Thursday, July 8, 2010

மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 2

ஆச்சர்யத்தில் உறைந்து போன மச்சேந்திர மனோகரனை அதிக நேரம் இம்சிக்காமல் உடனே பேச ஆரம்பித்தது மீன் ;

இளவரசனே என்னை உன் கையில் இருந்து நொடியில் கடலுக்குள் வீசு இல்லையேல் நான் அடுத்த பத்தாம் நிமிடம் வெறும் கருவாடாகிப் போவேன்,இது உண்மை ,என் சொல்படி செய்,சீக்கிரம்...சீக்கிரம் என்னை கடலுக்குள் வீசு. சொல்வதை செய் , மீன் கோபமாய் ஆணையிட்டது

மச்சேந்திரனுக்கு மீன் பேசுவது ஒரு அதிசயம் எனில் அது இவனுக்கு ஆணையிடுவது இன்னும் அதிசயமாய் தோன்றியது.

ஏ ...தங்க மீனே உன்னை பிடித்துக் கொண்டு போய் என் தங்கையின் கையில் ஒப்படைக்காவிட்டால் நான் அவளுக்கு பாசமிக்க அண்ணனாக இருக்கும் தகுதியை இழந்து விடுவேன் அதனால் வாயை மூடிக் கொண்டு என்னோடு வா.அரண்மனையின் தங்கத் தொட்டியில் உன்னை விட்டதும் பிறகு நீ பேசுவதை நான் பொறுமையாக கேட்டுக் கொள்கிறேன் .

அவன் எள்ளலாய் கையிலிருக்கும் மீனைப் பார்த்துக் கொண்டே பேசப் பேச மீன் இப்போது சுவாசமின்றி துடித்து துள்ளி துள்ளி திணற ஆரம்பித்திருந்தது .

"இ...ள...வர...சனே நான் இத்த...னை சொல்லியும் கேளா...மல் நீ தவறு செய்கிறாய் ..இதற்கான ப...ல...னை"

(அதற்குள் பத்தாம் நிமிடம் கடந்து விட தங்க மீன் காய்ந்து வெறும் கருவாடகிப் போகிறது!

மச்சேந்திர மனோகரன் சட்டென நிகழ்ந்து விட்ட இந்த காரியம் கண்டு திக்பிரமையில் அதிர்ந்து போனான்.

கப்பலின் விளிம்பை கடலுக்குள் இருந்தவாறே தலை உயர்த்தி நோக்கினான்.மீனலோஷினி இந்த தங்க மீனுக்காக எத்தனை ஆசையோடு காத்துக் கொண்டிருப்பாள் ,அவளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்ற வருத்தம் அவனை உற்சாகமிழந்து தளர்ந்து போக வைத்தது ,கையில் கருவாடாகிப் போன மீனை ஏந்திக் கொண்டு தங்கைக்கு என்ன பதில் சொல்லப் போகிறோமோ என்ற அளவில்லாத ஏமாற்றத்துடன் இளவரசன் கப்பலை நோக்கி நீந்தி நூலேணியில் கப்பலுக்குள் ஏறி இளவரசியும் மன்னனும் மற்றவர்களும் இருக்கும் இடத்துக்கு வருகிறான் .

அங்கே அவன் கண்ட காட்சி அவனை பேரதிர்ச்சியில் சில்லிட்டு உறைய வைப்பதாக இருந்தது.

என்னருமை தங்கைக்கு என்ன ஆயிற்று ? ஏன் ...இப்படி உருமாறிப் போனாள் என்று மச்சேந்திரன் தங்கை மீனலோஷினியின் அருகே விரைந்து செல்கிறான்.


இவனைப் போலவே கடலுக்குள் தங்க மீனைத் தேடச் சென்ற மற்ற சகோதரர்களும் அங்கே முன்பே வந்து விட்டபடியால் அனைவருமே ஒரே விதமான அதிர்ச்சியால் தாக்கப் பட்டு செய்வதறியாது திகைத்து போய் நின்றிருந்தனர்.

மன்னன் மற்றும் மகாராணியின் கண்களில் கண்ணீர் பெருகி ஓடுகிறது,

தனக்கு நேர்ந்த உருமாற்றத்தால் அதிர்ச்சியில் மயங்கித் துவண்டிருந்த இளவரசி மீனலோஷினி தன் அன்னையான மகாராணியின் மடியில் தலை சாய்த்திருந்தாள். தலை உடல் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது ஆ...னால்....ஆ...னால் அவளது கால்....கால்...கால்களை மட்டும் காணோம்...

எங்கே போயின இளவரசியின் கால்கள் !

இளவரசியின் கால்களுக்கு என்ன ஆயிற்று !!!

நாளை வரை காத்திருங்கள்.


தொடரும்...

Wednesday, July 7, 2010

சுனிதா கிருஷ்ணன் - பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்

சுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம் சில நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் ஒருவர் பகிர்ந்த அந்த விடியோவை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தொண்டை கிழியக் கத்திச் செத்துவிட மாட்டோமா என்றிருந்த‌து.

ஆனால் பின்னால் ஒலித்த உறுதியான குரல் காதுகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. "பல்லாயிரக்கணக்கானப் பெண் குழந்தைகளும் சிறுமிகளும் நாள் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதும், சிறு சலனம் கூட இல்லாமல் இது குறித்து நிலவும் பெருத்த மௌனமுமே என்னைப் பெருஞ்சினம் கொள்ள வைக்கின்றன"

அந்தக் குரலுக்குச் சொந்தமானவர்:

சுனிதா கிருஷ்ணன்
இவர் மனிதப் பிறவி தானா? பெண் தானா?
நாலாயிர‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பாலிய‌ல் தொழில், ம‌ற்றும் க‌ட‌த்த‌லிலிருந்து காப்பாற்றியிருக்கும் இவ‌ரை என்ன‌வென்று சொல்வ‌து?

பதின்ம‌பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான இவர் அதனால் துவண்டு விடாமல் பழகிய ரௌத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்திருக்கிறது!ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? வணங்குகிறேன் சுனிதா உங்களை.ஐந்து வயது கூட நிரம்பாத பிஞ்சுகளுக்குக் கூட நேரும் கொடுமைகளை இவர் விவரிப்பதைக் கேட்கக் கூட நம்மால் முடியவில்லை. அடி உதை, சித்ரவதை எல்லாம் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி இவர் மீட்ட குழந்தைகள் ஆயிரமாயிரம்.

1996 ல் இவர் தொடங்கிய‌ ப்ர‌ஜ்வாலா அமைப்பு ஐந்து முக்கிய‌ பணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்துகிற‌து: த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கை, காப்பாற்றுத‌ல், ம‌றுவாழ்வு, ஒருங்கிணைப்பு, பிர‌சார‌ம்.

த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் முக்கிய‌மான‌து பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ளுக்குக் க‌ல்வி கொடுப்ப‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளும் அதே பாதையில் சென்றுவிடாம‌ல் த‌டுப்ப‌து. ஐந்து குழ‌ந்தைக‌ளுட‌ன் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இவ்வ‌மைப்பு இப்போது ஐயாயிர‌ம் சிறுமிகளுக்கு ம‌றுவாழ்வு அளித்துள்ள‌து.

பேருந்து மற்றும் நிலைய‌ங்க‌ளில் சோதனை நடத்தி குழ‌ந்தைக‌ள் க‌ட‌த்த‌ப் ப‌டுவதையும் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ள் அதே சுழ‌ற்சில் சிக்குவதையும் த‌டுப்பது. இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முல‌ம் ம‌ட்டும் 1700 சிறுமிகளும் மொத்த‌மாக‌ 3200 சிறுமிகளும் ப்ர‌ஜ்வாலா மூல‌ம் காப்பாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

அத்தொழிலிலேயே சிறுவ‌ய‌து முத‌ல் ஈடுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளைக் காப்பாற்றுவ‌தும் ம‌றுவாழ்வு அளிப்ப‌தும் சவாலான‌ செய‌ல் தான் என்றும் கூறுகிறார் சுனிதா. அவ‌ர்க‌ள் உண்மையில் ம‌றும‌ல‌ர்ச்சி அடைய‌ வெகுகால‌ம் ஆகிற‌தாம்.

த‌ன‌து புனித‌ப் போரில் சுனிதா ச‌ந்தித்த‌ கொடுமைக‌ளும் கொஞ்ச‌ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. க‌ட‌த்த‌ல் ர‌வுடிக‌ளிட‌மிருந்து சிறுமிக‌ளைக் காப்பாற்றப் போன‌ இட‌த்தில் வாங்கிய் ஆடி உதையால் இவ‌ர‌து வலது காது கேட்கும் திற‌னை இழ‌ந்திருக்கிற‌து. ஆனால் த‌ன‌து இழ‌ப்பு தான் காப்பாற்ற‌த் த‌வ‌றிய‌, அல்ல‌து காப்பாற்றியும் உயிர‌ழ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் இழ‌ப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று நெஞ்ச‌ம் உருகுகிறார் சுனிதா. (அதை என்னால் மொழிபெய‌ர்த்து எழுத‌ முடியாது. ம‌ன்னியுங்க‌ள்.)

தன் போராட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இவர் சொல்வது, ரவுடிகளிடம் அடிவாங்குவதோ, மிரட்டல்களோ இல்லை; பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கும் மனப்பான்மை சமூகத்தில் இல்லாதது தான், என்கிறார்.

அவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் கூட, பண உதவி செய்பவர்கள்கூட தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பயப்படும் அறிவீனத்தை எண்ணி மனம் வெதும்புகிறார்.

சமூகத்தில் இந்த மனப்பான்மை இருக்கும் வரை இவர்களுக்கு மறுவாழ்வு என்பது மிகக்கடினமான ஒன்று தான் என்பது தான் இவரது ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக‌, சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது, "சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது."

ஏதாவ‌து செய்ய‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர‌து போராட்ட‌த்துக்கு இய‌ன்ற‌வ‌ரை உத‌வுவோம். நாம் செய்ய‌க் கூடிய‌ மிக‌ச்சிறிய‌ செய‌ல் அது ம‌ட்டும் தான்.

Must Read:

http://sunithakrishnan.blogspot.com/

http://www.amazingwomenrock.com/myblog/anti-trafficking-crusader-sunitha-krishnan-fights-to-save-women-girls-in-india.html

http://www.amazingwomenrock.com/ted-talks/sunitha-krishnans-fight-against-sex-slavery.html -ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌வேண்டாம் என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

The address of Prajwala to which willing people can send their contributions.
Prajwala
20-4-34,III Floor
Behind Charminar Bus Stand
Charminar
Hyderabad


நன்றி - சிதறல்கள் தீபா

மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 1

முன்னொரு காலத்தில் மச்சேஸ்வரம் என்றொரு நாடு இருந்ததாம்,அந்த நாட்டை மச்சேந்திரன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆண்டு வந்தான்,மன்னனுக்கும் மகாராணிக்கும் நிறையக் குழந்தைகள் இருந்தாலும் எல்லாமே ஆண் குழந்தைகளாகவே இருந்ததால் அவர்களுக்கு பெண் குழந்தை வேண்டும் எனும் ஏக்கம் நெடுநாட்களாக இருந்து வந்தது.அந்தக் கால வழக்கப்படி மன்னன் பெண்குழந்தை வேண்டி பல யாகங்களை செய்து பார்கிறான்,பல கோயில் தலங்களுக்கும் மனைவியோடும் மந்திரி பிரதாநிகளோடும் சென்று வருகிறான்,இப்படி இருக்கையில் ஏழு ஆண்குழந்தைகளுக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து அதிசயமாக அவர்களது விருப்பப்படி எட்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை மகாராணிக்குப் பிறக்கிறது.அந்தப் பெண் குழந்தைக்கு மீனலோஷினி என்று பெயரிட்டு அருமை பெருமையாக ராஜ தம்பதிகள் வளர்த்து வருகிறார்கள் .

மீனலோஷினி அவளது அண்ணன்கள் ஏழு பேரிடத்தும் மிகுந்த அன்புடையவளாக வளர்கிறாள்.தங்கை மீது ஏழு அண்ணன்களுக்கும் இருக்கும் பாசத்தை எதைக் கொண்டும் அளக்க இயலாது அத்தனை பிரியமான சகோதரர்கள் அவர்கள். மீனலோஷினி மச்சேஸ்வரத்து அரண்மனையின் செல்ல இளவரசியாக வலம் வருகிறாள். ராஜாவுக்கும் ராணிக்கும் அவளே உயிர் என்றாகி நாட்கள் நகர்கின்றன. இளவரசி வளர வளர அவளுக்கு சகல விதமான கலைகளும் ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்து அவளை தன்னிகரில்லாத பெண்ணாக உருவாக்க வேண்டும் என மன்னன் விரும்புகிறான்,அவளது அண்ணன்களும் அப்படியே விரும்புகிறார்கள்.இப்படி எல்லோரும் இன்புற்று இருக்கும் ஒருநாளில் ராஜ குடும்பத்தினர் தங்கள் நாட்டின் கடற்கரை பிரதேசம் ஒன்றிற்கு சுற்றுலா செல்கின்றனர்.

மச்சேஸ்வரம் ஒரு அழகான கடற்கரை நாடு.அந்த நாட்டைச் சுற்றிலும் மூன்று புறமும் நீலக் கடல் சூழ்ந்து கரைகள் மல்லிகைப் பூக்களாய் நுரை பொங்க அலையடித்துக் கொண்டு பார்க்க பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்,கடற்கரையை ஒட்டி மன்னன் ஏராளமான நந்தவனங்களை அமைத்து பராமரித்து வந்தான்.நந்தவனத்துப் பூக்கள் எல்லாம் கடலின் நுரையில் சிக்கி வண்ண வண்ண நுரைப்பூக்க்ளாகி கடற்கரையே வண்ணத்துப் பூச்சி போல பல வண்ணங்களுடன் கண்ணைப் பறித்ததால் இளவரசி மீனலோஷினிக்கு இந்த கடற்கரை சுற்றுலா ரொம்ப பிடித்துப் போனது.

அப்படி சுற்றுலா சென்ற பொழுதுகளில் ஒரு நாள் மிதமான வெயிலுடன் ஈராக் காற்று வீசிக் கொண்டிருந்த முற்பகல் தினத்தில் பார்க்கப் பார்க்க சலிக்காத வண்ணக் கடலை ஒரு அழகான நாவாயின்(கப்பல்) மீதிருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் இளவரசி ;அவளுக்கு அப்போது பத்து வயது இருக்கும் ,சிறுமி தான் ,அந்த வயதுக்கே உரிய விளையாட்டுத் தனமும் ,துடுக்குத் தனமும் பிடிவாதமும் கூட அவளுக்கு நிறையவே இருந்தன.செல்ல இளவரசியல்லவா! கப்பலின் முனையில் நின்று கடலை கண்களால் பருகிக் கொண்டிருந்த இளவரசி திடீரென்று கடல் நடுவே துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு தங்கக் கண்ணாடி மீனைப் பார்த்து விடுகிறாள்.

அந்த தங்கக் கண்ணாடி மீன் பார்த்தமாத்திரத்தில் இளவரசியின் கண்களைப் பறித்தது ;தங்க நிறக்கண்ணாடி போன்ற வளவளப்பான உடலெங்கும் பொடிப் பொடியான வைர செதில்களுடன் வெள்ளி நிறத்தில் பளபளக்கும் குவிந்த வாயை அடிக்கடி திறந்து திறந்து மூடிக் கொண்டு நீலக் கடல் நடுவே கண்ணிமைக்கும் நேரத்தில் இடமும் வலமுமாக குசியாக துள்ளித் துள்ளி குத்தித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த மீனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் மீனாலோஷினிக்கு நேரம் போனதே தெரியவில்லை. அவள் தொடர்ந்து பல மணி நேரங்களாக அந்த மீன் விளையாட்டையே பார்த்துக் கொண்டு தன்னை மறந்து அங்கேயே நிற்கிறாள்,மதிய உணவுக்குப் போகக் கூட விருப்பமிள்ளதவலாய் அவள் அங்கே மீன் விளையாட்டை வெடிக்க பார்த்துக் கொண்டிருப்பதை பனிப் பெண்கள் மூலம் அறிந்த ராஜ தம்பதிகளும் அவளது அண்ணன்களான ஏழு இளவரசர்களும் தாங்களே நேரில் அவளை உணவருந்த அழைக்க வருகிறார்கள் .

தாங்கள் வந்திருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் இளவரசி அந்த மீனில் லயித்திருப்பதைக் கண்ட அவளது ஏழு அண்ணன்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். தங்கைக்கு பிடித்த அந்த மீனை விட்டு அவள் கப்பலின் உள்ளே உணவருந்த வரமாட்டாள் என்று புரிந்தவர்களாய் அவர்களும் அந்த மீன் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கவே மன்னன் தன் மகளிடம் ;

"மகளே இது உணவருந்தும் நேரம் அம்மா,பசியாறி விட்டு மீண்டும் நீ மீன் விளையாட்டைப் பார்க்கலாமே " என்று அழைக்கிறார்.இளவரசி தன் தந்தை அங்கே இருப்பதை அப்போது தான் பார்க்கிறாள்.உடனே அவள்;

அப்பா எனக்கந்த மீன் வேண்டும் பிடித்து தந்தால் தான் நான் சாப்பிட வருவேன் " என்று குறும்பாய் சிரித்துக் கொண்டே கூறி விட்டு கப்பலின் விளிம்பை கையால் இறுக்கப் பற்றிக் கொண்டு குனிந்து மீண்டும் கடலையும் தங்கக் கண்ணாடி மீனையும் பார்க்க ஆரம்பித்து விடுகிறாள்.

மகளின் பிடிவாதம் அறிந்தாலும் கூட ஏனோ மகளிடம் உடனே சரி மீனை பிடித்துத் தருகிறேன் என்று சொல்லாமல் ;

"கடல் மீன்கள் சுந்தந்திர உயிர்கள் மகளே ,அவற்றை பித்து தொட்டியில் அடைத்தால் பாவமில்லையா" நீ சாப்பிட வா நான் உனக்கு தொட்டி மீன்கள் வாங்கித் தருகிறேன்,அவை தொட்டிக்குப் பழக்கமான மீன்களாயிருக்கும்,புதிதாக கடலில் சுதந்திரமாகத் திரியும் மீனை தொட்டியில் அடைத்து அதன் சுதந்திரத்தை பறிக்க வேண்டாம் " என்று மன்னன் கூறுகிறான்.

இளவரசி கேட்பாளோ இதை!

அவள் ஏமாற்றத்தில் முகம் வாடி நிற்க ;

இல்லை எனக்கந்த தங்கக்கண்ணாடி மீன் உடனே வேண்டும்,எத்தனை அழகாக துள்ளித் துள்ளி கடலுக்குள் பாய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது பாருங்கள் ,தந்தையே எனக்கந்த மீன் தான் வேண்டும் பிடித்துத் தரப் போகிறீர்களா இல்லையா! மீன் இல்லையென்றால் நான் உணவருந்த வர மாட்டேன் ,மீன் கிடைத்தால் தான் இனி சாப்பிட வருவேன் இளவரசி பிடிவாதமாய் கேட்க ;

ஏழு அண்ணன்களுக்கும் வருத்தமாகி விடுகிறது ;

அட ஒரு சாதாரண மீன் அதற்குப் போய் தங்கள் அருமைத் தங்கை பட்டினி கிடப்பதா ? என்னதான் தங்க நிறத்தில் வைரச் செதில்களுடன் அதிசய மீனாய் இருந்தாலும் தங்கள் தங்கையை விட அந்த மீனொன்றும் பெரிதில்லை..அதிசயமில்லை,அவளது விருப்பமே இங்கு முக்கியம் என்று தந்தையை சமாதானப் படுத்தி விட்டு தங்களில் ஒருவர் அந்த மீனை பிடித்து வருவதாக தங்கைக்கு வாக்களிக்கின்றனர்.

மன்னன் மீனை பிடித்துத் தர மறுத்ததால் வாடி கூம்பிப் போயிருந்த இளவரசி மீனலோஷினியின் முகம் தனது அண்ணன்களின் வார்த்தைகளைக் கேட்டு சூர்யகாந்திப் பூவாய் மலர்கிறது,அவள் சந்தோசத்தில் மீனைப் போலவே துள்ளிக் குதிக்கிறாள். உடனே ..உடனே அந்த மீனைப் பிடித்து என்னிடம் தாருங்கள் நான் அதை தங்கத் தொட்டியில் வைத்து பாதுகாப்பாய் வளர்ப்பேன் என்று குதூகலமாய் பரபரக்கிறாள்.

மூத்த அண்ணன் ராஜ குடும்பத்தின் பிரத்யேகமான நுண்ணிய வெள்ளிக் கம்பிகளால் பின்னப் பட்ட மிகப் பெரிய வலையை வீசச் சொல்லி தனது கப்பலின் மீனவப் பணியாட்களை ஏவுகிறான். வெள்ளி வலை சுழற்றிக் கொண்டு கடலில் வீசப் படுகிறது.

வண்ணமயமான கப்பல் அந்தக் கப்பல் விளிம்பில் அழகான ஆடை ஆபரணங்களுடன் வெகு அலங்காரமான ராஜ குடும்பத்தார், சூர்ய ஒழியில் தக தகக்கும் வெள்ளி வலை ,அதை சுழற்றி கடலுக்குள் வீசிய மீனவர்கள் தலையில் அணிந்திருந்த பச்சை நிற,மஞ்சள் நிற கூம்பு வடிவ தொப்பிகள் ,கப்பலுக்கு மேலே வெண் பஞ்சு மேகங்களின் மறைப்பில் மென் நீலத்தில் மங்கலாய் ஒளிரும் சூரியன் ,அந்த மேகங்களை தம் இறக்கைகளால் அடித்து விலக்கி விடப்போகும் ஆர்வத்தில் அதை நோக்கி அணி அணியாய் சிறகு விரியப் பறக்கும் பறவைகள் என அந்த காட்சி தூர இருந்து பார்க்கும் கடற்கரை மனிதர்களுக்கு வெகு உல்லாசமானதொரு மனநிலையைத் தந்து கொண்டிருந்தது.

முதல் வலை வீசி வெகு நேரம் ஆகியும் மீன் சிக்க வில்லை ,அடுத்த வலை வீசலிலும் மீன் சிக்க காணோம் ,

நேரம் கடக்க கடக்க இளவரசி முகம் சுணங்கத் தொடங்குகிறது,

அவள் முகம் வதங்கினால் பார்க்க சகிக்குமோ மன்னன் மற்றும் அண்ணன்களின் மனம் ; வலை ஒரு பக்கம் வீசுங்கள் நாங்கள் ஏழு பேரும் கடலில் இறங்கித் தேடுகிறோம் இன்னும் அந்த மீன் நமக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறதா எனப் பார்க்கலாம் என ஏழு இளவரசர்களும் நீலக்கடல் நடுவே கப்பல் விளிம்பில் இருந்து ஒருவர் பின் ஒருவராக அம்பில் இருந்து புறப்பட்ட நாண் போல குதித்து மூழ்கி தங்கக் கண்ணாடி மீனுக்காக அந்தப் பகுதி கடலையே ஒரு அலசு அலசுகிறார்கள் .

தொடர்ந்து பலமணி நேர தேடலுக்குப் பின் சூரியன் மேற்கே மலை வாயிலில் விழும் முன் சிவந்த ஒளியால் கடல் கூட செந்நீலமாய் தக தகக்கும் அந்தப் பொன்னொளியில் தன் கைகளில் தங்கக் கண்ணாடி மீனேந்தி மீனலோஷினியின் கடைசி அண்ணன் குட்டி இளவரசன் மச்சேந்திர மனோகரன் கடல் நீர் சொட்ட சொட்ட கப்பல் விளிம்பை நோக்கி நீந்தி வருகிறான்.

அவன் நீந்தி கப்பலை அடையும் முன்பு அந்த அதிசய தங்கக் கண்ணாடி மீன் திடீரென்று அவனுடன் பேசத் தொடங்குகிறது.

பேசும் மீனா!!!

மச்சேந்திர மனோகரன் ஆச்சர்யத்தில் உறைகிறான்.

தொடரும் ...

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger