Thursday, August 4, 2011

பொழிலனின் கதை நேரம்!! (ஒளி/ஒலி வடிவில்)

அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி!!

பொழிலனை இங்கே ஒரு நல்ல பள்ளியில்( விசாரித்த வரை) சேர்த்திருக்கிறோம்... நான் அந்தப் பள்ளிக்குச் சென்று அவனுடைய வகுப்பறைக்கும் சென்று நன்கு பார்த்துவிட்டுதான் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தேன்... எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்று குழந்தைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை... அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நம் வழிக்குக் கொண்டுவருவதைக் கடைப்பிடிக்கின்றனர்... அதிலும் பள்ளிகளிலும் அதே வழிமுறைதான்!


குழந்தைகளின் கருத்துக்களுக்குப் பெரிதும் மதிப்பளிக்கப்படுகிறது.... இது அவர்களை இன்னும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கை உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!!

அவனுக்குப் பள்ளி துவங்கியதும் முதல் ஒரு வாரம் முதல் இரு வாரங்கள் வரை நானும் அவனுடன் சென்று அவன் அருகில் இருக்கலாம் அவன் மனம் புதிய இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை.... ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே குழந்தைகள் தாயைப் பிரிந்து புதிய தோழர், தோழிகளிடம் பழகிவிடுகின்றனர்... பொழிலனும் அவ்வாறு மாறிவிடுவான் என்று எண்ணுகிறேன்....

ஒரு வாரத்திற்கு ஒரே ஒரு புதிய குழந்தை பள்ளிக்கு முதன் முதல் வகுப்பிற்கு என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல முறையாகத் தோன்றுகிறது.... அந்த ஒரு வாரம் முழுவதும் அந்த குழந்தையை நன்கு கண்காணித்து, புரிதலுடன் அந்த குழந்தையை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவும் குழந்தையும் ஆசிரியருடன் எளிதில் நெருங்கிப் பழகவும் இது உதவும்.... நம் ஊரில் எப்படி என்று தெரியவில்லை.... நம் ஊரிலும் இதே வழக்கம் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.... இல்லையென்றாலும் இப்படி சில மாற்றங்கள் வந்தால் வரவேற்போம்...

இங்கே தமிழ் மொழி பயிலவும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை தமிழ் வகுப்புகள் தனி "தமிழ் பள்ளியாக" இருக்கின்றன...

ஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான் :)

மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...

Tuesday, July 19, 2011

Sweet Moments -4

இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .

"டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !


"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"


"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."


"இரேன்ம்மா ..."


அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .


"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .


ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;


ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .


"எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி ."


"ஹேய் ...குட்டி என்னடா இது ! "எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.


"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,


"எம்பொண்ணாக்கும்! "


ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))

Thursday, February 24, 2011

குழந்தைகளின் ஆச்சரியமூட்டும் மொழிகளைக் கற்கும் திறன் - The linguistic genius of babies

Cross posted

எல்லாக் குழந்தைகளுக்கும் பல மொழிகளை முழுதாகக் கற்றுக்கொள்வதற்குரிய திறமை உள்ளதெனப் பலருக்குத் தெரியும். அத்திறமை 10-12 வயதிலிருந்து மிக வேகமாகக் குறைந்துவிடும். சிறு வயதிலிருந்து தமிழில் மட்டுமே படித்து விட்டு பின் வெளிநாடு செல்பவர்களுக்குத் தெரியும் அதன் அருமை. மொழியைக் கற்கும் திறன் எல்லா மனிதக்குழந்தைகளுக்கும் இயற்கையிலேயே உண்டெனிலும் மொழியை யாரும் கதைக்காவிடின் அந்த மொழித் திறன் வரவே வராது.

மனிதர்களுக்கு இயற்கையாகவே இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ வரும் 'வல்லமை' உள்ளதா என அறிய, அக்பர் சக்கரவர்த்தி சில குழந்தைகளைப் பிறந்தவுடன் எந்தவொரு மனிதத் தொடர்பும் இல்லாமல், ஒரு மௌனமான வளர்ப்புத் தாயாரால் மட்டும் அவர்களின் மற்றைய அத்தியாவசியத் தேவைகளைக் கவனிக்க அனுமதியளித்தாராம். அக்பர் சக்கரவர்த்திக்குக் கிடைத்ததெல்லாம் ஊமையான மனிதர்களே.
கீழ் வரும் காணொளியில் Patricia Kuhl எனும் ஆய்வாளர் குழந்தைகளுக்கு இருக்கும் ஆச்சரியமான மொழிகளைக் கற்கும் திறனை அவர்கள் செய்த ஆய்வுகளினூடு விளக்குகின்றார். குழந்தைகள் tv, radio இல் கேட்டு மொழியை அறிவதைவிட மனிதர்களிலிருந்தே மிக அதிகமாக கற்கிறார்களென்றும், பிறந்த முதல் வருடத்திலேயே வெவ்வேறு மொழிகளைப் பிரித்தரியக்கூடிய குழந்தைகளின் வல்லமையையும் காட்டுகின்றார். பிறந்த குழந்தைகளுக்கு எம்முடன் communicate பண்ணத்தெரியாவிடினும் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே உள்ளனர். குழந்தைகளிடம் இயலுமானவரை கதைப்பது மிக மிக அவசியம்.

எம்மாதிரி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு தமிழ்த்திறனை வளார்க்க, பிறந்ததிலிருந்தே குழந்தைகளுடன் வீடுகளில் தமிழில் மட்டுமே எந்தளவு முடியுமோ அந்தளவிற்குக் கதைப்பதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.


Tuesday, February 22, 2011

அம்புலிமாமா

அம்புலிமாமா ப‌ழைய‌ ப‌திப்புக‌ளை இணையத்தில் பார்த்தவுடன் மகிழ்ச்சி. தமிழ் புத்தகங்கள் 1947 முதல் 2005 வரை கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், கன்னட, மலையாளம், பெங்காலி, மராட்டி, ஒரியா போன்ற முக்கிய மொழிகள் அனைத்திலும் கிடைக்கின்றன. எனக்குத் தான் இது புதிய தகவலா என்று தெரியவில்லை. என் பால்யத்தில் முக்கிய இடம் கண்டிப்பாக அம்புலிமாமாவுக்கு உண்டு. http://www.chandamama.com/archive/storyArchive.htm வில் அனைத்து பழைய எடிசன்கள் உள்ளன. விளம்பரங்களும் தனியாக உள்ளன.

இது என் ப்ளாகில் எழுதிய‌து

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger