Thursday, December 31, 2009

புத்தாண்டு உறுதி மொழிகள்...

வலையுலக அன்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..புதிய ஆண்டில் பெரியவர்களாகிய நாம் எந்த உறுதியையும் எடுக்காவிட்டாலும்,சின்ன குழந்தைகளை உறுதி மொழி எடுக்க தூண்டுவோமே.

கம்யூட்டர் கேம்ஸ்,வீடியோ கேம்ஸ் விளையாட்டை குறைக்க தூண்டுவோம்.
செல் ஃபோன் பேச மட்டும் தான் என்பதனை உணர்த்துவோம்.
பெரியவர்களுடன் பேச தூண்டுவோம்.
டிவியில் எப்ப பார்த்தாலும் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளை பேசி,பேசியே மாற்றுவோமே.
தினமும் சின்னதாய் ஏதேனும் உடல் பயிற்சி செய்யும் மாதிரி பழக்கப் படுத்துவோமே.
தினம் ஒரு பக்கம் படிக்க தூண்டுவோம்.

இதில் எதாவது ஒன்றை நடைமுறை படுத்தினாலே நல்லது தானே...

Thursday, December 3, 2009

ராகி மால்ட்- 5 மாதம் முதலே குடுக்க ஆரம்பிக்கலாம்.

ராகி மால்ட்- 5 மாதம் முதலே குடுக்க ஆரம்பிக்கலாம்.
செய்முறை
1 . சிறிது வெல்லத்தை சுடு நீரில் ஊற வைக்கவும்.
2 . கை பிடி அளவு ராகி கழுவி நீரில் ஊற வைக்கவும் .( குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வேண்டும்.)
3 . ஊறிய ராகியை நீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்து கொள்ளவும்.
4 . அதுனுடன் கரைத்த வெல்ல நீரையும் , சிறிது பாலும் விட்டு மிக மிக குறித்த தீயில் அடி கனமான பாத்திரத்தில் விட்டு கிளறவும்.
ஆரம்பத்தில் சிறிது நீர்கவும், சிறி சிறிதாக கெட்டியாகவும் தரலாம். மிகவும் சக்தி நிறைந்தது, ஜீரணிக்க மிக எளிதானது.

விகடன் வரவேற்பறையில் அம்மாக்களின் வலைப்பூக்கள்

இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம். அழகிய வலைப்பூக்களைத் தன் வரவேற்பறையில் அடையாளம் காட்டும் ஆனந்த விகடன், இன்று தன் வரவேற்பறையில் “அம்மாக்களின் வலைப்பூக்கள்” வலைப்பூவிற்கு இடம் கொடுத்துள்ளது.




வலைப்பூவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். இவ்வலைத்தளத்தை வாசித்து ஊக்கமளிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். இது அம்மாக்களுக்கு மேலும் நல்ல பதிவுகளைத் தர நல்லதொரு ஊக்கமாக அமையும் என்பது உண்மை.

Wednesday, December 2, 2009

அங்கவை..சங்கவை...அவ்வை



அவ்வைப் பாட்டி பற்றி இப்போதுள்ள குழந்தைகளுக்கு பெயரைத் தவிர பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லை.

அவரைப் பற்றிய சரித்திர நிகழ்ச்சி ஒன்றை இப்போது பார்ப்போம்.

நட்பின் மகத்துவத்தைப் பற்றி கூற வேண்டுமெனில் கோப்பெருஞ்சோழன் ,பிசிராந்தையாருடன் அவ்வையார் அதியமான் கதையையும் சொல்வார்கள்.கூடவே பாரி கபிலர் கதையையும் கூறுவார்கள். அந்தப் பாரி மன்னன் கடையேழு வள்ளல்களுள் ஒருவன். பாரி பரம்பு எனும் மலை குறுநில மன்னன் .
மன்னன் என்றால் போர் இல்லாமலா? மூவேந்தர்கள் தமக்கு அடி பணியாத அல்லது கப்பம் கட்டாத குறுநில மன்னர்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டு வந்தனர் என்பது வரலாறு .அப்படி
மூவேந்தர்களுடன் நடந்த போரில் பாரி இறந்து படவே ,அவனது பெண் மக்கள் இருவரும் ஆதரவற்ற அனாதைகள் ஆயினர் என்று வரலாறு சொல்கிறது.

அந்தப் பெண்களின் பெயர்கள் அங்கவை,சங்கவை (சிவாஜி படத்தில் கூட இந்தப் பெயர்கள் வருமே! பாரியின் மகள்களின் பெயர்கள் தான் அவை)

அப்படி நிராதரவாய் வறுமையுடன் வாழும் போதும் அப்பெண்கள் யாரிடமும் அண்டிப் பிழைக்க விருப்பமற்று ஒரு அரசனின் மகள்கள் எனும் பெருமையை விடுத்து தனியே வாழ்ந்திருக்கையில் அவ்வைப்பாட்டி ஒரு நாள் அவர்களைச் சந்திக்கிறாள்.

முல்லைக்கு தேர் தந்த பாரியின் மக்களுக்கா இந்தக் கதி என அவ்வை வருத்தம் மிகக் கொண்டு அவர்களது நல வாழ்வுக்கு ஏதேனும் செய்தே தீருவது என முடிவு செய்கிறார்.

அவ்வையின் மீது பெரு மதிப்பு கொண்ட சிற்றரசன் ஒருவன் அங்கவை சங்கவியை மணந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவே அவ்வைப் பாட்டி அவர்களது திருமணத்தை முன்னின்று நடத்துகிறார்.

அவ்வேளையில் அதை எதிர்த்து மூவேந்தர்களும் படை திரட்டி வருகின்றனர். தங்களை எதிர்த்து போரில் மாண்ட அடி பணியாத பாரியின் மகள்களுக்கு அவ்வைப் பாட்டி திருமணம் செய்வித்து ஆதரிப்பதா என்ற அடங்காக் கோபம் அவர்களுக்கு .

மூவேந்தர்களும் படை திரட்டி வருவதை அறிந்த அவ்வை போர்களத்தில் அவர்களிடம் சென்று பாரியின் பெருமைகளை எடுத்துச் சொல்லி சமாதனம் செய்து எப்படி போரை நிறுத்தினார் என்பது இன்னொரு சுவையான சரித்திர நிகழ்வு.

இப்போது சொல்ல வந்த விஷயம் என்ன வென்றால்

மூவேந்தர்களும் ஒற்றுமையாய் ஒரு சமயம் இருந்தார்கள் அதற்க்கு அவ்வை பாட்டி காரணம் என்பது தான்.

அங்கவை...சங்கவியின் திருமணதிற்கு மூவேந்தர்களும் ஒற்றுமையாய் வந்து கலந்து கொண்டனர் அவ்வையின் மீது கொண்ட பெரு மதிப்பினால்.

இதற்க்கான சரித்திர ஆதாரம் .

திருமணதிற்கு வந்த சேர மன்னர் தன் பரிவாரங்களுடன் தங்கியிருந்த இடமே சேலம் என்று பின்பு மருவிற்றாம்.

அங்ஙனமே பாண்டிய மன்னர் தங்கியிருந்த இடம் வீர பாண்டி என ஆயிற்று .

சோழமன்னன் தங்கியிருந்த இடம் வீரசோழபுரம் என்று ஆயிற்று .

இந்த நிகழ்வு சரித்திரத்தில் பதியப் பட்ட ஒன்று என ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணக் கிடைத்தது.

பகிர்வுக்காக இங்கே அளித்தேன்.

Tuesday, December 1, 2009

சாக்லேட் ஊட்டச்சத்து பானங்கள்



இனிப்பை விரும்பாத குழந்தைகள் அரிது தான்.

அதிலும் சாக்லேட்டுகளை ...ஐஸ் கிரீம்களைப் பிடிக்காது என்று எந்தக் குழந்தையாவது சொல்லக் கூடுமானால் அது மிகப் பெரிய அதிசயமே .

பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு ஐஸ் கிரீம் வாங்கலாம் அல்லது ஐந்து எக் லேர்ஸ் சாக்லேட்டுகள் வாங்கலாம் ,இன்னும் குறைக்க வேண்டுமெனில் ஐம்பது காசுக்கு ஒரு காச்சா மேங்கோவோ அல்லது காபி பைட் இன்னும் சில குழந்தைகள் மின்ட்டோ பிரெஷ் ...ஹால்ஸ் ..பூமர் இப்படி வாங்கிச் சாப்பிடுகிறார்கள் ,

பத்து ரூபாய் என்றால் ஒரு குர் குரே அல்லது பிங்கோ சிப்ஸ் அல்லது லேய்ஸ் ...அதுவும் இல்லா விட்டால் பய்ட்ஸ்...இப்படித் தான் இருக்கிறது ஐந்து முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளின் சிற்றுண்டிப் (என்ன ஒரு அழகான தமிழ் வார்த்தை ! அதிகம் புழக்கத்தில் இல்லையோ என்று ஐயமாகி விட்டது ...இப்போதெல்லாம் சிம்பிளாக ஸ்நாக்ஸ் என்று முடித்து விடுகிரோமில்லையா?!) பழக்கம் .

மேலே கூறப் பட்டுள்ளவற்றில் சிப்ஸ் வகையறாக்கள் தவிர்த்து மற்ற எல்லா சிற்றுண்டிகளிலும் இனிப்பு இருக்கும். சிப்ஸ்களிலும் உருளைக் கிழங்கு இருப்பதால் மாவுப் பொருளுக்கே உரித்தான சிறிதளவு இனிப்பு அதிலும் உண்டு.

அளவு மீறாமல் சாப்பிட்டால் பயமேதுமில்லை. "அளவுக்கு மேறினால் அமிர்தம் கூட நஞ்சு தானே"

கடைக்குப் போகும் போதெல்லாம் ஒரு ஹால்ஸ் ...அல்லது எதோ ஐம்பது காசுகள் அல்லது ஒரு ரூபாய் சாக்லேட்டுகள் என்று வாங்கிச் சாப்பிட்டு பழகிய குழந்தைகள் இன்று அநேகம் பேர். விளைவு பற்கள் சொத்தை ...மிகச் சிறு வயதிலேயே பழுப்பான பற்கள் .

இன்னும் சிலருக்கு தீராத சளி ...இருமல் .

எல்லாக் குழந்தைகளுக்குமே மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில் சீதோஷ்ணம் ஒத்துக் கொள்ளாமல் சளி இருக்கக் கூடும் .சிலருக்கு கோடையில் பெய்யக் கூடிய மழை ஒத்துக் கொள்ளாமல் கூட சளியும் இருமலும் வரக் கூடும். அவை தவிர்த்து மாதம் ஒருமுறைக்கு இருமுறை கடுமையான சளியும் இருமலும் இருப்பின் பெற்றோர் நிச்சயம் தம் குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பழக்கங்களை கண்டிப்புடன் கவனிக்க வேண்டும்.

நாள் முழுதும் மூன்று அல்லது பலமுறை சாக்லேட்டுகள் அல்லது இனிப்புகளை உண்ணும் பழக்கத்தில் இருந்து நமது குழந்தைகளை நாம் மீட்க வேண்டும். இனிப்பு சுவை அதிகமானால் ;உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

நான் அனுபவ ரீதியாக உணர்ந்தது சளியும் இருமலும் தீவிரமாக இருக்கும் நாட்களில் குழந்தைகளின் கண்களில் இருந்து சாக்லேட்டுகளை கண்டிப்பாக மறைத்து வைப்பது சாலச் சிறந்தது.

சாக்லேட்டுகள் மட்டும் தான் என்றில்லை இன்று வரும் ஊட்டச் சத்து பானங்களில் பெரும்பான்மையும் சாக்லேட் கலந்த பானங்களே .எல்லாவற்றிலுமே சாக்லேட் ப்ளேவர் உண்டு.

பூஸ்ட்

போர்ன் விட்டா

காம்ப்ளான்

மால்ட்டோவா

ஹார்லிக்ஸ்

மருத்துவர்களின் ஆலோசனை என்னவெனில் சுத்தமான ஆவின் பால் நீர் கலக்காமல் காய்ச்சி அளவான சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குத் தரலாம் அதுவே போதும் ஊட்டச்சத்து பானங்கள் என்ற பெயரில் இவை எல்லாம் அத்த்யாவசியமே இல்லை.


தவிர்க்க முடியாது குழந்தைகள் அதன் சுவைக்குப் பழகி விட்டார்கள் என்ற காரணத்தால் இன்றைய நிலையில் வளரும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ஊட்டச் சத்து பானங்களை நம்மால் தடை செய்ய இயலாவிட்டாலும் கூட இரவு முழுதும் இருமல் ...சளித் தொல்லை வறட்டு இருமலால் வாந்தி எனும் நிலை வரும் பொது அந்த நாட்களில் மட்டுமேனும் இவற்றை நிறுத்தி விட்டு நீர் கலக்காமல் காய்ச்சிய வெறும் பாலில் செரிமானத்திற்கு உதவும் சதவிகிதத்தில் மட்டுமே கொஞ்சமாக சர்க்கரை கலந்து தரலாம்.

என்ன ஒரு மகாப் பெரிய கஷ்டம் எனில் அப்படிக் குடிக்க குழந்தைகள் ஒத்துக் கொள்ள வேண்டும் !!!

பழக்க வேண்டும் நம் குழந்தைகளை.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger