Thursday, December 31, 2009

புத்தாண்டு உறுதி மொழிகள்...

வலையுலக அன்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..புதிய ஆண்டில் பெரியவர்களாகிய நாம் எந்த உறுதியையும் எடுக்காவிட்டாலும்,சின்ன குழந்தைகளை உறுதி மொழி எடுக்க தூண்டுவோமே.

கம்யூட்டர் கேம்ஸ்,வீடியோ கேம்ஸ் விளையாட்டை குறைக்க தூண்டுவோம்.
செல் ஃபோன் பேச மட்டும் தான் என்பதனை உணர்த்துவோம்.
பெரியவர்களுடன் பேச தூண்டுவோம்.
டிவியில் எப்ப பார்த்தாலும் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளை பேசி,பேசியே மாற்றுவோமே.
தினமும் சின்னதாய் ஏதேனும் உடல் பயிற்சி செய்யும் மாதிரி பழக்கப் படுத்துவோமே.
தினம் ஒரு பக்கம் படிக்க தூண்டுவோம்.

இதில் எதாவது ஒன்றை நடைமுறை படுத்தினாலே நல்லது தானே...

Thursday, December 3, 2009

ராகி மால்ட்- 5 மாதம் முதலே குடுக்க ஆரம்பிக்கலாம்.

ராகி மால்ட்- 5 மாதம் முதலே குடுக்க ஆரம்பிக்கலாம்.
செய்முறை
1 . சிறிது வெல்லத்தை சுடு நீரில் ஊற வைக்கவும்.
2 . கை பிடி அளவு ராகி கழுவி நீரில் ஊற வைக்கவும் .( குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வேண்டும்.)
3 . ஊறிய ராகியை நீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்து கொள்ளவும்.
4 . அதுனுடன் கரைத்த வெல்ல நீரையும் , சிறிது பாலும் விட்டு மிக மிக குறித்த தீயில் அடி கனமான பாத்திரத்தில் விட்டு கிளறவும்.
ஆரம்பத்தில் சிறிது நீர்கவும், சிறி சிறிதாக கெட்டியாகவும் தரலாம். மிகவும் சக்தி நிறைந்தது, ஜீரணிக்க மிக எளிதானது.

விகடன் வரவேற்பறையில் அம்மாக்களின் வலைப்பூக்கள்

இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம். அழகிய வலைப்பூக்களைத் தன் வரவேற்பறையில் அடையாளம் காட்டும் ஆனந்த விகடன், இன்று தன் வரவேற்பறையில் “அம்மாக்களின் வலைப்பூக்கள்” வலைப்பூவிற்கு இடம் கொடுத்துள்ளது.




வலைப்பூவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். இவ்வலைத்தளத்தை வாசித்து ஊக்கமளிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். இது அம்மாக்களுக்கு மேலும் நல்ல பதிவுகளைத் தர நல்லதொரு ஊக்கமாக அமையும் என்பது உண்மை.

Wednesday, December 2, 2009

அங்கவை..சங்கவை...அவ்வை



அவ்வைப் பாட்டி பற்றி இப்போதுள்ள குழந்தைகளுக்கு பெயரைத் தவிர பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லை.

அவரைப் பற்றிய சரித்திர நிகழ்ச்சி ஒன்றை இப்போது பார்ப்போம்.

நட்பின் மகத்துவத்தைப் பற்றி கூற வேண்டுமெனில் கோப்பெருஞ்சோழன் ,பிசிராந்தையாருடன் அவ்வையார் அதியமான் கதையையும் சொல்வார்கள்.கூடவே பாரி கபிலர் கதையையும் கூறுவார்கள். அந்தப் பாரி மன்னன் கடையேழு வள்ளல்களுள் ஒருவன். பாரி பரம்பு எனும் மலை குறுநில மன்னன் .
மன்னன் என்றால் போர் இல்லாமலா? மூவேந்தர்கள் தமக்கு அடி பணியாத அல்லது கப்பம் கட்டாத குறுநில மன்னர்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டு வந்தனர் என்பது வரலாறு .அப்படி
மூவேந்தர்களுடன் நடந்த போரில் பாரி இறந்து படவே ,அவனது பெண் மக்கள் இருவரும் ஆதரவற்ற அனாதைகள் ஆயினர் என்று வரலாறு சொல்கிறது.

அந்தப் பெண்களின் பெயர்கள் அங்கவை,சங்கவை (சிவாஜி படத்தில் கூட இந்தப் பெயர்கள் வருமே! பாரியின் மகள்களின் பெயர்கள் தான் அவை)

அப்படி நிராதரவாய் வறுமையுடன் வாழும் போதும் அப்பெண்கள் யாரிடமும் அண்டிப் பிழைக்க விருப்பமற்று ஒரு அரசனின் மகள்கள் எனும் பெருமையை விடுத்து தனியே வாழ்ந்திருக்கையில் அவ்வைப்பாட்டி ஒரு நாள் அவர்களைச் சந்திக்கிறாள்.

முல்லைக்கு தேர் தந்த பாரியின் மக்களுக்கா இந்தக் கதி என அவ்வை வருத்தம் மிகக் கொண்டு அவர்களது நல வாழ்வுக்கு ஏதேனும் செய்தே தீருவது என முடிவு செய்கிறார்.

அவ்வையின் மீது பெரு மதிப்பு கொண்ட சிற்றரசன் ஒருவன் அங்கவை சங்கவியை மணந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவே அவ்வைப் பாட்டி அவர்களது திருமணத்தை முன்னின்று நடத்துகிறார்.

அவ்வேளையில் அதை எதிர்த்து மூவேந்தர்களும் படை திரட்டி வருகின்றனர். தங்களை எதிர்த்து போரில் மாண்ட அடி பணியாத பாரியின் மகள்களுக்கு அவ்வைப் பாட்டி திருமணம் செய்வித்து ஆதரிப்பதா என்ற அடங்காக் கோபம் அவர்களுக்கு .

மூவேந்தர்களும் படை திரட்டி வருவதை அறிந்த அவ்வை போர்களத்தில் அவர்களிடம் சென்று பாரியின் பெருமைகளை எடுத்துச் சொல்லி சமாதனம் செய்து எப்படி போரை நிறுத்தினார் என்பது இன்னொரு சுவையான சரித்திர நிகழ்வு.

இப்போது சொல்ல வந்த விஷயம் என்ன வென்றால்

மூவேந்தர்களும் ஒற்றுமையாய் ஒரு சமயம் இருந்தார்கள் அதற்க்கு அவ்வை பாட்டி காரணம் என்பது தான்.

அங்கவை...சங்கவியின் திருமணதிற்கு மூவேந்தர்களும் ஒற்றுமையாய் வந்து கலந்து கொண்டனர் அவ்வையின் மீது கொண்ட பெரு மதிப்பினால்.

இதற்க்கான சரித்திர ஆதாரம் .

திருமணதிற்கு வந்த சேர மன்னர் தன் பரிவாரங்களுடன் தங்கியிருந்த இடமே சேலம் என்று பின்பு மருவிற்றாம்.

அங்ஙனமே பாண்டிய மன்னர் தங்கியிருந்த இடம் வீர பாண்டி என ஆயிற்று .

சோழமன்னன் தங்கியிருந்த இடம் வீரசோழபுரம் என்று ஆயிற்று .

இந்த நிகழ்வு சரித்திரத்தில் பதியப் பட்ட ஒன்று என ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணக் கிடைத்தது.

பகிர்வுக்காக இங்கே அளித்தேன்.

Tuesday, December 1, 2009

சாக்லேட் ஊட்டச்சத்து பானங்கள்



இனிப்பை விரும்பாத குழந்தைகள் அரிது தான்.

அதிலும் சாக்லேட்டுகளை ...ஐஸ் கிரீம்களைப் பிடிக்காது என்று எந்தக் குழந்தையாவது சொல்லக் கூடுமானால் அது மிகப் பெரிய அதிசயமே .

பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு ஐஸ் கிரீம் வாங்கலாம் அல்லது ஐந்து எக் லேர்ஸ் சாக்லேட்டுகள் வாங்கலாம் ,இன்னும் குறைக்க வேண்டுமெனில் ஐம்பது காசுக்கு ஒரு காச்சா மேங்கோவோ அல்லது காபி பைட் இன்னும் சில குழந்தைகள் மின்ட்டோ பிரெஷ் ...ஹால்ஸ் ..பூமர் இப்படி வாங்கிச் சாப்பிடுகிறார்கள் ,

பத்து ரூபாய் என்றால் ஒரு குர் குரே அல்லது பிங்கோ சிப்ஸ் அல்லது லேய்ஸ் ...அதுவும் இல்லா விட்டால் பய்ட்ஸ்...இப்படித் தான் இருக்கிறது ஐந்து முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளின் சிற்றுண்டிப் (என்ன ஒரு அழகான தமிழ் வார்த்தை ! அதிகம் புழக்கத்தில் இல்லையோ என்று ஐயமாகி விட்டது ...இப்போதெல்லாம் சிம்பிளாக ஸ்நாக்ஸ் என்று முடித்து விடுகிரோமில்லையா?!) பழக்கம் .

மேலே கூறப் பட்டுள்ளவற்றில் சிப்ஸ் வகையறாக்கள் தவிர்த்து மற்ற எல்லா சிற்றுண்டிகளிலும் இனிப்பு இருக்கும். சிப்ஸ்களிலும் உருளைக் கிழங்கு இருப்பதால் மாவுப் பொருளுக்கே உரித்தான சிறிதளவு இனிப்பு அதிலும் உண்டு.

அளவு மீறாமல் சாப்பிட்டால் பயமேதுமில்லை. "அளவுக்கு மேறினால் அமிர்தம் கூட நஞ்சு தானே"

கடைக்குப் போகும் போதெல்லாம் ஒரு ஹால்ஸ் ...அல்லது எதோ ஐம்பது காசுகள் அல்லது ஒரு ரூபாய் சாக்லேட்டுகள் என்று வாங்கிச் சாப்பிட்டு பழகிய குழந்தைகள் இன்று அநேகம் பேர். விளைவு பற்கள் சொத்தை ...மிகச் சிறு வயதிலேயே பழுப்பான பற்கள் .

இன்னும் சிலருக்கு தீராத சளி ...இருமல் .

எல்லாக் குழந்தைகளுக்குமே மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில் சீதோஷ்ணம் ஒத்துக் கொள்ளாமல் சளி இருக்கக் கூடும் .சிலருக்கு கோடையில் பெய்யக் கூடிய மழை ஒத்துக் கொள்ளாமல் கூட சளியும் இருமலும் வரக் கூடும். அவை தவிர்த்து மாதம் ஒருமுறைக்கு இருமுறை கடுமையான சளியும் இருமலும் இருப்பின் பெற்றோர் நிச்சயம் தம் குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பழக்கங்களை கண்டிப்புடன் கவனிக்க வேண்டும்.

நாள் முழுதும் மூன்று அல்லது பலமுறை சாக்லேட்டுகள் அல்லது இனிப்புகளை உண்ணும் பழக்கத்தில் இருந்து நமது குழந்தைகளை நாம் மீட்க வேண்டும். இனிப்பு சுவை அதிகமானால் ;உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

நான் அனுபவ ரீதியாக உணர்ந்தது சளியும் இருமலும் தீவிரமாக இருக்கும் நாட்களில் குழந்தைகளின் கண்களில் இருந்து சாக்லேட்டுகளை கண்டிப்பாக மறைத்து வைப்பது சாலச் சிறந்தது.

சாக்லேட்டுகள் மட்டும் தான் என்றில்லை இன்று வரும் ஊட்டச் சத்து பானங்களில் பெரும்பான்மையும் சாக்லேட் கலந்த பானங்களே .எல்லாவற்றிலுமே சாக்லேட் ப்ளேவர் உண்டு.

பூஸ்ட்

போர்ன் விட்டா

காம்ப்ளான்

மால்ட்டோவா

ஹார்லிக்ஸ்

மருத்துவர்களின் ஆலோசனை என்னவெனில் சுத்தமான ஆவின் பால் நீர் கலக்காமல் காய்ச்சி அளவான சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குத் தரலாம் அதுவே போதும் ஊட்டச்சத்து பானங்கள் என்ற பெயரில் இவை எல்லாம் அத்த்யாவசியமே இல்லை.


தவிர்க்க முடியாது குழந்தைகள் அதன் சுவைக்குப் பழகி விட்டார்கள் என்ற காரணத்தால் இன்றைய நிலையில் வளரும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ஊட்டச் சத்து பானங்களை நம்மால் தடை செய்ய இயலாவிட்டாலும் கூட இரவு முழுதும் இருமல் ...சளித் தொல்லை வறட்டு இருமலால் வாந்தி எனும் நிலை வரும் பொது அந்த நாட்களில் மட்டுமேனும் இவற்றை நிறுத்தி விட்டு நீர் கலக்காமல் காய்ச்சிய வெறும் பாலில் செரிமானத்திற்கு உதவும் சதவிகிதத்தில் மட்டுமே கொஞ்சமாக சர்க்கரை கலந்து தரலாம்.

என்ன ஒரு மகாப் பெரிய கஷ்டம் எனில் அப்படிக் குடிக்க குழந்தைகள் ஒத்துக் கொள்ள வேண்டும் !!!

பழக்க வேண்டும் நம் குழந்தைகளை.

Friday, November 27, 2009

பாப்பு செய்த மணிமாலை


பாப்புவுக்கு பள்ளி நேரம் மாலை மூன்று மணியுடன் முடிந்து விடும் ,வீட்டிற்கு வந்த பின் உடனே யூனி பார்ம் கூட மாற்றிக் கொள்ளாமல் அவள் செய்யும் முதல் வேலை டி .வியை ஆன் செய்வது தான்...பிறகு அவள் இரவு தூங்கச் செல்லும் வரை அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் , அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாளோ இல்லையோ டி.வி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ,இப்படி ஒரு கட்டாய மனநிலை,ஒற்றைக் குழந்தையாய் வளரும் பல குழந்தைகளுக்கும் இருக்கக் கூடும் என்றே தோன்றினாலும் ,இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என முயன்றதில் நல்ல பலன் .
நேற்று இந்த செயற்கை மாலையும் ,இயர் ஹேங்கிங்கும் பாப்புவே தன் கையால் செய்து காட்டினாள் எனக்கும் அவளது அப்பாவுக்கும்.இன்றைக்கு பள்ளிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள் அவளது அனிதா மிஸ்ஸிடம் காண்பிக்க வேண்டுமாம்.
மணிமாலை செய்யத் தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் பீட்ஸ் - 40 (கலர் கலராக கலந்து வாங்கிக் கொள்ளவும் )மாலை முகப்பு(டாலர் போல) செய்ய - 3 சிறு மணிகள் பிணைத்த தொங்கல்கள்
நரம்பு ( கோர்க்க) - 3௦0 சென்டி மீட்டர் (அல்லது) தேவையான அளவு
திருகு அல்லது கூக் - 1 ஒன்று (ரெடிமேட் ஆகவே கடைகளில்
கிடைக்கும்)
நரம்பில் விரும்பும் வண்ணங்களில் மணிகளைக் கோர்த்து இரண்டு முனைகளையும் பிணைக்கும் போது ஏற்க்கனவே வாங்கி வைத்த ரெடி மேட் ஹூக்கின் பின்புற முனைகளையும் மணிகளின் கடைசியில் உள்ளே கோர்த்து உட்புறமாக முடிச்சிடவும் .
இயர் ஹேங்கிங் செய்யத் தேவையானவை :
மாலை முகப்பு செய்யப் பயன்படுத்திய சிறுமணிகள் பிணைத்த தொங்கல்கள் - 2
கேங்கிங் கூக் - 2
இது மாலை செய்வதைக் காட்டிலும் எளிதானது வாங்கி வைத்த ரெடிமேட் ஹேங்கிங் ஹூக்கில் சிறுமணிகள் பிணைத்த தொங்கல்களை பிணைத்தால் இயர் ஹேங்கிங் ரெடி .இப்படியாக நேற்று பாப்பு அதிகம் டி.வி பார்க்கவில்லை ,மேஜிக் வொண்டர் லேன்ட் மட்டுமே பார்த்து விட்டு ஹோம் வொர்க் செய்தாள்,பிறகென்ன தூக்கம் வரவே சரியான நேரத்திற்கு தூங்கப் போய் இன்றைய பொழுது அவசரமின்றி அழகாக விடிந்தது.
எனக்கும் ஐயோ ! ...எந்நேரமும் டிவி பார்க்கிறாளே என்ற பயம் குறைந்தது, ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை தான் ;அடுத்தென்ன செய்யலாம் அவளது கவனம் டி.விக்குச் செல்லாமல் தடுக்க என்று யோசிப்பதில் காலம் கரைகிறது எனக்கு .

Sunday, November 22, 2009

கிட்ஸ் புன்னகை உலகத்தில் பாப்பு

ஜெயாவின் முந்தைய பதிவைப் படித்து பாப்புவுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன் ...முடிந்ததும் பாப்புவுக்கு என்ன தோன்றியதோ ...ஹே...ஹே நானும் ப்ளாக் எழுதணும் மம்மி ...ப்ளீஸ்...ப்ளீஸ் என்று ஒரே அடம்.

சரி என்ன எழுதணும் சொல்லு நான் நீ சொல்லச் சொல்ல டைப் பண்றேன் என்று அனுமதிக்கவே அவள் சொன்னது கீழே பார்வைக்கு ...

"பேரன்ட்ஸ் வந்து சின்னக் குழந்தைங்க கொஞ்சம் சேட்டை பண்ணா மெதுவா சொல்லுவாங்க...சொன்னதைக் கேட்காம மறுபடி மறுபடி சேட்டை பண்ணா கண்டிக்க தான் செய்வாங்க...ஆனா நீங்க அம்மா அப்பா கண்டிக்கும் போது அவங்க பேச்சை கேட்டுட்டிங்கன்னா அவங்க இந்த மாதிரி கண்டிக்கவே தேவை இல்லை. எப்பவும் நல்ல குழந்தையா இருக்கற நீங்க அப்படியே இருந்திங்கன்னா மம்மி டாடி உங்களை ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க.இதெல்லாத்தையும் சொல்றது நான் தான் பாப்பு...இதை சொல்றதுக்கு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு .

"ஹேவ் எ குட் டே "

பை..பை "

பாப்புவின் பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாதமும் புன்னகை உலகம் என்றொரு புத்தகம் அனுப்புவார்கள் ,இந்த இஸ்யூவில் "குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை " தூண்டவும் வளர்க்கவும் சொல்லப் பட்டிருந்த செய்திகளில் ஒன்று...

குழந்தைகளிடம் நிறைய புது புதுப் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பது.

அதில் சில உதாரணங்கள் ...

கேள்வி:

உனக்கு மூன்றாவதாக ஒரு கண் தோன்றி விட்டால் என்ன செய்வாய்?

பாப்புவின் பதில் :

மூனாவதா ஒரு கண்ணு வந்தா ...கண்ணாமூச்சு விளையாடும் போது இந்த ரெண்டு கண்ணையும் மூடிட்டா நான் மூணாவது கண்ணை ஓபன் பண்ணிட்டு லார்ட் சிவா மாதிரி ஒளிஞ்சிட்டு இருக்கறவங்களை கண்டு பிடிப்பேன் ,கண்டிப்பா அந்த மூணாவது கண்ணை அப்படியே வச்சுப்பேன் ... எடுக்க சொல்ல மாட்டேன். (ஏனோ...ஏனோ...அது ஏனோ?!) நல்லா இருக்கும் இல்ல மம்மி ?!

இதற்க்கு என்ன சொல்வேன் நான்?

அவளது பதில் கேட்டு ஒரு பக்கம் சந்தோசமாக உணர்ந்தேன் ;எந்த பதிலைச் சொல்வது என்ற தயக்கம் இல்லை அவளிடம் ...அது போதுமாய் இருந்தது போலும் எனக்கு.

Saturday, November 21, 2009

எப்படி வளர்க்கலாம் குழந்தைகளை?

நம்மில் பலருக்கு நம் குழந்தைகளை பற்றிய கவலை கனவிலும் நினைவிலும் வாட்டி வதைக்கும். சரியாக சாப்பிட மாட்டேங்கறானே, சரியா படிக்க மாட்டேங்கறானே, எந்த நேரமும் டி.வி முன்னாடியே இருக்கானே, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டேங்கறானே, வீட்டுக்கு வர்றவங்க கிட்ட நல்லபடியா பேச மாட்டேங்கறானே, அக்கா தங்கச்சி கிட்டே சண்டை போடறானே, யார் கிட்டேயும் தன்னோட பொருட்களை ஷேர் பண்ண மாட்டேங்கறானே, கீரை, பழங்கள், காய்கறிகள் சாப்பிட மாட்டேங்கறானே, சில காய்கறிதான் உள்ளே இறங்குது, மத்தது எல்லாம் சாப்பிடலை என்றால் எப்படி நல்லா வளருவான்? எந்த நேரமும் ஸ்நாக்ஸ் என கடையில் விற்கும் பண்டங்களை தின்னால் வயிறு என்ன ஆவது?, அப்புறம் எந்த கிளாஸுக்கும் போக மாட்டேங்கிறானே, பாட்டு கத்துக்க வேண்டாமா, டான்ஸ் கிளாஸ் போக வேண்டாமா, விளையாட்டு பொருட்களை பத்திரமாக எடுத்து வை என்று நூறு தரம் சொன்னாலும் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறானே, ஒரு நிமிஷம் கூட கண்ணை எடுக்க முடியலையே, எதையாவது உடைத்து விடுகிறான், கொட்டி விடுகிறான், சில்மிஷம் செய்து விடுகிறானே என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலைகள் இதில். இதில் பாதி எங்க அம்மாவின் புலம்பல் கூட. நல்ல பழக்கத்தை சொல்லித் தருகிறேன் பேர்வழி என்று அதனுடன் போராடி நாமும் டென்ஷன் ஆகி குழந்தையையும் டென்ஷன் ஆக்கி விடுவோம்.

நல்ல விஷயங்களை சொல்லித்தருவது நல்லதுதான் ஆனால் அதை எப்படி சொல்லுகிறோம் என்பது கூட ரொம்ப முக்கியம் என நான் நினைக்கிறேன். அகில் டி.வி. பார்க்கும், ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் - சாப்பிட்டு முடிக்கும் வரை, பின்னர் தூக்கம், எழுந்தால் திரும்ப கொஞ்ச நேரம் - இந்த கொஞ்ச நேரம் என்பது ஒரு இரண்டு மணி நேரம் வரை நீளும். நான் ஆபிஸில் இருந்து வரும் வரை அதற்க்கு செய்வதற்க்கு வேறு வேலை இல்லை, வீட்டின் அருகே நண்பர்கள் யாரும் இல்லை விளையாடுவதற்க்கு. பல நாட்களில் என் அம்மாவுடன் பீச் அல்லது பார்க் செல்லும், அது முடியாத போது மேலே சொன்னது போல டி.வி பார்க்கும். எனக்கு ஒரு பக்கம் பதட்டமாக இருக்கும், என்னடா இவன் இவ்வளவு டி.வி. பார்க்கிறானே, டி.வியின் அடிமை ஆகிவிடுவானோ என, டி.வி பார்க்காதே என்று தடை சொல்லவில்லை என்றாலும், அவ்வப்போது சொல்லுவேன் - அகில் டி.வி நிறைய பார்த்தால் மூளை மழுங்கி விடும், கண்கள் கெட்டு போவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று. அதற்க்கென்று எப்போதும் டி.வியின் முன்னாடி இருக்க விடமாட்டேன், அவன் பார்த்தாலும் முடிந்த வரை கூட இருக்க பார்ப்பேன். சோட்டா பீம், ஹனுமான், டாம் அன்ட் ஜெர்ரி, ஒசோ, ஹாண்டி மேனி என என்ன பார்ப்பான் என்பதும் நான் சொல்லுவதுதான். இப்போது இன்னொரு பாப்பா வந்த பிறகு டி.வி பார்ப்பது இன்னும் கொஞ்சம் கூடிதான் இருக்கின்றது. அதிலும் நான் ரொம்ப கண்ட்ரோல் செய்வதில்லை. ஏனென்றால், என்னுடைய அம்மா என்னை விட புதிதாக வந்திருக்கும் பாப்பாவுடன் நிறைய நேரம் செலவிடுகிறான், என்னுடைய அம்மாவை என்னிடம் இருந்து பிரித்து விட்டாள் என்ற எண்ணங்களை விட ஒரு மணி நேரம் டி.வி. அதிகமாக பார்ப்பது எவ்வளவோ தேவலை தானே? சாப்பிடும் போது டி.வி இருந்தால் சீக்கிரம் வேலை ஆகும் எனக்கும் சரி அவனுக்கும் சரி. அதுவும் கூட ஒரு சவுகர்யம் தானே, பார்க்கின்ற மும்மரத்தில் சீக்கிரம் சாப்பிட்டுவிடுவான், அவனுக்கு புதிதாக கொடுக்கும் காய்கறிகளை எல்லாம் இந்த சமயத்தில் ஊட்டி விட்டால் இரட்டிப்பு நன்மை. எனக்கு இவ்வளவு நாள் ஆன பிறகு கூட ஒரு புத்தகம் கையில் இல்லை என்றால் சாப்பாடு இறங்காது. சாப்பிடுவதற்க்கு தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுகிறேனோ இல்லையோ, புத்தகத்தை தேடி வைத்துக் கொள்ளுவேன், அப்படி இருக்கும் போது இவனை சாப்பிடும் போது டி.வி பார்க்காதே என்று எப்படி அதட்ட முடியும்? எனக்கு புக் என்றால் இவனுக்கு டி.வி...

சில கட்டுப்பாடுகள் அவனுக்கே தெரியும், அம்மா வீட்டுக்கு வந்த பிறகு டி.வி பார்க்க முடியாது, தூங்கும் நேரம் வந்தால் என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் டி.வி நிறுத்தப்படும், ஜெட்டெக்ஸ் மற்றும் வன்முறை நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியாது, தமிழ் சேனல் மெகாசீரியல் அல்லது பாட்டு என எதுவுமே நாங்கள் வைப்பதில்லை அவன் முன்னால். கொஞ்ச நாட்களாகவே நானாக சென்று டிவி யை அணைக்க சொல்லும் முன்னர் அவனே அணைத்து விடுகின்றான், இதுவே ஒரு பெரிய முன்னேற்றமாக எனக்கு தோன்றியது. இன்றைக்கு மான்ஸ்டர் இன்க் படம் போட்டுக் கொண்டு இருந்தான், பாதியில் அகில் வந்து சொன்னது, "அம்மா கொஞ்சம் அதிக நேரமாதான் டி.வி பார்த்துக் கிட்டு இருக்கேன், ஆனாலும் இந்த படம் பார்த்து முடிச்சுடறேனே..." ரொம்பவே சந்தோஷமாக இருந்தது கேட்க, இதுதானே நமக்கு தேவை, குழ்ந்தைக்கு சுதந்திரம் கொடுக்கும் போது அதுவே நல்லது கெட்டது தெரிந்து கொள்ளுகிறது, நாமே ஒரு வட்டத்தை இட்டு அதனுள்ளே இருக்க் வைக்கும் போதுதான் அதனை மீறும் எண்ணம் வலுப்படுகிறது. அப்படி சொல்லி விட்டு தூங்கும் வரை பார்த்தது என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனாலும் அந்த எண்ணம் வந்ததையே ஒரு பெரிய விஷயமாக நான் கருதுகிறேன். இன்றைக்கு எண்ணம் வந்து இருக்கின்றது, நாளைக்கு அடுத்த படியாக அதனை செயல்படுத்தும் என நம்புகிறேன்.

பல சமயம் நாம் நம் குழந்தைகள் எந்த குறையும் இல்லாத குழந்தையாக வளர வேண்டும் என நினைக்கின்றோம். சாப்பிடும் விஷயத்தை எடுத்துக் கொண்டால், எல்லா காய்கறிகளையும் சாப்பிடவேண்டும், கீரை இஷ்டமாக சாப்பிட வேண்டும் என்று விரும்பிகிறோம், எனக்கு நினைவு தெரிந்து, சிறுமியாக சாப்பிட காய்கறிகளை விரல் விட்டு எண்ணி விடலாம், விவரம் தெரிந்து நான் சாப்பிட்ட காய்கறிகளே அதிகம் - ஃப்ரண்ட் வீட்டில் சாப்பிட்டது, புத்தகத்தில் நல்லது என படித்து சாப்பிட பழகியது, திடீரென தோன்றியது என பல காய்கறிகளை அப்புறம் தான் சாப்பிட ஆரம்பித்தேன். இன்னும் கூட சில காய்கறிகள் பிடிப்பதில்லை, அதை சாப்பிடுவதில்லை, அப்படி இருக்கும் போது என் குழந்தை மட்டும் எல்லா காய்கறிகளையும் இப்போதே சாப்பிடனும் என்று எதிர்பார்த்தால் என்ன நியாயம்? அதிலும் எல்லா சத்துள்ள காய்கறிகளும் மண்ணு மாதிரி இருக்கும் சாப்பிட... அதற்க்காக அந்த முயற்ச்சியை சுத்தமாக விட்டு விட வேண்டும் என்றும் சொல்ல வரவில்லை - அன்றொருநாள் வீட்டில் கோவைக்காய் சமைத்திருந்தோம், அகிலுக்கு அதை கொஞ்சம் வைத்தேன், சாப்பிட்டு விட்டு ரொம்ப நல்லா இருக்கு அம்மா இந்த காய், அடிக்கடி செய்யறியா என்று கேட்டு சாப்பிட்டது, அதே போல வெண்டைக்காய் ஒரு நாள் சாப்பிட்டது. ஒரு சிலது சாப்பிடுகிறது, பல பிடிப்பதில்லை, நானும் போட்டு திணிப்பதில்லை. நம் எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக் கொண்டாலே குழந்தைக்கும் சரி நமக்கும் சரி மனநிம்மதி அதிகமாக இருக்கும் என்பது என் வாதம்.

அப்படியே நம பல புலம்பல்களுக்கு பதில் கொஞ்சம் நம்முடைய இளமைகாலத்தையும், ப்ராக்ட்டிகலாகவும் யோசித்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

பழக்கவழக்களை பொறுத்த வரை என்னுடைய நிலைப்பாடு இதுதான்: ஒரு பழக்கத்தை எப்படி பழக்கிக் கொள்ளுவது, ஒரு பழக்கத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தால் போதும், அப்புறம் அது என்ன பழக்கத்தை கற்றுக் கொண்டால் என்ன? டி.வி அதிகமாக பார்க்கட்டுமே, எப்போது நிறுத்த வேண்டும் என தெரிந்தால் போதும், விதவிதமான சிற்றுண்டிகளை டேஸ்ட் செய்து பார்க்கும் பழக்கத்தை பழகிக் கொள்ள குழந்தைக்கு தெரிந்தால் போதுமே, அது எல்லா உணவையும் சாப்பிட ஆரம்பித்து விடுமே அதுதானே நம் தேவை...

சிறு வயதில் இருக்கும் விதமாகதான் ஒரு குழந்தை வாழ்நாள் முழுவதும் இருக்குமா என்ன? நான் சின்ன வயதில் அவ்வளவு நன்றாக யாரிடமும் பேசமாட்டேன், இப்போது அப்படியா இருக்கின்றேன்? வாயை திறந்தால் தயவு செய்து மூடேன் என்று கெஞ்சுகிறார்கள். இன்றைக்கு ஒரு டிரீட்டில் வெளுத்து வாங்கும் பையன் சின்ன வயசில் ஒரு சின்ன தட்டு சாதத்தை ஒரு மணி நேரம் வைத்து சாப்பிட முடியாமல் முழித்துக் கொண்டு இருந்திருப்பான். நிஜமான அறிவு இருக்கின்றவன் பெரியவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை கொடுப்பான், ஒரே ரூம்மில் ஹாஸ்டலில் படிக்கும் பையன் தன்னுடைய அன்டர்வேர் வரை அடுத்தவனுடன் ஷேர் செய்து கொள்வான் அப்படி எல்லாம் மாறும் போது எதற்க்கு நாம் நம் குழந்தைகளைப் போட்டு கொடுமை படுத்த வேண்டும்?

நல்ல பழக்ககளை சொல்லி கொடுப்பது ரொம்ப முக்கியம் - இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அதை எப்படி சொல்லிக் கொடுக்கின்றோம், எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம், அதற்க்காக குழந்தையை எந்த அளவிற்க்கு தொந்தரவு படுத்திகிறோம் என்பது தான் யோசிக்க வேண்டிய விஷயம்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என நீங்கள் நினைக்கிறீர்களா? சுதந்தரம் கொடுப்பதால் குழந்தைகள் நம் கையை விட்டு போய் விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

ஜெயா.

Tuesday, November 17, 2009

குழந்தையின் வயிற்று வலிஅழுகையை நிறுத்த வழி?

எங்கள் அனன்யா ஒன்றரை மாத குழந்தை. அடிக்கடி வயிற்றை முறுக்கிக் கொண்டு அழுகிறாள். வயிற்றில் கேஸ் தொந்தரவினாலும் கூட, டாய்லெட் போகும் போதும் கூட கஷ்டப்படுகிறாள் என தோன்றுகிறது. பால் கொடுத்துவிட்டு முடிந்த வரை ஏப்பம் விட முயற்சி செய்வேன், சில சமயம் வரும் பல சமயம் ஏப்பம் வருவதில்லை. மூச்சா போகும் போது கூட சில சமயம் கஷ்டமாக இருக்கின்றது என நினைக்கின்றேன், தூங்கும் போது அழுகையுடன் எழுந்து, கொஞ்ச நேரம் அழுது விட்டு மூச்சா போகிறாள்.

எனக்கு தெரிந்த வைத்தியமாக வயிற்றில் விளக்கெண்ணய் வைத்து தேய்த்து விடுகிறேன், ஓமத்தை இடித்த சாறை தாய்பாலில் கலந்து கொடுக்கின்றேன், தினமும் அல்ல, வாரத்தில் இரண்டு நாட்கள், அல்லது அழும் நாட்களில்... கிரைப் வாட்டர் ஏதும் கொடுக்கவில்லை இது வரைக்கும். காலிக் பெயின் மருந்து ஏதேனும் கொடுத்தால் பலன் இருக்குமா?

சுலபமாக ஜீரணம் ஆவதற்க்கும், வயிற்றில் இருக்கும் கேஸ்ஸை வெளியேற்றவும் வேறு ஏதேனும் வைத்தியம் உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் பின்னூட்டம் இட்டு உதவுங்களேன்.

ஜெயா.


Sunday, November 15, 2009

மிகவும் ரசித்த குழந்தைகள் திரைப்படங்கள்

நானும் அகிலும் பொழுது போக்குவதற்க்கு நிறைய படங்கள் பார்த்திருக்கின்றோம். அவனுக்கு டையலாக் புரியாது, நான் எடுத்து சொல்லிக் கொண்டே பார்ப்பேன். என்னுடைய ஆர்வகோளாறுதான் காரணம், அகிலுக்கு மூன்று வயது ஆகுமுன்னரே ஒரு ஐந்து ஆறு படங்கள் பார்த்தோம். ஒரு பாப்கார்ன் பேக்கட்டுடன் உட்கார்ந்தால் பொழுது போவதே தெரியாது, படங்களை சி.டி தேய்ந்து போகும் வரை பார்ப்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது.

இதோ நாங்கள் ரசித்த படங்கள் - பாகம் 1:

1. ஐஸ்ஏஜ்: மூன்று பாகங்களை கொண்டது. முதல் பாகம் ரொம்ப நல்லா இருக்கும், குழந்தைகளோடு நாமும் சேர்ந்து ரசித்து சிரிக்கும் அளவிற்க்கு நல்ல வசனங்கள். தொலைந்து போன ஒரு குழந்தையை அதனுடய அப்பாவிடம் சேர்க்கும் வேலையை செய்யும் ஒரு யானை, அதனுடன் ஒரு அப்பாவி ஸ்லாத், கெட்டவனாக இருந்து நல்லவனாக மாறும் ஒரு சிங்கம்புலி. இவர்களுக்கு இடையே இருக்கும் நட்பு, சண்டை, சிரிப்பு காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு அணில் ஒரு கொட்டையை வைத்துக் கொண்டும் போடும் ஆட்டம் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். கடைசில் குழந்தையை அப்பாவிடம் சேர்க்கும் போது குழந்தை கண்களோடு சேர்ந்து நம் கண்களிலும் கண்ணீர் துளிர்க்கும்.






























இரண்டாவது பாகம் - இன்னொரு பெண்யானை சேர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டி, மூன்றாவதில் ஒரு டைனசார் குடும்பம். மூன்றாவது பாகத்தை சத்யம் தியேட்டரி 3 டியில் பார்த்தது கூட அகிலுக்கும் மிகவும் பிடித்த அனுபவம். முதலாவது போல வராது என்றாலும், இதையும் கூட ரசிக்கலாம்.

படம் பார்த்த பிறகு குழந்தைக்கு நட்பு, அன்பு செலுத்துவது போன்ற நல்ல குணங்களைப் பற்றி பேசி எடுத்து சொல்லலாம்.

2. ரேட்டடூயி:

சமையல் தெரியாத லிங்கிகுவினியின் தலையில் ஏறிக் கொண்டு எலி சமைக்கும் படம். கடைசியில அவன் தான் ஹோட்டல் முதலாள்யின் மகன் என தெரிந்து கொள்ளும் எலி, அவனிடம் கூற அவனே முதலாளி ஆகி விடுவான். ஆனால் அவனுக்கு சமைக்கும் திறமை இல்லை, எலிதான் சமைக்கிறது என்று தெரியாத ஒரு உணவு விமர்சகர் அவனை வறுத்து எடுக்க, எலி அவருக்கு பிடித்த உணவினை அவருடைய அம்மாவைப் போல சமைக்க, உண்மை தெரிந்து தன் கருத்தை மாற்றிக் கொள்ளும்படி இருக்கும். விடாமுயற்சி, உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம், கஷ்டம் வரும் போது தோழனுக்காக உதவுவது என பல நல்ல காட்சிகளையும் கருத்துக்களையும் கொண்ட படம்.

3. எ பக்ஸ் லைஃப்: நம்ம எறும்பு, வெட்டுக்கிளி கதைதான் - எறும்புகளை ஒரு வெட்டுகிளி கூட்டம் மிரட்டி அது சேகரித்து வைத்திருக்கும் உணவினை எடுத்து செல்லும் வாடிக்கையை நிறுத்த ஒரு எறும்பின் முயற்சியின் கதை. தன்னம்பிக்கையின் பவரை எடுத்து சொல்லும் படம். அகிலுக்கு ரொம்ப பிடித்த படம், எத்தனை தரம் பார்த்தோம் என்று எங்களுக்கே தெரியாது.



4. வால்-ஈ: இதுவும் நாங்கள் தியேட்டரி போய் பார்த்த படம். அகிலுக்கு என்னால் தியேட்டரில் வீட்டில் சொல்லுவது போல என்னால் கதை சொல்ல முடியவில்லை, ஆனாலும் வாயில் ஈ போவது கூட தெரியாமல் படம் பார்த்தது. தனிமையின் கொடுமையை முதலில் காண்பிப்பது ரொம்ப நன்றாக இருக்கும், அகிலிடம் அவ்வப்போது சொல்லுவேன், அகில் நமக்கு ஃப்ரண்ட்ஸ் யாரும் இல்லை என்றால் நாம வால் ஈ மாதிரிதான் யாரும் இல்லாம கஷ்டபடுவோம் என்று. ஒரு தோழி கிடைத்தவுடன் அது அடிக்கும் லூட்டி, அதை காப்பாற்றுவதற்க்காக பறக்கும் தட்டிற்க்கு போய் செய்யும் அழிச்சாட்டியங்கள் என ரசிக்கும் வகையாக இருக்கும்.


































அதில் வரும் குள்ள கை குள்ள கால் மனிதர்களை காட்டி, நாமும் சாப்பிடலை, ஒழுங்கா சாப்பிடலை என்றால் இப்படிதான் ஆகிவிடுவோம் என்று சொன்னதற்க்கு எஃபக்ட் அகிலிடம் ரொம்ப நாளுக்கு இருந்தது.

5. ஆலாடின்: இது அகிலுக்கு ரொம்ப பிடித்தது என்று சொல்லமுடியாது, ஆனாலும் அவ்வப்போது பார்க்கும். வால்ட் டிஸ்னியின் கிளாசிக் படம், குழந்தைகள் பட வரிசையில் இதை விடுவது கொஞ்சம் டூ மச். அதில் வரும் ஹோல் நியு வேர்ல்ட் பாட்டு அகிலுக்கு ரொம்பபப பிடிக்கும். படம் பார்த்த வுடன் அகிலின் கேள்வி, "அம்மா அந்த மாதிரி கார்பெட் எங்கே விக்கும்?" அது எல்லாம் விக்காதுடா, என்றால் "இல்லை அம்மா, சிட்டி சென்டரில் விக்கும், நல்லா கேட்டு பார்க்கலாம் அம்மா" என்று சொல்லிவிட்டது.




எதையும் நாம் வாயால் சொல்லி புரியவைப்பதைவிட, இது மாதிரி படங்களில் விஷ்வலாக பார்க்கும் போது பலன் அதிகமாக இருக்கும் என்பது என் அனுபவத்தில் கண்டது, நீங்கள் இந்த படங்களை பார்த்ததில்லை என்றால்
கண்டிப்பாக உங்கள் குட்டியுடன் உட்கார்ந்து பாருங்கள். டி.வியில் போடுவதைவிட நாமே டிவிடி எடுத்து பார்ப்பது நலம், ஏனென்றால் அடிக்கடி போது விளம்பரங்கள் படத்தின் எசென்ஸை கெடுத்துவிடும் அபாயம் அதிகம், மேலும் புரியாத இடங்களை நாமே சப்டைட்டிலுடன் பார்ப்பதற்க்கும் வசதியாக இருக்கும் :)

அடுத்த பதிவில அடுத்த ஐந்து படங்களை சொல்லறோம். அதுவரைக்கும் இந்த படங்களை பார்த்து உங்க கருத்துக்களை சொல்லுங்க :)

ஜெயா.


Saturday, November 14, 2009

சிரிங்க செல்லங்களா!!!!


குட்டிப் பாப்பா
தூங்கும் போது சிரித்தது
கடவுள் தாமரைப்பூ காட்டுகிறார்....
அம்மா சொன்னாள்..........

கோடிப் பூக்கள் கொண்டு வந்து
காட்டுகிறேன்!
சிரிங்க செல்லங்களா!!!!

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

Thursday, November 12, 2009

அகில், அனன்யா, ஜெயா - மூன்று அறுந்த வால்கள்

அகில் - நான்கரை வயது அறுந்த வால். அனன்யா - பிறந்து 40 நாட்கள் ஆன குட்டி வால். நான் ஜெயா பிறந்து ரொம்ப நாளாகிய அறுந்த வால் :) நாங்கள் மூவரும் அடிக்கும் கொட்டம் தாங்காமல் அலறுபவர் பலர்.... உன்னைப் போல உன் குழந்தைகளை வளர்க்காதே என்ற அறிவுரையை அள்ளி வீசியவர் ஏராளம்.

எங்களுடைய சுவாரஸ்யமான அனுபவங்கள், அடிக்கும் லூட்டிகள், அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசை. ஏற்க்கனவே அகிலின் குறும்புகளை இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

இந்த அம்மாக்களின் பதிவில் என்னுடைய குழந்தை வளர்ர்ப்பு பற்றிய சந்தேகங்கள் மற்றும் கருத்துகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டி எழுத ஆரம்பிக்கின்றேன்...

ஜெயா.

Wednesday, November 11, 2009

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை - செல்வனூரான் அவர்களின் பதிவிலிருந்து!

தங்கராசு நாகேந்திரன் அவர்களின் பதிவிலிருந்து "

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை. நான் ஒரு சிறு குழந்தை அம்மா.யாராவது எனக்கு கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். பட்டாம் பூச்சிகளும் தலைப்பிரட்டைகளும் என்ன சாப்பிடுகிறது அவை எங்கு தூங்குகிறது என நான் தெரிய ஆசைப்படுகிறேன். மலையின் மேல் ஏறி மேகத்தினைப் பிடித்து அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என அறிய ஆசைப்படுகிறேன். கைகளால் ஓடைநீரை அலசி மீன்கள் நீந்துவதை உணர ஆசைப்படுகிறேன்.

குட்டி செல்ல விலங்குகளுடன் ஓட ஆசைப்படுகிறேன். பறவை போல் கானம் பாட ஆசைப் படுகிறேன். காகிதப் படகு செய்து மழைநீரில் விட்டு விளையாட ஆசைப்படுகிறேன்.மிருதுவான பசும் புல்வெளியில் படுத்து காற்றின் சங்கீதத்தை கேட்க ஆசைப் படுகிறேன்.
இப்படி இவற்றை இயற்கையாக அனுபவித்த பின்னரே இவற்றை பாடங்களில் விளக்கமாக தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா இயற்கையைப் பற்றி என் கற்பனை சிறகுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.மேலும் மேலும் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என என் ஆர்வம் மிகுதியாகி கொண்டிருக்கிறது. ஏன் என்னும் விதை என் சிந்தனையில் விதைக்கப் பட்டிருக்கிறது.
"

மீதியை இங்கே அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை வாசியுங்களேன்! நல்ல இடுகைக்கு நன்றி தங்கராசு செல்வேந்திரன்!

Wednesday, October 7, 2009

Good Habits for your child-Start Early

சஞ்சனாவிற்காக (அமித்துவின் பெரியப்பா மகள்) நல்ல பழக்கங்கள் சார்ட்டினை நெட்டில் தேடும் போது, கண்ணில் பட்டது. உங்களின் பார்வைக்காக இங்கே.

Dr. Radha Rajagopalan
HOD-Pediatrics, Apollo Hospitals, Chennai.


1. Well, we all want to see our children growing up with good habits. That’s why it is very important to start early. The younger the child, the more unquestioning their minds will be and thus easier to inculcate good habits in them. Some of the really important habits that should be taught early are:

2. Brush before bedtime- We all teach our kids to brush their teeth before eating or drinking anything in the morning. In fact it becomes a part of our lives. But how many of us insist that our children brush before going to bed? This is a very essential habit that is extremely difficult to teach later on. In fact it is very difficult to learn later on too. If you don’t brush before going to bed, this is a good time to start and pass it on to your child as well. Its important.

3. Oil Bath-In olden days, it was said that boys should have an oil bath on Wednesdays and Saturdays while girls should have it on Tuesdays and Fridays. Well, the days could have been kept that way for convenience but the point, yes, our grandmothers were right. Oil bath twice a week is good for children and the young age is great time to start.

4. Wash hands before eating- As kids, they tend to indulge into food as soon as they see it. Thus if this habit is not insisted every single time, they soon tend to forget it. Hands are the major carriers of germs and eating with dirty hands can easily put your child through illness. The simple answer is to make them wash hands before putting anything in their mouths. So even if it is for a snack, take your kid to wash hands before eating. And soon it will become a habit for them. Of course when they are old enough to understand, you should stress the importance of hygiene and infection.

5. Cut nails once a week- Even today many of us do not cut our nails. We simply bite them off. And I don’t think we wash our nails before biting them so the risk of infection is high. And please do not underestimate this risk. So as kids cut their nails once a week so that there is no opportunity for them to bite them. And when they are older, you can teach them to cut their nails. But maintain the trimming to once a week as that how long it takes for the nail to grow big enough to bite it!

6. Exercises- Teach the kids the importance of exercise at an early age. Take them for a walk and teach them simple exercises. If you have a pet dog, you can train the kids to take them for a walk. Of course if you need to exercise yourself, take this hint. You should start too and that way you can have a healthy life to devote to your kids.

7. Sleep- Well, this is a very important thing to teach your kids. Make sure they are in bed by 830 or 9 PM and wake them up by 6 in the morning. Those of you who believe your kids do not sleep early, wake them up at 6 AM whatever time they sleep. You will notice that in a few days, they will get to bed early too as they will be tired out. Its your duty to teach them the ‘Early to bed, early to rise’ principle.

8. Variety in food- Just because your kid likes one type of vegetable, do not cook the same for him everyday. Introduce a variety of foods for your child and get them acquainted to different food types. This way you child will be able to adapt to different foods.

Its very important to teach them to respect elders. Especially in nuclear families where the scope to interact with elders is very low, it is important to emphasize the aspect of respect.

So these are some of the important habits to inculcate into your child that will make them less prone to infection, give them healthier teeth, keep them healthy and save you a whole lot of trouble and money. More importantly, they will make your kids better people when they grow up. Good luck!

Thanks : http://www.babycareindia.com/good+habits

Tuesday, September 15, 2009

ப்ளாஸ்டிக் - ஒரு சிறிய பகிர்வு

1. ஒரு சின்ன ஆனா முக்கியமான விஷயத்தை தெரிஞ்சிக்குவோமா???

பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். ("Resin identification code" - 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும்.

2. தண்ணீர் கொண்டு செல்ல நாம் வாங்கும் பிலாஸ்டிக் பாட்டில்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?

நீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade plastics) இருந்தால் நிச்சயம் உங்கள் நீரும், அதை குடிக்கும் உங்கள் ஆரோக்கியமும் பாதுகாப்பாக உள்ளது. காரணம் 1- 4 வரை எண் உள்ள பாட்டில்கள் உணவு எடுத்து செல்லும் தகுதி உடையவை அல்ல. 5 - 7 வரை உள்ளவை மட்டுமே உனவு கொண்டு செல்லும் தரம் உடையவை.

3. எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
உணவு பொருட்கள் கொண்டு செல்லும் பிலாஸ்டிக்குகள் (தண்ணீர், உணவு, பழம், காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சரி) எப்போதும் 5 - 7 வரை எண் கொண்ட பிளாஸ்டிக்கா என பார்த்து வாங்குங்கள்(Food Grade Plastic).

4. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
1 - 4 எண் கொண்டவை உணவு கொண்டு செல்ல தகுதியானவை அல்ல. அவை வெப்ப சூழல் மாறும் போது கார்சினோஜென் (Carcinogens) எனப்படும் ஒன்றை வெளியிடுவதால் அதில் உள்ள உணவை உண்பவருக்கு புற்றுநோய் (Cancer) ஏற்பட காரணமாகிறது.

தோழிகளே பிளாஸ்டிக்கில் கவனம் தேவை !!!

மூலம்: அறுசுவை.காம்

Wednesday, August 19, 2009

The happy Hedgehog - புத்தகம்



The happy Hedgehog

வயது : 5 - 12 வயதுவரை
மொழி : ஆங்கிலம்


இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் தேர்வு செய்தேன், எந்தவொரு அபிப்ராயமுமில்லாமல். சமீப நாட்களாக பப்பு முள்ளம்பன்றி பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் அங்கிருந்த டீடெய்ல் மட்டும் பார்த்து வாங்கிவிட்டேன். இப்பொழுது இந்தப் புத்தகத்தை வாங்கியதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.


மிக்கோ என்பது அந்த முள்ளம்பன்றியின் பெயர். பூச்சி நண்பர்களும், நறுமணமுள்ள பூக்கள் நிரம்பியதுமான ஒரு அழகான தோட்டத்தில் வசித்து வந்தான். எல்லாச் செடிகளும் அவனுக்குப் பரிச்சயம். மூலிகைகளையுங்கூட அறிந்திருந்தான். மிக்கோவின் தாத்தா, இவனை இப்படியேவிட்டால் பகல் கனவு கண்டுக்கொண்டு எதையும் வாழ்வில் சாதிக்கமாட்டானென்று எண்ணினார். தோட்டத்தை விட்டு வெளியே சென்று மற்ற மிருகங்களைப் பார்த்து அவைகளைப் போல் சாமர்த்தியமாக, வேகமாக, பலமுள்ளவனாக இருப்பது எப்படியென்று கற்றுக்கொள் என்று அனுப்பிவிட்டார். வேகமாக ஓட பயிற்சியெடுக்கும் ஒரு ஆமை, புத்தகத்தை வைத்து மனப்பாடம் செய்யும் முயல், பாரமான கல்லைத் தூக்கி பயிற்சியெடுக்கும் கீரியை சந்திக்கிறான் மிக்கோ. ஆனால் இவர்களில் யாருமே அந்தந்த வேலையை செய்வதால் மகிழ்ச்சியடைவதில்லை என்று அறிந்துக்கொள்கிறான். தனக்கு அந்த தோட்டத்தில் வாழ்வதே மகிழ்ச்சியைத் தருகிறதென்று உணர்ந்து தோட்டத்திற்கு வந்துவிடுகிறான்.




இந்தக் கதை பப்புவின் வயதுக்கு அதிகம் என்றாலும் புத்தகத்தின் படங்களும்
சொல்லப்பட்ட நகைச்சுவை பாணியும் பப்புவிற்கு பிடித்திருந்தது. அடிக்கடி ரிப்பீட்டு செய்ய வேண்டும் இந்தக்கதையை. பிறரின் மகிழ்ச்சிக்காகவோ அல்லது மற்றவர்கள் செய்கிறார்களென்றக் காரணத்திற்காகவோ நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. உனக்குப் பிடித்ததுப் போல நீ வாழ்வை தேர்ந்தெடுக்கலாமென்று சொல்லலாம்தானே, நம் குழந்தைகளுக்கு!

Tuesday, August 18, 2009

The mixed-up chameleon - புத்தகம்



The mixed-up chameleon - Eric Carle

வயது : 3-6
மொழி : ஆங்கிலம் & இந்தி
விலை : ரூ 175


எரிக்-இன் புத்தகங்களுக்கு அறிமுகம் தேவையில்லைதான், The very hungry caterpillar ஒன்றே போதும்! வழக்கம்போல எளிய கதை. தன் தோற்றத்தைக் குறித்தும், தனது சுவாரசியமற்ற வாழ்க்கையைக் குறித்தும் அதிருப்தியடைகிற ஒரு பச்சோந்தியே மெயின் கேரக்டர். தன்னால் நிறங்களை மாற்றிக்கொண்டு வாழ முடியுமென்று அறிந்திருக்கிறது. நாவை நீட்டி பூச்சிகளைப் பிடித்து உணவுண்கிறது. அதனால் பெரிதும் பயனில்லை என்று நினைக்கிறது.

ஒரு நாள் ஜூவிற்குச் செல்கிறது. அங்கு பல விலங்குகளைப் பார்க்கிறது. அந்த விலங்குகளின் உடலமைப்போல தனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமேயென்று எண்ணுகிறது. அப்படி எண்ணியதும் அது விருப்பப்படியே நடந்தும் விடுகிறது. ஃபெளமிங்கோவின் கால்களும், ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தும், நரியைப் போன்ற வாலும் கிடைக்கப் பெறுகிறது. இப்படி எல்லாமுமாக இருக்கும் நேரத்தில் ஒரு பூச்சி பறந்துச் செல்வதைப் பார்க்கிறது.மாற்றங்கொண்ட தோற்றத்தால் பச்சோந்தியால் பூச்சியைப் பிடிக்க இயலவில்லை. பூச்சியை பிடிக்க வேண்டுமானால் அது பழையத் தோற்றத்துக்கு திரும்ப வேண்டுமென்பதை அறிந்து பழைய பச்சோந்தியாக மாற விரும்புகிறது. அதன் விருப்பமும் நிறைவேறுகிறது.




வண்ணமிகு படங்களுடன், கொஞ்சமே கொஞ்சம் எழுத்துகள் இருக்கிற புத்தகங்களையே தேர்ந்தெடுப்பது எனது வழக்கம். அந்த வகையில், படங்களே இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய பலம். பலவகையான விலங்குகளின் தனிச்சிறப்பம்சங்களை அழகாக விளக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேல் நாம் நாமாக, நமதுத் தனித்தன்மையுடன் இருப்பதன் அவசியத்தையும், அழகையும் சொல்லாமல் சொல்கிறது. மற்றுமொரு கலக்கலான புத்தகம் எரிக்கிடமிருந்து!


வெளிநாட்டு பதிப்பு - போர்டு புத்தகம் எழுநூறு ரூபாய்கள் வரை. ஆனால், இதன் இந்திய பதிப்பு கரடி டேல்ஸ் மற்றும் அமரசித்ர கதாவிலிருந்துக் கிடைக்கிறது, ரூ 175-க்கு. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கதையின் வரிகள்.

சென்னைவாசிகளுக்கு : பெசன்ட் நகரில் words&worth என்று ஒரு கடை இருக்கிறது. சிறிய கடைதான். மிககுறைந்த விலையில் நல்ல புத்தகங்கள்,இந்திய பதிப்பில் கிடைக்கிறது.

Words & Worth
2nd Avenue, Indira nagar,
Besant nagar,
chennai.

Monday, August 17, 2009

Grizzly Dad - புத்தக விமர்சனம்



கதை : Grizzly Dad
மொழி : ஆங்கிலம்
வயது : 3-8 வயது வரை


ஒரு நாள் காலையில் அப்பா எழுவதற்கு மனமில்லாமல் எழுகிறார். எழும்போதே மூட் அவுட்!திரும்ப படுக்கைக்குச் சென்று விடுகிறார். குட்டிப்பையன் அப்பாவின் பொறுப்பில். அம்மா தங்கைகளைக் கூட்டிக்கொண்டு தங்கைகளை பள்ளியில் விட்டு விட்டு வேலைக்குச் சென்றுவிடுகிறார். குட்டிப்பையன் அப்பாவை எழுப்புகையில், தன் அப்பா ஒரு பெரிய கரடியாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறான்!!அப்பா-கரடிக்கு முகம் கழுவ, ரெடியாக உதவி செய்கிறான். காலை உணவை இருவரும் அருந்துகிறார்கள். அப்பா, கரடியாக இருப்பதால் எல்லாவற்றையும் மேலே கீழே கொட்டி வீட்டை வீட்டை நாசமாக்குகிறார். பின்னர் சிறுவனும் அப்பா-கரடியும் சினிமாவுக்குப் போகிறார்கள், பின்னர் பார்க்கில் சென்று ஸ்கேட்டிங் பழகுகிறார்கள், கரடிக்கு ஸ்கேட்டிங் தெரியாததால் சிறுவன் கற்றுத் தருகிறான். கரடி சிறுவனுக்கு மரம் ஏறவும், ஒன்றுமே செய்யாமல் மரக்கிளையில் எபபடி இருப்பது என்றும் சொல்லித் தருகிறது. பின்னர் வீட்டுக்கு வந்து இருவரும் சாண்ட்விச் செய்து சாப்பிடுகிறார்கள். கரடி சிறுவனை கட்டியணைத்துக்கொள்கிறது. அந்த நொடியில் கரடி திரும்ப அப்பாவாகிவிடுகிறது! அம்மாவும் தங்கைகளும் வீடு வந்து சேர்கிறார்கள். வீடு குப்பையாக இருப்பதை பார்க்கும் அம்மா, இது வீடா அல்லது பன்றிகளின் கூடாரமா என்று கேட்கும் போது இருவரும் சுத்தம் செய்யக் கிளம்புகிறார்கள். அப்போது இருவருக்கும் பன்றிக்குட்டியின் வால் முளைத்து இருக்கிறது!! :-)




உணர்ச்சிகளை பற்றிய ஒரு எளிதான கதை. கதையில், பப்புவை மிகக் கவர்ந்த அம்சம் படங்கள். அப்பாவுக்குக் கோபம் இருந்தாலும், அதைச் சிறுவனிடம் வெளிக்காட்டாமல் இருவரும் ஒரு நாளை எப்படி செலவழிக்கிறார்கள் என்றும் சொல்கிறது, சிறுவனின் பார்வையில்!!

Tuesday, August 11, 2009

குழ‌ந்தைக‌ளுக்கான‌ க‌தைக‌ள்

எல்லா குழ‌ந்தைக‌ளுக்கும் க‌தை கேட்கும் ஆர்வ‌ம் உண்டு. ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நாம் ந‌ம் க‌ற்ப‌னையில் உதித்த‌ க‌தைக‌ள் சொன்னாலும், சில‌ நேர‌ங்க‌ளில் தெரிந்த‌ க‌தைக‌ளும் கை கொடுக்க‌த்தான் செய்கின்ற‌ன‌.

அவ்வ‌கையில் முக்கிய‌மான‌ க‌தைக‌ளும் புத்த‌க‌ங்க‌ளும் கீழே உள்ள‌ லிங்குக‌ளில் உள்ள‌ன‌,

1. http://www.mainlesson.com/displaybooksbytitle.php
2. http://www.mainlesson.com/displaystoriesbytitle.php
3. http://www.mainlesson.com/display.php?author=bailey&book=hour&story=_contents

அனைவ‌ருக்கும் உப‌யோக‌மாக‌ இருக்கும் என‌ நினைக்கிறேன்.

பன்றிக்காய்ச்சல்...

சென்னை வேளச்சேரி சிறுவன் சஞ்சய் மரணம் ரொம்பவே பாதித்தது. இறைவா அந்த தாய்க்கு மனதில் திடத்தை கொடு.

Monday, August 10, 2009

I can...

"As a man thinketh; so is he " - பைபிள்.

”வெள்ளத்தனைய மலர்நீட்டம்” - திருக்குறள்.

நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன! நம்மைப் பற்றி நாம் கொள்ளும் எண்ணங்களே நமக்கான இடத்தைத் தீர்மானிக்கின்றன! சிநேகிதியின் இந்தக்கட்டுரை நம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று!!நன்றி சிநேகிதி!!

Wednesday, August 5, 2009

தாய்மார்களும் தாய்ப்பாலும்




உலக தாய்ப்பால் வாரத்திற்கான வாழ்த்துகள் அனைத்து தாய்ப்பாலூட்டும் அன்னையருக்கும், குழந்தைகளுக்கும்! :)

தாய்ப்பால் பற்றி மயில் நன்கு விளக்கிவிட்டார்! அவருக்கான என் நன்றியோடு மேலும் சிலவற்றை எனக்குத் தெரிந்தவரை உங்களுடன் பரிமாரிக்கொள்ளவே இப்பதிவு! நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவற்றை பரிமாரிக்கொள்ளுங்கள்!

தாய்பால் பற்றாக்குறை:

இப்படி ஒரு நிலை வருவதற்கு வாய்ப்பே இல்லை.... இது பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்தப் பதிவினைப் பார்க்கலாம்!

தாய்பாலூட்டலின் நன்மைகள் தாய்மார்களுக்கு:

குழந்தைகளுக்கான நன்மை பற்றி மயில் விளக்கி்விட்டார்... அதனால் தாய்மார்களுக்கான நன்மைகளைப் பார்ப்போம்...

* தாய்ப்பால் ஊட்டுவதால் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக் குறைந்து பிரசவத்திற்கு முன் ஏறிய உடல் எடை தானாகக் குறைந்துவிடும்

*மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது

*உங்களுக்கும் குழந்தைக்குமான அன்யோன்யம் அதிகரிக்கிறது

*பிரசவத்திற்கு பின் இருக்கும் பெருத்த வயிறும் ஓரளவு கட்டுப்படும் தாய்ப்பால் ஊட்டுவதால்

தாய்ப்பாலின் வேறுசில பயன்கள்:

இந்தப் பதிவினில் பார்க்கலாம்.... ஆனால் குழந்தை அருந்தியது போக மீதமிருக்கும் தாய்பாலினை தான் பிற பயன்பாடுகளுக்கு எடுக்க வேண்டும்

அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்காக:

அலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக் கொண்டு ஆடையை நனைப்பது ஆகிய இரண்டுமே!

தாய்ப்பாலானது ஃபிரிட்ஜில் வைக்காமலேயே 5மணி நேரம் வரைக் கெடாமல் இருக்கும்..... அதனை ஃபிரிட்ஜில் வைத்தால் இன்னும் பாதுகாக்கலாம்...

இப்படி சேமிக்கப்பட்ட பாலை நாம் வீட்டில் இல்லாத போது நம் குழந்தைக்கு பாட்டி, தந்தை, குழந்த பராமரிப்பாளர் என குழந்தையோடு நெருங்கிப் பழகும் யார் வேண்டுமானாலும் புகட்டலாம்....

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மேனுவல் பிரஸ்ட் பம்ப் எனப்படும் கீழ்காணும் படத்தில் உள்ளக் கருவியை வாங்க வேண்டும்.... இந்தக் கருவியைப் பயன்படுத்தி காலை நீங்கள் அலுவலக்ம் செல்லும் முன்பு குழந்தைக்கு நன்கு பாலூட்டியதும் நீங்கள் நிறைய தண்ணீர் மற்றும் பால் குடித்துவிட்டு ஒரு 30நிமிடங்கள் கழித்து உங்கள் மார்பகத்தில் உள்ள பாலினை இந்த பம்ப் மூலம் எடுத்து வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், இது நீங்கள் வீட்டில் இல்லாத சமயம் குழந்தைக்குப் பயன்படும்।

இதனை சேமித்து வைக்க குழந்தைக்கு பாலூட்டும் நான்_டாக்ஸிக் பால் புட்டிகளையே பயன்படுத்தலாம்... இதனால் இதனை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பதாலும் குழந்தைக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை!

பம்பின் அமைப்பு:

இந்த பம்ப் ஒடு பாட்டில், கையினால் பம்ப் செய்ய ஒரு ரப்பர் பந்து, காற்று விசை வர ஒரு டியூப், பால் வடகட்டி, மூடி, நிப்பிள், மார்பக உறை ஆகியவற்றைக் கொண்டது.... இது மேனுவல் பம்ப் என்றால்....

மின்சாரம் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் பம்பும் உள்ளன.... இதனை பற்றி நான் விளக்க விரும்பவில்லை.... இது அத்துணை சரியான வழியல்ல....
வலுக்கட்டாயமாக தடாலடியாக பாலினை எடுக்கக் கூடாது... அதனால் நான் கையின் மூலம் பாலினை வெளியேற்றும் பம்ப் பற்றி மட்டுமே விளக்குகிறேன்!
மேலே காணும் படத்தில் இதன் விளக்கங்கள் ஓரளவு உங்களுக்குப் புரியும்...
செய்முறை:
படத்தில் உள்ளது போல அந்த மார்பக உறை போன்ற கப்பினை பால்வடிகட்டி இணைத்து பாட்டிலோடு இணைக்கவேண்டும்,
பின்பு அந்தக் கப்புடன் டியூப் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் பந்தினைக் கையில் பிடித்துக் கொள்ளவேண்டும்,
பிறகு அந்த கப்பினை மற்றொரு கையால் மார்பகத்தில் வைத்து மூட வேண்டும்,
பால் வெளிவரும் இடம் கப்பில் பால் செல்லும் வழிக்கு நேராக இருக்கும் படி மார்போடு பொருத்த வேண்டும்,
இப்போது முதலில் மிக மெதுவாக பந்தினை அமுக்க வேண்டும்,
பின் சிறிது சிறிதாக அழுத்தம் கூட்டிக்கொண்டே வரவேண்டும்
இப்போது மார்புப்பகுதியில் ஒரு இறுக்கம் தெரியும் அப்படியானால் நீங்கள் மிகச் சரியாக பொருத்தியிருப்பதாக அர்த்தம்
இப்போது பால் வெளிவரத் துவங்கும்
ஒரு மார்பு முழுதும் பால் வெளிவரும் வரை பம்ப் செய்து எடுத்துவிடுங்கள்
பின் இதே போல மற்றொரு மார்பு!
இதன் பயன்கள்:
குழந்தைக்கு பால் சேமித்துவைக்கவும்
பால் கட்டாமல்/கசியாமல் அவ்வப்போது வெளியேற்றவும்
பால் குறைவாகத் தெரியும் போது குழந்தை சரியாகப் பால் குடித்தாலே பால் நன்கு ஊறிவிடும் ஆனால் குழந்தையின் உடல் சூழ்நிலையால் குழந்தை பால் சரியாகக் குடிக்காமல் குறைந்தால் இப்படி பம்ப் செய்து இருக்கும் பாலை எடுப்பதன் மூலம் பால் அதிகம் ஊறும்!
அலுவலகத்தில் இந்த பம்ப் மூலம் எடுக்கும் பாலை ஐஸ் பாக்ஸில் வைத்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்குப் புகட்டலாம்!
இந்தப் பம்புன் விலை ரூபாய்।இருநூறில் இருந்து இருக்கிறது!
வேலைக்கு சென்றாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கும் போது இருநூறு ரூபாயெல்லாம் ஒரு மேட்டரா? :)


Tuesday, August 4, 2009

உலக தாய்ப்பால் வாரம்


ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரம், தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தி நிறைய நிகழ்வுகள் நடக்கும். நம் பங்கிற்கு ....

உலகில் கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால், குழந்தை உருவானவுடன் பால் சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யும் குழந்தை பிறந்த மறுநிமிடம் பால் வெளிவரும். முதலில் வரும் பால் அனைத்து சத்துக்களையும் கொண்டு இருக்கும் சீம்பால் ஆகும், அதை கண்டிப்பாக குழந்தைக்கு தர வேண்டும். பாலில் சரியான விகிதத்தில் நீர் கலந்து இருப்பதால் ஆறுமாதம் வரை குடிக்க தண்ணீர் தர கூடாது, தேவையும் இல்லை.


அம்மாக்கு உணவு முறை: குழந்தை பிறந்ததும் அது சாப்பிடகூடாது, இது சாபிடாதே என்று கட்டுப்பாடுகள் இருக்கும் , ஆனால் உண்மையில் அதெல்லாம் அந்த காலத்தில் மட்டுமே சாத்தியம். இப்போது நாம் சாதாரணமாக உண்ணும் உணவுகள் சாபிடலாம். உங்களுக்கு எது முதலயே ஆகாதோ அதை விட்டு விடுங்கள்.

பால், ரொட்டி, பிஞ்சு கத்திரி, அவரை, புடலங்கை போன்றவற்றை பாசி பருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம். முருங்கை கீரை மிக மிக நல்லது. பால் சுறா என்னும் கருவாடு, மீன் போன்றவைகளும் பூண்டு அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

பால் நமக்கு சுரக்கவில்லை, குழந்தைக்கு பத்தலை என்பதுஎல்லாம் நம் கற்பனை. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறை பாப்பா சிறுநீர் கழித்தால், அது தேவையான பால் எடுத்து கொள்கிறது என்று அர்த்தம். குழந்தையை சும்மாவாவது மார்புகளை சப்ப அனுமதிக்க வேண்டும், ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உங்கள் வெறும் உடம்பின் மேல் குழந்தையை படுக்க வைத்து அதன் உடல் முழுதும் வருடி கொடுக்கவும், நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தை புரிந்து கொள்ளும்.

குழந்தைக்கு பால் கொடுக்க சோம்பேறித்தனம் படகூடாது, அது என்ன மீறீ போனால் ஒரு இரண்டு வருடம் குடிக்கும் அதற்குள் இரவு தூக்கம் அது இது என்று காரணம் எதுவும் வேண்டாம், நாம் தருவது தாய்ப்பால் மட்டும் அல்ல அதன் எதிர்கால வாழ்க்கை என்று நினைவில் கொள்ளுங்கள். வேலைக்கு போகும் அம்மாக்கள் தாய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து குளிர்சாதனபெட்டியில் வைத்து தேவைப்படும் போது அறையின் தட்பவெப்பத்திற்கு வந்தவுடன் சங்கில் புகட்டலாம், குறைந்த பட்சம் இரண்டு வருடம் பால் கொடுங்கள்.. தவறில்லை. நீங்களும் சரியான உள்ளாடை போட்டால் மார்பு சரிவதை தடுக்கலாம்.

சங்கில் புகட்டும் போது மடியில் போட்டு ஊற்றக்கூடாது, நாம் பால் கொடுக்கும் நிலையில் வைத்து அதன் தலை நம் முழங்கைமேல் இருக்க வேண்டும் அப்போதுதான் புரை ஏறாது. ஒவ்வொரு முறை பால் குடித்ததும் தட்டி கொடுத்து ஏப்பம் வரவைக்கவும். அதேபோல் ஒவ்வொருமுறையும் ஒரு சிறிய கப்பில் தண்ணீர், கொஞ்சம் பஞ்சு வைத்து கொண்டு பால் கொடுக்கும் முன்பும் பிறகும் பஞ்சால் மார்பு காம்புகளை துடைக்கவும். குழந்தையின் உதட்டையும் துடைக்கவும், இல்லாவிட்டால் அதன் உதடு கறுத்து விடும். பால் கொடுக்கும் போது குழந்தை நுனி காம்பில் குடிக்க கூடாது, படத்தில் உள்ளது போல் அதன் வாய் கொள்ளும் வரை நம் மார்புகள் இருக்க வேண்டும்.



இது ஒரு மிக பெரிய அனுபவம், பால் கொடுத்த அனைத்து அம்மாக்களும் உணர்ந்த அனுபவம், நமக்கும் குழந்தைக்கும் மட்டுமே உண்டான பந்தம், அதை அனுபவித்து ரசித்து செய்யுங்கள்.

Sunday, August 2, 2009

பண்டிகை கொண்டாட்டங்களும் குழந்தைகளும்

இப்போதுள்ள காலகட்டத்தில் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளை மட்டுமே முக்கியத்துவம் அளித்து நாம் கொண்டாடுகிறோம்.அதுவும் அவசரம் அவசரமாக காலையில் குளித்து கடவுளை வழிபட்டு ஏதோ சாப்பிட்டு தொலைகாட்சி முன் உட்கார்ந்து விடுகிறோம். குழந்தைகளும் பண்டிகைகளை பற்றியும் அதன் வழிபாட்டு முறைகள் பற்றியும் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே தெரிந்து கொள்கிறார்கள் என்பது என் கருத்து.

பாட்டி தாத்தா இருந்தால் கதைகள் பாடல்கள் மூலம் குழந்தைகளின் அறிவுக்கு எட்டும் வகையில் சொல்லி தருவார்கள்.இப்போது நம்மில் நெறைய பேர் சில பல காரணங்களுகாக வெளியுர்களிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறோம்.நிலைமை இவ்வாறு இருக்க நாம்தான் நம் வழிபாட்டு முறைகள்,விரதங்கள், பண்டிகைகள் பற்றி விரிவாக குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல கடமைபட்டு இருக்கிறோம்.

சின்ன பண்டிகைகள் மற்றும் விரதங்கள்(உதாரணம்: வரலக்ஷ்மி விரதம்,விநாயகர் சதுர்த்தி,பிரதோஷம்,ஏகாதேசி) பற்றியும் அதன் வழிபாட்டு முறைகள் பற்றியும் நமக்கே அவ்வளவு(நான் எல்லாரையும் சொல்லவில்லை) தெரியாத போது நம் குழந்தைகளுக்கு அவை பற்றி நாம் எவ்வாறு சொல்லி கொடுப்பது?

இதற்கு முதல் படி நம் வீட்டில் விரதங்கள், பண்டிகைகளை முறையாக கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்.வீட்டு பெரியவர்களிடம் இவை பற்றி கேட்டறிந்து நம் குழந்தைகளுக்கும் புரியுமாறு எடுத்துரைத்து,அவர்களையும் ஈடுபடுத்தி பக்தியுட ன் செய்ய தொடங்க வேண்டும்.முடிந்தால் அவர்களின் தோழி தோழரைகளையும்,வீட்டு பக்கத்தில் இருக்கும் குழந்தைகளையும் அழைத்து பாடல்கள்,ஸ்லோகங்கள் படிக்கலாம்.

பூஜை முடிந்த பின்பு நம்மாலான சிறு அன்பளிப்பு,பிரசாதம் அளித்து ஊக்கபடுத்தலாம்.சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் உச்சரிக்கும் முறை அவற்றின் விளக்கம் பற்றி தெரிந்தவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி தரலாம். தொலைக்காட்சியை இந்த தினங்களில் பார்க்க வேண்டாம் என்ற உறுதியையும் எடுக்கலாம் (முடிந்தால்!!!!!)

Wednesday, July 29, 2009

பள்ளி செல்ல விரும்பு... பாடம் வெல்லக் கரும்பு



பள்ளி தான் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கும் கூடம். அது அருமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லா பெற்றோருடைய கனவு. ஆனால் நினைத்தபடி எல்லாம் நடக்குமா என்பது நடைமுறை சிக்கல்.

அருகில் இருக்கும் ஒரு நல்ல பள்ளி என்பதே எனது எண்ணமாக இருந்தது. நான் படித்தது அரசு பள்ளி என்பதால், பிரபல பள்ளிகளைத் தேடிச் செல்ல எண்ணவில்லை. வீட்டின் அருகில் இருக்கும் நல்ல பள்ளிகள் என்றே பார்த்தேன்.

முதலில் ப்ளே ஸ்கூல் தேவைப்படாது என்று எண்ணினேன். ஆனால் இரண்டு வயதில் இருந்து விளையாட துணை தேடும் குழந்தையின் ஆர்வம் கண்டு, இரண்டரை வயதில் ப்ளே ஸ்கூல் சேர்த்தேன்.

ப்ளே ஸ்கூலில் நான் எதிர்பார்த்தவை:

- குழந்தைகள் குஷியாக பொழுது போக்குமாறு ரைம்ஸ், கதை விளையாட்டு போன்றவை. பாடம் தேவையில்லை

- பள்ளியின் தூய்மை

- அளவான எண்ணிக்கையில் குழந்தைகள்

- அதிக பணம் கேட்கும் பள்ளியோ, ஏ.சி வசதியோ நான் தேடவில்லை. என் குழந்தைகளுக்கு பள்ளியில் ஏ.சி என்பது என்னைப் பொறுத்தவரை சுகம். பள்ளியில் அந்த சுகம் தேவை இல்லை என்பது எனது கருத்து.



அடுத்து பள்ளியில் போடும்பொழுது, மெட்ரிக், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ என்று இருந்ததில் மெட்ரிக் (அ) சி.பி.எஸ்.இ என்று முடிவு செய்தோம். மற்றவற்றைப் பற்றி எதுவும் புரியாததால் இந்த முடிவு. எல்.கே.ஜி நேர்முகத்திற்கு நந்தினியை அழைத்துச் சென்றேன்.
அவள் ஒரே அழுகை. சற்று நேரம் பொறுத்து என்னுடன் வர சம்மதித்தாள். ஆசிரியர்களின் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்ததது. ஓரளவு பெரிய மைதானம் இருந்தது.

குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். குழந்தைக்கு புரியாவிட்டால் திரும்ப புரியுமாறு சைகைகளுடன் பேசினார்கள். சற்று நேரத்தில் குழந்தை அவர்கள் சொல்வதைச் செய்வது அழகாக இருந்தது. உதாரணத்திற்கு, "ஹாப்" என்றார்கள். புரியவில்லை என்றால், கையால் சைகை செய்து "ஹாப்" என்றார்கள். குழந்தை குதித்தது."புட் திஸ் இன் டஸ்ட்பின்" என்றார்கள். குழந்தை விழித்தது. "பேப்பரை காட்டி, குப்பை கூடையைக் காட்டி, புட் திஸ் இன் டஸ்ட்பின்" என்றார்கள். குழந்தை செய்தது. பின்பு வண்ணம் தீட்டல், எண்ணுதல், அடுக்கி வைத்தல், சாப்பிடும் பொருட்கள் (எதெல்லாம் சாப்பிடக்கூடியவை எனக் கண்டுபிடிக்க வேண்டும். போன் சாப்பிடும் பொருளாகச் சொன்ன பொழுது, போனை சாப்பிடுவாயா என்று கேட்டு சரி செய்தார்கள்) என குழந்தையை மிகவும் சிரமப்படுத்தாது அவர்களது செளகரியத்திற்கு கேள்வி கேட்டது பிடித்திருந்தது. இன்னொரு அழுகை தாங்காது என்று அங்கேயே சேர்த்தோம்.

- தமிழ் இரண்டாவது மொழியாகவும் இந்தி மூன்றாவது மொழியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.

- ஹோம்வர்க் என்று மென்னியைப் பிடிக்க கூடாது என்றும் நினைத்தோம்.

- ஒரு வகுப்பில் அளவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். முதலில் 30 என்றார்கள். பள்ளி வளர வளர சில சமயம் 35 கூட பார்க்கிறோம்.

- லேப்டாப் போன்ற hifi வேண்டாம் என்றே தோன்றியது.

- போக்குவரத்து வசதி பார்த்தோம். வீட்டின் அருகில் வேன் ஏறி/இறங்கும் வசதி இருந்தது



இவர்கள் பள்ளியில் பிடித்த சில விஷயங்கள்:

1. பாடங்களின் சுமை மெல்ல மெல்ல கூடும். எல்.கே.ஜி, யு.கே.ஜியில் தேர்வுகள் கிடையாது. நம்மிடம் சொல்லாமல் அவர்களே அவர்களை பரீட்சித்து ரிப்போர்ட் தருவார்கள். ரிப்போர்ட்டில் அவர்களது பல்வகை திறன்களும் மதிப்பிடப்பட்டிருக்கும். அவர்களது ஆர்வங்களையும், முன்னேற்றங்களையும் வகுப்பாசிரியர் கைப்பட குறிப்பிட்டிருப்பார். ஒன்றாம் வகுப்பில் இருந்து தேர்வுகள் தொடங்கும். பெரும்பாலும் வாரத்தில் ஒரு தேர்வே இருக்கும். எனவே படிப்பது எளிதாகும். எப்படி என்றாலும் முட்டி மோதி தான் படிக்க வேண்டும்.

2. ஹோம்வர்க் கிடையாது (அ) மிகக் குறைவு

3. ஆங்கிலம் பேசும்திறன் முன்னேற்ற வீட்டில் இருந்து அவர்களுக்கு பிடித்த பொம்மையைக் கொண்டு வந்து அது பற்றி பேசச் சொல்வார்கள். குழந்தைகள் ஆர்வமாக பொம்மையை எடுத்துக் கொண்டு அது பற்றி பேசக் கற்றுக் கொள்வார்கள்.

4. பாடம் தவிர வேதம், வெஸ்டர்ன் ம்யூசிக், நடனம், நீதிபோதனை, பொது அறிவு என்று பல விஷயங்கள் உண்டு. மூன்றாம் வகுப்பு வரை "தின்கிங் ஸ்கில்ஸ்" என்று ஒரு பேப்பர் இருக்கும். அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும் கேள்விகள் உள்ளது. கண்டிப்பாகப் படித்து ஒன்றும் பண்ண முடியாது. இவர்கள் ஆண்டு விழாவைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஆசிரியர்/குழந்தைகளின் முயற்சி வெளிப்படும்.

5. வண்ண நாள், ப்ரூட் சாலட் நாள், சமூக நாள் என்று சில நாட்களுடன் பண்டிகை நாட்களும் கொண்டாடுவார்கள். கொலுவிற்கு குழந்தைகளே கொலுவாக இருப்பார்கள். கிறிஸ்துமசுக்கு எல்லோரும் அவரவர் வகுப்பில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்கு பலகாரங்கள் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்தம் வழியில் குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுக்க முயல்வார்கள். உதாரணத்திற்கு வகுப்பில் ஒவ்வொருவரும் சுழல்முறையில் ஏதாவது ஒரு பொறுப்பை ஏற்றிருப்பார்கள்.

6. "அப்சர்வேஷன் டே" என்று ஒரு நாள் நம் குழந்தைகள் வகுப்பில் கற்றுக்கொள்வதையும் ஆசிரியர்கள் கற்பிப்பதையும் காணலாம்.

7. குழந்தைகள் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அறியும் பொழுதே அவர்கள் எவ்வளவு தூரம் இவர்களுடன் பழகுகிறார்கள் என்று புரியும்.

8. நான்காம் வகுப்பில் இருந்து, ஒவ்வொரு வகுப்பிலும் அனைவரும் ஓரிரு முறையேனும் மற்ற பிரிவினருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும். வகுப்பில் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை உருவாக்கும்.

9. மாதமொருமுறை ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடல் இருக்கும்.

10. அடிக்கடி ப்ராஜக்ட் என்று பெற்றோருக்கு வேலை கொடுத்தாலும் அது குழந்தைகளின் புரியும் திறனுக்கு என்று உவப்புடன் செய்தால் சுவாரசியம் தான். செடிகள் பற்றி அறிய செடி வளர்த்து எடுத்துச் செல்வார்கள், ஏதேனும் கருத்தை மையமாக வைத்து சார்ட், மாடல் எல்லாம் செய்யச் சொல்லி வகுப்பை அலங்கரிப்பார்கள்.


என்ன பிடிக்கவில்லை?

எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. ஆசிரியர்களும் அப்படியே. எல்லோரும் ஒன்று போல் பயிற்சி எடுத்துக் கொண்டால் பிரச்னை இருக்காது என்று எண்ணுகிறேன்.

அடுத்தது... கழிப்பறை. பள்ளியில் பிள்ளைகள் இல்லாதவரை சுத்தமாக இருப்பது போல் இருக்கிறது. அதன் பின்? இதற்கு தீர்வு உண்டா? என் தோழிகளிடமும் விசாரித்த வரை, பிரபலமான பள்ளிகள் உட்பட, கழிப்பறை சுத்தம் என்று எந்த் பிள்ளையும் சொன்னதாகத் தெரியவில்லை. அது வீட்டின் சுத்தம் முன்பு தோற்றுப்போவதாலா அல்லது மிகச் சிரமமான விஷயமா என்று புரியவில்லை. பள்ளி செல்லும் பொழுதெல்லாம் சம்மந்தப்பட்டோரிடம் சொல்கிறோம்; அதன் பின் பரவாயில்லை என்று சொன்னாலும் பிள்ளைகள் கழிப்பறை செல்லத் தயங்குகிறார்கள். பணம் கட்டி பள்ளி சேர்த்தாலும் கழிப்பறை விஷயம் மட்டும் மாறுவதில்லை. இந்திய மனப்பாங்காக அதையும் சகிக்கிறோம். இதைப் பற்றி உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

Tuesday, July 28, 2009

சின்ன குழந்தைகளுக்கு வேண்டாத சின்ன பொருட்கள்!!

மோதிரம்:

சிறு குழ‌ந்தைகளு‌க்கு ‌நகைகளை மா‌‌ட்டி‌க் கா‌ட்‌சி‌ கூடமா‌க்க வே‌ண்டா‌ம்.கை‌ ‌விர‌லி‌ல் போட‌ப்படு‌ம் மோதிர‌ம் வே‌ண்டவே வே‌ண்டா‌ம். ஏனெ‌னி‌ல் குழ‌ந்தைக‌ள் எ‌ப்போது‌ம் கைகளை ச‌ப்‌பி‌க் கொ‌ண்டே இருக‌்கு‌ம். மோ‌திர‌ம் ‌சில சமய‌ங்க‌ளி‌ல் வா‌ய்‌க்கு‌ள் போ‌ய்‌விடவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது.
மேலு‌ம், மோ‌திர‌ம் ‌கீழே ‌விழு‌ந்து காணாம‌ல் போ‌ய்‌வி‌ட்டா‌ல் கூட, குழ‌ந்தை முழு‌ங்‌கி‌வி‌ட்டிரு‌க்குமோ எ‌ன்று பய‌ந்து கொ‌ண்டே இரு‌க்க வே‌ண்டு‌‌ம்

மோ‌திர‌த்‌தி‌ல் க‌ல் வை‌த்து இரு‌க்கு‌ம். அதுவு‌ம் ‌மிகவு‌ம் தவறு. த‌ற்செயலாக அ‌ந்த க‌ல் ம‌ட்டு‌ம் கூட குழ‌ந்தை‌யி‌ன் வா‌ய்‌க்கு‌ள் போ‌ய்‌விட வா‌ய்‌ப்பு‌ண்டு.மேலு‌ம், மோ‌திர‌த்‌தின அடி‌ப்பாக‌த்‌தி‌ல் அழு‌க்கு சே‌ர்‌‌ந்து ‌விடு‌ம். அ‌ந்த ‌விரலை ச‌ப்பு‌ம் போது குழ‌ந்தை‌க்கு உட‌ல் உபாதைக‌ள் ஏ‌ற்படலா‌ம். எனவே குழ‌ந்தைகளு‌க்கு மோ‌திர‌ம் அ‌ணி‌வி‌க்கா‌தீ‌ர்க‌ள்

ஸ்டிக்கர் பொட்டு:
சின்ன குழந்தைகளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்க வேண்டாம். சின்ன குழந்தைகளின் அம்மாக்களும்ஸ்டிக்கர் பொட்டு குழந்தைகள் பெரியவராகும் வரை வைக்க வேண்டாம். சில குழந்தைகள் உடன் படுத்து இருக்கும் போது அம்மாவின் முகத்தை தடவி கொண்டுஇருக்கும் போது பொட்டை எடுத்து அதன் வாயில் அல்லது மூக்கில் வைத்து கொண்டு விடும் நமக்கு தெரியாமலே.

ஜிகு ஜிகுனு டால் அடிக்கும் ட்ரெஸ்:
நம்ம சீதோஸ்ஷணத்திற்கு காட்டனே சிறந்தது. ஜிகினாக்கள் அவர்களின் மெல்லிய தோலினை குத்தும்.
கைக்கெட்டும் தூரத்தில் கத்தி, ப்ளேடு போன்ற ஷார்ப்பான பொருள்களை மறந்தும் வைக்க வேண்டாம்.

செல் போன்:தூங்கும் போது செல் போனை படுக்கையில் வைக்க வேண்டாம்.

ஸ்கூல்..ஸ்கூல்...விச் ஸ்கூல் டூ யூ சூஸ்!

மூன்று வயதுக்குப் முன்பே பப்புவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இருவரும் பணிக்குச் செல்லும் சூழல். மூன்று மாதத்திலிருந்து பப்புவை பார்த்துக்கொள்ள இவர்களின் உதவியிருந்ததால் மூன்று வயதுக்குப் பிறகுப் பார்த்துக்கொள்ளலாமென்று ரொம்பவும் மெனக்கிடவில்லை. வீட்டுக்குக் கொஞ்சமாவது அருகிலுள்ள - வேளச்சேரி, தாம்பரம் ஏரியாக்களில்தான் சேர்த்தாகவேண்டுமென எண்ணி, இணையத்தில்/தெரிந்தவர்களிடம் கேட்டு/நேரடியாக போனில் விசாரித்துத் தயாரித்த பள்ளிகளின் லிஸ்ட் இதோ! இதையெல்லாம் நான் விசாரிக்கும்போது பப்புவிற்கு இரண்டேகால் வயது். Partially potty trained. ஏனோ ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை.

ஆனால் இரண்டரை வயதில் வீட்டில் பப்புவை சமாளிக்க முடியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி விடுப்பு அல்லது விட்டுச் செல்லும் ஆயாக்கள் போன்ற சூழ்நிலைகளால் இரண்டு மணிநேரமாவது ஒரு மாறுதலுக்காக வெளியில் அனுப்பலாமென்று முடிவு செய்தோம்.அப்போதுதான் வீட்டுக்கு அருகிலேயே இருந்த பிரபலமான இண்டர்நேஷனல் பள்ளியின் கிளை யை விசாரிக்க நேர்ந்தது. ஃப்ளாப்!

பப்புவுக்கான பள்ளியைத் தேடும்போது என் மனதிலிருந்தவை இவைதான்,

1. வீட்டுக்கு அருகில் இருக்கவேண்டும். வேன் வசதி இருக்க வேண்டும். கண்டிப்பாக மெட்ரிக்குலேஷன் வேண்டாம்!

2. ஷூ-சாக்ஸ் போட வற்புறுத்தக்கூடாது. (I hated to wear them.வெயிலில் எதற்கு ஷூவும் சாக்ஸூம்!) சுகாதாரமாக இருக்கவேண்டும். (டாய்லெட்டுகள் சின்னக்குழந்தைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்!)

3. பெரிய மைதானத்துடன் இருக்க வேண்டும்.

4. தினமும் பள்ளிக்குச் செல்ல ஆர்வத்தைத் தூண்டுமிடமாக இருக்கவேண்டும். அதாவது, பார்க்குக்கு செல்வதற்கு எவ்வளவு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கிளம்புவாளோ அது போல! (இல்லையெனில், எங்கள் பாடு திண்டாட்டம்தான். அவள் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் எங்கள் வேலை பாதிக்குமே...!!)

5. individual attention

6.டொனேஷன் கொடுக்க முடியாது.

பின்னர் இணையத்தில் வாசித்தபோது மாண்டிசோரி பற்றி விளக்கமாகத் தெரிந்துக்கொண்டேன். பப்புவிற்கு இரண்டேமுக்கால் வயதானபோது அவளைப் பள்ளியில் சேர்த்தாக வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளானோம். அருகிலிருந்த மாண்டிசோரி பள்ளி ( AMIஇனால் அங்கீகரிக்கப்பட்டது) - அணுகினோம்.

1. ஒரு வகுப்பிற்கு 20-25 பிள்ளைகள் மட்டுமே. இரு ஆன்ட்டிகள் மற்றும் ஒரு உதவியாளர்.
பத்து வருடங்களாக இருந்தாலும், ஐந்தாம் கிரேட் வரை மட்டுமே.

2. நான் எதிர்பார்த்த பெரிய மைதானம் கிடையாது. சின்னதுதான். ஆனால், பெரிய ஆன்ட்டி சொன்னது, “மாண்டிசோரி சூழலுக்கு மைதானமேத் தேவையில்லை. அங்கு செய்யும் எல்லா பயிற்சிகளுமே மான்டிசோரி வகுப்புச் சூழலிலேயே கிடைத்துவிடுகிறது”.

3. பப்புவிற்கு எந்த இண்டர்வியூவுமே இல்லை. எழுதுவதற்கு நான்கு வயதுக்குப் பிறகே. விருப்பமிருந்தால் எழுதலாம். எழுத்துகளும் மூன்றரை வயதுக்குப் பின்னரே! ஏனெனில், எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரி இல்லை. தனித்துவமானவர்கள்.

4. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 12.15க்கு முடியும். நடுவில் 10.30 க்கு 30 நிமிட நேர இடைவேளை. (இது இரண்டரை வயதிலிருந்து - மூன்றரை வயதினருக்கு)

5. முதல் இரண்டு டெர்ம்கள் வரை பப்பு ஷீ-சாக்ஸ் போட்டது இல்லை.சாதாரண செருப்புதான்.

6. மூன்றரை வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பள்ளி நேரங்களிலேயே, ஆக்டிவிட்டீஸ் தவிர கராத்தே/யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது.

7. ரேங்க் கிடையாது. பரிட்சைகள் கிடையாது. Only Assessments. போட்டி என்பது அடுத்தவருடன் அல்ல..தான் முன்பு செய்ததை இன்னும் பெட்டராக செய்யவேண்டும் என்பதுதான் குறிக்கோள்!

சேர்க்கும்போது ஒரு அரைகுறை மனதோடுதான் சம்மதித்தேன். அடுத்த வருடம் வேறு இடத்தில் சேர்த்துவிடலாமென்று. ஏனேனில் நானும் இதேபோல ஒரு சின்னப் பள்ளிக்கூடத்திலேதான் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். ஆம்பூரின் சூழல் வேறு. ஆனால் சென்னைப் போன்ற பெருநகரத்தில் இருந்துக்கொண்டு, நல்ல எக்ஸ்போஷர் கிடைக்காமல் போய்விடக்கூடாதென்றும் உள்ளுக்குள் ஒரு எண்ணம். ஆனால் இப்போதோ, பள்ளியின் அணுகுமுறை, பப்புவிடம் தெரியும் தன்னம்பிக்கை, தனிப்பட்ட கவனம், மாண்டிசோரிக் கல்விமுறையின் நன்மைகள் கண்டபின் இங்கேயே தொடருவதாக உத்தேசம்!

Monday, July 27, 2009

ஏன் இந்த பள்ளி?

இந்த தொடர் இடுகை எழுதி பதிநைந்து நாள் ஆகி விட்டது, தாமதத்திற்கு மன்னிக்கவும்.

வர்ஷா பிறக்க பத்து நாட்கள் இருக்கும் போது தான் நாங்கள் கோவை வந்தோம், அது வரை திருப்பூரில் இருந்தோம். குழந்தை பிறந்து வளர்ந்து இரண்டரை வயது ஆகும் போது ரொம்ப நல்ல பேசுவாள், தெளிவாக திருக்குறள், சின்ன பாடல்கள் எல்லாம் சொல்லி குடுத்து இருந்தேன். பக்கத்தில் இருக்கும் ஒரு ப்ளே ஸ்கூலில் இரண்டு மணி நேரம் தினமும் அனுப்பி வைப்பேன். ஸ்கூல் சேரும் வயது என்ற போது கோவையில் இருக்கும் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினைந்து பள்ளிகள் பார்த்தேன், நாங்கள் இருப்பது நகரின் மைய பகுதி, எல்லா பள்ளிகளும் குறைந்த பட்சம் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

பள்ளிகளுக்கு முக்கிய தகுதி யாக நான் எதிர்பார்த்தது:

# குழந்தைகளை குழந்தைகளாக நினைக்க வேண்டும்,

# ஹோம் வொர்க், படிப்புன்னு ரொம்ப தொல்லை பண்ண கூடாது,

# மொழி ஒரு முக்கிய விஷயம், என்னதான் நாம் தமிழ் என்று கதறினாலும் ஆங்கிலம் நன்றாக பேச வர வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன், வரும் காலத்தில் குழந்தைகள் மிக கடுமையான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும், நாம என்ன நாற்காலியில இருக்கோம் தமிழ் மட்டும் படிச்சு மந்திரி ஆக.. ( சிரிங்கப்பா)

# போட்டிகளில் தொடர்ந்து ஊக்கம் தரும் பள்ளியாக இருக்க வேண்டும்.

# ஒரு குறிப்பிட்ட மதமோ, ஜாதியோ அதிகமாக இருக்கும் பள்ளிகள் வேண்டாம் என்பதும் என் எண்ணம்.

# பள்ளி நல்ல சுற்று புறத்துடனும், கலாச்சாரத்தை கற்று கொடுக்க வேண்டும்.

# மிக முக்கியமாக கழிப்பறை வசதிகள் நன்றாக இருக்க வேண்டும்.

( இத்தனையும் இருக்கணும் நா நான் படித்த ஸ்ரீ வாசவி வித்யாலயம் ஸ்கூல் தான் போகணும், அது ரொம்ப தூரம் ஆச்சே)

முதலில் பள்ளிகளில் ஒரு வரிசை பட்டியல் தயார் செய்தேன், நானும் என் கணவரின் தங்கையும் ஒரு நல்ல நாளில் காலையில் கிளம்பினோம், , முதலில் நகரின் மிக புகழ் பெற்ற நூற்றி ஐம்பது வருட பாரம்பரியம் கொண்ட ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளி, அங்கே பெற்றோர் குறைந்த பட்சம் ஒரு கார் வைத்திருப்பது விரும்பத்தக்க தகுதியாக இருந்தது...இது ஆவறது இல்ல..

அடுத்து: என் மனதில் இந்த பள்ளியில் சேர்த்தலாம் என்று நினைத்தேன், ஆனால் இது shift முறையில் செயல் பட்டதால் ஊரெங்கும் கிளைகள் கொண்ட பவன் பள்ளியும் லிஸ்டில் கழிந்தது.

நகரின் பெண்கள் பள்ளி ஒன்று காலை விண்ணப்பம் வாங்க முதல் நாள் இரவே துண்டு போட்டு வைக்கணுமாம், ஆனால் படிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவார்கள், கண்டிப்பான பள்ளி என்று பெயர் பெற்றது, என் வீட்டில் இருந்து ரொம்ப தொலைவு அதனால் அதுவும் அடிபட்டது.

ரயில் நிலையம் அருகில், கலை கல்லூரி பின்புறம் இருக்கும் மூன்று பள்ளிகளில் ஒன்று நன்றாக இருக்கும் ஆனால் நம்ம அம்மிணி வயசு பத்து, பத்தாவது எழுதும் போது பிரச்சனை என்றார்கள். சரி விடு ஜூட்டு...

இது போல் கழிப்பறை நன்றாக இல்லை, கட்டிடம் விழுந்துவிடுவது போல இருக்கு என்று சில பள்ளிகள் கழிக்கப்பட்டன,

இன்னும் ஒரு முக்கியாயமான விஷயம் நான் தனியாக பெண்கள் பள்ளியில் என் குழந்தைகளை சேர்க்க எனக்கு விருப்பம் இல்லை, இரு பாலரும் இருக்கும் பள்ளியில் தான் சேர்த்த வேண்டும் என்று முடிவு பண்ணி இருந்தேன்.
ஆகவே இப்போது படிக்கும் பள்ளி ( S.B.O.A.) ஓரளவிற்கு எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது, கட்டணம் கொஞ்சம் ஏற்கனவே அதிகம் இப்போது மேலும் 50% அதிகரித்து உள்ளார்கள், அது பற்றி என் கருத்துகள் இங்கே.

சின்ன வகுப்பில் தேர்வுகளே இல்லை, ஆசிரியர்கள் நன்றாக பழகுவார்கள், மாணவர்கள் அதிகம் இருப்பினும் தனி கவனம் செலுத்துகிறார்கள், படிப்பைத்தவிர மற்ற விசயங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள். இப்போது பாட்டு வழி படிப்பு என்னும் புதிய அறிமுகத்தில் இன்னும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக மொழி பயிற்சி மிக திருப்தியாக உள்ளது. சில பல தேவையில்லாத போராட்டங்களுக்கு பின் இந்த வருடம் பள்ளி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. நான் பெற்றோர் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளதால் நம் கருத்துகள் மற்றும் மற்றவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடிகிறது.

எனக்கு மட்டும் பிடித்து என்ன செய்ய என் குழந்தைகளும் இந்த பள்ளியில் நன்றாகவே உணருகிறார்கள். வருடாவருடம் கொலுவிற்கு வர்ஷாவின் தோழர்கள் பெற்றோருடன் வந்து விழாவை சிறப்பிப்பார்கள். நானும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வு அதுதான்.

ப்ளே ஸ்கூலை பொறுத்தவரை எங்கள் பகுதியில் நல்ல பள்ளி இல்லை என்று கருதுகிறேன். நான் அனுப்பிய பள்ளிகள் எனக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அனுப்பினேன். பாதியில் நிறுத்தி விட்டேன்.

Thursday, July 16, 2009

Nebulisation in Children

For those who dont know about Nebulisation,the definition is :

"Nebulisation is the breaking down of a liquid into very small droplets, which in the case of medication, can be inhaled and in consequence deposited right into the problem area in the lungs. The advantage of that is that a concentrated amount can be deposited into a targeted area."

In the simple terms,its the inhalation of medicines into the lungs directly to stop wheezing that has developed due to severe phlegm which doesn't go away with oral medicines.

We had been doing nebulisation for Janas during the second week for Ranju and third week for Rakshu in June. Even with the strong medicines they were taking for severe cough and phlegm they did not recover. Hence when we took them to the doctor he suggested nebulisation to ease out breathing.They had developed wheezing and could not sleep at nights.But I was a bit reluctant to go on with the process but doctor said it is definitely needed otherwise they may not be able to get "sufficient oxygen to brain".

We had bought separate kits for each of them.The medicines used were berodual and plumicort though dosages were different.4 times(means 4 hourly) for Ranju and 3 times(means 6 hourly) for Rakshu.They definitely felt better and were able to sleep at nights after the process.After 3 days of nebulisation at home, we continued with medication for few more days until they felt better.

The disadvantage of nebuliser is the cost itself and they are not designed to alleviate acute symptoms such as asthma attacks which might arise.Child nebulisers turn the respiratory medicine into a mist, which the child then breaths for at least five to ten minutes. It might be difficult for parents to keep their child still for the entire length of treatment.

Wednesday, July 15, 2009

படித்ததில் பிடித்தது

நான் அடிக்கடி எழுத்தாளர். திரு. எஸ். ராமகிருஷ்ணணின் வலைப்பக்கத்தை மேய்வதுண்டு.
அப்படி இன்று பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் வலைப்பக்கத்தில் இருந்த இந்த கற்கத்தவறிய பாடம்” என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது.அதற்கான சுட்டி இங்கே: கற்கத்தவறிய பாடம்

பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று.

Tuesday, July 14, 2009

என் செல்லங்கள் பிறந்த போது..

என் செல்லங்கள் இந்த உலகை எட்டி பார்த்த அந்த இனிய தருணம் ரெண்டு ஆண்டுகள் கழித்தும் இன்னும் பசுமையாய் எனக்கு நினைவில் இருக்கிறது.குறை மாதத்தில்(34-வது வாரம்) பிறந்த ரெட்டை குழந்தைகள் வெறும் 1.75 kg மட்டுமே எடை இருந்தார்கள்.ஐந்து நாட்கள் வரை incubation-ல் வைத்திருந்து ரூம்-க்கு கொண்டு வந்தோம்.

எனக்கு சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறந்ததால் தையல் போட்ட இடத்தில் வலி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.இதனால் ஒவ்வொரு முறையும் எழுந்து செல்லங்கள் பசி போக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் எனக்கு.குளிப்பதற்கு அம்மாவின் உதவி கண்டிப்பாக தேவை பட்டது.மேலும் இரவில் குழந்தைகள் மாற்றி மாற்றி எழுந்து பாவம் அம்மா எனக்காக,எங்களுக்காக ரொம்பவும் சிரமம் பட்டார்கள்.

தினமும் நர்ஸ் வந்து குழந்தைகளை சுடு நீரில் துடைத்து துணி மாற்றி கொடுத்துவிடுவார்.எனக்கு என் கண்மணிகளை(they were very tiny) சரியாக எடுக்க கூட தெரிந்திருக்கவில்லை...போல்யோ ட்ராப்ஸ் கொடுக்கபட்டது.

ரூம்-க்கு கொண்டு வந்த அன்றே உடல் மஞ்சள் நிறம்மாக மாறவும் ரொம்பவும் பயந்து போய் டாக்டரிடம் கேட்டதும் காலை நேர வெயில்லில்(7-8) காட்ட சொன்னார்.சரியானதும் தான் நிம்மதி ஆனது.

ஒரு வழியாக எங்களை வீட்டுக்கு போக சொன்னார்கள்.குழந்தைகள் கொஞ்சம் வளரும் வரை குளிக்க வைக்க வேண்டாம் என்றும் பவுடர்,லோஷன் எல்லாம் பயன்படுத்த வேண்டாம் என்றும் சொன்னார்கள்.என்னவர் காரை ஒட்ட அப்பாவும்,நானும் குழந்தைகளை பின் சீட்டில் ஜாக்கிரதையாக வைத்து கொண்டு குனியமுத்தூர் போய் சேர்ந்தோம்.அம்மா வீட்டில் இருந்து தேவையானவை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்து arrange செய்து வைத்திருந்தார்.

When I was about to enter into house,I felt it like I am on a new journey now, leaving my old self behind, the old immature me who at one point in time couldn’t take care of my own self bonk. Having twins has changed my life, yes, but I am going to enjoy every moment of it and would not give it up for anything.

About a month back we celebrated our kids second birthday on June 5th.We all have come a long way since my delivery but still have to go a long long long way.I thank almighty for blessing me with two lovely sweet and cute angels and really feeling proud as a mother of 2 year old wonderful girls..I've promised myself to spend more time with them,teach them life's good things,empower them with knowledge for self-sustainment and be for them whenever they need me.



Wednesday, July 8, 2009

அம்மாக்களே இது நமக்காக!!!

நம் குழந்தைகளை சாப்பிட வைக்க:

ஸ்டார் தோசை,பூ தோசை, சப்பாத்தியில் நிலா வடிவம்,முக்கோணம்,சதுரம், பூரியில் ஸ்டார், குட்டி பூரி, கேரட் சாதம், தேங்காய் சாதம் என கலர்ஃபுல்லான சாதங்கள், அவ்வொப்பொழுது சாப்பிடும் தட்டையும் புதிது புதிதாக கொடுக்கலாம், இலையில் பரிமாறலாம் ...அப்புறம் பாருங்க சாப்பாடு எப்படி பறக்கிறதுனு.

ஹோம் வொர்க் செய்ய வைக்க:

படிக்கும் முன் சாமி ரூமில் கொஞ்ச நேரம் உட்கார வைத்து சாமி கும்பிட வைத்து பின் நல்ல பிள்ளைகளை தான் ஆஞ்சனேயருக்கு பிடிக்கும்..முருகனுக்கு பிடிக்கும் என்று கூறி, அவர்களுக்கு பிடித்த பேனா, பென்சில், கலர் பென்சில், ரப்பர் சர்ப்ரைசாக அவ்வப்போது கொடுத்து, இடையிடையே ஜோக் சொல்லி, அவர்கள் ஸ்கூலில் நடந்த விஷயங்களை பேசி, ஹோம் வொர்க் செய்ய வைத்தால் அவர்களுக்கு சுமையே தெரியாது..

அதிகமாக டி.வி பார்ப்பதை குறைக்க:

ரிலாக்ஸான நேரங்களில் கார்டனில் பொழுது போக்க பழக்கவும், அட்லீஸ்ட் மொட்டை மாடியில் இரண்டு தொட்டியில் செடி வைத்து தினம்
கண்காணிக்க செய்தால்..எத்தனை மொட்டு, எத்தனை பூ என்று மனசு போகும்...மீன் வளர்த்தல், நாய் வளர்த்தல் என்று பிஸி ஆக்கினால் அவர்களுக்கு ஒரு இண்ட்ரஸ்ட் வந்து விடும். நாமும் டி.வி..சீரியலில் மாட்டிக் கொள்ள கூடாது.,

பெரியவர்களிடம் மரியாதை ஏற்படுத்த:

நல்ல நாள், பெரிய நாளில் தனிகுடித்தனம் இருந்தாலும் பெரியவர்கள் இருக்கும் இடத்திற்கு கூட்டி போய் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
தாத்தா, பாட்டி முன்னாடி கால் நீட்ட கூடாது, சத்தமாய் பேசகூடாது, என்னிடம் சொன்ன எல்லா ஸ்கூல் விஷயத்தையும் அவர்களிடமும் கூறுமாறு செய்தல் வேண்டும்.

உதவும் குணத்தை ஏற்படுத்த:

தெருவில் விளக்குமாறு, கீரை போன்ற பொருள்களை விற்கும் பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளையும் தூக்கி வருவர். அவர்களுக்கு
நம் குழந்தைகளை விட்டே அவர்களின் பொருள்களை கொடுக்க வைக்க வேண்டும். விளையாட்டு சாமான், உடைகள், நோட்டுகள், கலர் பென்சில்கள் என்று கொடுக்கலாம். உதவும் பொழுது ஏற்படும் சந்தோஷம் எத்தகையது என்பதை அவர்களே உணரட்டுமே.

Attachment parenting

அன்பு நெஞ்சங்களே ,
அம்மாக்களின் பகிர்வுகளில் என்னுடைய முதல் பகிர்வு. இது ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும். என்னுடைய நான்கு மாத குட்டிய வச்சிக்கிட்டு தமிழ்ல எழுத சிரமமா இருக்கு. நண்பர்கள் மன்னிபீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இந்த பகிர்வு சமீபத்தில் நான் ஒரு நாளேட்டில் படித்தது.



This writting is going to be about Attachment Parenting. Let me explain about attachment parenting in simple terms : Attachment parenting is a style of caring for your infant that brings out the best in the baby and the best in the parents.

To learn your ideal level of Attachment parenting, choose the number between 1 and 10 that most accurately rates your parenting goals and abilities in each category in the following link. when you are done, add up those numbers and read your corresponding Attachment profile.

http://spreadsheets.google.com/ccc?key=tFUFz0bOyPQvjdiUmJs1yrw

Your Attachment parenting profile :

7 ~ 29 : What worked for your mother will work just fine for you. you have been carrying baby around 40 weeks and thats just plenty, thank you very much

30 ~ 49 : All things in moderation. After all, breastfeeding is free and these days baby carriers are convenient as all get out. There is nothing wrong with a little together time.

50 ~ 70 : Having a baby was not a casual decision for you, and you are set on doing this motherhood thing right. A happy baby means a happy mommy....

Monday, July 6, 2009

குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!!

1. நான் பேசுவதைக் கவனிப்பவர்கள் தான் என்னுடைய சிறந்த நண்பர்கள்:

குழந்தைகள் யாரிடம் அதிகம் ஒட்டுகின்றன என்று கவனித்துப் பாருங்கள் -அவர்கள் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் காது கொடுத்துக் கேட்பவர்கள் மீது தான் குழந்தை அதிகம் ஒட்டுதலோடு இருக்கும். அடுத்த முறை யாரேனும் பிரச்சைனையோடு வந்தால் அவர்களுக்கு செவி கொடுப்போம்.

2. அமுதாகவே இருந்தாலும் அளவிற்கு மீறினால் ஆபத்துதான்:

குழந்தை தங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை கூட ஓரளவிற்கு தான் சாப்பிடும். அந்த சுய கட்டுப்பாடு வருவது வயற்றில் இருந்து அல்ல. மூளையில் இருந்து வருகிறது. இது சாப்பாடு விஷயத்திற்கு மட்டும் அல்ல. மணிக்கணக்காக வேலை, படிப்பு, நெட், என்று எதாவதில் அளவிற்கு அதிகமாக கவனம் செலுத்துகிறவர்கள் ஆபத்தில் கால் வைக்கிறார்கள் என்பதை குழந்தைகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. வீடு- வெளியே என்ற வித்தியாசம் மனத்தில் எப்போதும் இருக்க வேண்டும்:

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தை அதன் பிறகு வீட்டு பாடம் செய்து விட்டு விளையாட்டு, அம்மா, அப்பாவுடன் கொஞ்சல் என்று கவனத்தை திருப்பிவிடுகின்றது.
இது பெற்றோருக்கு புரிவதில்லை.அலுவலகப் பணி அழுத்தத்தை வீட்டில் கோவமாக காண்பித்து விடுகிறோம்

4. நன்கு விளையாடுங்கள் மனம் விட்டு சிரி்யுங்கள்:

நமக்கு பொருளற்றதாக தோன்றும் விளையாட்டுகள் தான் அவர்களை மணிக்கண்க்கில் மகிழ்ச்சியாக வைத்து உள்ளன. எந் நேரமும் பணி என்று இருந்தால் எப்படி சிரிப்பு வரும்.

5.ஒரு விஷயம் எப்படிச் செயல் படுகிறது என்று தெரியாவிட்டால், அதை அக்குவேறு, ஆணிவேறாக பிரித்துப் போடுங்கள், எல்லாம் புரிந்துவிடும்:

எந்த பொம்மையையும் ஒரு நாளில் உடைத்து விடும் குழந்தையைக் கடிந்து கொள்கிறோம். உண்மையில் அது எப்படி இயங்குகிறது என்று ஆராய்கிறார்கள்.
இந்த உத்தியை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு விஷயத்தை பிரித்து ஆராய்ந்தால் தீர்வு நிச்சயம்.

6. வாழ்க்கையில் விதிமுறைகள் வேண்டாமே:
ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டுதான் ஆட வேண்டுமா?? நின்று கொண்டு ஆடுகிறார்கள்.பேப்பரில் தான் எழுத வேண்டுமா?? சுவரில், தரையில் எழுதுகிறார்கள்.
பெரியவர்கள் தங்கள் வேலைகளை ஒரேமாதிரி செய்வதால் சோர்வு அடைகிறார்கள். சின்ன மாற்றத்தை செய்து பார்ப்பது இல்லை.

பெண்ணே நீ என்ற புத்தகத்தில் என்.சொக்கன் எழுதி நான் படித்தது..


Sunday, July 5, 2009

வேண்டாமே சிசேரியன்!!

சிசேரியன் செய்து பிறக்கும் குழந்தைகளுக்கு நார்மலாகப் பிறக்கும் குழந்தைகளை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குமாம்.
பிற்காலத்தில் அக்குழந்தைகளை டையாபடிஸ், ஆஸ்த்துமா, லுக்கேமியா ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் அதிகமாம். ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு இது.
சிசேரியனில குழந்தை திடிரென்று பிறந்து விடுவதால் வெளி உலகம் உடனே பழக முடியாமல் வரும் ஸ்ட்ரெஸால் தான் white blood cells-ல் உள்ள DNA மாற்றத்தை சந்திக்கிறது. அதனால் நோய் எதிப்பு சக்திக் குறைகிறது.
இயற்கைக்கு எதிராக நடக்கும் எதிலேயும் பின்விளைவுகள் உண்டு.

இயற்கையாக பிறக்கும் குழந்தைகள் மெதுவாக ஒரு அழுத்தத்தை உணர்ந்து பின் வெளி உலகை அனுபவிக்க ஆரம்பிக்கும். எனவே ஸ்ட்ரெஸ் என்பது மிகவும் குறைவு. சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் அதிகம். நம் மருத்துவர்கள் பணம் பண்ணும் எண்ணத்தில் இல்லாமல் சமுக சிந்தனையுடன் பணியாற்றி, சிசேரியனுக்கு வலியுறுத்தும் பெண்களையும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும்.

Saturday, July 4, 2009

என் பிள்ளைகள் படிக்கும் பள்ளி...

முல்லையின் பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவு..

பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் முன் நாம் யோசிக்க வேண்டிய
விடயங்கள் நிறைய்ய.. சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. பள்ளி நம் வீட்டிற்கு அருகில் இருக்கிறதா? மிக அருகில் இல்லாவிட்டாலும்
கூட நியாயமான தூரம் அதிக பட்சமாக 5 கிமீ வரை இருந்தால்
பரவாயில்லை.

2. 100% ரிசல்ட் தரும் பள்ளி என்பதாலோ, பெயர் பெற்ற பள்ளி
என்பதாலோ அந்த பள்ளியில் பிள்ளையை சேர்க்க நினைக்க
வேண்டாம்.

3. அவர்கள் பெயரை தக்க வைக்கவும், 100 சதவிகித ரிசல்ட்
தரும் மாணாக்கர்களுக்காகவும் தான் பள்ளி நடத்துகிறார்கள்.

4. அனைத்து மாணவரும் 100% சதவிகிதம் எடுப்பது கஷ்டம்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். சில பிள்ளைகளால்
அதிக மதிப்பெண் எடுக்க இயலாது(thanks to the mechale system :( )

5. படிப்பு படிப்பு என்று பாடப்புத்தகத்தை மட்டுமே கவனிக்கும்
பள்ளியில் பிள்ளையைய் சேர்க்க வேண்டாம். விளையாட்டு,
இசை, யோகா,போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரும்
பள்ளியா என்று பார்ப்பது அவசியம்.

6. ஆசிரியைகள் எப்படி? கண்டிப்பாக இருக்கிறார்களா?
கனிவாக நடத்துகிறார்களா என்பதை கவனித்து, விசாரிக்க
வேண்டும்.

7.வகுப்பறைகள் காற்றோட்டமிக்கதாக இருக்கிறதா?
வகுப்பில் எத்தனை மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்பதையும்
பார்க்க வேண்டும்.

8. பொதுவாக நாம் பார்க்க தயங்கும் ஒருஇடம் அது
பள்ளியின் கழிப்பறை. கழிப்பறை வசதி சரியாக இருக்கிறதா?
என பார்ப்பது மிக மிக அவசியம்.

9. பள்ளியில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என
பார்க்க வேண்டும்.

10. கற்பது என்பதை ஒரு சுமையாக ஆக்காமல்
கூடிய மட்டும் இனிமையாக ஆக்கும் பள்ளியா
என்பது பார்க்கப் படவேண்டிய விடயம்.

என் பிள்ளைகள் 7 வருடங்கள் கொழும்புவில்
பிரிட்டீஷ் கல்வி முறையில் படித்தவர்கள்.
அங்கே ஹோம் வொர்க் கிடையாது, எல்லாம்
ப்ராஜக்ட் சிஸ்டம். படிப்பு ஸ்ட்ரெஸ் தரக்கூடியதாக
இல்லாமல் பிராக்டிகலாக கற்றவர்கள்.

ஆஷிஷாவது 3 வருடங்கள் இந்திய பாடத்திட்டத்தில்
படித்திருந்தான். அம்ருதாவுக்கோ ஆரம்பமே அங்குதான்.
ஆரம்பக்கல்வி மாண்டிசோரி முறை + ப்ரீ ஸ்கூல் முறைக்
கல்வியின் கலவையாக இருக்கும்.

இங்கே ஹைதைக்கு வந்து பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றதும்
உடனடியாக முடிவெடுத்துவிடாமல், நண்பர்கள் சேர்த்திருக்கிறார்கள்
என்பதற்காக அங்கே ஓடாமல் 1மாதம் முழுதும் இருந்து
தினமும் 4 ஸ்கூல் சென்று தேடி மனதுக்கு பிடித்தால்
மட்டுமே சேர்ப்பது என்று முடிவு செய்திருந்தோம்.

சில பள்ளிகள் பள்ளி விடும் நேரம் சென்று எப்படி
வேனில் ஏற்றுகிறார்கள்? ஆயாக்கள் பொறுப்பாக
இருக்கிறார்களா? என பார்த்தோம்.

பெயர் பெற்ற சில பள்ளியில் பெற்றோரை மதிக்கவேயில்லை.
உட்கார வைத்துக்கூட பேசாமல், நிற்க வைத்தே பேசி
அனுப்பிய பள்ளிகளை தவிர்த்தோம்.

டொனேஷன்கொடுக்க நிர்பந்தித்த பள்ளியை
முடிந்த வரை தவிர்த்தோம்.

ஆஷிஷும் அம்ருதாவும் ஒரே பள்ளிக்குச் செல்ல
வேண்டும். அப்போதுதான் விடுமுறை பரிட்சை
போன்றவை ஒரே நேரத்தில் இருக்கும், தயார்
செய்வதும் எளிது என்பதிலும் கண்டிப்பாக இருந்தோம்.

இப்போது படிக்கும் பள்ளி என் எதிர் பார்ப்புகளுக்குத்
தகுந்த பள்ளி. பள்ளியில் யோகா, தபலா, நடனம்,
பாட்டு ஆகியவை டைம்டேபிளில் கட்டாயம் உண்டு.

ஃப்ரெண்ட்லியான ப்ரின்சிபல், இன்னொரு தாயாய்
பார்த்துக்கொள்ளும் ஆசிரியைகள், பிரச்சனை ஏதும்
வந்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.

நீச்சல் கட்டாய பாடம். இங்கே மற்ற பள்ளிகளில்
சனிக்கிழமை கூட பள்ளி உண்டு. பாடம் நடக்கும்.
ஆனால் என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலோ
சனிக்கிழமை extra curricular activities.
9-12 மணி வரை. ஒவ்வொரு குழந்தையும்
2 பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

பியானோ,நீச்சல், கிரிக்கட், டென்னீஸ்,
நடனம், கராத்தே, சமையற்கலை, ஓவியம்,
கைவண்ணம் என கொஞ்சம் பெரிய லிஸ்ட்.


வகுப்பில் அதிகம் போனால் 28 மாணவர்கள்தான்.

C.B.S.C வழிக்கல்வி. ஆனால் காலாண்டு, அரையாண்டு,
முழுப்பரிட்சை கிடையாது.

CONTINUOUS COMPREHENSIVE ASSESSMENT (C.C.A)
எனும் திட்டப்படி மாதாந்திர தேர்வுகள்
நடைபெறும். 15,40,40 மார்க்குக்கு தேர்வுகள்.
5 மார்க் practical/viva/oral projects
ஒவ்வொரு பாடத்துக்கும் இப்படி தேர்வு நடைபெறும்.
GRADING SYSTEM தான்.

வருட இறுதியில் ஒவர் ஆல் அசெச்மெண்டில்

Punctuality(submission of completed assignments on time,)
communication skills (participation in class discussions),
listening skills(concentration and attention span),
thinking skills (out of the box thinking and reference work),
social skills (Discipline)
இவைகளுக்கு தலா 20 மார்க்குகள் கிடைக்கும்.

இவ்வளவு +கள் சொல்கிறேன். அதனால் Fees
அதிகமோ என நினைக்க வேண்டாம். எட்டாவது
படிக்கும் என் மகனுக்கு வருடத்திற்கு 17,000. இதில்
பாடப்புத்தகங்கள்,நோட்டுக்கள்,லேபிள், ப்ரவ்ன் ஷீட்,
டயரி,BADGE, BELT சேர்த்துதான் Fees.
(கணிணி பயன்பாடு, நீச்சல், நியூஸ் பேப்பர் ஆகியவற்றிற்கு
தனி கட்டணமில்லை) ஆந்திர பிரதேச அரசால்
C.B.S.C வழிக்கல்வி பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்
தொகையில் 40% குறைவாகத்தான் இந்தப் பள்ளியில்
Fees என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் கட்டண
உயர்வு உண்டு.

பிள்ளைகளும் சந்தோஷமாக பள்ளிக்கு போய்
வருகிறார்கள். டென்ஷனில்லாமல் கற்கிறார்கள்.
இப்படி ஒரு பள்ளிக்காகத்தான் தேடி அலைந்தேன்.

சென்ற வருடம் புதுகையில் அப்பாவுக்குத்
தெரிந்தவர்கள் ஹைதைக்கு மாற்றலாகி வந்த
பொழுது எந்த பள்ளியில் சேர்க்கலாம்? என்று
கேட்க என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை
கை காட்டினேன். அவர்களுக்கும் திருப்தி.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger