ஜீவன் ...இதன்காயதிற்கு மருந்திடா விட்டால் அது இறந்து போகக் கூடும் என்றெண்ணி " தன வீட்டுக்கு அதை தூக்கி வந்து அதன் காயங்களுக்கு பச்சிலை வைத்துக் கட்டி போஷிக்கிறார்.

நாட்கள் நகர்கின்றன. பிள்ளையில்லாத வீட்டில் கீரி பிள்ளை ஆனது,துள்ளி விளையாடியது .அந்தணரும் அவரது மனைவியும் கீரிக்கு லட்சுமணன் என்று ஆசை ஆசையாய் பெயரெல்லாம் சூட்டி வளர்த்து வந்தனர். அவர்கள் குழந்தை வரம் வேண்டி எங்கு சென்றாலும் இப்போது கீரிப்பிள்ளையும் உடன் சென்றது சேத்ராடனங்களுக்கெல்லாம். அந்தணர் வயலுக்குப் போனால் லக்ஷ்மிக்கு துணையாய் வீட்டில் இருந்து கொண்டது கீரிப்பிள்ளை.

பழகப் பழக உற்ற துணையாய் அந்த தம்பதிகளின் வாழ்வில் சின்னதாய் ஒரு சுவாரசியம் சேர்த்துக் கொண்டிருந்தது அந்த கீரிப்பிள்ளை.
லட்ச்சுமணா என்றழைத்து விட்டால் போதும் கீரி எங்கிருந்தாலும் தலை நீட்டி எட்டிப்பார்க்கும் அந்த அளவுக்கு அந்தணர் அதை பாசமும் பரிவுமாய் பழக்கி வைத்திருந்தார்.

வராது வந்த மாமணி போல கிருஷ்ணனின் சமந்தக மணி போல இந்த அந்தண தம்பதிகள் செய்த சேத்ராட னங்களின் பலனோ இல்லை கீரி வீட்டுக்குள் நுழைந்த சுபயோக புண்யமோ மிக நீண்ட காத்திருப்பின் பலனாக அந்தணரின் மனைவி லக்ஷ்மி ஒருநாளில் கர்பவதி ஆனார்.

பத்து திங்கள் கழிந்த பின் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.பல புண்ய ஸ்தலங்களுக்கு கால் தேய நடையாய் நடந்ததன் பலனாகப் பிறந்த குழந்தை என்று எண்ணியதால் அந்தணரும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையின் மீது தங்களது உயிரை வைத்தனர்.

கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைக்கு அண்ணனானது.

அக்கம் பக்க வீடுகளில் இருந்தோறேல்லாம் ,

"இதுநாள் வரையிலும் நீங்கள் கீரிப் பிள்ளை வளர்த்ததெல்லாம் சரி தான் ,இனி அதை காட்டில் விட்டு விடுங்கள்,கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி ஒரு காட்டு விலங்கை எல்லாம் போஷித்து வருவது அத்தனை உசிதமானதல்ல,கீரிப் பிள்ளை பாம்பையே எதிர்த்து சண்டையிட்டு வெல்லக் கூடியது,என்ன தான் வீட்டில் வைத்து வளர்த்தாலும் அதன் புத்தி மாறி விடுமா?! "

என்று அந்தண தம்பதிகளை குழப்பவாரம்பித்தனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது ஒரு கோடைநாளில் அதற்கு ஒரு வயது முடியுந் தருவாயில் அதிகாலையில் அந்தணர் வழக்கம் போல தன குழந்தையைக் கொஞ்சி விட்டு வயலுக்குப் போகிறார்.அவரது மனைவி தன் குழந்தைக்கு அமுதூட்டி அது தூங்கியதும் தொட்டிலில் கிடத்தி விட்டு வழக்கம் போல குடிக்க தண்ணீர் சேந்தி வர அருகாமைக்கிணற்றுக்குப் போகிறார்.

வழியில் அண்டை அசலில் குழந்தை எங்கே என்று விசாரித்தவர்களிடம் எல்லாம் ;
"அவன் தூங்குகிறான்,அவனது அண்ணன் லட்சுமணன் அவனுக்கு காவலிருக்கிறான் " என்று சொல்லியவாறு செல்கிறார் அந்த அம்மாள்.

பெரிய காவல் தான் என்று முகவாயில் கை வைத்து அதிசயித்துக் கொண்டார்கள் அந்த அண்டை அசலார் அனைவரும்.

இந்தம்மால் வீடு வந்து சேரும்முன்னே வயலுக்குப் போன அந்தணர் காலை போஜனத்துக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பாதையில் முன் போலவே ஒரு கீரியைப் பார்கிறார். வெறும் கீரியை மாத்திரம் அல்ல ,இந்தக் கீரி ஒரு பாம்புடன் படு ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் பார்க்க நேர்கிறது அவருக்கு.

வீரியமிக்க அந்தச் சண்டையில் கீரி ஜெயிக்கிறது,வாயெல்லாம் ரத்தக் கரையோடு பாம்பைக் கொன்று விட்டு தலை தூக்கிப் பார்த்த அந்தக் கீரியை கண்டதும் அந்தணரும் மெல்லிய மனம் ரத்தம் கண்ட பயத்தில் சட்டென்று துணுக்குற்றுப் போகிறது .

"என் லட்சுமணன் இத்தனை பயங்கரமான கீரி இல்லை, அவன் வீட்டுக் கீரி அவனுக்கு இத்தனை ஆக்ரோஷம் எல்லாம் இருக்க சாத்தியமில்லை"
என்று தன் மனதுக்குள் பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டே பார்வை தழைத்துக் கொண்டு விடு விடுவென தனது வீட்டுக்கு நடையை எட்டிப் போடுகிறார் அந்த அந்தணர்.

வேக வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த அந்தணரின் கண்ணில் பட்ட முதல் காட்சி ...

குழந்தையின் தொட்டில் மீது வாயெல்லாம் ரத்தக் கறை படிந்து போன கீரிப்பிள்ளை லட்சுமணனின் முகம் தான்.

வழியில் கண்ட கீரி பாம்புச் சண்டையால் மனதை அலைக்கழித்த சில நிமிட பயம் மூளைக்கு ஏற அந்தணர் அதீத உணர்வுக்கு ஆட்பட்டு சுவற்றில் அலங்காரத்துக்கு சாற்றி வைத்த வாளை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்தார் தொட்டில் ஊஞ்சல் கட்டையில் அமர்ந்திருந்த லட்சுமணனை இரண்டு ஒரே போடில் துண்டுகளாகப் பிளந்தார்.

தன் எஜமானன் ... தகப்பன் ஸ்தானம் அளித்த ஆருயிர் அந்தணரின் அற்புத வாள் வீச்சில் திக்கித்து உறைந்த கண்களோடு உயிர் விட்டது கீரி.

" நீயோ என்னைக் கொன்றது !?"

தண்ணீர் குடத்தோடு வீட்டுக்குள் நுழைந்த லக்ஷ்மி அம்மாள் நிகழ்ந்த சம்பத்தில் அதிர்ந்து குடத்தை நழுவ விட்டார்.மண்குடம் உடைந்து சிதறியது நீர் வழிய வழிய....;

என்ன காரியம் செய்தீரோ என் அருமை கணவரே!

அந்தணர் பேசவில்லை அவர் ... கண்கள் பேசின ;

"ஒழிந்தாய் காட்டுக் கீர்ரியே என் குழந்தையையா கடித்தாய்! " தாவி ஓடிப் போய் தொட்டிலில் கிடந்த குழந்தையை அள்ளி எடுத்தார். தகப்பன் வாடை கண்டு மெல்லச் சிணுங்கி விழித்த குழந்தை முக மலர்ந்து சிரிக்கவும் உச்சந்தலையில் இடி விழுந்தது அந்தணருக்கு.

குழந்தைக்கு ஒன்றுமில்லையா!

அப்படியானால் லட்சுமணன்! பாதையில் கண்ட கீரி நீயோ! என் குழந்தையின் பொருட்டு உன் உயிரை மதியாது அத்தனை வீரியமாய் சண்டையிட்டது நீயே தானா!

ஐயோ லட்சுமணா....என் மகனே! உன்னை நான் கொன்றேனே!
அலறித் துடித்தார் அந்தணர்.

"ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதுண்டோ!"

மாரல் ஃஆப் தி ஸ்டோரி :

ஆராயாது ஒரு விஷயத்தை செய்து விட்டு,அதன் பலனை எண்ணி அவகாசத்தில் அழுது கொண்டே இருப்பது நல்லதல்ல,எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பே ஒன்றுக்கு இருமுறை யோசித்தே செய்தல் நலம்.

Monday, November 29, 2010

கொஞ்சம் சொந்தக்(நொந்த)கதை :

 


எந்நேரம் வேண்டுமானாலும் விழலாம் , இன்றே ...நாளையே என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.ஆனால் இது ஒரு முக்கியமான நாள்...தருணம் . etc ...etc ,கடந்த மூன்று நாட்களாகவே என் மகள் கொஞ்சம் சோமாகத் தான் இருக்கிறாள்,

முதல் முதல் என்றால் எல்லோருக்குமே அப்படித் தான் போல.எந்நேரமும் என்னை ஒட்டிக்கொண்டே அலைகிறாள் ,

ம்மா ...ரொம்ப வலிக்குமா ?

ச்சே...ச்சே ...இல்லடா குட்டி ;

சுஷ்மிதா சொன்னாளே ரொம்ப வலிக்குமாம் ,உயிரே போற மாதிரி வலிக்குமாம்.

அதெல்லாம் இல்ல...

அவ சொன்னாளே !!! சுஷ்மி பொய் சொல்ல மாட்டா !

ஏன் ?

அவ மகர ராசியாம்

வாட்?!

ம்ம்...டி.வி ல சொன்னாங்க .

சுஷ்மி பொய் சொல்ல மாட்டான்னா ?!

இல்ல ...வாய்மை தவறாத மகர ராசி நேயர்களேன்னு...

( !!! )வேறென்ன பல்பு தான் .

அவ சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாடா குட்டிம்மா .

போம்மா நீ பொய் சொல்ற .

நானா ...ச்சே ...ச்சே ...காட் ப்ராமிஸ் .வலிக்கவே வலிக்காது ,நீ வேணா பாரேன்.

ம்மா ...

ம்ம் ...சொல்லு

ம்மா

சொல்லுடா தூங்கும் போது எவ்ளோ தடவ எழுப்புவ.

ம்மா ...

கண்ணம்மா ...ப்ளீஸ்டா ...தூங்க விட்றா ...

சொல்லிட்டு தூங்கும்மா

சரி கேளு

எப்போ பல்லு விழும்.

அது சீக்கிரம் விழுந்திரும் ,நீ தூங்கு ,காலைல கூட விழுந்தாலும் விழலாம்.

ஐயோ அப்போ என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்கல்ல.

இல்ல ..இல்ல பண்ண மாட்டாங்க.

இல்ல பண்ணுவாங்க .ஒனக்கு தெரியாது.

சரி ...சரி தூங்குடா இப்போ .

இல்ல ...எனக்கு பல்லு மறுபடி எப்போ முளைக்கும்?

சீக்கிரமாவே தான் .

அதான் எவ்ளோ சீக்கிரமா முளைக்கும்?

(தேவுடா ...என்னைக் காப்பாத்த யாருமே இல்லியா?!) பக்கத்தில் தேவ் நல்ல தூக்கத்தில் .

ஹரிணிக்கு இன்னும் கேள்விகள் இருந்தன கேட்பதற்கு .

ஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எத்தனைக்கெத்தனை சுவாரஸ்யமோ அத்தனைக்கத்தனை நொச்சுப் பிடித்த பதவியும் தான்.

:((((

இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ அந்த இத்தனூண்டு மண்டைக்குள் ( மூளைக்குள்- மூளைக்குள்னு ஏன் எழுதலைன்னு அவ நாளைக்கு வந்து கேள்வி கேட்டுடக் கூடாதே! அதுக்கு தான் இந்த அடைப்புக் குறி)
நோட்:


நான் இத்தனை கேள்விகள் கேட்டிருக்கவில்லை என் அம்மாவை , ஏழு வயதில் மனதில் உறுதி வேண்டும் படம் பார்க்க அழைத்துப் போயிருந்தார்கள் ,இடைவேளையில் தியேட்டரில் முறுக்கு வாங்கிக் கொடுத்தார்கள் அம்மாவும் சித்தியும். ;

"கடக்" முன் வரிசைப் பற்களில் ஒன்று காலி.

அப்படியே முறுக்கு பேப்பரில் சுற்றி பத்திரப்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது . ஏன் எதற்கு அப்படிச் செய்தேன் என்றெல்லாம் அப்போது கேட்கத் தோன்றியதே இல்லை .

ஆனால் இப்போதைய குழந்தைகளிடம் கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அம்மாக்களும் அப்பாக்களும் வெறுமே மேலோட்டமாகப் பதிலென்ற பெயரில் எதையாவது சொல்லி சமாதனப்படுத்தி சமாளிக்க முடியவில்லை. அவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.

Monday, November 15, 2010

புத்தகங்கள்

அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

வலையில் பார்த்த சில புத்தகங்கள்..... பதிவிறக்கமும் செய்யலாம்
http://www.childrensbooksforever.com/

குழந்தைகளின் வயதுகேர்ப்ப வகைபடுத்தி இருகிறார்கள்.

அனைவ‌ருக்கும் உப‌யோக‌மாக‌ இருக்கும் என‌ நினைக்கிறேன்.

Sunday, November 14, 2010

சென்னையில் குழந்தைகளின் "நட்புலகம்/Buddiesworld"





Wednesday, October 6, 2010

வாங்க!!! விளையாடலாம்

இந்த பதிவு என் தளத்தில் எழ்தியது. இங்கும் பதிகிறேன்.

என் குழந்தை எல்லா சினிமா பாட்டும் பாடும், எல்லா சீரியல் பெயரும் தெரியும் என்று பெருமை அடித்துக் கொள்ளும் அம்மாக்களை நாம் பார்த்து இருக்கிறோம். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் டிவி பார்க்கக் கூடாது. வேகமாக வளரும் அவர்கள் மூளையில், டிவியில் வேகமாக மாறி மாறி வரும் காட்சிகள் பதிந்து, பின்னாளில் அதே வேகத்தை அவர்கள் வாழ்க்கையிலும், பள்ளியிலும் எதிர்பார்த்து, கிடைக்காததால் அவர்கள் அடையும் எதிர்பலனை இங்கு காணலாம்.

அதே போல் குழந்தைகள் விளையாட வேண்டிய அவசியத்தை இங்கு காணலாம். தீஷுவிடம் அப்பா உன்னோட என்னவெல்லாம் செய்வார் என்றவுடன், அவள் சொன்னது,"கதை சொல்லுவார், யானை மாதிரி, தவளை மாதிரி, குதிரை மாதிரி போக சொல்லுவார்... என்று லிஸ்ட் நீண்டது. அம்மா என்னவெல்லாம் செய்வார் என்றவுடன் ஒன்னுமே செய்ய மாட்டாள் என்றாள். அவளுக்கு அவள் வயதுக்குப் பிடித்தது கதை கேட்பதும், விளையாடுவதும்.

யாரும் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் நான் தீஷுவுடன் கழிக்கும் என் நேரத்தைப்பதிவதன் சொந்த காரணங்கள் - ஒன்று பின்னாளில் தீஷு படித்துப் பார்ப்பாள், மற்றொன்று பதிவு எழுதி நாளாகிவிட்டாது என்பதால் எதையாவது புதிதாக யோசிக்கத்தூண்டும் எண்ணம். Childhood is a journey, not a race. நம் குழந்தையின் பயணத்தில் நாமும் பங்கு கொள்ளலாமே.

நம் குழந்தையை மகிழ்விக்க அவர்களுடன் சேர்ந்து ராக்கெட் ஸைன்ஸ் பற்றி பேச வேண்டாம். கையைப் பிடித்துக் கொண்டு வாக்கிங் போனால் போதும். குழந்தையின் டிவி நேரத்தைக் குறைத்து, அவர்களுடன் நம்முடைய நேரத்தைச் செலவிட்டு, அதை பதிவோம். நாம் எல்லாம் சேர்ந்து செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.

சேர்ந்து செய்வதற்கு என்னுடைய ஐடியா:

1. குழந்தையுடன் செய்த ஏதாவதை ஒன்றை தங்கள் தளத்தில் பதிய வேண்டும். குழந்தையுடன் சேர்ந்து செய்தது எதுவாகவும் இருக்கலாம். வாசித்தது, பேசியது, விளையாண்டது, குதித்தது, சமைத்தது, நடந்தது என எதுவாகவும். குழந்தை வயது வரம்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

2. ஒவ்வொரு புதன் கிழமையும் நான் வாங்க, விளையாடலாம் என்ற தலைப்பில் ஒரு பதிவு போடுவேன். பதிவின் முடிவில் ஒரு லிங்க் வைத்திருப்பேன். அந்த வாரம் முழுவதும் அந்த லிங்க்கில் நீங்கள் உங்கள் தளத்தில் பதிந்த இடுகையில் லிங்க்கை ஏற்றலாம். அதனால் நீங்களும் புதன் கிழமை தான் பதிவு போட வேண்டும் என்பது இல்லை. அந்த வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் பதிந்து, உங்கள் இடுகையை லிங்க்கில் ஏற்றலாம்.

3. உங்கள் இடுகையின் முடிவில் dheekshu தளத்தில் இணைத்திருப்பதைத் தெரிவித்தால், இங்கு வந்து பிறருடைய லிங்கையும் படிக்க அனைவரும் வசதியாக இருக்கும்.

நாம் இந்த சிறு முயற்சியின் மூலம், பிறரையும் பங்கு கொள்ள செய்து வளமான தலைமுறை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த முயற்சியை வேறு விதமாக செய்யலாம் என்று தோன்றினால் சொல்லுங்கள்.மாற்றிக் கொள்ளலாம்.

லிங்க் பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். எனக்கும் இது தான் முதல் முறை. தெரிந்த வரை சொல்லுகிறேன். இந்த பதிவின் முடிவிலும் லிங்க் இருக்கிறது. ஏதாவது ஒரு பதிவை பதிந்து லிங்க் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் இடுகையை இந்த லிங்கில் ஏற்றுங்கள்

Thursday, September 2, 2010

ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்

முந்தா நேற்று மருத்துவமனைக்குச் சென்றபோது ஒரு குழந்தையைச் சந்தித்தேன். பெண் குழந்தை; எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். பார்வையாள‌ர் கூட‌த்துக்கும் வெளியே செருப்புக‌ள் வைக்கும் இட‌த்துக்கும் இடையில் ஓடிக் கொண்டே இருந்தாள். அவள் வயதுக்குக் கொஞ்ச‌ம் வ‌ள‌ர்த்தியான‌ பெண். என் மகள் நேஹாவைப் பார்த்த‌தும், ஆசையாகத் தூக்கிக் கொண்டாள். இவளும் 'அக்கா அக்கா' என்று அவளுடன் விளையாட‌த் துவ‌ங்கி விட்டாள்.

நான் உள்ளே நுழைந்து அம‌ர்வ‌த‌ற்குள் ஒரு நூறு வார்த்தையாவ‌து பேசியிருப்பாள் அந்த‌ச் சிறுமி. "ஆன்டி, உங்க‌ பொண்ணா? ரொம்ப‌ க்யூட்டா இருக்கா...என‌க்கு இந்த‌ மாதிரி சின்ன‌க் குழ‌ந்தைங்க‌ன்னா ரொம்ப‌ப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க‌ ஸ்கூல்ல‌யே நான் தான் ரொம்ப‌ப் பிரில்லிய‌ன்ட். என்னைத் தான் எங்க‌ க‌ளாஸ்ல‌ லீட‌ர் ஆக்கி இருக்காங்க‌ எங்க‌ மிஸ்..."

சுவார‌சியமாக‌வும் ஆசையாக‌வும் அந்த‌ப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவ‌ள் அம்மாவிட‌ம் திரும்பி, "அம்மா, ந‌ம்ப‌ விஷ‌ய‌த்தை இந்த‌ ஆன்ட்டி கிட்ட‌ சொல்லிட‌லாமா....அது இல்ல‌ம்மா... அந்த இன்னொரு விஷ‌ய‌ம்.." என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள், நான் சென்று அம‌ர்ந்து இர‌ண்டு நிமிட‌ம் கூட‌ ஆக‌வில்லை.

அவ‌ர்க‌ளை முன்பின் பார்த்த‌து கூட‌க் கிடையாது.அவ‌ள் அம்மாவின் முக‌ம் அடைந்த‌ த‌ர்ம‌ச‌ங்க‌ட‌த்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவ‌ள் அம்மா ந‌ன்றியுட‌ன் ஒரு புன்னைகை பூத்தார்.

ஒரு நிமிட‌ம் உட்கார‌வில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் "ஆன்டி நான் டான்ஸ் ஆடிக் காட்டவா" என்று அவள் பாட்டுக்குத தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த கைப்பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, 'யாருக்கு ஆன்ட்டி ஃபோன் பண்றீங்க?' என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.

நான்கு அல்ல‌து ஐந்து வ‌ய‌துக் குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி இருப்ப‌து இய‌ல்பு தான்.ஆனால் ப‌த்து வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ சிறுமி?நான் செய்வ‌த‌றியாம‌ல் திகைத்து அவ‌ர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவ‌ர் லேசாக, "ஏய், இங்கே வா" என்றாரே ஒழிய‌, ம‌ற்ற‌ப‌டி பொது இட‌ங்க‌ளில் எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப் புரிய‌வைக்கப் படவில்லை என்ப‌து புரிந்த‌து. குழந்தையின் ந‌லனுக்காக‌ இதைச் செய்திருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌மில்லையா?

பெரிய‌ம‌னுஷி போல் வாய் ஓயாம‌ல் பேசிக் கொண்டிருந்த‌வ‌ள், அவ‌ள் அம்மா, 'கொஞ்ச‌ம் இவ‌ளைப் பாத்துக்கங்க' என்று என்னிட‌ம் விட்டுவிட்டு டாக்ட‌ரைப் பார்க்க‌ உள்ளே சென்ற‌ போது சின்ன‌க் குழ‌ந்தை போல் க‌த்தி அழ‌ ஆர‌ம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய‌ வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிட‌ம் தான்.திடீரென்று க‌ண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல‌ குதியாட்ட‌ம் போட‌த் துவ‌ங்கி விட்டாள்.

அவ்வப்போது, "உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை ஆன்டி" என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், "உங்க‌ அம்மா இப்ப‌டிக் குதிக்க‌க் கூடாதுன்னு சொன்னாங்க‌ இல்ல‌. இங்ல‌ வ‌ந்து பாப்பா கூட உட்காரும்மா." என்றேன்.அவள் கேட்டால் தானே? இவ‌ள் போடும் ஆட்ட‌த்தில் ஆயாசமடைந்து நேஹாவே ‌ச‌ம‌த்தாக‌ என் ம‌டியில் உட்கார்ந்து விட்டாள் சிறிது நேரத்துக்குப் பிறகு!

அவ‌ள் அம்மா வெளியில் வரும் போது, டாக்ட‌ர் இவ‌ள் குர‌லைக் கேட்டு, "யாரு உங்க‌ பொண்ணா?" என்று கேட்டார். த‌ன்னைப் ப‌ற்றித் தான் கேட்கிறார்க‌ள் என்று அறிந்த‌தும் யாரும் அழைக்காம‌லே உள்ளே போன‌வ‌ள், ப‌த‌விசாக‌ டாக்ட‌ர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்குச் ச‌ம‌த்தாக‌ப் ப‌தில‌ளித்த‌வ‌ள், "தேங்க்யூ மேம்" என்ற‌ப‌டியே வெளியில் வ‌ந்தாள்.

உண்மையில் அந்த‌ப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பும் தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவ‌ள‌து செய‌ல்க‌ள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன‌.

பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ளிட‌ம் கூட ச‌ட்டென்று நெருங்கி அன்யோன்ய‌மாவ‌தும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். ங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவ‌ள் அம்மாவுக்கும் அவ‌ளுக்குமான‌ ஏதோ ர‌க‌சிய‌த்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்ல‌ட்டுமா என்ற‌தையும் எந்த‌ ர‌க‌த்தில் சேர்ப்ப‌து?

உண்மையில் அவள் 'பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்' என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் ப‌த்து வ‌ய‌தில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா ந‌ன்றாக‌க் கொடுத்திருப்பார்க‌ள்.

அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்க‌ளுக்கு என்ன‌ தோன்றுகிற‌து? Am I over reacting, just because she is some stranger's kid?

இது ப‌ற்றி சிந்தித்த‌ போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்:அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம். இந்த‌ இடுகையினைப் பாருங்க‌ள். முர‌ட்டுத்த‌ன‌ம் மிகுந்த‌ ஒரு சிறுவ‌னை ஒரு ப‌ள்ளியில் எப்ப‌டி மாற்றி இருக்கிறார்க‌ள் என்று.

ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (attention seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்ப‌டி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?

Little women என்கிற‌ புக‌ழ்பெற்ற‌ நாவ‌லில் ஒரு ச‌ம்ப‌வ‌ம் வ‌ரும். நான்கு ம‌க‌ள்கள் கொண்ட‌ அம்மா தன் சுட்டியான க‌டைசி ம‌க‌ளிட‌ம் பேசுவ‌தாக‌: "க‌ண்ணா உன‌க்கு நிறைய அறிவும் திற‌மைகளும் இருக்கு. அதுக்காக‌ அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்க‌ணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திற‌மையும் நீ வ‌ள‌ர்த்துகிட்டே போனா, உன் பேச்சில‌யும் உன் செய்கைக‌ளிலுமே அது இய‌ல்பா வெளிப்ப‌டும். நீயா வெளிச்ச‌ம் போட்டுக் காட்ட‌ற‌து அழ‌கில்லை" என்று.

அப்போது அவ‌ள‌து அக்கா ஜோ (க‌தையின் நாயகி) சொல்வாள், "ஆமாம், உன் கிட்ட‌ ஏழெட்டு தொப்பி, ப‌த்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க‌ எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய‌ போனா எப்ப‌டி இருக்கும்? அதே மாதிரி தான்" என்பாள்.போட்டிகளும் விளம்பரங்களும் அதிகரித்து வரும் இன்றைய‌ வியாபார உல‌க‌த்தில் இந்தச் சிறு அறிவுரை (piece of wisdom) செல்லாக்காசாகி விட்ட‌தோ?

Thursday, July 8, 2010

மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 2

ஆச்சர்யத்தில் உறைந்து போன மச்சேந்திர மனோகரனை அதிக நேரம் இம்சிக்காமல் உடனே பேச ஆரம்பித்தது மீன் ;

இளவரசனே என்னை உன் கையில் இருந்து நொடியில் கடலுக்குள் வீசு இல்லையேல் நான் அடுத்த பத்தாம் நிமிடம் வெறும் கருவாடாகிப் போவேன்,இது உண்மை ,என் சொல்படி செய்,சீக்கிரம்...சீக்கிரம் என்னை கடலுக்குள் வீசு. சொல்வதை செய் , மீன் கோபமாய் ஆணையிட்டது

மச்சேந்திரனுக்கு மீன் பேசுவது ஒரு அதிசயம் எனில் அது இவனுக்கு ஆணையிடுவது இன்னும் அதிசயமாய் தோன்றியது.

ஏ ...தங்க மீனே உன்னை பிடித்துக் கொண்டு போய் என் தங்கையின் கையில் ஒப்படைக்காவிட்டால் நான் அவளுக்கு பாசமிக்க அண்ணனாக இருக்கும் தகுதியை இழந்து விடுவேன் அதனால் வாயை மூடிக் கொண்டு என்னோடு வா.அரண்மனையின் தங்கத் தொட்டியில் உன்னை விட்டதும் பிறகு நீ பேசுவதை நான் பொறுமையாக கேட்டுக் கொள்கிறேன் .

அவன் எள்ளலாய் கையிலிருக்கும் மீனைப் பார்த்துக் கொண்டே பேசப் பேச மீன் இப்போது சுவாசமின்றி துடித்து துள்ளி துள்ளி திணற ஆரம்பித்திருந்தது .

"இ...ள...வர...சனே நான் இத்த...னை சொல்லியும் கேளா...மல் நீ தவறு செய்கிறாய் ..இதற்கான ப...ல...னை"

(அதற்குள் பத்தாம் நிமிடம் கடந்து விட தங்க மீன் காய்ந்து வெறும் கருவாடகிப் போகிறது!

மச்சேந்திர மனோகரன் சட்டென நிகழ்ந்து விட்ட இந்த காரியம் கண்டு திக்பிரமையில் அதிர்ந்து போனான்.

கப்பலின் விளிம்பை கடலுக்குள் இருந்தவாறே தலை உயர்த்தி நோக்கினான்.மீனலோஷினி இந்த தங்க மீனுக்காக எத்தனை ஆசையோடு காத்துக் கொண்டிருப்பாள் ,அவளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்ற வருத்தம் அவனை உற்சாகமிழந்து தளர்ந்து போக வைத்தது ,கையில் கருவாடாகிப் போன மீனை ஏந்திக் கொண்டு தங்கைக்கு என்ன பதில் சொல்லப் போகிறோமோ என்ற அளவில்லாத ஏமாற்றத்துடன் இளவரசன் கப்பலை நோக்கி நீந்தி நூலேணியில் கப்பலுக்குள் ஏறி இளவரசியும் மன்னனும் மற்றவர்களும் இருக்கும் இடத்துக்கு வருகிறான் .

அங்கே அவன் கண்ட காட்சி அவனை பேரதிர்ச்சியில் சில்லிட்டு உறைய வைப்பதாக இருந்தது.

என்னருமை தங்கைக்கு என்ன ஆயிற்று ? ஏன் ...இப்படி உருமாறிப் போனாள் என்று மச்சேந்திரன் தங்கை மீனலோஷினியின் அருகே விரைந்து செல்கிறான்.


இவனைப் போலவே கடலுக்குள் தங்க மீனைத் தேடச் சென்ற மற்ற சகோதரர்களும் அங்கே முன்பே வந்து விட்டபடியால் அனைவருமே ஒரே விதமான அதிர்ச்சியால் தாக்கப் பட்டு செய்வதறியாது திகைத்து போய் நின்றிருந்தனர்.

மன்னன் மற்றும் மகாராணியின் கண்களில் கண்ணீர் பெருகி ஓடுகிறது,

தனக்கு நேர்ந்த உருமாற்றத்தால் அதிர்ச்சியில் மயங்கித் துவண்டிருந்த இளவரசி மீனலோஷினி தன் அன்னையான மகாராணியின் மடியில் தலை சாய்த்திருந்தாள். தலை உடல் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது ஆ...னால்....ஆ...னால் அவளது கால்....கால்...கால்களை மட்டும் காணோம்...

எங்கே போயின இளவரசியின் கால்கள் !

இளவரசியின் கால்களுக்கு என்ன ஆயிற்று !!!

நாளை வரை காத்திருங்கள்.


தொடரும்...

Wednesday, July 7, 2010

சுனிதா கிருஷ்ணன் - பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்

சுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம் சில நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் ஒருவர் பகிர்ந்த அந்த விடியோவை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தொண்டை கிழியக் கத்திச் செத்துவிட மாட்டோமா என்றிருந்த‌து.

ஆனால் பின்னால் ஒலித்த உறுதியான குரல் காதுகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. "பல்லாயிரக்கணக்கானப் பெண் குழந்தைகளும் சிறுமிகளும் நாள் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதும், சிறு சலனம் கூட இல்லாமல் இது குறித்து நிலவும் பெருத்த மௌனமுமே என்னைப் பெருஞ்சினம் கொள்ள வைக்கின்றன"

அந்தக் குரலுக்குச் சொந்தமானவர்:

சுனிதா கிருஷ்ணன்
இவர் மனிதப் பிறவி தானா? பெண் தானா?
நாலாயிர‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பாலிய‌ல் தொழில், ம‌ற்றும் க‌ட‌த்த‌லிலிருந்து காப்பாற்றியிருக்கும் இவ‌ரை என்ன‌வென்று சொல்வ‌து?

பதின்ம‌பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான இவர் அதனால் துவண்டு விடாமல் பழகிய ரௌத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்திருக்கிறது!ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? வணங்குகிறேன் சுனிதா உங்களை.ஐந்து வயது கூட நிரம்பாத பிஞ்சுகளுக்குக் கூட நேரும் கொடுமைகளை இவர் விவரிப்பதைக் கேட்கக் கூட நம்மால் முடியவில்லை. அடி உதை, சித்ரவதை எல்லாம் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி இவர் மீட்ட குழந்தைகள் ஆயிரமாயிரம்.

1996 ல் இவர் தொடங்கிய‌ ப்ர‌ஜ்வாலா அமைப்பு ஐந்து முக்கிய‌ பணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்துகிற‌து: த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கை, காப்பாற்றுத‌ல், ம‌றுவாழ்வு, ஒருங்கிணைப்பு, பிர‌சார‌ம்.

த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் முக்கிய‌மான‌து பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ளுக்குக் க‌ல்வி கொடுப்ப‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளும் அதே பாதையில் சென்றுவிடாம‌ல் த‌டுப்ப‌து. ஐந்து குழ‌ந்தைக‌ளுட‌ன் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இவ்வ‌மைப்பு இப்போது ஐயாயிர‌ம் சிறுமிகளுக்கு ம‌றுவாழ்வு அளித்துள்ள‌து.

பேருந்து மற்றும் நிலைய‌ங்க‌ளில் சோதனை நடத்தி குழ‌ந்தைக‌ள் க‌ட‌த்த‌ப் ப‌டுவதையும் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ள் அதே சுழ‌ற்சில் சிக்குவதையும் த‌டுப்பது. இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முல‌ம் ம‌ட்டும் 1700 சிறுமிகளும் மொத்த‌மாக‌ 3200 சிறுமிகளும் ப்ர‌ஜ்வாலா மூல‌ம் காப்பாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

அத்தொழிலிலேயே சிறுவ‌ய‌து முத‌ல் ஈடுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளைக் காப்பாற்றுவ‌தும் ம‌றுவாழ்வு அளிப்ப‌தும் சவாலான‌ செய‌ல் தான் என்றும் கூறுகிறார் சுனிதா. அவ‌ர்க‌ள் உண்மையில் ம‌றும‌ல‌ர்ச்சி அடைய‌ வெகுகால‌ம் ஆகிற‌தாம்.

த‌ன‌து புனித‌ப் போரில் சுனிதா ச‌ந்தித்த‌ கொடுமைக‌ளும் கொஞ்ச‌ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. க‌ட‌த்த‌ல் ர‌வுடிக‌ளிட‌மிருந்து சிறுமிக‌ளைக் காப்பாற்றப் போன‌ இட‌த்தில் வாங்கிய் ஆடி உதையால் இவ‌ர‌து வலது காது கேட்கும் திற‌னை இழ‌ந்திருக்கிற‌து. ஆனால் த‌ன‌து இழ‌ப்பு தான் காப்பாற்ற‌த் த‌வ‌றிய‌, அல்ல‌து காப்பாற்றியும் உயிர‌ழ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் இழ‌ப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று நெஞ்ச‌ம் உருகுகிறார் சுனிதா. (அதை என்னால் மொழிபெய‌ர்த்து எழுத‌ முடியாது. ம‌ன்னியுங்க‌ள்.)

தன் போராட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இவர் சொல்வது, ரவுடிகளிடம் அடிவாங்குவதோ, மிரட்டல்களோ இல்லை; பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கும் மனப்பான்மை சமூகத்தில் இல்லாதது தான், என்கிறார்.

அவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் கூட, பண உதவி செய்பவர்கள்கூட தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பயப்படும் அறிவீனத்தை எண்ணி மனம் வெதும்புகிறார்.

சமூகத்தில் இந்த மனப்பான்மை இருக்கும் வரை இவர்களுக்கு மறுவாழ்வு என்பது மிகக்கடினமான ஒன்று தான் என்பது தான் இவரது ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக‌, சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது, "சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது."

ஏதாவ‌து செய்ய‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர‌து போராட்ட‌த்துக்கு இய‌ன்ற‌வ‌ரை உத‌வுவோம். நாம் செய்ய‌க் கூடிய‌ மிக‌ச்சிறிய‌ செய‌ல் அது ம‌ட்டும் தான்.

Must Read:

http://sunithakrishnan.blogspot.com/

http://www.amazingwomenrock.com/myblog/anti-trafficking-crusader-sunitha-krishnan-fights-to-save-women-girls-in-india.html

http://www.amazingwomenrock.com/ted-talks/sunitha-krishnans-fight-against-sex-slavery.html -ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌வேண்டாம் என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

The address of Prajwala to which willing people can send their contributions.
Prajwala
20-4-34,III Floor
Behind Charminar Bus Stand
Charminar
Hyderabad


நன்றி - சிதறல்கள் தீபா

மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 1

முன்னொரு காலத்தில் மச்சேஸ்வரம் என்றொரு நாடு இருந்ததாம்,அந்த நாட்டை மச்சேந்திரன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆண்டு வந்தான்,மன்னனுக்கும் மகாராணிக்கும் நிறையக் குழந்தைகள் இருந்தாலும் எல்லாமே ஆண் குழந்தைகளாகவே இருந்ததால் அவர்களுக்கு பெண் குழந்தை வேண்டும் எனும் ஏக்கம் நெடுநாட்களாக இருந்து வந்தது.அந்தக் கால வழக்கப்படி மன்னன் பெண்குழந்தை வேண்டி பல யாகங்களை செய்து பார்கிறான்,பல கோயில் தலங்களுக்கும் மனைவியோடும் மந்திரி பிரதாநிகளோடும் சென்று வருகிறான்,இப்படி இருக்கையில் ஏழு ஆண்குழந்தைகளுக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து அதிசயமாக அவர்களது விருப்பப்படி எட்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை மகாராணிக்குப் பிறக்கிறது.அந்தப் பெண் குழந்தைக்கு மீனலோஷினி என்று பெயரிட்டு அருமை பெருமையாக ராஜ தம்பதிகள் வளர்த்து வருகிறார்கள் .

மீனலோஷினி அவளது அண்ணன்கள் ஏழு பேரிடத்தும் மிகுந்த அன்புடையவளாக வளர்கிறாள்.தங்கை மீது ஏழு அண்ணன்களுக்கும் இருக்கும் பாசத்தை எதைக் கொண்டும் அளக்க இயலாது அத்தனை பிரியமான சகோதரர்கள் அவர்கள். மீனலோஷினி மச்சேஸ்வரத்து அரண்மனையின் செல்ல இளவரசியாக வலம் வருகிறாள். ராஜாவுக்கும் ராணிக்கும் அவளே உயிர் என்றாகி நாட்கள் நகர்கின்றன. இளவரசி வளர வளர அவளுக்கு சகல விதமான கலைகளும் ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்து அவளை தன்னிகரில்லாத பெண்ணாக உருவாக்க வேண்டும் என மன்னன் விரும்புகிறான்,அவளது அண்ணன்களும் அப்படியே விரும்புகிறார்கள்.இப்படி எல்லோரும் இன்புற்று இருக்கும் ஒருநாளில் ராஜ குடும்பத்தினர் தங்கள் நாட்டின் கடற்கரை பிரதேசம் ஒன்றிற்கு சுற்றுலா செல்கின்றனர்.

மச்சேஸ்வரம் ஒரு அழகான கடற்கரை நாடு.அந்த நாட்டைச் சுற்றிலும் மூன்று புறமும் நீலக் கடல் சூழ்ந்து கரைகள் மல்லிகைப் பூக்களாய் நுரை பொங்க அலையடித்துக் கொண்டு பார்க்க பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்,கடற்கரையை ஒட்டி மன்னன் ஏராளமான நந்தவனங்களை அமைத்து பராமரித்து வந்தான்.நந்தவனத்துப் பூக்கள் எல்லாம் கடலின் நுரையில் சிக்கி வண்ண வண்ண நுரைப்பூக்க்ளாகி கடற்கரையே வண்ணத்துப் பூச்சி போல பல வண்ணங்களுடன் கண்ணைப் பறித்ததால் இளவரசி மீனலோஷினிக்கு இந்த கடற்கரை சுற்றுலா ரொம்ப பிடித்துப் போனது.

அப்படி சுற்றுலா சென்ற பொழுதுகளில் ஒரு நாள் மிதமான வெயிலுடன் ஈராக் காற்று வீசிக் கொண்டிருந்த முற்பகல் தினத்தில் பார்க்கப் பார்க்க சலிக்காத வண்ணக் கடலை ஒரு அழகான நாவாயின்(கப்பல்) மீதிருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் இளவரசி ;அவளுக்கு அப்போது பத்து வயது இருக்கும் ,சிறுமி தான் ,அந்த வயதுக்கே உரிய விளையாட்டுத் தனமும் ,துடுக்குத் தனமும் பிடிவாதமும் கூட அவளுக்கு நிறையவே இருந்தன.செல்ல இளவரசியல்லவா! கப்பலின் முனையில் நின்று கடலை கண்களால் பருகிக் கொண்டிருந்த இளவரசி திடீரென்று கடல் நடுவே துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு தங்கக் கண்ணாடி மீனைப் பார்த்து விடுகிறாள்.

அந்த தங்கக் கண்ணாடி மீன் பார்த்தமாத்திரத்தில் இளவரசியின் கண்களைப் பறித்தது ;தங்க நிறக்கண்ணாடி போன்ற வளவளப்பான உடலெங்கும் பொடிப் பொடியான வைர செதில்களுடன் வெள்ளி நிறத்தில் பளபளக்கும் குவிந்த வாயை அடிக்கடி திறந்து திறந்து மூடிக் கொண்டு நீலக் கடல் நடுவே கண்ணிமைக்கும் நேரத்தில் இடமும் வலமுமாக குசியாக துள்ளித் துள்ளி குத்தித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த மீனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் மீனாலோஷினிக்கு நேரம் போனதே தெரியவில்லை. அவள் தொடர்ந்து பல மணி நேரங்களாக அந்த மீன் விளையாட்டையே பார்த்துக் கொண்டு தன்னை மறந்து அங்கேயே நிற்கிறாள்,மதிய உணவுக்குப் போகக் கூட விருப்பமிள்ளதவலாய் அவள் அங்கே மீன் விளையாட்டை வெடிக்க பார்த்துக் கொண்டிருப்பதை பனிப் பெண்கள் மூலம் அறிந்த ராஜ தம்பதிகளும் அவளது அண்ணன்களான ஏழு இளவரசர்களும் தாங்களே நேரில் அவளை உணவருந்த அழைக்க வருகிறார்கள் .

தாங்கள் வந்திருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் இளவரசி அந்த மீனில் லயித்திருப்பதைக் கண்ட அவளது ஏழு அண்ணன்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். தங்கைக்கு பிடித்த அந்த மீனை விட்டு அவள் கப்பலின் உள்ளே உணவருந்த வரமாட்டாள் என்று புரிந்தவர்களாய் அவர்களும் அந்த மீன் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கவே மன்னன் தன் மகளிடம் ;

"மகளே இது உணவருந்தும் நேரம் அம்மா,பசியாறி விட்டு மீண்டும் நீ மீன் விளையாட்டைப் பார்க்கலாமே " என்று அழைக்கிறார்.இளவரசி தன் தந்தை அங்கே இருப்பதை அப்போது தான் பார்க்கிறாள்.உடனே அவள்;

அப்பா எனக்கந்த மீன் வேண்டும் பிடித்து தந்தால் தான் நான் சாப்பிட வருவேன் " என்று குறும்பாய் சிரித்துக் கொண்டே கூறி விட்டு கப்பலின் விளிம்பை கையால் இறுக்கப் பற்றிக் கொண்டு குனிந்து மீண்டும் கடலையும் தங்கக் கண்ணாடி மீனையும் பார்க்க ஆரம்பித்து விடுகிறாள்.

மகளின் பிடிவாதம் அறிந்தாலும் கூட ஏனோ மகளிடம் உடனே சரி மீனை பிடித்துத் தருகிறேன் என்று சொல்லாமல் ;

"கடல் மீன்கள் சுந்தந்திர உயிர்கள் மகளே ,அவற்றை பித்து தொட்டியில் அடைத்தால் பாவமில்லையா" நீ சாப்பிட வா நான் உனக்கு தொட்டி மீன்கள் வாங்கித் தருகிறேன்,அவை தொட்டிக்குப் பழக்கமான மீன்களாயிருக்கும்,புதிதாக கடலில் சுதந்திரமாகத் திரியும் மீனை தொட்டியில் அடைத்து அதன் சுதந்திரத்தை பறிக்க வேண்டாம் " என்று மன்னன் கூறுகிறான்.

இளவரசி கேட்பாளோ இதை!

அவள் ஏமாற்றத்தில் முகம் வாடி நிற்க ;

இல்லை எனக்கந்த தங்கக்கண்ணாடி மீன் உடனே வேண்டும்,எத்தனை அழகாக துள்ளித் துள்ளி கடலுக்குள் பாய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது பாருங்கள் ,தந்தையே எனக்கந்த மீன் தான் வேண்டும் பிடித்துத் தரப் போகிறீர்களா இல்லையா! மீன் இல்லையென்றால் நான் உணவருந்த வர மாட்டேன் ,மீன் கிடைத்தால் தான் இனி சாப்பிட வருவேன் இளவரசி பிடிவாதமாய் கேட்க ;

ஏழு அண்ணன்களுக்கும் வருத்தமாகி விடுகிறது ;

அட ஒரு சாதாரண மீன் அதற்குப் போய் தங்கள் அருமைத் தங்கை பட்டினி கிடப்பதா ? என்னதான் தங்க நிறத்தில் வைரச் செதில்களுடன் அதிசய மீனாய் இருந்தாலும் தங்கள் தங்கையை விட அந்த மீனொன்றும் பெரிதில்லை..அதிசயமில்லை,அவளது விருப்பமே இங்கு முக்கியம் என்று தந்தையை சமாதானப் படுத்தி விட்டு தங்களில் ஒருவர் அந்த மீனை பிடித்து வருவதாக தங்கைக்கு வாக்களிக்கின்றனர்.

மன்னன் மீனை பிடித்துத் தர மறுத்ததால் வாடி கூம்பிப் போயிருந்த இளவரசி மீனலோஷினியின் முகம் தனது அண்ணன்களின் வார்த்தைகளைக் கேட்டு சூர்யகாந்திப் பூவாய் மலர்கிறது,அவள் சந்தோசத்தில் மீனைப் போலவே துள்ளிக் குதிக்கிறாள். உடனே ..உடனே அந்த மீனைப் பிடித்து என்னிடம் தாருங்கள் நான் அதை தங்கத் தொட்டியில் வைத்து பாதுகாப்பாய் வளர்ப்பேன் என்று குதூகலமாய் பரபரக்கிறாள்.

மூத்த அண்ணன் ராஜ குடும்பத்தின் பிரத்யேகமான நுண்ணிய வெள்ளிக் கம்பிகளால் பின்னப் பட்ட மிகப் பெரிய வலையை வீசச் சொல்லி தனது கப்பலின் மீனவப் பணியாட்களை ஏவுகிறான். வெள்ளி வலை சுழற்றிக் கொண்டு கடலில் வீசப் படுகிறது.

வண்ணமயமான கப்பல் அந்தக் கப்பல் விளிம்பில் அழகான ஆடை ஆபரணங்களுடன் வெகு அலங்காரமான ராஜ குடும்பத்தார், சூர்ய ஒழியில் தக தகக்கும் வெள்ளி வலை ,அதை சுழற்றி கடலுக்குள் வீசிய மீனவர்கள் தலையில் அணிந்திருந்த பச்சை நிற,மஞ்சள் நிற கூம்பு வடிவ தொப்பிகள் ,கப்பலுக்கு மேலே வெண் பஞ்சு மேகங்களின் மறைப்பில் மென் நீலத்தில் மங்கலாய் ஒளிரும் சூரியன் ,அந்த மேகங்களை தம் இறக்கைகளால் அடித்து விலக்கி விடப்போகும் ஆர்வத்தில் அதை நோக்கி அணி அணியாய் சிறகு விரியப் பறக்கும் பறவைகள் என அந்த காட்சி தூர இருந்து பார்க்கும் கடற்கரை மனிதர்களுக்கு வெகு உல்லாசமானதொரு மனநிலையைத் தந்து கொண்டிருந்தது.

முதல் வலை வீசி வெகு நேரம் ஆகியும் மீன் சிக்க வில்லை ,அடுத்த வலை வீசலிலும் மீன் சிக்க காணோம் ,

நேரம் கடக்க கடக்க இளவரசி முகம் சுணங்கத் தொடங்குகிறது,

அவள் முகம் வதங்கினால் பார்க்க சகிக்குமோ மன்னன் மற்றும் அண்ணன்களின் மனம் ; வலை ஒரு பக்கம் வீசுங்கள் நாங்கள் ஏழு பேரும் கடலில் இறங்கித் தேடுகிறோம் இன்னும் அந்த மீன் நமக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறதா எனப் பார்க்கலாம் என ஏழு இளவரசர்களும் நீலக்கடல் நடுவே கப்பல் விளிம்பில் இருந்து ஒருவர் பின் ஒருவராக அம்பில் இருந்து புறப்பட்ட நாண் போல குதித்து மூழ்கி தங்கக் கண்ணாடி மீனுக்காக அந்தப் பகுதி கடலையே ஒரு அலசு அலசுகிறார்கள் .

தொடர்ந்து பலமணி நேர தேடலுக்குப் பின் சூரியன் மேற்கே மலை வாயிலில் விழும் முன் சிவந்த ஒளியால் கடல் கூட செந்நீலமாய் தக தகக்கும் அந்தப் பொன்னொளியில் தன் கைகளில் தங்கக் கண்ணாடி மீனேந்தி மீனலோஷினியின் கடைசி அண்ணன் குட்டி இளவரசன் மச்சேந்திர மனோகரன் கடல் நீர் சொட்ட சொட்ட கப்பல் விளிம்பை நோக்கி நீந்தி வருகிறான்.

அவன் நீந்தி கப்பலை அடையும் முன்பு அந்த அதிசய தங்கக் கண்ணாடி மீன் திடீரென்று அவனுடன் பேசத் தொடங்குகிறது.

பேசும் மீனா!!!

மச்சேந்திர மனோகரன் ஆச்சர்யத்தில் உறைகிறான்.

தொடரும் ...

Tuesday, June 29, 2010

கருத்தடை- அம்மாக்களின் கவனத்திற்கு

இரண்டு வாரத்துக்கு முன்பு பேப்பரில் வந்த செய்தி மிக முக்கியமானதும், மக்களுக்கு நல்லதும் கூட. ஆண்களுக்கான கருத்தடை பற்றிய அறிவிப்பு அது. மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமாக இருப்பதால் இது பரவலாக போய் சேர வேண்டும். வாசக்டமி என்னும் இந்த அறுவை சிகிச்சை பெண்களுக்கு செய்யும் எந்த ஒரு கருத்தடை முறையையும் விட எளியது, நல்லதும் கூட. விந்து பைகளில் இருந்து உயிரணுக்களை கொண்டுவரும் VAS DEFERANS என்னும் குழாயை கட் செய்து விடுவது தான் வாசக்டமி, மீண்டும் குழந்தை வேண்டும் நிர்பந்தம் வரும் போது ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சரி செய்து விடலாம்.

பெண்களுக்கான நிரந்தர கருத்தடை முறையான Mini Lapratomy எனப்படும் இரு ஃபெலோப்பியன் குழாய்களையும் கருப்பையோடு இணைய விடாமல் துண்டித்து விடுவது ஒரு முறை. இதிலேயே உள்ள இன்னொரு முறை ஃபெலோப்பியன் குழாயை இழுத்து பிடித்து பேண்ட் போட்டுவிடும் லேப்ராஸ்கோபி. இதில் உள்ளே போடப்படும் பேண்ட் தெறித்து விழும் வாய்ப்புக்கள் அதிகம். என்னதான் இது நிரந்தர கருத்தடை முறையாக இருந்தாலும் இதனால் நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாதது. எலும்பு தேய்மானம், ஆஸ்டோபோரிஸ் போன்றவைகள் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன் சதவீதமும் ஒழுங்காக இல்லாமல் உடல் அதிக பருமன் ஆவது, அல்லது மிகவும் இளைத்து இருப்பது போன்றவைகளும் ஏற்படும்.

இது போக தற்காலிக கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பதும் பெண்களுக்கு மிக வேதனை அளிப்பது தான். அதில் லூப், மாத்திரைகள், ஊசி போன்றவைகளும் அடங்கும்.

லூப் : IUCD - INTRA UTERINE CONTRACEPTIVE DEVICE : இது ஆங்கில எழுத்தி 'T' வடிவில் இருக்கும், பிரசவம் முடிந்து நன்கு கர்ப்பப்பை சுருங்கியதும் லூப் போடலாம், வஜினா வழியாக கருப்பைக்குள் செலுத்தி அதன் உட்புறம் பொருத்துவார்கள். இதன் ஒரு முனையில் ஒரு நூல் இருக்கும், பொருத்திய பின்பு அடுத்த முறை மாதவிலக்கின் பின்பு ஒரு முறை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பது மிக அவசியம்.

பக்க விளைவுகள் : ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படும், அதிகம் உதிரப்போக்கு உள்ளவர்களுக்கு இது சரிவராது, ஏனெனில் இது சாதரணமாகவே உதிரபோக்கை அதிகப்படுத்தும், தலைவலி, முதுகுவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். சிலசமயம் அதிக உதிரப்போக்கினால் இந்த லூப் தானாகவே கழண்டுவிடும். உடம்பு இதை ஏற்றுக்கொள்ளும்வரை இந்த உபாதைகள் தொடரும். ஒரு முறை பொருத்திவிட்டால் 5 வருடங்கள் கழித்து மீண்டும் புதிது பொருத்த வேண்டும்.

மாத்திரைகள் : இது போதுவாகவே மிக அதிக பக்க விளைவுகள் கொண்டது. தினம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது வந்திருக்கும் I-PILL கருத்தடை மாத்திரை அல்ல. அது கரு முட்டை உருவாகாமல் தடுக்கும், அல்லது கருமுட்டை உருவாகியிருந்தால் அதனோடு உயிரனுக்கள் சேராமல் தடுக்கும். மற்றபடி கரு உருவானபின் இந்த I-pill எடுத்துக்கொள்வதால் எந்த பயனும் இல்லை. இது கருத்தடை மாத்திரையோ, அபார்ஷன் மாத்திரையோ அல்ல.

இந்த கருத்தடை மாத்திரைகளும் அதிக பக்கவிளைவுகள் கொண்டதே. இதனாலும் தலைவலி, வாந்தி, முதுகு வலி, இடுப்பு வலி, உதிரப்போக்கு அதிகரித்தல், ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி போன்றவைகள் ஏற்படும்.

ஊசி : DEPO PROVERA என்னும் ஊசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிலக்கின் முதல் நாள் போட்டுக்கொள்வது. இது தற்போது இருக்கும் பெண்களுக்கான கருத்தடை ஊசி. இதுவும் உடல் பருமன் ஏற்ற இறக்கம், வாந்தி, தலைவலி, முதுகுவலி, உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், சில சமயம் நடுக்கம் போன்றவைகளையும் உருவாக்கும்.

இந்த பக்கவிளைவுகளை சகித்துக்கொண்டு ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்வது பெண்களுக்கு மிக கடினம். எங்காவது ஒரு இடத்தில் தினம் வலியையும், ஒரு அசாதாரண உதிரப்போக்கை ஒவ்வொரு மாதமும் அனுபவிப்பதும் மனதளவில் அவர்களை மிக பாதிக்கும். அதுவும் மெனோபாஸ் எனப்படும் சம்யம் கண்டிப்பாக இதன் வெளிப்பாடுகள் நன்றாகவே தெரியவரும்.. அதனால் ஆணகளுக்கான வாசக்டமி திட்டம் பரவலாக தெரிய வேண்டும், வெற்றி பெறவும் வேண்டும்.



Monday, June 14, 2010

கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்...

"அம்மா, நாளைக்கு டிக்டேஷன். சொல்லிக் கொடும்மா", என்று குட்டிப்பெண் சொன்னவுடன், பொறுமையாக புரிதலுடன் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பெருமையாக ஆரம்பித்தேன்.

முதலில் ஒரு முறை வார்த்தைகளைப் படித்தோம். இனி மனப்பாடம் ஆகிவிட்டதா என பார்க்க வேண்டும். "lip" சொல்லு என்றேன்.
C,A,R என்று பதில் வந்தது.
"இல்லடா, lip "ல்" எது மாதிரி சத்தம் வருது?"
"ல...L" என்றாள்
"வெரி குட். இப்ப lip "ப்" எப்படி முடியற சத்தம் வருது?
"ப ... P" என்றாள்
"ம்.. இப்ப சொல்லு lip என்ன ஸ்பெல்லிங்?"
"L I P"
"குட்... ", இன்னும் சில வார்த்தைகள் படித்த பின்..."Lip என்ன ஸ்பெல்லிங்?" என்றேன்
"H A S"

நான் சற்று நேரம் என் பெருமித உணர்வு குன்ற வெறித்து பார்த்தேன். பெரியவள் உதவிக்கு வந்தாள். "அம்மா, அவளுக்கு அப்படி சொல்லிக் கொடுக்க மாட்டாங்க..., இங்க பாருடா செல்லம் உதடு வரைந்து) இது என்ன?"
"Lip"
"(கார் வரைந்து) இது என்ன)
"Car"
"ஸ்பெல்லிங் சொல்லுங்க..."
C A R

... பாடம் அழகாகப் போய்க்கொண்டிருந்தது. அவளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் முறையைப் புரிந்து கொள்ளாது நான் என் மூக்கை நுழைத்தது தவறு தானே!!! கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்... முதலில் அவர்கள் எப்படி கற்பிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து அதன் பின் புது முறைகளைப் புகுத்த...

அட வைஷு வைஷு

அப்பா காரை ஸ்டாப் பண்ணுங்க பின்னால் கார் வருது.ப்ளீஸ்ப்பா!

காரில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் கார் வருவதைப் பார்த்து விட்டால் வைஷு சொல்லுவது மேலே எழுதி இருப்பவைதான்!
அந்நேரம் சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடும்!அவளை என்னதான் சமாதானம் செய்தாலும் அதைக் கேட்காமல் அவள் சொல்லிவதையே சொல்லுவாள்.நேரம் அதிகமாக அதிகமாக சத்தம் அதிகமாகி விடும்!

பத்மாவின் விருப்பங்கள்

அம்மா நம்ம நெறைய சீட்ஸ் (விதைகள்) வாங்கி நெறைய செடி வெப்போம்.எனக்கு பூங்கா (கார்டன்) வெக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு!
எப்டி செடி வெக்கிறது? - நான்

மொதல்ல ஒரு கிண்ணத்துல சீட்ஸ் போடணும்,அதுல கொஞ்சம் மண் போடணும்,அப்புறம் அதுலயே நல்ல தண்ணி ஊத்தணும் கடசிய அத sunlight படற மாதிரி வெக்கணும்.அப்புறம் உடனே செடி வந்து கடசிய பூ வரும்!

என்னக்கே இப்போதான் தெரியும் இப்படிதான் ஒரு செடி வளர செய்யணும் என்று!
ஆனால் இவளோ இப்போதே வாழ்க்கைக்குத் தேவையான் பல விஷயங்களை அறிந்து கொண்டிருக்கிறாள்.

============================================


நான் கிளாஸ் ல எப்பவுமே coloring தான் பண்ணிட்டே இருப்பேன்.
எனக்கு அதுதான் ரொம்ப பிடிக்கிறது +நல்லா FUN ஆ இருக்கும்மா!
(இந்த விஷயத்தில் மட்டும் என்னைப் போலவே...ஜாலி ஜாலி!)

வீட்டிலும் ஒரு தாள்,பேனா கிடைத்தால் போதும் வரைந்து தள்ளி விடுகிறாள்.
இவளின் வகுப்பு ஆசிரியை சொல்வது இதுதான்.

=============================================

கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்று விட்டால் போதும் உடனே அவளுக்கென்று கேட்பது BARBIE மட்டுமே!அதைவைத்து விளையாட ஆரம்பித்ததில் இருந்து உடை அலங்கார விளையாட்டும் அவளுக்கு அதிகம் பிடித்துப் போய் விட்டது!

=================================================

யாரிடம் பத்மா பேசினாலும் அது முழுமையாக வைஷு பற்றியதா மட்டுமே இருக்கிறது!
எந்த மாதிரியான விஷயமாக இருந்தாலும் இறுதியில் அந்த பேச்சை முடிப்பதேன்னவோ வைஷுவை வைத்துதான்!ஆசிரியை சொன்னது இதுதான்,
வகுப்பில் அதிக நேரம் பேசுவது அவளின் தங்கையைப் பற்றிதான் என்று!!
நன்று நன்று!

==================================================

Friday, May 28, 2010

BPA என்றால் என்ன?

BPA அல்லது Bisphenol-A, polycarbonate வகைப் பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் போது பயன்படுத்தப்படுகின்றது. BPA பிளாஸ்டிக்குகளை கடினப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படுகின்றது. எமது அன்றாட வாழ்வில் நாம் பாவிக்கும் எத்தனையோ பொருட்களில் BPA கலந்திருக்கிறது. தண்ணீர்ப் போத்தல்கள், குழந்தைகளுக்கு பால்/நீர் கொடுக்கப் பயன்படுத்தும் போத்தல்கள், CDs, DVDs, dental fillings, food cans இப்படிப் பல வகையான பொருட்கள் செய்யும் போது BPA பயன்படுத்தப்படுகின்றது. அநேகமாக நாம் பாவிக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்களின் அடியில் ஒரு முக்கோணத்தினுள் 1‍‍ 7 வரையுள்ள எண்களில் ஏதாவதொரு எண் இருக்கும். அவ்வெண் அப்பாத்திரம் செய்யப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கின் வகையைக் குறிக்கும். அவ்வாறு 3, 7 இலக்கங்களைக் கொண்ட அல்லது PC (polycarbonate) எனக் குறிப்பிட்டிருக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் BPA ஜக் கொண்டுள்ளது.

BPA ஒரு Estrogen mimic. Endocrine disrupter என்றும் கூறுவார்கள். அதாவது BPA இன் இரசாயனக் கட்டமைப்பு estrogen என்ற hormone இன் இரசாயனக் கட்டமைப்பை ஒத்திருக்கும். அநேகமானவர்கள் estrogen ஜப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். Estrogen ஜ ஒரு female hormone என்று கூடச் சொல்வார்கள். ஆண்களின் உடலிலும் சிறிதளவு இருந்தாலும் பெண்களின் உடலிலேயே அதனளவு கூடுதலாக இருக்கும். But in a cyclical fashion during menstrual cycle. பெண்கள் பூப்படையும் காலங்களில் மார்பக விருத்தி மற்றும் secondary sexual characteristics (இனப்பெருக்கத்தொகுதியல்லாத பெண்களின் உடலில் ஏற்படும் மற்றைய உடலில் ஏற்படும் மற்றைய மாற்றங்கள்) விருத்தியடைய estrogen மிகவும் அத்தியாவசியமானது. அத்தோடு ஒரு பிள்ளையை விருத்தியடையச்செய்ய கருப்பையைத் தயார்செய்யவும் அவசியமானது.

இப்பிளாஸ்டிக்குகளைச் சூடக்கும் போதும் மீண்டும் மீண்டும் சுடுநீரில் கழுவும் போதும் இவற்றிலிருந்து BPA வெளியேறும். அதனால் நாம் ஒவ்வொரு முறையும் இப்பிளாஸ்டிக்குகளில் உணவைச் சூடக்கும் போதும் BPA பாத்திரங்களில் இருந்து உணவுடன் சேர்வதால் எமக்குத் தெரியாமலே நாம் BPA ஜ உட்கொள்கின்றோம்.

அதனால் என்ன பிரச்சனை?

BPA இன் இரசாயனக் கட்டமைப்பு estrogen னுடையதை ஒத்திருப்பதால் எமது உடலிற்கு இரண்டிற்குமிடையே வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாது. அதனால் BPA எமது உடலில் சேரும் போதெல்லாம், அது உடலில் estrogen னால் இயக்கிவிக்கப்படும் செயல்களெல்லவற்றையும் பாதிக்கச் சந்தர்ப்பங்கள் அதிகம்.

இப்போது பல நூற்றுக்கும் மேலான ஆய்வுகளின் முடிவுகள் BPA ஆல் ஏற்படக்கூடிய‌ பாரதூரமான விளைவுகளை நிரூபித்திருக்கின்றன. அவற்றில் மிகச்சில விளைவுகளே இவை.

பெண்களில் மார்பகப் புற்றுநோய்
ஆண்களில் prostate புற்றுநோய்
பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது உலகலாவிய ரீதியில் குறைந்து கொண்டு வருதல்
ஆண்களில் விந்துக்களின் எண்ணிக்கை குறைதல்
பிள்ளைகளில் behavioural problems such as ADHD (Attention-Deficit Hyperactivity Disorder)

மேலதிக தகவல்களிற்கு இத்தளத்திற்குச் செல்லுங்கள் (http://www.ourstolenfuture.org/).


இதனால் குழந்தைகளும் மிகவும் பாதிப்பிற்குள்ளாவார்கள். எப்படி? குழந்தைகளுக்கு பாலோ நீரோ இப்போது அநேகமானோர் பிளாஸ்டிக் போத்தல்களிலேயே கொடுக்கின்றார்கள். அப்பாலோ/நீரோ அநேகமாக சுடவைக்கப்பட்டே கொடுக்கப்படும். குழந்தைகளுக்காப் பாவிக்கப்படும் 95% ஆன‌ போத்தல்களில் BPA இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு இப்போத்தல்களைச் சூடாக்கும் போது மிகக்கூடுதலானளவு BPA வேளியேறுகின்றதென்றும் கண்டுபிடித்துள்ளனர்.குழந்தைகளின் எல்லா அங்கங்களும் தொடர்ந்து விருத்தியடைந்து கொண்டிருப்பதால் அவர்கள் பாதிப்படையக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் அந்தப் பாதிப்பின் விளைவு அநேகமாக அக்குழந்தை வளர்ந்த‌ பின்பே தெரியும். அந்நேரம் நாம் BPA ஜ ஒரு போதும் சந்தேகிக்க மாட்டோம்.

இதையும் விட நாம் எமது ஆய்வுகூடத்திலேயே இன்னொரு விடயத்தையும் கண்டறிந்துள்ளோம். அதாவது ஒரு தாய் கருத்தரித்து இருக்கும் காலங்களில் அவளின் உடலில் சேரும் BPA மிகச்சுலபமாக placenta வினூடு பிள்ளையைச் சென்றடையும். அதனால் நாம் கவனமாக இல்லாவிடில் நம் பிள்ளைகளை அவர்கள் பிறக்கு முன்னே BPA க்கு expose பண்ணுகின்றோம்.

இவ்வாறான பல ஆய்வுகளின் முடிவுகளைக் கண்டு கனடா போனவருடம் குழந்தைகளிற்குப் பால் கொடுக்கும் போத்தல்களின் உற்பத்தியில் BPA சேர்க்கப்படுவதைத்த் தடை செய்துள்ளது. இவ்வருடம் அமெரிக்காவில் மூன்று states இலும் Denmark இலும் இத்தடைகள் கொண்டுவரப் பட்டுள்ளன.

எம் குழந்தைகளுக்கும் எமக்கும் BPA exposure ஜக் குறைக்க என்ன செய்யலாம்? கண்ணாடிப் போத்தல்களே சிறந்த வழி. இப்போது BPA-free baby bottles உம் வரத் தொடங்கிவிட்டன. எமக்கு உணவு போட்டுவைக்கவோ வேலைக்குக் கொண்டு செல்லவோ கண்ணாடிப் பாத்திரங்களையோ அல்லது அலுமினியப் பாத்திரங்களையோ பாவியுங்கள். அத்தோடு 3, 7 எண்களுடைய பாத்திரங்களைத் தவிருங்கள். பிளாஸ்டிக் பாத்திரங்களை long-term பாவனைக்குப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் என்ன வகையான பொருட்களைக்கொண்டு உற்பத்தி செய்யப்பட்டன எனத் தெரிந்து வாங்குங்கள். ஏனெனில் குழந்தைகள் இயல்பாக அவற்றை வாயில் வைக்கும் போது எமக்குத்தெரியாமல் எத்தனையோ பாதிக்கக்கூடிய chemicals குழந்தையின் உடலில் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.

Wednesday, May 26, 2010

அறிமுகம்

வணக்கம். நான் அன்னா. எனது blog இலேயே உருப்படியாக இன்னும் ஒன்றும் எழுதவில்லை, இந்த லட்சணத்தில் எதோ ஆர்வக் கோளாற்றில் (என்று தான் நினைக்கின்றேன் :)) இங்கும் எழுதலாமா என முல்லையிடம் கேட்டேன். பார்ப்போம் எப்பிடிப் போகப்போகின்ற‌தென்று.


என் மகன், அகரனிற்கு இப்போது 21 மாதங்கள். ந‌ம்ப‌முடிய‌வில்லை இன்னும் 3 மாத‌ங்க‌ளில் 2 வ‌ய‌தாக‌ப்போகின்ற‌தென்று. நான் எப்போதுமே பிள்ளை வ‌ள‌ர்ப்பு ச‌ரியான‌ scariest job என்று சொல்லிக்கொண்டிருந்த‌னான். ஒரு உயிருக்கு 100% பொறுப்பாக‌ இருப்ப‌தென்ப‌து ஒருவ‌கையில் terrifying feeling. என்ன‌ பிழை விடுவ‌மோ, பிழை விட்டால் அதைத் தெரிந்து உட‌ன் திருத்திக் கொள்ள‌ அவ‌காச‌ம் அநேக‌மாக‌ இருக்காதே. அப்பிழையின் விளைவை நாம் அறிந்து கொள்ளும் போது பிள்ளை வளர்ந்தவனாகி விட எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கிறதே இப்படி மனதில் ஒரே போராட்டம். அது இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.


அகரன் பிறக்க முன்னும் இப்பவும் இயலுமானளவு parenting books, magazines வாசிக்கிறனான், seminars க்கும் நேரம் கிடைக்கும் போது போறனான் to keep us updated on child development and parenting knowledge. May be I am too paranoid. Not sure. எனது அம்மாவும், சிலசமயம் எனது better half வும் கூட நக்கலாக "இவளெல்லாம் புத்தகம் படிச்சு, parenting ல் ப‌ட்ட‌ப்படிப்பு முடித்துத்தான் பிள்ளை வ‌ளர்ப்பாள், எமது பெற்றோர்கள் வளர்க்காத பிள்ளையா?" என்பார்க‌ள். என‌க்க‌தில் முழுதாக‌ உட‌ன்பாடில்லை. ஏனெனில் நாம் வ‌ள‌ரும் போதோ, எம‌து பெற்றோர்க‌ள் வ‌ளரும் போதோ இருந்த‌ உல‌கத்திற்கும் இப்போதிருக்கும் உல‌க‌த்திற்கும் எவ்வ‌ள‌வோ வித்தியாச‌மிருக்குது. ஒரு வயதுப் பிள்ளைக்கே இப்போது கணனியை உபயோகிக்கத்தெரியும். உல‌க‌ம் மிக‌ மிக‌ வேக‌மாக‌ மாறிக்கொண்டிருக்குது. இன்னும் இருப‌து வ‌ருட‌ங்க‌ளில் எம‌து பிள்ளைக‌ள் த‌ம் கால்க‌ளில் நின்று த‌ம் வாழ்க்கையை lead பண்ணத்தொட‌ங்கும் போது உல‌க‌ம் எப்ப‌டி இருக்குமென‌ க‌ற்ப‌னை செய்வ‌தே க‌டின‌மாயுள்ளது. ஆனால் நாம் எம் பிள்ளைகளை, கிட்டத்தட்ட இருபது வருடங்களில் இருக்கும் உலகத்தில் மிக successful ஆன அதே நேரம் ச‌ந்தோசமான, fulfilled and moral life ஜ முன்னெடுக்க இப்போதிருந்து தயார் படுத்த வேண்டுமென்பதை நினைக்க, அதைச் செய்ய முடியுமா என்ற பயம் மனதில் எப்போதும் இருக்கிறது.

அகரனை ஒரு equality-minded humanistic and curious child, free from any stereotypes ஆக‌ வளர்ப்பதே எமது குறிக்கோள். இவ்வலைப்பக்கத்தில் பிள்ளை வளர்ப்பில் நான் செய்வதை, நான் வாசிப்பதில் ஏதாவது சுவாரசியமானதை, மற்றும் பிள்ளை வளர்ப்பு பற்றி எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன். எனது என்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைத்த முல்லைக்கு என் நன்றிகள்.

Tuesday, May 11, 2010

தயிர் செய்த மாயம்.

கண்மணி ஒரே குஷியாக இருந்தாள். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து யாராவது வந்து இஷ்டம்போல் சாக்லேட் கொடுத்தது தான் சமாச்சாரம். அவர்கள் முன்னால் "நான் junk food எல்லாம் சாப்பிட மாட்டேன்" என்று அலம்பல் பண்ணி விட்டு... அவர்கள் சென்ற பின்னால் "எனக்குத்தான் தந்தார்கள் " என்று சட்டம் பேசி அபேஸ் பண்ணும் வேலை நடந்தது.

எத்தனை தடவை சொன்னாலும்....தெரிந்தும் செய்பவளை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துகொண்டிருந்தேன். தினமும் சாப்பிடுகிற சாப்பாடு எல்லாம் ஒதுக்கிவைத்தாள்.

அடுத்த நாள் , ஒரு பிறந்த நாள் விழாவுக்கு ரெம்ப சந்தோஷமாக கிளம்பிக்கொண்டிருக்கும் போது தான்... வயற்றிலிருந்து விபரீதம் ஆரம்பித்தது.சாக்லேட்டின் சாகசமா அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை ... வயிற்றிலிருந்து வந்த சுனாமி wash Basinனில் சங்கமிக்க ... சோர்வாக அமர்ந்தாள். தொடர்ந்து மூன்று தடவை வாந்தி வந்ததால் எங்கும் போகமுடியாமல் படு சோகமாகவும், சோர்வாகவும் இருந்தவளை பார்க்க பாவாமாயிருந்தது.

"இனிமேல் அங்கிள் கிட்ட சாக்லேட் வாங்கி தரக்கூடாது என்று சொல்லும்மா" என்று பரிதாபமாக சொன்னவளை.. அணைத்துகொண்டேன்.

"சரியாய் போய்விடும்மா" என்று சமாதானப்படுத்திவிட்டு.. என்ன செய்யலாம் என்று யோசித்தோம். மருத்துவமனைக்கு செல்லவும் பயமாக இருந்தது. ஒரு நாள் கைவைத்தியத்தில் சரியாக வில்லை என்றால் மருத்துவரை அணுகலாம் என்று முடிவெடுத்தேன்.

இருக்கவே இருக்கிறது தயிர்.

1. பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

2. ஜீரண சக்தியை அதிகரிக்கும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

3. வாயுத் தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

4. தயிரில் உள்ள புரதச்சத்து சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் தன்மையுடையது.

இவ்வளவு மருத்துவ குணமுடைய தயிரை கையில் வைத்துவிட்டு ...சும்மா இருந்தால் எப்படி முயற்ச்சி செய்வோமே என்று...

காலையில்... தயிர் இட்லி...

மதியம் தயிர் சாதம்....

மாலை தயிர்...

இரவும் தயிர் இட்லி

என்று ஒரு நாள் முழுவதும் தயிர் விரதம் இருக்க... வயிறு சுத்தமானது...

முக்கியமான குறிப்பு : தயிருடன் சிறிது உப்பு சேர்க்கலாம், அனால் சீனியை சேர்த்துவிடாதிர்கள் .. அதனுடைய முக்கிய பலனே கிடைக்காமல் போய்விடும் .

இப்போதெல்லாம் நிஜமாகவே அவளாக சாக்லேட், junk food எல்லாம் அளவோடு நிறுத்தி கொள்வாள்.(எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை).

Tuesday, April 27, 2010

அறிமுகம்...

வணக்கம்.... வணக்கம். நான் குந்தவை. என்னை பற்றி சொல்லுவதற்க்கு பெரிதாக ஒன்றும் இல்லைங்க. ஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி(வேறு வழி?).

இந்த அம்மாக்களின் வலைபூவில் என்னுடைய முதல் பதிவு இது, அதனால் ஒரு கதை சொல்லி தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இது சிறுவர்களுக்கான கதை என்றாலும் நாமும் இதை எப்போதும் நினைவில் வைத்து கொள்வது நல்லது என்பதால் பதிவிடுகிறேன்.


Peace begins with Justice.


ஒரு ஏழை பால் வியாபாரி தன் இரண்டு மகன்களுடன் வாழ்ந்துவந்தார். ஒரு நாள் திடீரென்று அவர் இறைவனடி சேர்ந்துவிட்டதால், கிராமத்தினர் அனைவரும் வந்து அந்த இரண்டுபேருக்கும் சொத்தை சமமாக பிரித்து கொடுத்தார்கள்.ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரு பசு மாட்டை எப்படி பிரித்து கொடுப்பது என்று பிரச்சனை வந்தது. யாருக்கும் வழி தெரியவில்லை. கடைசியாக பசு மாட்டின் முன் பகுதி தம்பிக்கும் பின் பகுதி அண்ணனுக்கும் என்று முடிவு செய்தார்கள்.


பசியால் அந்த பசு மாடு கத்தும் போதெல்லாம்.... முன் பகுதியை சொந்தம்கொண்டாடிய தம்பி அதற்கு உணவு கொடுக்கும் பொறுப்பில் இருந்தான். பின் பகுதியை சொந்தம்கொண்டாடிய அண்ணனோ மேனி நோகாமல் பால் கறந்து ஜாலியாக இருந்தான். அதைப்பார்த்த தம்பிக்கு கோபம் வந்து ஊர் பெரியவர்களிடம் முறையிட்டும் ஒரு பயனும் இல்லை.

அண்ணனும் இந்த பிரச்சனைக்கு நியாயமான வழியை சிந்திக்காததால் கோபமடைந்த தம்பி அந்த பசு மாட்டுக்கு உணவு கொடுப்பதை நிறுத்திவிட்டான். அப்புறம் என்ன..... அண்ணன் பால் கறக்க போனால் பெரும் உதை தான் கிடைத்தது.


வேறு வழியில்லாததால் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரம் அண்ணன் பால் கறந்து கொள்ளலாம், தம்பி சாப்பாடு போடவேண்டும் என்றும், அடுத்த வாரம் தம்பி பால் கறந்து கொள்ள அண்ணன் சாப்பாடு போட வேண்டும் என்று நியாயமாக ஒரு தீர்ப்பை தேர்ந்தெடுக்க இருவருள்ளும் அமைதி திரும்பியது.

நல்லாயிருந்தாலும் சொல்லுங்க... 'இதென்ன சின்னபுள்ளத் தனமா இருக்குன்னு' நினைத்தாலும் சொல்லுங்க. சொல்லைன்னா இது மாதிரி கொடுமைகள் தொடரும்.

Saturday, April 17, 2010

குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ் - அறிவிப்பு!

மொத்தம் 16 குட்டீஸ் - 3 வயதிலிருந்து 10+ வயது வரை!!

பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் - வாழ்த்துகளும்!
:-)

இந்நேரம், ஆர்ட் பென் ஃப்ரெண்டை பற்றிய விபரங்களுடன் ஒரு மடல் தங்களின் மின்முகவரியின் அழைப்புமணியை அடித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். (மடல் கிடைக்கப்பெறாதவர்கள், யாரேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள் - ஒருவேளை, ஏதேனும் மின்முகவரிகளில் நான் தவறு செய்திருக்கக்கூடும்.
)

அடுத்தது, குட்டீஸ் செய்ய வேண்டியது( தேவைப்பட்டால், பெற்றோர் உதவியுடன்)

1. வரையுங்கள்/பெயிண்டிங் செய்யுங்கள்

2. தங்கள் அன்பு நண்பருக்கு அனுப்புங்கள்

3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல.

4. மடலிலோ அல்லது முகவரி பெற்று தபால் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உலகை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!


5. ரிப்பீட் - முதல் ஸ்டெப்பிலிருந்து!

குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்!


என்னால் மட்டும் இயலுமென்றால், ஒவ்வொரு குட்டீஸும் அவர்களது எண்ணங்களை, உணர்வுகளை ,உலகை - அவர்கள் கலையால் - வரையும் போதும், மடலில் பேசிக்கொள்ளும்போதும் உடனிருப்பேன்!! :-)

Thursday, April 15, 2010

Summer camp @ Blogdom!



ஹூஹூ! வாழ்த்துகள் குட்டீஸ் - ஆர்வத்துடன் அனுப்பிய பெற்றோருக்கும்! குட்டீஸ் பேனா நண்பர்கள் - இதுவரை ஏழு குழந்தைகள் பதிவு செய்திருக்கின்றனர்.

2 வயதிலிருந்து 12 வயதுவரை இருக்கும் சிறுவர் சிறுமியர் - ஆர்ட்/வரைவதில் விருப்பம் கொண்ட பேனா நண்பர்கள் மூலமாக தங்கள் உலகை பரிமாறிக் கொள்ள விருப்பமிருப்பின் வருகிற வெள்ளிக்கிழமைக்குள்ளாக எனக்குத் தெரிவிக்கவும். (வயது வரம்பு முன்பு பத்து வயதுவரை என்று குறிப்பிட்டிருந்தேன். தற்போது மாற்றியிருக்கிறேன். )


1. தங்கள் குழந்தையின் பெயர், வயதுடன் (மற்றும் gender preference இருந்தாலும்)
mombloggers@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினால் நலம்.

2. பதிவர்கள் மட்டுமல்லாமல் வாசகர்களும் தங்கள் குழந்தைகளை பதிவு செய்யலாம்.

2. தங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற இன்னொரு குழந்தையுடன் மேட்ச் செய்து விபரங்களை வருகிற சனிக்கிழமை தங்களுக்கு மடல்மூலம் தெரிவிக்கிறேன்.

3. அடுத்தது, தங்கள் பேனா நண்பருக்கு வரையுங்கள். உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்.

4. மின்மடல் மூலமாகவோ அல்லது தபால்கள் மூலமாகவோ பரிமாறிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பமும் வசதியும் சார்ந்தது. கூடவே, கடிதங்கள்அனுப்புவதும்.

5. நேரமும், விருப்பமுமிருப்பின், பேனா நண்பர் தங்களுக்கு அனுப்பியதை தங்கள் தளத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள். அந்த சுட்டியை அனுப்பினால் மகிழ்வேன். அல்லது
mombloggers@gmail.com முகவரிக்கு அனுப்பினால், ”அம்மாக்கள் வலைப்பூ”வில் பகிர்கிறேன்.

குழந்தைகளோடு நேரத்தை பகிர்ந்துக்கொள்வோம். டீவியிலிருந்து கொஞ்ச நேரம் திசைதிருப்புவோம். அவர்களுக்குள் இருக்கும் கற்பனைத் திறனை அறிவோம். அனைவருக்கும்
நன்றிகள்!!

Thursday, April 8, 2010

குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ்

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து நான் வந்தால் போதும்..கதவை திறக்க ஓடி வருவாள். உள்ளே நுழையும் முன், ”ஆபிஸிலே என்ன சாப்பிட்டே, லஞ்ச் பாக்ஸ்லே இருந்ததையெல்லாம் ஃபுல்லா சாப்பிட்டியா” என்று அவளிடம் விசாரணை நடப்பதுபோல என்னிடமும் விசாரணை நடத்துவாள். சென்ற வாரத்தில் ஓரு நாள் அவளது பையை எடுப்பதும் எதையோ எடுத்துப் பார்ப்பது பின் மறைத்து வைத்துக்கொள்வதுமாக இருந்தாள்.

'எனக்கும் காட்டு பப்பு, என்னது அது' என்றதற்கு 'நான் உன் ஃப்ரெண்ட் இல்ல, தேஸ்னா ஃப்ரெண்ட்” என்று மறைத்து வைத்துக்கொண்டாள். கலர்கலராக ஒரு பேப்பரில் ஏதோ வரைந்திருந்தது. ரொம்ப கேட்டால் ஓவராக பிகு பண்ணிக் கொள்வாள் என்று லூசில் விட்டுவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து 'நான் உனக்கு மட்டும் காட்டறேன், அப்பாக்கு கிடையாது' என்று சொல்லிவிட்டு காட்டினாள். ஒரு அட்டையில் கேட்டர்பில்லர், மரம், பூ, தென்னை மரம் என்று குட்டி குட்டியாக படங்கள் வரைந்து வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது. தேஷ்னா, பப்புவுக்குத் தந்ததாம் அது. அவங்க அப்பா வரைஞ்சதும் தேஷ்னா கலரடிச்சு பப்புவுக்கு கிஃப்ட் கொடுத்தாளாம்.

வீட்டிலிருக்கும் பழைய டைரிகள் எல்லாம் இப்போது பப்பு வசம். எழுதுவது, வரைவது, பெயிண்டிங் அப்புறம் கிழிப்பது என்று எல்லாவற்றும் எளிது. திடீரென்று பேப்பர் கேட்கும்போது தேடி அலைய தேவையில்லை. அன்றிரவு படுக்கையில் பார்த்தால் பாதி படுக்கையை டைரியிலிருந்து கிழித்த பேப்பர்கள் நிறைத்திருந்தது. டைரி முன் அட்டையும் பின் அட்டையுமாக இளைத்திருந்தது. 'பப்பு என்னது இது..ஏன் இப்படி கிழிச்சு வைச்சிருக்கே' என்றதற்கு நாளைக்கு தேஷ்னாவுக்கு தருவதற்கு இவள் வரைந்துக் கொண்டிருக்கிறாளாம். எல்லாவற்றிலும் ஏதேதோ கிறுக்கல்கள். பேனாவால், க்ரேயான்ஸ்-ஆல்... 'அய்யோ..இதை எப்போ க்லீன் பண்ணி எப்போ படுக்கிறது' என்று ஆயாசமாக இருந்தது.

”போதும்,எடு பப்பு” என்று கெஞ்சியதற்கு பிறகு பெரிய மனசு பண்ணி எல்லாவற்றையும் அடுக்கி வெளியே எடுத்துச்சென்றாள். அடுத்த நாள் காலை லஞ்ச்பாக்ஸ் வைக்க பையை திறந்தபோது அந்த பேப்பர் கட்டுகள் - கலை கல்வெட்டுகள் பையை நிறைத்திருந்தன. இரவு பையில் வைத்துச் சென்றிருக்கிறாள் போல.

இது இப்போது தினமும் நடக்கும் வழக்கமாகிவிட்டது. தினமும் ஏதாவது பேப்பர் கொண்டு வருவதும், இவள் ஏதாவது ஆர்ட் ஒர்க் செய்து எடுத்துச் செல்வதுமாக! எல்லாம் தேஷ்னா,சுதர்சன்,கீர்த்தி, அர்ஷித் கைலாஷ்-க்கு கொடுப்பதற்காம். க்ரூப் இப்போ பெரிசாகிடுச்சுன்னு நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் எனது இந்த ஐடியாவிற்கு வித்திட்ட தேஷ்னாவிற்கு ஒரு தேங்ஸ்! :-)

இந்த ஐடியா ஒன்றும் புதிதில்லை. pen friends என்ற பெயரில் நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிமுகமானதுதான்.

இதே பேனா நண்பர்கள் தங்களது டிராயிங் மற்றும் பெயிண்டிங்குகள், வண்ணங்கள் மூலம் தங்கள் உலகை பரிமாறிக்கொண்டால் எப்படி இருக்கும்?
அதுவும் குட்டீஸ்?!

ஒரு கடிதமாக இருக்கலாம் அல்லது புதிதாக கற்றுக்கொண்ட வார்த்தையாக இருக்கலாம் ஏன் கதையாகக் கூட!

உங்களுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் பத்து வயதிற்குள் குட்டீஸ் இருந்தால் எனக்கு ஒரு மடலிடுங்கள். ”குட்டீஸ் பேனா நண்பர்கள்” என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு, தங்கள் குழந்தையின் பெயர்,வயதுடன் மின்மடலிடுங்கள்.மேலும் , gender preference இருந்தாலும் தெரிவியுங்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை வரை இந்த ஆஃபர் உண்டு. எத்தனை பேர் சேர்கிறார்கள் என்பதையும் குட்டீஸின் வயதைப் பொறுத்தும் கொண்டு மேட்ச் செய்து உரியவர்களிடம் தெரிவிக்கிறேன்.அப்புறம் என்ன..குட்டீஸ்-கள் டிராயிங்குகளை/
கடிதங்களை ஸ்கேன் செய்து மின்மடல் மூலம் பரிமாறிக்கொள்ளலாம்..அல்லது முகவரிகளைப் பெற்றுக்கொண்டு கடிதங்களாகவும்(surface mail) பரிமாறிக் கொள்ளலாம்..அது உங்கள் வசதி! என்ன சொல்றீங்க?

பதிவரின் குழந்தையாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாசகரின் குழந்தையாகக் கூட இருக்கலாம். உங்களுக்கும் உங்கள் குட்டீஸுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால், டிராயிங்/கடிதங்களை அனுப்பவும் பெறவும் ஆர்வமிருந்தால் mombloggers@gmail.com என்ற ஐடிக்கு மடலிடுங்கள். அடுத்த சனிக்கிழமை அறிவிப்புகள் வெளியாகும்.

இன்னும் வேறு ஐடியாக்கள் இருந்தாலும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

(ஒன்றரை மாசம் லீவு..எப்படியாவது பொழுதை போக்கணும் இல்லே.. எது எப்படியாயினும், தேஷ்னாவுக்கும் பப்புவுக்கும் எனது அன்பும் நன்றிகளும்!)

Thursday, January 21, 2010

பரீட்சைக்கு நேரமாச்சு...........2

இது குழந்தைகளுக்கு...........

  1. நாளைக்கு நாளைக்குன்னு பாடங்களைச் சேர்த்து வைக்காதீங்க.
  2. அன்றைக்குரிய பாடங்களை முழுமையாகப் படிக்காவிட்டாலும் திருப்பி ஒருதடவை வாசித்துவிடுங்கள்
  3. பரீட்சை வரப் போகிறதேன்னு பயப்படாமல் பயம் எதனால் வருகிறது.....படிக்காததினால்தான் என்பதைப் புரிந்து கொண்டு படிக்க ஆரம்பிக்கலாம்..
  4. எளிதான பாடங்களை சீக்கிரம் முடித்து விட்டுக் கடினமானவற்றை ஆரம்பியுங்கள்....முதலிலேயே கடினமானவற்றை ஆரம்பித்தால் ஐய்யோ இது தெரிலியே அது தெரிலியேன்னு பதட்டம் வரும்.
  5. படிக்க ஆரம்பிக்கும் போது ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.முந்தைய தடவை 60 வாங்கியிருந்தால் இந்த தடவை 70 வாங்க வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ளலாம்.போன தடவை ஃபெயிலாகியிருந்தால் இந்த முறை பாஸாக வேண்டும் என்று ஒரு குறைந்த பட்ச இலக்கை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
  6. பரீட்சை நாட்களில் விளையாட்டு ,பாட்டு இப்படிப் பொழுது போக்கும்  விஷயங்களை அறவே  தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.இடையிடையே கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்
  7. பரீட்சைக்கு முந்திய நாள் ரொம்ப நேரம் கண் விழித்துப் படித்துத் தூங்காமலிருப்பது கண்டிப்பாக கூடாது.
  8. பரீட்சைக்குக் கிளம்புவதற்கு முன் தினமே தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டால் காலை நேர ஆர்ப்பாட்டத்தைத் தவிர்க்கலாம்.
  9. பரீட்சைக்குச் செல்லும் முன் அது படிச்சாச்சா...இது படிச்சாச்சா...அப்படீன்னு கேட்பவர்கள் இருக்குமிடத்திலிருந்து விலகி நிற்கவும்.அது தன்னம்பிக்கையை அசைத்து விடும்.
  10. பரீட்சை எழுதி வந்தவுடன் "அதுக்கு விடையென்ன...இதெப்படி எழுதணும்னு.... கேட்டுத் தவறாக எழுதிய கேள்விகளுக்காக வருந்த  வேண்டாம்.இது அடுத்த பரீட்சைக்குப் படிக்கும் உற்சாகத்தைக் கெடுத்து விடும்.

Tuesday, January 19, 2010

பரீட்சைக்கு நேரமாச்சு...........

இது அம்மாப்பாவுக்கு...........

  1. சும்மா சும்மா படி...படின்னு சொல்லாதீங்க.
  2. பரீட்சை என்பது ஒரு பயப்படும் விஷயம் என மனதில் பதிய வைக்காதீர்கள்.
  3. பரீட்சைக்காக படிப்பது என்றில்லாமல்.....விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் புரிந்து கொள்வதற்காகப் படிக்கத் தூண்டுங்கள்
  4. .அவனை மாதிரி படி...இவளைப் போல் படி என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.
  5. முதல் ராங்கை விட்டுடாதே என்று பயமுறுத்தாதீர்கள்.
  6. 10 நாளில் பரீட்சை வருது .....நீ இப்படி விளையாடறேன்னு பரீட்சை பற்றி அச்சம் உண்டாக்காதீர்கள்.
  7. பரீட்சைக்கு முந்திய நாள் ரொம்ப நேரம் படிக்க வைப்பதும் அதிகாலையில் எழுப்பி விடுவதும் கண்டிப்பாக கூடாது.
  8. பரீட்சைக்குக் கிளம்பும் போது போருக்குக் கிளம்புவது போல ஆர்ப்பாட்டம் பண்ணாதீர்கள்.
  9. பரீட்சை எழுதி வந்தவுடன் "அதெப்படி எழுதினே...இதெப்படி எழுதினே....இதை ஏன் விட்டே"அப்படீன்னு கேட்டுக் கஷ்டப் படுத்த வேண்டாம்.
  10. இவ்வளவு நாள் படித்தது நினைவிலிருக்கிறதா..என்று அறிவதற்கு அல்ல பரீட்சை, படித்தது புரிந்திருக்கிறதா என அறிந்து கொள்ளத்தான் என்பதை உணர்த்துங்கள்
 பரீட்சைக்குப் படிக்கும்  குழந்தைகளுக்காக.......அடுத்த பதிவில்......

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger