Thursday, May 28, 2009

வாழ்த்துகள் : வீணா !!

வீணா மற்றும் சிவாவிற்கு வாழ்த்துகள் -
குட்டி தேவதைக்கு மே 26 அன்று பெற்றோராகியிருக்கிறார்கள்!!

அம்மாக்கள் வலைப்பூ சார்பாக வாழ்த்துகள், Happy Motherhood Veena!

Tuesday, May 26, 2009

நான் வளர்கிறேனா மம்மி???!!!

குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் விவரம்
தெரிந்தவர்கள் கேட்கும் கேள்வி
“குழந்தையின் எடை என்ன?”

இது பிறந்திருக்கும் குழந்தை ஆரோக்கியமானதா?
இல்லையா? என்பதை அறிந்துக்கொள்ள உதவும்.




குழந்தைக்கு ஒரு வருடம் ஆகும் வரை
குழந்தை மருத்துவ நிபுணரிடம் குழந்தையைக் காட்டி
எடை, உயரம் எல்லாம் சரியாக இருக்கிறதா
என்று சரி பார்த்துக்கொள்வோம். (மிகச்சிறந்த
குழந்தை மருத்துவர் குழந்தையின் தலையின்
அளவைக்கூட குறித்துக்கொள்வார்)


பிறகு குழந்தை வளர வளர் உடல் நிலை ஏதும்
சரியில்லை என்றால் தான் மருத்துவரிடம் செல்வோம்
என்பதால் பல விடயங்கள் நமக்குத் தெரியாமலேயே
போய்விடுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகள் சரிவிகித
உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. (சாப்பிட
வைப்பதே பெரும்பாடாக இருக்கும் பொழுது
சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா?)





ஆனால் கவலைப்பட வேண்டும். அப்போதுதான்
நாம் நம் குழந்தையின் வளர்ச்சி பற்றி அறிந்துக்கொள்ள முடியும்.

குழந்தையின் வளர்ச்சியில் உயரமும், எடையும் மிக முக்கிய
பங்கு வகிக்கிறது.

அந்தந்த வயதுக்கு இருக்கவேண்டிய உயரத்துக்குரிய
எடை நம் குழந்தை அடைந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

அதிக எடையோ, அல்லது குறைவான எடையோ ஆபத்தானது.
கொழுக் மொழுக்கென இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியம்
என்பது அபத்தம். உயரத்துக்கான எடை இருந்தாலே அவர்கள்
ஆரோக்கியமானவர்கள் என்று அர்த்தம்.

அதிக எடை:

அதிக எடை ஏற்படும் பொழுது குழந்தைகள்
சர்க்கரை வியாதிக்குள்ளாகிறார்கள் என்பது
சமீபத்திய கண்டுபிடிப்பு. அதீத உணவு, குறைவான
உடற்பயிற்சி இவைதான் குண்டு குழந்தைகளுக்கான
காரணங்கள். இதை தெரிந்து கொண்டு சரிசெய்தால்
குழந்தைகளை சரியான எடைக்கு கொண்டு வந்துவிடலாம்.

குறைவான எடை:
இந்தவகை குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பல.
உடலில் தெம்பில்லாது போவதால் சோம்பலாக
இருப்பார்கள். அதிகம் ஓடியாடி விளையாட
முடியாது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாததால்
உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல்
போகும். இது இவர்களின் வளர்ச்சி, கற்றல் போன்றவற்றில்
பாதிப்பைத் தரும்.




இன்னொரு வகை பிரச்சனையும் இருக்கிறது.
குடும்ப வாகு, உடல்வாகு போன்ற காரணத்தால்
சில குழந்தைகள் அதிக உயரம்(வயதுக்கு மீறிய
உயரம்) இருப்பார்கள். இதனால் ஒல்லியாக
தெரிவார்கள். 12 வயதுக்கு 147 செ.மீ இருக்க
வேண்டிய பையன் 153இருந்தால் அதிக உயரம்.

(வயதுக்குத் தகுந்த எடை இருந்தாலும்)
அதிக உயரத்துக்கு தகுந்த உடல் எடை
இல்லாமல் போனால் இந்தக் குழந்தையும்
எடைக்குறைந்த குழந்தையின் பாதிப்புக்களுக்கு
உள்ளாவான்.

நாம் குழந்தையின் உயரம் மற்றும் எடையைக்
கண்காணித்து வரவேண்டும்.

HEIGHT / WEIGHT CHART
மேலே தரப்பட்டுள்ள லிங்கில் நம் இந்தியக்குழந்தையின்
உயரம்/எடை அளவு தரப்பட்டுள்ளது.

உயரம்/எடை அளவு ஆண்குழந்தைக்கு
வேறு அளவு, பெண் குழந்தைக்கு வேறு அளவு
என்பதை நாம் மறக்கக்கூடாது.

சரியாக கவனித்து முறையாக வளர
நாம்தான் உதவ வேண்டும்.

ஆரோக்கியாமான குழந்தைகளை வளர்ப்போம்.
அவர் நலன் காப்போம்

Monday, May 25, 2009

பிரசவ அனுபவம்

என் due date மே 25th. இதுவரை எனக்கு வலி வரவில்லை. என் மருத்துவர் இன்று ( திங்கள் இரவு) வரை பார்த்து விட்டு , ஊசி மூலம் வலி வர செய்யலாம் , மருத்துவமனையில் சேர்ந்து விடுங்கள் என்று சொல்லி விட்டார்.
யாருக்கும் , இந்த முறையில் பிரசவம் நடந்து இருந்தால் உங்கள் அனுபவங்களை பகிர்த்து கொள்ளுங்களேன். நான் கொஞ்சம் பயந்து போய் தான் உள்ளேன்.( Very Much Expected Normal Delivery :-( )

Saturday, May 23, 2009

ஆரோக்கியமான குழந்தை மற்றும் ஆரோக்கியமான கர்ப்ப காலத்திற்கு!

குழந்தைகள் பிறந்தது முதலே ஆரோக்கியமான உணவு முறை மூலம் ஆரோக்கியமான சந்ததிக்கு வித்திடுகிறோம்!

அதிலும் பருவமடைந்ததும் ஆண்/பெண் இரு பாலரின் உணவு முறையிலும் அதிக கவனம் தேவை!
அதிலும் பெண்கள் கருவை சுமக்கும் அளவிற்கு திடகாத்திரமாக இருப்பது அவசியம்!
11வயது முதல் உணவு முறையில், பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை கொண்டு வருதல் நலம்; அது பற்றியே இப்பதிவு!

இதில் உள்ள அனைத்து குறிப்புகளும் மருத்துவர் மூலமும், பிறர் அனுபவத்திலும், என் சொந்த அனுபவத்திலும் அறிந்தவை... உங்களுக்கும் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க உதவுமே என்று கூறுகிறேன்!
ஏதேனும் பிழை இருந்தால் பின்னூட்டத்தில் கூறலாம் வேறு சில உணவுகளையும், பழக்கங்களையும் சேர்க்கலாம் எனில் அதையும் பின்னூட்டத்தில் கூறி அனைவருக்கும் உதவுங்கள்!

முதலில் உணவினைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆண்களுக்கான உணவு 11வயது முதல்:

பச்சைக் காய்கறி சாலட்
தக்காளி ஜூஸ்/தக்காளி உணவு
வெங்காயம்
பூண்டு
பாதாம் பருப்பு
தேன்
பேரிச்சை
பால்
தயிர்
கீரை
பழங்கள்
முட்டை

இந்த உணவுப் பொருட்கள் தினசரி உணவில் இருப்பது நலம்.
வயிற்றில் கல் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் தக்காளியைத் தவிர்க்கலாம்!

பெண்களுக்கு:

பச்சைக் காய்கறி சாலட்
பாதாம் பருப்பு
தேன்
பேரிச்சை
பால்
தயிர்
கீரை
பழங்கள்
வெந்தயக் களி
உளுந்து களி
முட்டை
மீன்
நல்லெண்ணெய்
பப்பாளி

இவை அனைத்து இரத்தவிருத்தி, இரத்தசுத்தி, கர்ப்பப்பை வலுவூட்ட, தேக ஆரோக்கியம் மற்றும் இயற்கை அழகு போன்றவற்றிற்கு பயன்படும் தலை சிறந்த உணவுகள்.

பழக்கவழக்கங்கள்:(பெற்றோர் மற்றும் பிள்ளைகள் கடமை)

குழந்தை தானாக குளிக்கத் தொடங்கியதிலிருந்து உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என தாய் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்;

இதில் குழந்தையின் எதிர்கால ஆரோக்கியம் மட்டுமின்றி நோயற்ற சந்ததியினருக்கான வாய்ப்பும் அடங்கியுள்ளது!

நொறுக்குத் தீனிகளை, எண்ணெய் உணவுகளை அறவே தவிர்த்தல் வேண்டும்.
குழந்தைப் பருவத்திலேயே இதற்குப் பழக்கிவிட வேண்டும்;

பாலியல் கல்வி கற்பதில் பெற்றோரும், ஆசிரியருமே ஒரு குழந்தைக்கு துணையாக இருந்து நல்ல அறிவியல் வழியில் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்;

திருமண பந்தம் பற்றி பெண் குழந்தைகள் மனதில் தவறான புரிதல்களை விதைத்து விடாதீர்கள்;

புதிய உறவுகள், அடக்கு முறை என்றெல்லாம் அவர்களைக் குழப்பி கணவனைக் கைக்குள் போடுதல் அது இது என்று பிதற்றி உங்கள் பெண்ணின் வாழ்வைக் குலைத்துவிடாதீர்கள்; இது அவர்களை மன ரீதியாக பாதிப்பதோடன்றி மிகவும் தாமதமான மகப்பேறு அல்லது மகப்பேறின்மைக்கு வழிவகுத்துவிடும்;

ஆண் குழந்தையின் தாயும் இது பற்றியெல்லாம் கவனமெடுத்தல் நலம்;

மேலும் கர்ப்பகாலம் பற்றிய புரிதலை ஒரு தாய்தான் மகனுக்கு எடுத்துக் கூற வேண்டும்; அப்போதுதான் மனைவியின் கர்ப்பகாலத்தில் தனக்கும் பங்கு உண்டு என்பது ஒரு ஆடவனுக்குப் புரியும்; அவனுக்கும் புதிய விஷயம் தானே!

திருமணத்திற்குப் பின்:

தினமும் இரவு பாதாம் பருப்பும் பாலும் தேனும் சேர்த்தல் அவசியம்;

இரவு உறங்க படுக்கைக்குச் செல்லும் முன் சிறுநீர், டாய்லெட் எல்லாம் போய்விட வேண்டும்;

படுக்கும் முன் தண்ணீர் குறைவாகக் குடித்தல் நலம்;

கர்ப்பம் தரிக்கும் சமயம் பெண்களுக்கு முதுகுவலி அறவே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; இது கர்ப்பம் தாங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை;

தம்பதியர் இருவரும் அன்போடு வெளிப்படையாக ஏதாவது பேசுங்கள் தினமும் இரவு படுக்கும் முன்; ஒருவருக்கொருவர் அன்று நடந்த செய்திகளையும், அன்பையும் பகிர்ந்து கொள்ளுங்கள்; இது மன இறுக்கம், கவலை நீக்க உதவும் அருமருந்து!

பெண்கள் ஃபோலிக் அமில உணவுப் பொருளான தர்ப்பூசணி அதிகம் எடுத்துக் கொள்வதோடு, அந்த மாத்திரையையும் கர்ப்பம் தரிக்கும் முன்பாகவே எடுக்கத் துவங்கி விடலாம்;

இவற்றை செய்து பாருங்கள்! அருமையான கர்ப்பகாலமும், ஆரோக்கியமான அழகான குழந்தையும் உங்களுக்கே! :))))

Friday, May 22, 2009

மாண்டிசோரி கல்வி

Anyone Have Idea about Venkateshwara Montessory in Chennai? I world like to do Diploma Cource in Montessory. Please suggest some Institutes offeres Postal Course.
http://www.svm.co.in/
Thanks In Advance
Veena Devi

அன்னையர் தினத்துக்காக - " பார்வைகள் " கவிதா

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”பார்வைகள் கவிதா தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி கவிதா! ”கன்னத்தில் முத்தமிட்டால்' என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு இதோ :-

"அம்மாக்கள் தினம்" கொண்டாட்டம் !! முல்லை அம்மாக்கள் வலைப்பூக்களில் அம்மாக்கள் தினம் சிறப்பாக அம்மாக்களை பற்றி எழுதச் சொல்லி இருந்தார். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு எழுதி தள்ளுகிறார்கள். ஆனால்

கவிதா
ஒரு
அம்மாவாக
ஆயிரமாயிரம்
பக்கங்கள் எழுதமுடியும் !

குழந்தையாக
எதுவுமே
எழுத தோன்றவில்லை
எழுதுபவர்களை
பார்த்தால்
பொறாமை
ஏக்கம்..

'கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் கதாபாத்திரமான அமுதா என்ற குழந்தையை போன்று இன்னமும் அம்மாவை தேடும் ஒரு குழந்தையாகவே இருக்கிறேன். இந்த பதிவில் என்னுடைய ஏக்கத்தையும், அம்மா இருப்பவர்களையும் அவர்களுக்கு அம்மாவிடம் கிடைக்கும் பாசத்தையும் பார்க்க பொறுக்காத பொறாமையிலும் எழுதுகிறேன். பொறாமை என்பது கூடாது தெரியும்..ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு வந்துவிடும்.. கொஞ்சமாக எல்லாம் இல்லை ஏகத்துக்கு பொறாமை உண்டு. :)

கண்டிப்பாக சோகம், துக்கும், துயரம், அழுவாச்சி எதுவும் இல்லை. :)

எனக்கு அம்மாவாக இருந்து தோற்றுப்போனவர்கள்-

ஆயா
அப்பா
சின்ன அண்ணன்
என் கணவர்
என் மகன்
என் நண்பர்கள்
நண்பர்களின் அம்மாக்கள்
நண்பர்களின் குழந்தைகள்

இவர்கள் எல்லோருமே என் மேல் அதிகமாக அன்பு செலுத்தக்கூடியவர்கள். செலுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நான் எதிர்ப்பார்க்கும் அன்பை என் அம்மாவாக அவர்களால் கொடுக்க முடியவில்லை. கொடுப்பது எனக்கு என் அம்மாவின் இடத்தை மனதளவில் இன்னமும் நிறைவு செய்யவில்லை எனலாம்.

சொல்ல விரும்புவது, ஒரு குழந்தைக்கு அம்மா' வாக அந்த குழந்தையை பெற்ற தாயை தவிர்த்து யாராலும் முழுமையான அந்த குழந்தையின் மனதை நிறைவு செய்யும் அளவிற்கு அம்மா'வாக இருக்கவே முடியாது என்பது என் அனுபவத்தில் நான் கற்றது, பெற்றது. என்னுடைய ஆயாவை போன்று என்னை கவனித்தவர் இல்லை, என்னை வளர்த்தவர் இருக்குமுடியாது என்றாலுமே அவர் கூட என் அம்மா வாக முடியாது என்பது பல நேரங்களில் நான் உணர்ந்தது. என் அண்ணன் மகனிற்கு நான் அம்மாவாக இருக்கும் வாய்ப்பை பெற்றபோதுக்கூட அவனுக்கும் என்னால் அவனின் அம்மாவை போன்று இருக்கமுடியவில்லை என்பது உண்மை. அத்தையாக இருப்பது எளிது, அம்மாவாக.... :(


அம்மா - ?????? அன்பை பெற்றதில்லை அதனால் எனக்கு தெரியவில்லை.. அறிந்தவரை- குழந்தைகள் அம்மாவின் மடியில் உட்காரும், தலைவாரிக் கொள்ளும், சாப்பாடு ஊட்டிக்கொள்ளும், பள்ளியில், கல்லூரியில், சினிமா தியேட்டர்களில், கடைகளில் பார்க்கும் இடமெல்லாம் குழந்தைகள் அம்மாவோடு வரும், இறுக்கமாக அம்மாவை கட்டிக்கொண்டும் வரும். பள்ளியில் பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் வரும் போது எல்லாம் என் தோழிகளின் அம்மாக்கள் வருவார்கள், அம்மாக்கள் எல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் டீச்சரிடம் சிரித்து சிரித்து பேசுவார்கள். :( எனக்கு பிடிக்காது. ஓரமாக நின்று கவனிப்பேன். பொறாமை வரும் இடங்களில் முக்கியமானது பள்ளி. பிரச்சனை என்று வந்தால் உடனே குழந்தைக்கு சப்போர்ட் செய்துக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். எனக்கு எப்பவுமே நானே துணை. (அதனாலே வாதிட பழகிக்கொண்டேனோ என்று நினைப்பேன்.) ஆயாவின் வயதிற்கு அவர்களால் அழைத்தற்கு எல்லாம் வர முடியாது. அதனால் அவரை தொந்தரவு செய்தது இல்லை.

அடுத்து திருமணத்திற்கு பிறகு என் குழந்தை பேறு..!! என் வாழ்நாளில் மறக்கமுடியாத அம்மா இல்லாத வலியை ஏற்படுத்தியது. யாரிடமும் சொன்னது இல்லை. விடுமுறைக்கு என் அக்கம் பக்கம் இருப்பவர்கள் குழந்தைகளுடன் அம்மா வீடு என்று சென்று விடுவார்கள். அல்லது குழந்தைகளையாவது அனுப்பிவிடுவார்கள். அப்படி ஒரு நாள் கூட என் வாழ்நாளில் எங்கும் சென்றது இல்லை. செல்ல இடமில்லை என்பது யதார்த்தம். சில சமயம் இது தான் வாழ்க்கை என்று தெரிந்தாலும் வருத்தப்படாமல் இருக்க முடிவதில்லை. . செல்ஃப் கவுன்சிலிங் கொடுக்கும் போது இதை எல்லாமும் யோசித்து என்னை நானே தேற்றிக்கொள்வேன். ஏக்கம் என்பது இப்பவும் இருக்கத்தான் செய்கிறது. இருந்துவிட்டு போகட்டும் என்று ரொம்பவும் கவுன்சிலிங் கொடுத்து என்னை தேற்றிக்கொள்ளவும் நினைப்பது இல்லை. அழவேண்டுமா அழுதுவிடு, சிரிக்கவேண்டுமா சிரித்துவிடு, யார் உயிரையாவது வாங்க வேண்டுமா வாங்கிவிடு என்பதை நடைமுறை படுத்திவிடுவதுண்டு :)


உலகத்தில் அம்மா இல்லாமல் நான் மட்டுமா இருக்கிறேன்.? இருப்பவர்களை பார்த்து பொறாமைப்படாமல், இல்லாதவர்களை பார்த்து சந்தோஷப்பட்டு க்கொள்ளலாமா? அது் தவறில்லையா? தவறாகத்தான் தோன்றி இருக்கிறது, அம்மா இல்லாத யாரைப்பார்த்தாலும் நான் படும் கஷ்டங்கள் கண் முன்னே வந்து என்னை போல் இவர்களும் கஷ்டப்படுகிறார்களே என்று தோன்றுமே தவிர்த்து, அவரை விடவும் நான் மேல் என்று என்றுமே நினைத்தது இல்லை. அம்மா இல்லாமல் யாரையும் இந்த உலகத்தில் படைக்காதே என்று வேண்டிக்கொள்வேன், வேண்டிக்கொள்கிறேன்....

குழந்தைகள் பெற்றுவிட்டால் மட்டுமே ஒரு பெண் அம்மா'வாகிவிட முடியாது.!



அணில் குட்டி அனிதா : இதோடா ! அம்மணி அட்டண்டண்ஸ் கொடுத்துட்டாங்க..!! ஏழு கழுத வயாசாச்சு... பெத்தப்புள்ளைக்கு நாலு கழுத வயசாச்சி.. இன்னமும் ம்ம்மா...!! யம்மா.. ! ஆத்தா... ன்னு பதிவு போட்டுக்கிட்டு.. தாங்கலடா இந்த கொசு த்தொல்லை. .யாராச்சும் ச்சப்புன்னு அடிச்சி கொல்லுங்க முதல்ல...!!

பீட்டர் தாத்ஸ் :- When you are a mother, you are never really alone in your thoughts. A mother always has to think twice, once for herself and once for her child.
-------------------------------------------
Take time to read; it is the foundation of wisdom

Tuesday, May 19, 2009

நாமே செய்யலாமே

நம் குழந்தையை அழைத்துக் கொண்டு, பிற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு அவர்கள் வீட்டிற்குச் செல்வது வழக்கமானது தான். குழந்தைகள் சேர்ந்து விளையாடும் பொழுது அவர்களுக்குப் பல பாடங்கள் கிடைக்கப் பெறுகின்றன. குழந்தைகளும் அடுத்தவர்களின் பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தி விட்டு கொடுத்து விட வேண்டும், யார் பொருட்கள் ஆயினும் பகிர்தல் வேண்டும் போன்றவை கற்கின்றனர். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு பொருட்களை அடுத்தவர் வீட்டில் எடுத்த இடத்தில் வைக்கச் சொல்கிறோமா?

முன்பு தீஷு பெரிய பெரிய விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாண்டதால் பிரச்சனைத் தெரியவிலை. ஆனால் இப்பொழுது பஸில் போன்றவை சிறு சிறு பகுதிகள் கொண்டவை. ஒன்று தொலைந்தாலும் விளையாட முடியாது. அதேப் போல் ஒன்றுக்கு ஒன்று மாறினாலும் ஒவ்வொரு டப்பாவாக தேட வேண்டும். ஒரு குழந்தை விளையாண்டு விட்டு போனால், அனைத்தையும் அதற்குரிய டப்பாவில் வைத்து, எடுத்த இடத்தில் வைப்பதற்குக் குறைந்தது அரை மணி நேரமாகிறது. குழந்தையுடன் வரும் அம்மாக்கள் ஒன்றை முடித்தவுடன் எடுத்து வைத்து விட்டு தான் மற்றொன்றை எடுக்க வேண்டும் என்று கூறினால் நலமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இப்பொழுது நாங்கள் யார் வீட்டிற்குச் சென்றாலும் எடுத்து வைத்து விட்டு வருவதற்குப் பழகியிருக்கிறோம். இதனால் அவர்களுக்கும் சிரமம் குறையும், நம் குழந்தையும் கற்றுக் கொள்ளும்.

Friday, May 15, 2009

மீ த பர்ஸ்ட்

இந்த “முதல்” என்ற வார்த்தை பெரியவர்களிடம் எப்படியொரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறதோ அதை விட அதிகமாய் சிறார்களிடம் உண்டு செய்கிறது.

உதாரணத்துக்கு நீ தான் பர்ஸ்ட் அப்படின்னு சொல்லிப்பாருங்க, அடுத்து அவஙக் எவ்வளோ குதிச்சு குதிச்சு விளையாடுவாங்க
சில சமயம் சொன்னத கேட்பாங்க, ஒழுங்கா சாப்பிடக் கூட செய்வாங்க. சாக்லேட் என்ற மகுடிக்கு மயங்காத பாம்புகள் கூட இந்த நீ தான் பர்ஸ்ட் என்ற வார்த்தைக்கு மயங்கும்.

இந்த பர்ஸ்ட் என்பதின் எல்லை ஒரு வரையறை வரை இருத்தல் நலம். இல்லையெனில் நிறைய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

நான்கு குழந்தைகள் உட்கார்ந்து சாப்பிடும் போதோ இல்லை நம் வீட்டினில் அனைவரும் சாப்பிடும் போதோ, நம் குழந்தை சாப்பிட வேண்டும், சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதை
கருத்தில் கொண்டு பெரியவர்கள் குழந்தையின் பெயர் சொல்லி அவன் தான் பர்ஸ்ட் என்பார்கள். உதாரணத்திற்கு ராம் தான்ப்பா பர்ஸ்ட்டு, நாங்கள்லாம் செகண்டு தாம்ப்பா என்றாலே போதுமே அது அவசர அவசரமாக உணவை விழுங்கும்.

அதே போல படிப்பிலும், எங்க பையன் தான் எப்பவும் பர்ஸ்ட்டு வருவான் இல்லப்பா, நல்லா படிப்பானே, ஏ. பி. சி. டி யெல்லாம் நல்லா எழுதுவானே, ரைம்ஸ் எல்லாம் சமத்தா சொல்லுவானே என்று நீட்டி முழக்கி எல்லார் முன்னிலையிலும் அந்தக் குழந்தையையே முதலாக்குவார்கள். ஊக்கப்படுத்துகிறார்களாம்.

இது போன்ற சொற்களின் விளைவுகளை குழந்தைகளின் முன்னால் கொண்டு செல்லும் போது அந்தக் குழந்தைகள் என்னவாக இருக்கும் என்பதை கண்கூடாக கண்டேன்.

என் நாத்தனாருக்கு ஒரே மகன். பெயர் ஹரி, படிப்பில், விளையாட்டில் எல்லாம் சுட்டி. 6 வருடங்கள் கழித்து பிறந்தவன் ஆதலால் அப்பா, அம்மாவிற்கு செல்லம். அவன் அம்மா எல்லாவற்றையுமே நன்றாகத் தான் சொல்லித்தந்தார்கள். கதை சொல்வது, அப்புறம் சின்ன சின்ன ஆக்டிவிட்டிஸ் என, ஆனால் எங்கே கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை, இந்த பர்ஸ்ட் என்ற வார்த்தை அவனுக்கு மந்திரமாகிவிட்டது. ஆரம்பத்தில் அது நன்றாகப் போக இப்போது அவனுக்கு வயது 5, அதுவே நெகட்டிவ் ஆகப்போய்க் கொண்டிருக்கிறது.

1. வீட்டில் அவனும், அவன் அப்பாவும் சாப்பிடும் போது, அவன் அப்பா முதலில் சாப்பிட்டு எழுந்துவிட்டால், இவன் கோபித்துக்கொண்டு, முகத்தை உர் ரென்றும் வைத்துக்கொண்டு அதற்கப்புறம் சாப்பிட மாட்டானாம்.இப்போதெல்லாம் அவன் அப்பா சாப்பிட்டு முடித்தபின் ஒரு கவளத்தை இவன் சாப்பிட்டு எழும் வரை தன் தட்டில் வைத்துக்கொண்டிருக்கிறாராம்.

2. அவன் ஸ்கூலில் (எய்ம்ஸ், செய்யாறு) எல்.கே.ஜிக்கே ஸ்கூல் ஆண்டு விழாவில் முதல் வந்த குழந்தைக்கு மெடலெல்லாம் போட்டு கான்வொகேஷன் நடத்தி இருக்கிறார்கள். இவன் நன்றாகப் படிக்கும் பையன் தான். என்ன காரணத்தினாலோ மூன்றாவதோ, நான்காவதோ வந்திருக்கிறான். போச்சு, அங்கேயே அழுகை ஆரம்பிக்க வீட்டுக்கு வரும் வரைக்கும் அடங்கவில்லையாம், கூடவே நான் இப்பவே அந்த மெடலை போட்டுக்கனும் என்று அடம் வேறு. சரி முதல் வந்த குழந்தை இவன் ப்ரெண்ட் தானே என்று அந்தக் குழந்தையின் அப்பா, ம்மா, கொஞ்சம் அந்த மெடலை ஹரி போட்டுக்கட்டும் குடும்மா என்றதற்கு அது தராமல் போகவே, இன்னும் ஆர்ப்பாட்டம் கூடியிருக்கிறது.

3. லீவிற்காக சென்னைக்கு எங்கள் வீட்டிற்கு வந்தபோதும் இதே கதைதான். அமித்துவிற்கு எதையாவது விட்டுத்தந்தாலும், அவள் எதையாவது முதலில் எடுத்துவிட்டாளோ, செய்து விட்டாளோ அவ்ளோதான் எல்லாம் போயே போச். சார் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்து விடுவார். மீறி ஏதாவது கேட்டால் அழுகை வெடிக்கும், நான் தான் மொதல்ல எடுப்பேன்னு சொன்னேன்ல , பின்ன ஏன் அவ எடுத்தா என்பது மாதிரியான டயலாக்ஸ்.

4. அவனின் இந்தப் போக்கை குறித்து என்னை மிகவும் பாதித்த ஒரு விஷ்யம்: ஒரு பேப்பரில் நிறைய யானைகள் கும்பலாகவும், ஒன்றன் பின் ஒன்றாகவும் போய்க்கொண்டு இருப்பது போன்ற படம் இருந்தது. நான் அமித்துவிடம் த்தோ, பாரு யானை, குட்டியானை, பெரிய யானை என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அவளும் பார்த்துக்கொண்டிருந்தாள். அமித்துவும் த்தோ த்தோ என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இந்தக் குட்டியானை தான் வர்ஷினியாம் என்றும் சொன்னேன்.அருகில் விளையாடிக்கொண்டிருந்த அவன், அதை விடுத்து, பேப்பரிடம் வந்து, மாமி எது வர்ஷினின்னு சொன்னீங்க என்றான், த்தோ இதுதாண்டா குட்டியா இருக்குப் பாரு என்றேன் நடுவில் இருந்த யானையை காண்பித்து, உடனே இவன் இது வர்ஷினி, அதற்கு முன்னர் இருந்த யானை சஞ்சு (அவனை விடப் பெரிய அவனின் மாமா மகள்), அதற்கும் முன்னர் முதலில் இருந்த யானை தான் எனவும் கூறினான். அதற்கு நானோ, சஞ்சு உன்னோட பெரியவடா, அப்ப அது அவள் தானே என்றேன். இல்ல இல்ல அதான் நானு, எனக்குப் பின்னாடி தான் சஞ்சு என்றான். எனக்கு நான் சொன்னது தவறா, இல்லை அவனுக்கு நான் எப்படி சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் என்றும் புரியவில்லை.

இதை படிக்கும் அம்மாக்கள், இவனுக்கு இருக்கும் இந்த பர்ஸ்ட் என்ற வார்த்தையின் தாக்கத்தை எப்படி சொல்லி புரிய வைப்பது என்றும் சொல்லிவிடுங்கள்.

பபில்ஸ்


Grow up reading with Bubbles

வயது வரம்பு : 2 முதல் 6 வரை
மொழி : ஆங்கிலம்

அதிலுள்ள ஆறு கதைகள் :

1. Bubbles goes to School
2. Bubbles The Artist
3. Bubbles Plays with Fire
4. Bubbles Has a Toothache
5. Bubbles The Litterbug
6. Bubbles Is Selfish

கதைகள் என்பதை விட ஆறு சிறு நிகழ்வுகள். Bubbles என்னும் குட்டிக் குரங்கு கதாநாயகன். பள்ளி என்றால் என்ன?, சுவரில் வரையாமல் பேப்பரில் வரை, தீயில் விளையாடக் கூடாது, நிறைய மிட்டாய் சாப்பிடக்கூடாது, குப்பைக்கூடையில் தான் குப்பை போட வேண்டும், பகிர்ந்து விளையாட வேண்டும் என்பதே ஆறு கதைகளின் சாராம்சம்.

படங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. எழுத்துக்களுக்கும் மிகவும் பெரிதாக இருக்கின்றன. நாம் வாசித்துக் காட்டுவதற்கும், வாசிக்கப் பழகும் குழந்தைகளும் உபயோகப்படுத்தும் படியுள்ளது.

வாசிக்கும் பொழுதே தன்னை Bubblesஉடன் ஒப்பிடத் தொடங்கிவிட்டாள். நான் மிட்டாய் நிறைய சாப்பிட மாட்டேன், நான் முந்தி தான் சுவத்தில வரஞ்சேன் போன்றவை. ஒரு முறை படித்துக் காட்டிய உடன் படங்களைப் பார்த்தே கதை சொல்லிவிடலாம்.

கதைகள் சிறார்களுக்கு மிகவும் விருப்பமாக இருக்கும் படி இருக்கின்றன. மூன்று நாட்களில் கிட்டத்தட்ட பத்து முறையேனும் வாசித்து இருப்போம். பயனுள்ளப் புத்தகம்.

Wednesday, May 13, 2009

குறை மாத குழந்தைகள் பராமரிப்பு - பகுதி - 2




குறை மாத குழந்தைகளின் பெரும் பிரச்சனை எடை குறைவு தான். 1.5 கிலோ முதல் தான் எடையே இருக்கும். அதுவும் மருத்துவமனையில் இருந்து வரும் பொது முன்னூறு கிராம் எடை மேலும் குறைந்து தான் வரும்....

(இதில் இருப்பது என் சொந்த அனுபவம், என் இரண்டாம் குழந்தை pre term baby )

முதல் ஐந்து மாதங்களுக்கான பராமரிப்பு:

மருத்துவமனையில் இருக்கும் தொட்டிலே போல் ஒன்று ஏற்பாடு செய்யுங்கள். அதன் மேல் ஒரு மெல்லிய காட்டன் துணியால் வலை போர்த்தி வெய்யுங்கள். மேலும் தாயின் வயிறில் இருக்கும் கதகதப்பான உணர்வு அதற்கு இருக்க வேண்டும். அதனால் ஒரு டேபிள் லாம்ப் வாங்கி அதில் டிவி பல்ப் ( கடைகளில் கிடைக்கும்) ஒன்று பொருத்தி வெய்யுங்கள். அந்த வெளிச்சம் குழந்தை மேல் படும் படி வெய்யுங்கள். அந்த வெப்பம் குழந்தையை கதகதப்பாக உணர செய்யும். குறை மாத குழந்தைகள் வெகு நேரம் முழித்து இருக்காது, எப்போதும் தூக்கத்தில் தான் இருக்கும். அது சராசரியான எடை வரும் வரை இந்நிலை தொடரும். முடியும் போது ஒரு நாளின் குறிப்பிட நேரம் ஒதுக்கி உங்கள் உடலோடு அந்த குழந்தையை இறுக்கி அனைத்து கொள்ளுங்கள், இது அந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தரும்.

குளியல் முறை:( முதல் மூன்று மாதம்)

தினமும் ஒரே நேரத்தில் குளிக்க வெய்ப்பது நல்லது. குளிக்கும் போது தேவையான பொருட்கள்:

ரப்பர் ஷீட், பெரிய டப், சிறிய டெர்ரி டவல், பேபி சோப்பு, பஞ்சு, சிறிய காட்டன் துண்டு,

அறையில் சாதாரண வெப்ப நிலையில் ரப்பர் ஷீட் விரித்து குழந்தையை அதில் படுக்க வெய்க்கவும். டப்பில் வெதுவெதுப்பான தண்ணீர் போதும்.

* முதலில் பஞ்சில் சிறிது நனைத்து குழந்தையின் காது, கண்கள், உதடு, பிறப்பு
உறுப்புகள், முதலியவற்றை மிருதுவாக துடைக்கவும்.
*சிறிய டெர்ரி டவலை நனைத்து உடலை மிருதுவாக துடைக்கவும்.
* சோப்பு கையில் தடவி மிருதுவாக துடைத்து எடுக்கவும்.
* மீண்டும் நனைத்த டவலால் துடைத்து எடுக்கவும்.
*காட்டன் துண்டை நனைத்து குழந்தையின் தலையை துடைக்கவும்.

கண்டிப்பாக பயன் படுத்த கூடாதவை:

ஆயில், பவுடர், பேபி கிரீம், லோஷன், ஷாம்பூ, மை, பொட்டு.

கவனத்தில் கொள்ளுங்கள்:

*குழந்தையின் சருமம் வறண்டு ருந்தால், சிறிது நல்ல எண்ணெய் அல்லது தேங்காய்
எண்ணெய் குளிப்பதற்கு முன் தடவி விடவும்.
* ஒவ்வொரு முறை மலம் கழித்ததும் பஞ்சினால் துடைத்து விடவும். கண்டிப்பாக வெட்
நாப்கின் வேண்டாம்.
* குழந்தைக்கு சாம்பிராணி புகை வேண்டவே வேண்டாம்.

முக்கியமாக யாரிடமும் குழந்தையை தரவேண்டாம், யாராவது பார்க்க வந்தால் அவர்களை குழந்தையை தொட அனுமதிக்காதீர்கள். முத்தம் கண்டிப்பாக கூடாது. இந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பதே இருக்காது. ஆகையால் இவற்றை கண்டிப்பா கடைபிடியுங்கள். விமர்சனங்களை தூரப்போடுங்கள், உங்கள் குழந்தை மட்டுமே இப்போது முக்கியம்.


உணவு முறை:

சிறிய குழந்தையாக இருப்பதால் அதற்க்கு நேரடியாக பால் குடிக்க முடியாது, ஆகையால் பாலை வேறு கிண்ணத்தில் எடுத்து சங்கு மூலம் ஊற்றுங்கள், சப்பி குடிக்கவும் வையுங்கள். தாய் பால் தவிர வேறு எதுவும் நினைத்து கூட பர்ர்க்க வேண்டாம்.

மருத்துவ ஆலோசனை.

எந்த சிறு பிரச்சனையாக இருந்தாலும் நீங்களா முடிவு எடுக்கவோ, மருந்து கொடுக்கவோ வேண்டாம். மருத்துவரை அணுகவும்...

நான்காம் மாதம் முதல் எட்டாம் மாதம் வரையான பராமரிப்பு அடுத்த பதிவில்...

தூங்குடா செல்லம்!

அம்மாக்களின் வலைப்பூக்களில் என்னையும் முல்லை ஒரு பதிவராகச் சேர்த்துப் பல நாட்களாகின்றன. இன்னும் ஒரு பதிவு கூட இட முடியவில்லையே என்று வருந்திக்
கொண்டிருந்தேன்.

ஆனால் தவறாமல் எல்லாப் பதிவுகளையும் வாசித்து வருகிறேன். இளம் தாய்மார்களுக்குப் பயனுள்ள எத்தனை குறிப்புகள்? குழந்தைகளுக்கு உணவுக்குறிப்புகள், கதைகள் என்று உண்மையில் தோட்டம் மிக அழகாகப் பூத்துக்
குலுங்குகிறது. என்னையும் இங்கு கொண்டு வந்து சேர்த்த முல்லைக்கு நன்றிகள் பல!

என் மகள் நேஹாவுக்கு ஒரு வயது தான் ஆகிறது. 40 நாட்கள் முதல் நானே தான் அவளை முழு நேரமும் கவனித்து வருகிறேன். அவ்வப்போது அம்மாவும் எனது மாமியும் வந்து உதவுவது போக. ஆனாலும் எனக்கென்னவோ குழந்தை வளர்ப்பு
பற்றி எதையும் எழுத ஒரு தன்னம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் நான் விளையாட்டுப் போக்கில், அவள் போக்கில் போய் அவளை வளர்த்துக் கொண்டு வருகிறேன். சில நாட்கள் பழகி கை கூடி வரும் உணவுப் பழக்கம் (routine) தீடீரென்று அவள் முரண்டு பிடிப்பதாலோ வேறு காரணங்களாலோ மாறி விடுகிறது. நான்கு நாட்கள் ஒழுங்காகச் சாப்பிடும் உணவை ஐந்தாம் நாள் கண்டாலே ஓடுகிறாள். இப்படி trial and error ஆக நாட்கள் ஓடுகின்றன!


அதே போல் தான் தூக்கமும். அவள் பிறந்தது முதல் பகலெல்லாம் நன்றாகத் தூங்குவாள். இரவு ஒன்பது மணிக்கு மேல் அப்படி ஒரு உற்சாகமாய் விளையாடத் தொடங்குவாள். நமக்குத் தூக்கம் சொக்கும் 12 மணியளவில் பசி எடுக்கத் தொடங்கி அழுவாள். முப்பது நாள் முதல் இவளுக்கு combination feed தான். (ஒரு வேளை தாய்ப்பால், ஒரு வேளை ஃபார்முலா) இரவு வேளை அதிகம் விழித்திருப்பதால் கண்டிப்பாக எழுந்து பால் கலக்க வேண்டி வரும். பல நாட்கள் இரவு முழுதும் விழித்திருந்தது கூட உண்டு. மாறி மாறி விழித்துப் பார்த்துக் கொள்வோம்.

அப்புறம் அவர் காலையில் வேலைக்குப் போக வேண்டுமே என்று அவளைத் தூக்கிகொண்டு ஹாலுக்கு வந்து டி.வி பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரே குஷியாகச் சிரித்தும் விளையாடிக் கொண்டுமிருப்பாள். அசதியில் எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியாது. குழந்தையைக் கண்டபடி திட்டுவேன். மறு நாள் காலை பட்டு போலத் தூங்கும் அவளைப் பார்த்து கஷ்டமாக
இருக்கும்!


மூன்று மாதங்களுக்குப் பிறகு சரியாகி விடும் என்றார்கள். எங்கே! ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் இரவு முழுதும் தூங்க ஆரம்பித்தாள்.


அதன் பிறகு நான் கடைப்பிடித்த சில டிப்ஸ்:


1. தினமும் இரவில் கண்டிப்பாகக் குழந்தைக்கு டிஸ்போஸபில் டையபர் கட்டித் தூங்க வையுங்கள். நான் ஐந்தாம் மாதம் முதல் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன். Nappy rash வராமல் இருக்க, காலையில் அதை அவிழ்த்ததும் நன்றாகத் துடைத்து விட்டு Caladryl தடவி விட்டுத் துணி நேப்பியோ ஜட்டியோ போட்டு விடுங்கள். நேஹாவுக்கு இது வரை nappy rash வந்ததே இல்லை.


2. மாலை 5 மணிக்கு மேல் குழந்தையைத் தூங்க விட வேண்டாம். தூக்கம் வந்தாலும் ஏதாவது விளையாட்டுக் காட்டித் தூங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை 9 மணிக்குள் உணவூட்டித் தூங்க வைத்து விடுங்கள். இரவ் உணவுக்குச் சாதமோ பிற திட உணவுகளோ இல்லாமல் சத்து மாவுக் கஞ்சியோ ஸெரிலாக்கோ கொடுக்கலாம். பொதுவாக அவர்கள் அடம்பிடிக்காமல் சாப்பிடும் உணவாக இருப்பது நல்லது.

3. இரவு விழித்து எழுந்தால் சூடான தண்ணீர் கொடுங்கள். தாகத்தில் தான் பெரும்பாலும் குழந்தைகள் விழிப்பது.

4. நேஹா பெரும்பாலும் பாட்டுக்கு மயங்கித் தூங்கி விடுவாள். அவளுக்கென்று பாடுவதற்குச் சில பாட்டுக்கள் வைத்திருக்கிறேன். மெலிதாக ரேடியோவும் வைக்கலாம். பாட்டு கேட்டபடி தூங்குவது மிகவும் நல்லது.


5. பகலில் தூளியில் தூங்கினாலும் இரவில் உங்கள் அருகில் தூங்குவது தான் நல்லது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையானால் கண்டிப்பாக இரவில் பாலருந்திக் கொண்டே தூங்குவதைத் தான் விரும்பும். நீங்களும் நிம்மதியாகத் தூங்கலாம். ஆனால் இப்பழக்கத்தை நிறுத்துவது கடினம். (டிப்ஸ் ப்ளீஸ்!)

6. தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் முகம் கை கால்களைத் துடைத்துப் பௌடர் போட்டு உடை மாற்றி விடுவது அவசியம். ஆனால் சாப்பிட்டவுடன் குழந்தை கண்ணயர்ந்து விட்டால் எழுப்பி இதைச் செய்ய வேண்டாம்!


7. முக்கியமாக நீங்களும் இரவில் சீக்கிரமே தூங்கிப் பழகினால் குழந்தையும் அதே போல பழகி விடும். (இந்த விஷயத்தில் சாத்தான் வேதம் ஓதுகிறேன்! என்ன செய்வது அவள் அப்பா வீட்டுக்கு வரத் தாமதம் ஆவதால் இந்த நிலை.)

8. இன்னொரு விஷயம். கொஞ்சம் பெரிய குழந்தையானதும் வீட்டில் மற்றவர்களிடமும் கொடுத்துத் தூங்கப் பழக்குங்கள். உங்களிடம் இருந்தால் தான் குழந்தை தூங்கும் என்றால் உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனாலோ அல்லது வேறு சந்தர்ப்பத்திலோ ரொம்பக் கஷ்டம். IPL ஆரம்பித்ததிலிருந்து இரவில் அவள் அப்பா மேட்ச் பார்த்தபடி நேஹாவை மடியில் வைத்துக் கொண்டுத் தூங்க வைத்து விடுகிறார். எனக்கு நிம்மதி. ஆனால் அவளும் கிரிக்கெட் ரசிகையாகி விடக் கூடாதே என்று பயமாக இருக்கிறது.


இதெல்லாம் செய்தும் சில நாட்கள் எங்கள் வீட்டுத் தேவதை ”இரவினில் ஆட்டம்” என்று ஆடுவாள். வேறு வழியின்றி அவளுடன் சேர்ந்து ஆடுவதைத் தவிர எனக்கு
இப்போது வேறு வழியில்லை.

Tuesday, May 12, 2009

அன்னையர் தினத்துக்காக - ”சிறகடிக்க ஆசை” சதானந்தன்!!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”சிறகடிக்க ஆசை” Sathananthan தனது படைப்பைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி Sathananthan! ”'அம்மா - நேரில் நின்று பேசும் தெய்வமாக வேண்டாம். அம்மாவாகவே.........!' - என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு:-



கொண்டவர்க்கு எது பிடிக்கும்; குழந்தைகள் எதை விரும்பும்


தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன


உண்பதில் எவருடம்புக்கெது உதவாது என்றெல்லாம்


கண்டனள் கறிகள் தோறும் உண்பர் தம்மைக் கண்டாள்.



பொரியலோ பூனைக்கண் போல் பொலிந்திடும் சுவை மணக்கும்


அருந்துமா சிறிய பிள்ளை என என்னும் அவளின் நெஞ்சம்


இருந்தந்தச் சிறிய பிள்ளை இச் என்று சப்புக்கொட்டி


அருந்தியே மகிழ்வதைப்போல் அவள் காதில் ஓசை கேட்கும்.





ஈழத்தில் பிந்திய 80 களில் 6 ம் 7 ம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் இருந்த பாடல் இது.


இதை ஆசிரியர் விளக்கிக் கற்பித்த அன்றே வீட்டில் வந்து அம்மாவைக் கவனித்தேன். நான்கு பிள்ளைகளுக்கும் நான்கு விதமாக முட்டை பொரித்தார். நான்கு விதமாகத் தோசை சுட்டார். இது பல குடும்பங்களிலும் தாய்/மனைவி செய்வது தான் என்றாலும் ஏனோ தானோ என்று சமைப்பவர்களும் செய்து முடித்தால் போதும் என்று செய்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.


இப்போதும் வீடுகளில், (மேலை நாட்டினர் கூட) சமையல் பெரும்பாலும் பெண்களிடம் தான் இருக்கிறது. (நளபாகம் என்பதையோ வெளியில் restaurant இல் chef ஆக இருப்பவர்களைத் தவிர்த்து) ஆனால் இதற்குரிய அங்கீகாரத்தைப் பெரும் பெண்கள் எத்தனை பேர்? ஒருநாள் உப்பு கூடிவிட்டால் சலித்துக் கொள்பவர்களில் எத்தனை பேர் நன்றாக இருக்கும் நாட்களில் பாராட்டி இருப்பார்கள்?


இதைப் புரிந்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் இருப்பது துரதிர்ஷ்ட வசமானது. சிறு பிள்ளைகள் சரி. 10, 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளே புரியாமல் இருந்தால் அது வீட்டிலிருக்கும் மற்றவர்களின் தவறு தான்.


சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் வேலைக்குப் போகும் அம்மாக்களும் பிள்ளைக்கும் கலந்து கொண்ட நிகழ்வில் பல குறைகளையும் கூறினார்கள். அந்தப் பிள்ளைகளுக்கும் பல குறைகள் இருக்கும். நானும் அழகன் படத்தில் வருவது போல வேலைக்குப் போகாத அம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கலாமே என எண்ணியதுண்டு. துரதிர்ஷ்ட வசமாக எனது ஆறு வயதில் அப்பாவைப் பிரிந்த எனக்கு வேலையும் பார்த்து எங்களையும் "கைம்பெண் வளர்த்த கழுதைகள்" ஆகி விடக் கூடாது என்று கண்டிப்புடன் வளர்த்த அம்மா வில்லியாகவே தோன்றியதும் உண்டு. ஆனால் 13 வயதில் அவரையும் பிரிந்த பின்னரே அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவை இழந்த போது காரணமே தெரியாமல் அழுத நான் இன்று வரை அழுதது, அழுவது அதிகம்.


அம்மாவென்றாலே தியாகிகள் என்று வைத்திருக்கும் மனப்பாங்கும் மாற வேண்டும்.


அப்படி இருப்பது அம்மாக்களின் இயல்பு.


ஆனால் அதைப் புரிந்து அனுசரணையாக இருப்பது


உறவுகளின் உன்னதம்.

Photo: Mom hiding kid from shelling in Sri Lanka

Photofromhttp://my.telegraph.co.uk/chandradavid/blog/2009/05/04/a_paradise_turned_into_kingdom_of_vultures

Monday, May 11, 2009

விதம் விதமா இட்லி சுடலாம் - முட்டை இட்லி

தேவையான பொருட்கள்:

வேக வைத்த முட்டையின் மஞ்சள் கரு மட்டும்
மிளகு தூள் மிக சிறிதளவு
இட்லி மாவு
பொடியாக நறுக்கிய வெங்காயம்

செய்முறை:

இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி இட்லி மாவு சிறதளவு ஊற்ற வேண்டும்;

பின் முட்டையின் மஞ்சள் கருவை வட்ட வட்ட துண்டுகளாக வெட்டி அதில் ஒரு துண்டை மாவின் மேல் வைக்க வேண்டும்;

பொடியாக நறுக்கிய வெங்காயத்தில் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு அதில் சிறதளவு எடுத்து அதன் மேல் தூவ வேண்டும்;

அதன் மேல் மேலும் மாவு ஊற்றி இட்லியை வேக வைத்தால்... சுடச் சுட முட்டை இட்லி ரெடி!

முட்டை தோசை:(இலவச இணைப்பு)

இதே போல் தோசையிலும் செய்யலாம்; ஆனால் முட்டையை வேக வைக்காமல் மஞ்சள் கருவை மட்டும் தனியே பிரித்து தோசை மேல் ஊற்றி இந்த மிளகுதூள் கலந்த வெங்காயம் தூவி நெய் ஊற்றி மூடி வைத்து வேக வைக்க வேண்டும்।

சுவையான முட்டை தோசை தயார்!:)

powerful கற்றாழை

பெண்களின் பிரசவ காலத்தில் உடலில் பல மாற்றங்கள் நிகழும்.அந்த மாற்றங்களில் ஒன்றுதான் constipation.இது எல்லாருக்கும் இருக்கும் என்றில்லை.சிலருக்கு இருக்கலாம்,பலருக்கு இல்லாமலிருக்கலாம்.அவரவரின் உடல்நிலையைப் பொறுத்தே அமையும்.

constipation வந்தால் இறுதியில் அது piles இல் கொண்டு போய் விட்டு விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.பிரசவம் வரை இது பற்றி நாம் மருத்துவரின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளலாம்,அதாவது அவர்கள் தரும் மருந்துகளை உட்கொள்ளலாம்.ஆனால் பிரசவத்தின் பின்னர் மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்த்து நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் அருமருந்தான கற்றாழையை சாப்பிடலாம்.கற்றாழையை தொடர்ந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாபிடுவதால் piles என்னும் இம்சையை அறவே ஒழித்துக் கட்டலாம்.

உட்கொள்ளும் முறை:

கற்றளையை செடியில் இருந்து விரல் நீளத்திற்கு அறுத்தெடுத்து பின்னர் அதிலிருக்கும் பச்சை நிற தொலை கத்தியால் சீவி விட்டு உள்ளே இருக்கும் நுங்கு போன்ற நிறமில்லா சதையை உட்கொள்ளலாம்.

பி.கு:

பச்சை நிறம் கொஞ்சம் கூட இருக்கக் கூடாது.கொஞ்சம் ஒட்டி இருந்தாலும் அதை சாபிடும்போது அநியாயத்திற்குக் கசக்கும்.

உள்ளே இருக்கும் சதையில் எவ்விதமான சுவையும் இருக்காது.அதனால் பயம் தவிர்த்து சாப்பிடலாம்.

Sunday, May 10, 2009

பிரசவத்திற்கு பின்!

பொதுவாக நார்மல் டெலிவெரி மூலம் குழந்தைப் பெற்றவர்கள் செய்ய வேண்டியது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது;ஆனால் ஓரளவு எனக்குத் தெரிந்தவற்றை கூறியிருக்கிறேன் என்னுடைய வலைப்பூவில்...

அதோடு சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களுக்கான குறிப்புகளையும் கூறியுள்ளேன்.

இந்த வாய்ப்பினை அளித்த முல்லை மற்றும் வீணாவிற்கு நன்றி!:)
என்னுடைய பிளாக்கரில் உள்ள குறையினால் என்னால் பதிவினை இங்கு எழுத இயலவில்லை... ஆதலால் தான் தொடுப்பு கொடுத்துள்ளேன் :)

இதோ அந்த பதிவு...
பிரசவத்திற்கு பின்!

அன்னையர் தினத்துக்காக - திருமுருகன்!

திருமுருகன், Keep walking எனும் ஆங்கில வலைப்பூவில் எழுதிவருகிறார். நமது வலைப்பூ வார்ப்புருவை வடிவமைத்தவர். மிக அழகாக header-ஐ விரும்பியபடி செய்துக்கொடுத்தார். Header-ல் இருக்கும் வரைபடங்களை, அம்மாக்கள் வலைப்பூ பங்களிப்பாளர்களின் குழந்தைகளிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை முன்வைத்தவர். ”அன்னையர் தினத்துக்காக ஃபேமஸ் பதிவர்கள்கிட்டே அவஙக அம்மா பத்தியோ அல்லது அன்னையர் தினத்தைப் பற்றியோ எழுதச் சொல்லிக் கேளுங்க” என்று ஐடியா சொன்னவரையே எழுதச் சொன்னதும் வெகு விரைவில் மடலில் அனுப்பியிருந்தார். நன்றி திருமுருகன். தங்கள் அன்னைக்கு வாழ்த்துகள்! அவரது அன்னையர் தினப் பதிவு இதோ:

நான் ஸ்கூல்ல படிக்கும் போது மதர்ஸ் டே-ன்னு ஒரு கதை படிச்சு இருக்கேன். ஒரு குடும்பமே மதர்ஸ் டே-வை முன்னிட்டு ஒரு பிக்னிக் போலாம்னு பிளான் பண்ணி கிளம்புவாங்க. அம்மா சீக்கிரமே எந்திரிச்சு எல்லாருக்கும் சாப்பாடெல்லாம் ரெடி பண்ணிட்டு, எல்லா குழந்தைகளையும் எழுப்பி, குளிப்பாட்டி, சீவி சிங்காரிச்சு விட்டுட்டு ரெடி ஆகி பாத்தா, பிக்னிக் வேன்-ல ஒருத்தருக்கு மட்டும் எடம் பத்தாது (ஏன்னு கேக்காதீங்க, அந்த மாதிரி ஆயிடும்). சரி, யாரை வீட்ல விட்டுட்டு போலாம்னு இங்கி-பிங்கி-பாங்கி போட்டு பாப்பாங்க. எல்லாரும் நான் வீட்-ல இருக்க மாட்டேன்னு சொல்லிடுவாங்க. கடைசியா அம்மா நான் வீட்லயே இருந்துக்கிறேம்பாங்க. சரி-ன்னு அவங்களை விட்டுட்டு மிச்ச எல்லாரும் ஜாலியா போய்டுவாங்க.


எங்க (எல்லா) அம்மாவும் இப்படித்தான். ரெண்டு வருஷதுக்கு முன்னாடி ஒரு நாள் தங்கச்சி போன் பண்ணினா. 'அண்ணா, மதர்ஸ் டே வருது, நாம ஒரு (கிரீடிங்) கார்டு வாங்கி நம்ப அம்மாவுக்கு குடுக்கலாமே'-ன்னு சொன்னா. அம்மாவுக்கு கார்டா? சேச்சே, எதுக்குன்னு நினைச்சேன், அப்புறம் "உங்களை அம்மாவா அடைஞ்சுது வரம்-னா, நாங்க எவ்ளோ நாள் தவம் செஞ்சு அந்த கடனை தீக்கபோறோம்னு தெரியலன்னு" ஆரம்பிச்சு தத்தக்க, பித்தக்க கவிதை ஒன்னு எழுதி குடுத்தோம். அம்மாவுக்கு ஒரே சந்தோஷம். எனக்கு கொஞ்சம் கேவலமா இருந்துச்சு.


ஏன்னா இப்ப தனியா வேற நாட்ல இருக்கும் போது தான் அவங்க அருமை தெரியுது. பெங்களூர்-ல வேலை செஞ்சுட்டு இருக்கும் போது பஸ்ல கூட்டமா இருக்குமேன்னு சொல்லி சொல்லி, நெறைய பண்டிகை நாள்களில் அம்மாவை பாக்க நான் போனதே இல்லை. எங்க அம்மாவுக்கு வருசத்துக்கு ஒரு மதர்ஸ் டே விஷ்ஷஸ் எல்லாம் ரொம்பவே too little. அவங்களை நல்லா பாத்துக்குற மாதிரி நாங்க அவங்க கூட இருக்கணும், அந்த வாய்ப்பு கெடைக்கும்-னு நம்பறேன்.


இப்பதான் கொஞ்ச நாளா இந்த வலைப்பூவை (நன்றி: கைப்புள்ள , சந்தனமுல்லை ) பாக்கறேன். ரொம்ப நல்லா இருக்கு, நெறைய இளம் அம்மாக்களுக்கு உங்க பதிவுகள் எல்லாம் உபயோகமா இருக்கும்-னு நம்பறேன், அதனால எல்லாரும் நெறைய எழுதுங்க (சொல்லிட்டாருயா கவர்னரு!!!), எல்லாருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.


--திருமுருகன் --

அன்னையருக்கு வாழ்த்துகள்


"செல்வத்துள் செல்வம் மக்கட்செல்வம்"
அச்செல்வத்தினை அடையப் பெற்ற, பிறவிப் பலன் எய்திய
அன்னையருக்கும், வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருக்கும் தெய்வத்திற்கு ஒப்பான அன்னையருக்கும், மனைவியாக இருந்து ஒரு தாயாகவும் மாறி கணவனைப் பார்த்துக்கொள்ளும் அன்னையருக்கும், மாமியாரானாலும் ஒரு தாயாகவே மருமகளுக்கு/மருமகனுக்கு இருக்கும் அன்னையருக்கும், இன்னும் அக்காவாக, அண்ணியாக, தங்கையாக, மகளாக உறவு ஏற்றிருந்தாலும் தாய்க்கு ஒப்பாக அன்பு செய்யும் அனைத்து தாயுள்ளங்களுக்கும் என்னுடைய "அன்னையர் தின வாழ்த்துகள்!"


அன்பு செய்வீர்! என்றும்! எப்போதும்! எங்கும்! எல்லோரிடமும்! அன்பு செய்வீர்!

'நல்வாழ்வு தந்தாயே நீயே!' -அன்னையர் தின வாழ்த்துக்கள்!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”முத்துச்சரம்” ராமலஷ்மி தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி ராமலஷ்மி! ”'நல்வாழ்வு தந்தாயே நீயே!' -அன்னையர் தின வாழ்த்துக்கள்! என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு:-

முந்தைய தலைமுறையின் வழி காட்டுதலுடனும் ஆசிகளுடனும் அடுத்த தலைமுறையை உருவாக்கி வரும் அன்னையரா நீங்கள்? நன்று. நல்ல அம்மாக்களாய் நாம் இன்று மிளிரக் காரணமாயிருக்கும் நம் அம்மாக்களைப் போற்றி வாழ்த்துவதோடு இந்த அன்னையர் தினம் முடிந்து விடாதிருக்க, சிந்தனைக்கு வித்திடும் சில விஷயங்களை முன் வைக்க விரும்புகிறேன்.

'போகிற இடத்தில் பெண் குழந்தைகள் பக்குவமாய் நடந்து கொள்ள வேண்டுமே'யெனப் பார்த்துப் பார்த்து எல்லா வேலைகளும் பழக்கி வளர்க்கும் அம்மாக்களும் உண்டு. 'படிக்கிற குழந்தை நம் வீட்டிலிருக்கும் வரை இஷ்டம் போலிருக்கட்டுமே' என நினைத்து, தானே எல்லாம் இழுத்துப் போட்டு செய்யும் அம்மாக்களும் உண்டு. கனிவை அணையாக் கனலாய் மனதினுள் மறைத்து வைத்துக் கொண்டு கண்டிப்பாகவே இருக்கும் அம்மாக்களின் மத்தியில் கல்லூரிப் பருவத்திலும் செல்லம் கொஞ்சிக் கொஞ்சி வாயில் சாப்பாட்டைத் திணித்து அனுப்பி வைக்கும் அம்மாக்களும் உண்டு.

நாம் எப்படி வளர்க்கப் பட்டிருந்தாலும் அப்போதெல்லாம் தெரியாத அம்மாவின் அருமை, புகுந்த வீட்டிற்கு போனதும் கூட அவ்வளவாக உறைக்காத பெருமை நாமும் ஒரு தாயாகும் வேளையில் எப்படிப் புரிந்து போகிறது? குழந்தை வளரும் ஒவ்வொரு தருணத்திலும் சரி, குழந்தைக்காக இன்பச் சிரமங்களை எதிர் கொள்ளும் பொழுதுகளிலும் சரி, தத்தமது அம்மாக்களை நினைக்காதவரே இருக்க முடியாது. ‘ஓரிரு குழந்தைகளை வளர்ப்பதற்கே இப்படி. நீ எப்படி அம்மா எங்கள் அத்தனை பேரினை அப்படிப் பார்த்துக் கொண்டாய்?’ கேட்காதவர் இருக்க முடியாது.

அப்படியெல்லாம் நம்மை வளர்த்த அம்மா அப்பாவுக்கும், இன்னொரு பெற்றோராய் மதிக்கப்பட வேண்டிய மாமியார் மாமனாருக்கும் நாம்(மகள் மகன் இருவரும்தான்) செய்ய வேண்டியது என்ன? அவர்கள் 'க்ரேட்' எனப் புரிந்து கொள்ளுதல் மட்டுமேயா? அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை, செலுத்த வேண்டிய நன்றி என்றெல்லாம் சொன்னால் அவை உறவுகளுக்குள் அர்த்தமற்றவையாக, ஏன் அதிகபட்ச வார்த்தைகளாகவும் கூடத் தோன்றிடக் கூடும். ஆகையால் பாசத்துடன் உள்ளன்புடன், அவர்களே கூட பிரச்சனையாய் கருதாத சில விஷயங்களை நாம் இன்னொரு கோணத்திலிருந்து யோசித்துப் பார்க்கலாமே.

நமக்கு பிரசவம் பார்க்க எந்த வயதிலும் எந்த உடல் நிலையிலும் ஓடி வந்து உடனிருந்து உதவுகின்ற அம்மாக்கள், வேறெந்த இக்கட்டாயினும் கேட்காமலே கைகொடுக்கும் அம்மாக்கள் எல்லா சமயங்களிலும் அப்படி இருந்தேயாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளை விட வேண்டும். அவர்கள் பெற்றோராய் நமக்கு ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்த பின்னரும், இருக்கும் கடைசி காலம் வரை நமக்காகவே வாழ வேண்டும். நம்மைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கைப் பின்னப் பட்டிருக்க வேண்டும் என்கிற எண்ணங்களைத் தவிர்த்திட வேண்டும். அவர்களுக்கென்றிருக்கக் கூடிய சில ஆசைகள் ஆர்வங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிம்மதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும்.

'இரண்டு வாரம் நான் கான்ஃப்ரன்ஸுக்கு வெளிநாடு போகிறேனம்மா வந்து குழந்தைகள்கூட இரேன்' என்கிற நாம் திரும்பி வந்த பின் அவர்களை உட்கார வைத்துக் கவனிப்போம். அம்மா கையால் செய்து சாப்பிட ஆசைப்படுவதில் தவறில்லைதான். ஆனால் அவர்க்ளுக்கு பிடித்ததை நம் கையால் செய்து கொடுத்துப் பார்த்துக் கொண்டால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி பன்மடங்காகுமில்லையா? சிறுவயதில் எத்தனை சுற்றுலாவுக்கு நம்மை அழைத்துச் சென்றிருப்பார்கள்? அவர்கள் பார்க்காத இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி வருவோம். நேரமின்மையாலோ ‘இனி எதற்கு’ என்ற எண்ணத்தாலோ விட்டு விடும் சின்னச் சின்னத் தேவைகளையும் கூட நாம் கவனமாய்க் கண்டு பிடித்துப் பூர்த்தி செய்வோம்.

இந்த தலைமுறையில் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் அதிகம்தான். வீட்டில் நமது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் முழுப் பொறுப்பையும் ஒரு போதும் நம் பெற்றோர்களிடம் தருவது சரியாகாது. தவிர்க்க முடியாத அப்படிப்பட்ட சூழல்களில் எல்லா வேலைகளுக்கும் உதவிக்கு ஆட்கள் வைத்துக் கொடுப்பது மிகவும் அவசியம் (ஓரிரு குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த மாதிரியும் ஆயிற்று). பெரியவர்கள் மேற்பார்வை மட்டுமே செய்கிற மாதிரியாக இருக்க வேண்டும். அதே போல ஓய்வு பெற்ற அப்பாக்களில் சிலர் வெளி வேலைகளை விரும்பி ஏற்றுச் செய்வார்கள். அவர்களாக விருப்பட்டாலன்றி நாமாக 'வீட்டில்தானே இருக்கிறார்கள்' என எந்த வேலையையும் அவர்கள் மேல் திணிப்பது சரியல்ல. அவர்கள் வயதினை எப்போதும் கருத்தினில் கொள்ள வேண்டும்.

சரி அதே வயதினைக் காரணம் காட்டி பெற்றோரை வீட்டோடு வைத்துக் கொள்ள நினைப்பதும் சரியல்ல. கோவிலுக்கோ உறவினர் நண்பர் வீடுகளுக்கோ பொது இடங்களுக்கோ அடிக்கடி சென்று வர பிரியப் படலாம். குறிப்பாக விசேஷ வீடுகள் சென்றால் பலநாள் பார்க்காதவரை எல்லாம் பார்க்கலாம் எனும் அதீத ஆர்வம் இருக்கும். ‘இந்த தள்ளாத வயதில் பேசாமல் வீட்டோடு இருங்களேன்’ என்றிடாமல் முடிந்தால் நாமே அழைத்துச் செல்லலாம் அல்லது தக்க வசதி செய்து கொடுத்து அனுப்பி வைக்கலாம். அந்த மாதிரியான சந்திப்புகள் அவர்கள் உள்ளத்தை எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக வைக்கிறது என்பது யோசித்துப் பார்த்தால்தான் புரியும்.

அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவே இருக்கிறார்கள் தன்னலமற்ற பாசத்தைப் பொழிந்து கொண்டு. அதை நாம் பயன்படுத்திக் கொள்கிற மாதிரி எந்த சமயத்திலும் நடந்திடக் கூடாது. நாமும் ஆகி விட்டோம் பெற்றோராய். நமது தன்னலமற்ற பாசம் நம் குழந்தைகளை நோக்கி மட்டுமேயன்றி நம்மை ஆளாக்கியவர்கள் மேலும் இருக்கட்டும். நாங்கள் எவரும் அப்படியல்ல என்றால் அதைவிட சந்தோஷம் வேறில்லை. ஆனால் இதிலிருக்கும் ஏதேனும் ஒரு குறிப்பாவது எவருக்கேனும் தேவைப்படுவதாய் இருக்கலாமென்ற எண்ணத்திலேதான் இங்கு பதிந்திருக்கிறேன்.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Saturday, May 9, 2009

அன்னையர் தினத்துக்காக - ”நிலாக்காலம்” கோமதி!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”நிலாக்காலம்” கோமதி தனது படைப்பைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி கோமதி! ”'அன்பென்றாலே அம்மா!' - என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு:-


பொதுவாவே மாதா, பிதா, குரு, தெய்வம்னு தான் சொல்லுவாங்க
கடவுளையும் விட உசந்த ஸ்தானத்துல இருக்கிறது அம்மா தான். ஒரு தாயை விட சிறந்த உறவு வேற எதுவும் இல்லைனே சொல்லலாம். எல்லாருமே அம்மாவோட சிறப்பை பத்தி நிறைய எழுதிட்டாங்க ஆனால் என்னை பத்து மாதம் சுமந்து பெற்று எடுத்த அம்மாவை காட்டிலும் எங்க கூடவே இருந்து என்னை குளிப்பாட்டி, உணவூட்டி, பள்ளிக்கு தயார் செய்து, கதை சொல்லி, சுவாமி சுலோகன் சொல்லி கொடுத்து, பாட்டு பாடி தூங்க வச்சுனு என்னை வளர்த்த எங்க பாட்டியை நான் எங்க அம்மாவுக்கும் சமமா தான் மதிக்கிறேன்.


எங்க பாட்டி மத்த பாட்டிகளை விட ரொம்பவே வித்தியாசமானவங்க தன்னோட என்பது வயசுலயும் சுறுசுறுப்பா இருப்பாங்க தினமும் பேப்பர் படிப்பாங்க (uptodateaa இருப்பாங்க internet பற்றி கூட தெரியும்) தன்னோட வேலைகளை தானே செஞ்சுப்பாங்க. இப்படி பாட்டி பற்றி நிறைய சொல்லலாம். முக்கியமா என்னவருக்கும் எனக்குமான காதல் திருமணத்திற்கு முதன்முதலில் பச்சைக் கொடி காட்டினது என் பாட்டி தான். பாட்டிக்கு நிறைய படிக்கணும்னு ஆசை அந்தக் காலத்துலயே Double Double Promotion வாங்குனேன்னு சொல்லும் அதுவும் எப்படின்னா மூணாம் க்ளாஸ்லேருந்து அஞ்சாம் க்ளாஸ் அப்புறம் அஞ்சாம் க்ளாஸ்லேருந்து ஏழாம் க்ளாஸாம் இது எப்படி சாத்தியம்னு எனக்குத் தெரியலை. நாங்கள்ளாம் சும்மா கதை விடாத பாட்டினு சொல்லி வெறுப்பேத்துவோம். பாட்டிக்கு தமிழ் இலக்கியத்து மேல ஆர்வம் அதிகம் என்னோட ஆறாம் க்ளாஸ்ல ஆரம்பிச்சு நான் காலேஜ் படிக்குற வரைக்கும் உள்ள எல்லா தமிழ் புத்தகஙகளையும் படிச்சுடும். இதுல கொடுமை என்னன்னா படிச்சுட்டு கேள்வி வேற கேட்க ஆரம்பிச்சுடும் எனக்கும் பாட்டிக்கிட்ட தமிழ் படிச்சு ஒப்பிக்குறதுனா ரொம்ப பிடிக்கும்.

அடடா தாய்மையைப் பற்றி எழுதச் சொன்னா நான் என் பாட்டியைப் பற்றி ரொம்ப எழுதி அறுக்க ஆரம்பிச்சுட்டேன் போல. பாட்டி பற்றி எழுத ஆரம்பிச்சா எழுதிட்டே இருக்கலாம். சரி அதை விடுங்க நான் எதுக்கு இந்தத் தாய்மை தலைப்புல பாட்டியை பற்றி சொல்ல வந்தேன்னா என்னை பொருத்த வரை தாய்மை என்கிற உணர்வு இருக்குற எல்லாருமே தாய் தான்.

ஓரு பக்கம் நிறைய பெண்கள் குடும்பச் சூழ்நிலையால தான் பெற்ற குழந்தையை குப்பை தொட்டியிலும் அனாதை இல்லங்களிலும் கொண்டு போய் விடுறாங்க. இன்னொரு பக்கம் குழந்தை இப்போ வேண்டாம் அப்போ வேண்டாம்னு கருவிலேயே அழிக்குற பெண்களும் இருக்காங்க. அவங்களெல்லாம் தாய்மைங்றது ஒரு அற்புதமான விஷயம்ங்றதை புரிஞ்சுக்கனும். அது ஒரு வரம் அதுக்காக ஏங்கி காத்துக்கிட்டு இருக்கிற பெண்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க. அதுனால நம் குழந்தைகளை அனாதைகளாக்கி, கருவிலேயே அழிக்கும் கொடுமையை இனிமேலாவது செய்யாமல் இருப்போம். அதே போல குழந்தை இல்லாதவங்களும் குழந்தை இல்லையேன்னு நினைச்சுக்கிட்டு காலத்தை வீணாக்காமல் அனாதை இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வு கொடுப்போம்.

என் திருமண்த்திற்கு பிறகு எங்க பாட்டி கொள்ளு பேரன், பேத்தியை பார்க்கணும்னு வேண்டாத சாமி இல்லை ஆனால் கடைசி வரை அவங்களால பார்க்க முடியலையெங்கிற வருத்தம் எனக்கு இருந்தாலும் என் பாட்டி இறந்த அதே மாதத்தில் (சில தினங்களிலேயே) தான் நான் கருவுற்றிருக்கிறேன் என்பது தெரிந்ததும் தன்னுயிர் கொடுத்து எனக்கு தாய்மையை கொடுத்த என் பாட்டி எனக்கு எப்பவுமே ஒரு தாய் தான்.

தாய்மையைப் போற்றுவோம். அன்னையர் தின வாழ்த்துகள்.

வாய்ப்புக் கொடுத்த முல்லைக்கும் என்னை எழுதத் தூண்டிய கவிதாவிற்கும் எனது நன்றி.

(இந்த அன்னையர் தின நன்னாளில், எனக்கு தாய்மையை கொடுத்த என் பாட்டி அம்பிகாவிற்கு இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.)

பிரசவ காலம் மற்றும் பயனுள்ள தகவல்கள்

நல்ல பயனுள்ள பதிவு ஆகாயநதி! உபயோகமான குறிப்புகள், மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி, சொன்னவேகத்தில் பதிவிட்டதற்கு! :-) மேலும் சில குறிப்புகள் :

1. due date சொல்லியிருக்கும் நாளிலிருந்து +/-15 நாட்கள் எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம். எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், மனதளவிலும்! எ.கா (20ஆம் தேதி எனில், 15 நாட்களுக்கு முன்பும் பிறக்க சாத்தியங்களுண்டு ) ஆகாயநதி சொன்னதுபோல் உடலில் எங்கிருந்து வேண்டுமானாலும் வலி தொடங்கலாம். சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வந்தாலோ, உள்ளாடையில் ஈரமாக உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவமனையை
அணுகுவது நலம். பனிக்குடம் உடைவதாகக் கூட இருக்கலாம். (suspect..suspect..suspect!)

2. உங்கள் மகப்பேறு மருத்துவரின் தொலைப்பேசி-யை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவரிடமும்,இரவில் வலி வந்தால் அவருக்குத் தெரியப்படுத்துவது பற்றி, மருத்துவமனை procedures பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். (எ.க-ஆக, நான் கன்சல்ட் செய்த மருத்துவர் கிளினிக்கில் கன்சல்ட் செய்வார். பேஷண்டுகளுக்கு இசபெல் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பார்)

3. நாட்கள் நெருங்க நெருங்க மனதில் பயம் வரும். அது இயல்புதான். ஆனால் நம்பிக்கையோடு இருகக் வேண்டும். மருத்துவரை முழுவதுமாக நம்ப வேண்டும். துணைக்கு ஒருவர் எப்போதும் கூட இருப்பது நல்லது. குழந்தையின் அசைவுகளை கவனிக்க வேண்டும். நீண்ட நேரம் அசைவுகள் இல்லாமலிருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளுதல் நலம்.

4. தொப்புள் கொடியை சேகரிக்க திட்டமிட்டிருந்தால், அவர்களை தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகளை செய்தல் வேண்டும். (life cell)

5. ஒரு பையை தயாராக வைத்திருத்தல் நலம். சுத்தமான துண்டு, குழந்தை நாப்கின்கள் ஒரு பேக், ஒரு சோப், காட்டன் ரோல், நர்ஸிங் நைட்டி. நர்சிங் உள்ளாடைகள், உங்களுக்குத் தனியாக துண்டு, டெட்டால் ஒரு பாட்டில், பிளாஸ்க்/தம்ளர். மொபைல் சார்ஜர், டார்ச் லைட்/மெழுகுவர்த்தி,தீப்பெட்டி, பாத்ரூம் செருப்பு. படிக்க ஏதாவதொரு புத்தகம்/parenting book.

6. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் பிரசவத்திற்குச் செல்வதாயிருந்தால் எல்லா prescriptions, ஸ்கேன் ரெக்கார்ட் களை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். என்ன மருந்துகள் உட்கொண்டது, தற்போது என்ன உட்கொள்கிறீர்கள், செய்த சோதனைகள் என்று எலலவற்றையும் ஒரு பைலில் வைத்துக் கொள்ளுங்கள். ஹார்மோன் பிரச்சினைகள் இருந்தால் தயவு செய்து மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள்!

7. சில மருத்துவமனைகளில், முன்னேற்பாடாக பதிவு செய்வது வழக்கமாக இருக்கலாம், ஏசி அறைகள் தேவைப்படும் பட்சத்தில்! (சென்னை இசபெல் மருத்துவமனையில் செய்ய வேண்டியிருந்தது)மேலும், மருத்துவக் காப்பீடுகள் இருந்தால், செல்லும் மருத்துவமனை அதில் வருகிறதாவென பார்த்துக்கொள்ளுதல் நலம். அப்படி இல்லாத நேரத்தில், அதற்கான ஏற்பாடுகளை அவர்களது கஸ்டமர் கேரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வது நல்லது.

Happy Motherhood!

பிரசவ காலம் மற்றும் பயனுள்ள தகவல்கள்

பொதுவாகவே நிறை மாத கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்குப் பல தேவையற்ற பயம், மற்றும் இனம் தெரியாத ஒரு பீதி இருக்கும். பிரசவ வலி எப்படி வரும், என்ன செய்ய வேண்டும், நேரம் நெருங்கியதை எப்படி உணர்வது இது போன்ற பல சந்தேகங்களும் குழந்தை பற்றிய பல்வேறு எண்ணங்களும் இருக்கும்.இவற்றை நான் அறிந்தவரை தெளிவு படுத்தவே இந்த பதிவு!

கர்ப்பகாலங்கள் பற்றி அறிய என்னுடைய "கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள்" என்னும் தொடர் பதிவைப் படிக்கலாம். இப்போது பிரசவ காலம் பற்றி அறிவோம்.


பிரசவ வலி:

பொதுவான கர்ப்பத்தின் 9வது மாத துவக்கத்தில் இருந்து பிரசவ விலி ஏற்படலாம்.
நீங்க பிரசவ வலி பற்றி அவசியம் தெரிஞ்சிக்கனும். அதுக்கு பயப்படவே தேவை இல்லை.

உங்க செல்லத்தப் பாக்கப் போற அந்த நேரம், கடவுளுடைய படைப்ப இந்த உலகத்துக்குக் கொண்டு வரப் போற அந்த நேரம் நீங்களும் புதுசாப் பிறக்கப் போற அந்த நேரம், பிஞ்சுக் கால் கைகள தொடப்போற அந்த நேரம், உங்கத் திருமணப் பரிசா ஒரு உன்னதப் பூங்கொத்த உங்களவருக்குக் கொடுக்கப் போற அந்த நேரம், உங்க அம்மாவ தெய்வமா நீங்க உணரப் போற அந்த நேரம், ஒரு புனிதமான நேரம்!!! வாழ்க்கைல அதிக அளவு மகிழ்ச்சியான நேரம்!!!உங்கப் பிறப்போட அர்த்தம் உங்களுக்கு புரியிற நேரம்!!!!
அதுக்காக காத்திருக்க ஆரம்பிங்க. அது உங்களுக்கு மட்டும் வலி இல்லை. குட்டி பாப்பாக்கும் வெளிய வரும் போது வலிக்கும்ல. நீங்க இப்போ தைரியமா இருந்தா தான் பாப்பாவும் தைரியமா இருக்கும்.

இந்த சமயங்களில் பொதுவாக பெரும்பாலானோருக்கு இடுப்புப் பகுதிகளில் வலி துவங்கும்; அதிகமா மூச்சிறைக்கும். உடலில் சில மாற்றங்கள் தெரியும். கால்கள் கூட வலிக்க ஆரம்பிக்கும். கடைசியா தான் பிரசவ வலி உச்சத்திற்கு வரும். அது பல விதமா வரலாம். இடுப்பு, வயிறு முழுதும், அடி வயிறு,இடுப்போடிணைந்து கால்கள்,நடு வயிறு, முதுகு என்று வலி எங்கு வேண்டுமானாலும் வரும்.

இந்த வலி சிலருக்கு பிரசவ நேரத்தில் மட்டும் வரும். அதைக் கண்டறிய கீழ்காணும் சோதனைகளை செய்யுங்கள்:

1. நன்கு வசதியாக இரண்டு மூன்று தலையணைகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அடி வயிற்றில் விளக்கெண்ணெய் தேய்த்து, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்த நீர் அருந்த வேண்டும்.

3. இப்போது உங்கள் சுவாசம் சீராக இருக்கும் படி சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும்.
அது பற்றி அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

4.உங்கள் குழந்தையின் அசைவையும்ம் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும்

இப்போது நீங்கள் கண்டறிய வேண்டியது:

உங்களிடம் ஏதேனும் நீர் போக்கு விடாமல் தொடர்ந்து உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதாவது பனிக்குடம் உடைதல். அப்போது சிறுநீர் போல நீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கும். பனிக்குட நீர் தான் குழந்தை சுவாசிக்க, நீந்த, உங்களுக்குள் உயிர் வாழ தேவையான ஆதாரம். அது வெளியேறத் துவங்கினால் உடனடியாக சிறிதும் தாமதிக்காமல் ஆம்புலன்சிலோ(அ) காரிலோ மருத்துவமனைக்கு செல்லுங்கள். தயவு செய்து ஆட்டோ வேண்டாம்.

பிரசவ வலியின் போது பனிக்குடம் உடைந்து நீர் வெளியேற ஆரம்பிக்கும். அதனுடன் "ஷோ" என்னும் திரவமும் வெளியேறும் .அப்படி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்.அப்புறமென்ன "குவா..குவா" தான் :)


சீரக நீர் அருந்தியும் வலி குறையாமல் கூடிக்கொண்டே இருக்கிறதா என அறிய வேண்டும்.
நீர் போக்கு, உதிர போக்கு இல்லாமலும் ஆனால் வலி மட்டும் தாங்க முடியாத அளவிற்கு கூடிக் கொண்டிருந்தாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

வலி குறையவும் இல்லை கூடவும் இல்லை, மேற்கண்ட அறிகுறிகளும் இல்லை; ஆனால் வலிக்கிறது என்றால் நீங்கள் செய்ய வேண்டியது:

நீங்கள் நன்கு வசதியாக சாய்ந்து உட்கார்ந்து உங்கள் முழங்கால்களை நன்கு விரித்து குதிக்கால் சற்று தூக்கி வைத்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.

சீரான சுவாசத்துடன் கொஞ்சம் அடி வயிற்றில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது முக்குவது போல செய்து மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். வேறு எப்படியும் கைகள், கால் வைத்து எதுவும் செய்யாதீர்கள். இடுப்பினை எதுவும் செய்யாதீர்கள்.

இப்போது வலியின் தாக்கம் எப்படி உள்ளது? கூடியிருக்கிறதா என உணருங்கள்...

உங்கள் குழந்தை உள்ளே எப்படி அசைகிறது என உணருங்கள்... அது பக்கவாட்டு வயிற்றில் அல்லாமல் அதிகம் கீழ் வயிற்றில் அசைகிறதா?

குழந்தையின் உடல் உங்கள் அடி வயிற்றை அழுத்துகிறதா என உணர்ந்து பாருங்கள்!

இப்படியெல்லாம் இருந்தால் மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள்.


சிலருக்கு வலி பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பாகவே வர துவங்கிவிடும். வந்து வந்து குறையும்.
அப்போதெல்லாம் நீங்கள் அதற்காக உள்ள சில யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும்.
மேற்கண்ட சோதனைகளில் வலி குறைகிறது என்றால் நீங்கள் தற்போது மருத்துவரை அணுக வேண்டியதில்லை.

இந்த பிரசவம் சிலருக்கு இயற்கையாகவும் கிலருக்கு சிசேரியனாகவும் அமையும். இயற்கை என்றால் நல்லது. ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் மன நிலையை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு தினமும் தியானம், சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும். திடமான மன நிலையுடன் குழந்தைக்காக உங்கள் வலி எத்தகையதாக இருப்பினும் பொறுத்துக் கொள்ளும் மன நிலையை, மருதுவருடன் ஒத்துழைக்கும் மன நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தயவு செய்து இயற்கை பிரசவத்தின் போது மருத்துவர் மற்றும் செவிலியர்கள் செய்ய சொல்வதை செய்யுங்கள். அது முழுக்க முழுக்க உங்கள் செயலே... பிரசவம் பார்ப்பதும், பிரசவிப்பதும் நீங்கள் தான்! வலிக்கிறதே என்று சிறிது உங்களை ஆசுவாசப் படுத்தினாலும் அது குழந்தைக்கு ஆபத்து. மருத்துவர் கூறும் போது சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ளுங்கள், நீங்களாக செய்யக் கூடாது.

உங்களைப் போல் தான் உங்கள் குழந்தைக்கும் வலிக்கும். வெளியில் இருந்து அனுபவிக்கும் உங்களுக்கே அப்படி வலி என்றால் உள்ளிருந்த்து உடலை நசுக்கி வெளியேறும் குழந்தைக்கு எப்படி வலிக்கும். அதனால் உங்கள் பிஞ்சுக் குழந்தையை மனதில் கொண்டு அதிக நேரம் அதை வலியில் விடாமல் மருத்துவரோடு நன்கு ஒத்துழைத்து விரைவில் பிரசவத்தை முடிக்க பாருங்கள்.

சிசேரியன்:

அந்த அறுவை சிகிச்சையில் அந்த பிரசவ நேர வலி மட்டுமே இல்லை. அதற்காக பலர் விரும்பி சிசேரியன் செய்கின்றனர். அது தவறு. பொதுவாக கீழே உள்ளக் காரணங்களுக்காக மட்டுமே சிசேரியன் செய்ய வேண்டும்.


சிசேரியனுக்கான காரணங்கள்:

* சிலருக்கு வலி குறிப்பிட்டக் காலக் கெடுவுக்குள் வராமலிருக்கும்

* நீர் அளவு குறைந்தோ அல்லது அதிகமாவோ இருக்கலாம்

* குழந்தை தலை பெரியதாவோ (அ) தலை மேலே கால் கீழே இருக்கலாம்

* தாய் (அ) சேய்க்கு அடிபட்டாலும்

* குழந்தையின் கழுத்து/வயிற்றுப் பகுதிகளை பிளாசென்டா இருக்கமாக(மட்டுமே)
சுற்றியிருந்தால்

* பாப்பா எடை அதிகமாக இருந்தால்

* எனக்கு வந்தது போல புதுமையாக சிக்கலான இடத்தில் வலி வந்தாலும் சிசேரியன்

அறுவை சிகிச்சை செய்யனும். மருத்துவர் அறுவைசிகிச்சைனு சொன்னா கணவர் உடனே மனைவியின் உயிரைக்காக்க, குழ்ந்தைக்காக சரினு சொல்லாம அதுக்கான சரியான காரணத்தைக் கேட்டறிந்த பின்பே அனுமதி மற்றும் பொறுப்புக் கையேழுத்து இட வேண்டும்.

சிசேரியனுக்கும் நீங்கள் உங்கள் மனதை தாயார் படுத்திகொள்ள வேண்டும்.

பொதுவாக பயம் என்பது அறவே தவிர்க்க வேண்டியது பிரசவத்தில்! :)

சிசேரியன் பற்றியும், என்ன நடக்கிறது ஆபரேஷன் போது என்றும் அறிய நீங்கள் என்னுடைய

"ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்)"

"ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(ஆபரேஷன் தியேட்டரில்)"

"ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்"

ஆகிய மூன்று பதிவுகளையும் காணலாம்.




இந்தப் பதிவினையும், படத்தினையும் பிரசவ நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்
வீணா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவருக்காகவும், என் தோழி அபிக்காகவும் மற்றும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கவும் சமர்ப்பிக்கின்றேன்! :)

உங்கள் தாய்மைக்கு என்னுடைய வாழ்த்துகள்!

நல்ல முறையில் உங்கள் பிரசவம் அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!

அம்மா... உன்னை வணங்குகிறேன்!



அம்மா உனக்காக உன் மகளாக நான் என்ன செய்யப் போகிறேன்?

நீ என்னை எந்த நிலையில் பெற்று வளர்த்தாய் என தெரியும்... அது உடல் ரீதியாக உனக்கு எத்துணை சிரமமானதானாலும் அது பாராமல் என்னை ஆளாக்கினாய்!

முதன் முதலில் நீ எப்போது என்னை பள்ளிக்கு அழைத்து சென்றாய் என் நினைவில்லை... ஆனால் நீ பள்ளிக்கு உணவு எடுத்து வருவாய் நான் சூடாக உண்ண வேண்டுமென!

ஒவ்வொரு வருடமும் நான் வகுப்பில் முதன்மை பெற்றதால் வருடந்தோறும் பரிசு பெற்றிருக்கிறேன்! ஆனால் மகிழ்ச்சி உன்னில் கண்டேன்! நீ பெற்ற பரிசைப் போல எல்லோரிடமும் சொல்லிப் பெருமைப் படுவாயே!

முதன் முதலில் இனி எனக்கும் புடவை வாங்க வேண்டும் என அப்பாவிடம் நீ கூறி அதுவும் ஒரு பட்டுப் புடவையாக வாங்கினாய்... உன் மகள் அணியும் முதல் புடவை பட்டாக இருக்க வேண்டுமென!

நான் முதன் முதலில் புடவை அணிந்து வெளியே சென்ற போது பயம் கலந்த பெருமிதத்தை உன்னில் கண்டேன்!

அப்பா தான் எனக்கு முதலில் பிடிக்கும் என எத்துணை முறை கூறியிருப்பேன்? ஆனால் முதன் முதலில் உன்னை நம் வீட்டைப் பிரிந்து விடுதிக்கு செல்கையில் விட்டேனே கண்ணீர்... அதில் நீ இருக்கக் கண்டேனம்மா!

தொட்டதற்கெல்லாம் உன்னை கடவுளிடம் வேண்ட சொல்லி கூறுவேனே... நீயும் எப்போதும் எனக்கான வேண்டுதல்களுடன் இருப்பாய்!

மணமுடிக்க நிச்சயித்த போதிருந்தே பம்பரம் போல் சுழன்றாயே! உன் உடல் நிலை மேலும் மோசமானாலும் மனம் தளராது எப்படியெல்லாம் உழைத்தாய் திருமண வேலைகளுக்காக!
திருமணத்தன்று பாதபூஜை செய்கையில் உன் காலின் பருத்த வீக்கம் கண்டு அதிர்ந்தே போனேன்!

மாங்கல்யம் ஏற்கும் அந்த நொடியில் கூட சந்தோஷம் ஒரு புறம், இப்படியெல்லாம் எனக்காக உழைத்த உன்னைவிட்டு பிரிந்துசெல்கிறேனே என்ற துயரம் ஒரு புறம் என கண்ணீர் சிந்தினேனே!

இரு சிசேரியன் கண்ட நீ... உடல் வலுவே இல்லாத போதும் எங்களைப் பெற்றாய்! ஆனால் இன்று எனக்கு சிசேரியன் என்றதும் தேம்பி தேம்பி அழுதாயே! ஏனம்மா?

உன்னை விட தெம்பான நான் நீ கண்ட வலியைக் காண மாட்டேனா? ஆனால் உன் தாயன்பு.. என் வலி பொறுக்காமல் புலம்பியதே!

உன் விடாத முதுகு வலியிலும் என்னைத் தூக்கிப் பணிவிடை செய்தாயே நான் கால் பிரச்சனையில் சுருண்ட போது!

இன்றும் கூட உன் முதுகு வலியையும் பாராது என் மகனையும் சுமக்கிறாயே! சுமந்து நடந்து சோறூட்டுகிறாயே! நீ வாழ்க!

உன் பேரனுடன் கொஞ்சுகையில் என் குழந்தையாய் நீ!

உன்னுடன் சண்டையிடுகையில் உன் தோழியாய் நான்!

அம்மா நான் உன்னை எவ்வளவு திட்டியிருப்பேன்? அது உன் மீதுள்ள அதீத உரிமையினால்... ஆழ்ந்த அன்பினால்!ஆனால் சத்தியமாய் சொல்கிறேன்... உன்னை யாரும் ஒரு வார்த்தை பேசினாலும் எனக்கு பொறுக்காது!

எனக்கு எத்துணை கதைகள் சொல்லியிருக்கிறாய்! அந்த அளவுக்கதைகளை எந்தத் தாயும் இதுவரை கூறியிருக்கமாட்டாள்!

நீ பாடும் குழந்தை பாடல்கள் யாவும் இன்னும் என் காதில் ஒலிக்கிறது!

"கை வீசம்மா கை வீசு" எனக்கு பலூன் சட்டை போட்டுவிட்டு பாடினாய்!

உனக்கான கனவுகளை எங்களோடு இணைத்துவிட்டு... எங்கள் வாழ்வில் உன் கனவினைக் காண்கிறாய்!

நீ தாயாகிய தெய்வம்... உடல் நிலை தளர்ந்த நீ விரைவில் ஊட்டம் பெற இறைவனை வேண்டுகிறேன்!

இந்த அன்னையர் தினத்திற்கு உன்னை வாழ்த்த வயதில்லை ஆதலின் வணங்குகிறேன்!

உனக்காக வேண்டுதல்களுடன் எப்போதும் நான்!

உனக்காக மட்டுமன்றி உலகில் அன்னையாய் பிறந்த அனைவருக்காகவுமே வேண்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! தாய்மைக்குத் தலை வணங்குகிறேன்!

Friday, May 8, 2009

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மாபோல் வருமா?

உலகில் எத்தனை உறவுகள் கிடைத்தாலும் நிச்சயமாக ஒரு அம்மாவிற்கு ஈடு கொடுக்க என்னைப் பொறுத்தவரை யாராலும் முடியாது.நம்மை பெற்றது முதல் வளர்த்ததுவரை அவர் பட்ட துயர்கள் நாமறியோம்!இது எனக்கு நன்றாகவே பொருந்தும்!!
என் அம்மாவின் அருமையை முதன் முதலில் கொஞ்சமாய் அறிந்தது நான் விடுதியில் தங்கி இருந்த சமயம்.என்னால் அப்போதெல்லாம் என் அம்மா இல்லாமல் இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.ஆனாலும் சில நாட்கள் அம்மாவைப் பிரிந்தே கழிந்தது.அதுவே என் முதல் அனுபவம்.

என் அம்மாவின் அருமையை நான் இரண்டாவதாக அறிந்தது என் கர்ப்ப காலத்தில்.
எப்படித்தான் என்னையும் சுமந்து கொண்டு என் அண்ணனையும் வளர்த்துக் கொண்டு வீட்டிலும் வேலை செய்கிறாரோ என்று...அப்போதெல்லாம் வீட்டு வேலையை சாதரணமாக சொல்லிவிட முடியாது.அடுப்பு,உரல்,அம்மி......etc.நான்

மூன்றாவதாக என் அம்மாவின் அருமையைகண்டது என் பிரசவத்தின் பின்னர்.எனது பிரசவ வலியின் போது கூட என் அம்மாவிடம் நான் கேட்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது....அம்மா நீயும் இப்படிதான் கஷ்டப் பட்டாயா என்று...
என் அம்மாவிடம் எனக்குக் கிடைத்த பதில் புன்னகை மட்டுமே!
என் பிரசவத்தின் பின்னர் நான் முதன் முதலில் பார்க்க நினைத்தது என் அம்மாவைதான்.அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு நான் விட்ட கண்ணீர் முதலில் என் அம்மாவின் அன்பிற்காக.அதை என்ன வார்த்தை கொண்டு எழுதுவதென்று எனக்கு தெரிய வில்லை!

இன்னும் எத்தனைதான் இருக்கிறதோ அம்மாவின் அருமையை அறிந்து கொள்ள?
அன்பென்றாலே அம்மா!
அருமை என்றாலும் அம்மாதான்!!

Thursday, May 7, 2009

Mother's Day - By Mrs.Golda David

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக Mrs.Golda David அக்கா இந்தப் பதிவை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார். மேத்யூ, அபிகேய்ல் என்று இரண்டு சுட்டிகள். அம்மா, மனைவி,சகோதரி, வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை என்று பல முகங்கள்! தன் குடும்பத்தோடு யூஎஸ்-ல் வசிக்கிறார். கோல்டா அக்கா, கல்லூரியில் எனக்கு சீனியர். அன்னையர் தின வாழ்த்துகள், அக்கா! அவரது பகிர்வு இதோ:

Last evening, I was checking Matthew’s home work and the topic he had learned in science was metamorphosis and he had illustrated some examples on a paper. Wow! Metamorphosis for Science! Great, not sure if we learned it in first grade. This morning while arranging his school bag I asked him “What is Metamorphosis? Give me an example”. He said Metamorphosis is a process of change, like and egg changes to a chick and a chick to a big chicken and a big chicken to a duck…. I was puzzled. He said “mommy for real” with his eyes wide open and in his innocence. We laughed and went off our way to start the day.

Our conversation was in my mind driving to work. I googled to learn more facts to have a good dinner table conversation and found this one about metamorphosis. How Metamorphic Rock Is Formed Metamorphic rocks are rocks that have "morphed" into another kind of rock. These rocks were once igneous or sedimentary rocks. How do sedimentary and igneous rocks change? The rocks are under tons and tons of pressure, which fosters heat, builds up, and this causes them to change. If you exam metamorphic rock samples closely, you'll discover how flattened some of the grains in the rock are.

Wow, very true. This Sunday is mother’s day. How many of us being girls thought that we would be morphed to a mom much different from our girl like nature. Well we even worried how to handle this. Well even our families are surprised when we brag about our kids and our mommy acheivements Isn’t it surprising to visualize our strength and power being a mom? Thanks be to God to have pooled us with the right person to make exceptional off springs who make excellent mommies.

As a kid I always went to bed early woke up early and did my own thing got ready didn’t had to worry if my sister or brother got ready, didn’t wait to ask them if they were ok or help them out, never waited for any one at the table. It was my way all the time and me first when it was to take turns. Selfish it sounds right. Sharing was beyond impossible. Most of you would have a same story.

What made me to preach sharing and taking turns and not be selfish and more forgiving? What made me to move many steps up to justify the mischievous actions of my kids as innocent? How many times have I bailed them out? How many times have I cleaned the mess and still willing to do it for my kids? How many sleepless nights have gone by with a smile? Oh wow! Patience does it sound like. Is it because I am a mom?

My friend came by one day and wanted to leave her kids with me for a while to catch up some sleep. Boy oh boy! Did I say I can watch while she slept peacefully? I did share her burden because I have been through that road once and know how tough it could be. I never did that once to my siblings. Why does being a mom makes u to step on others shoes quickly. I wasn’t when my sister got a big share of the chocolate. But what is wrong with me. I can give up even my whole share now. Kind hearted am I now. Is it the effect of being a mom.

Why do I cry when kids cry? Why do I run to catch a falling kid in the play ground? Why have my preferences changed. Something abnormal has happened to me during the 9 months of pregnancy. Well the baby juices have nourished me and flattened my rough edges by constantly pressuring me for the whole 9 months. Let us get back to my example. The rocks are under tons and tons of pressure, which fosters heat, builds up, and this causes them to change. If you exam metamorphic rock samples closely, you'll discover how flattened some of the grains in the rock are. During my pregnancy I had been totally changed to what I am now a metamorphic Girl = MOTHER. I had a tough labor almost 26 hrs but I was happy when daddy got to hold her first, then grandparents and all the others waiting to see her. Finally when she cried for food that’s when I got my turn to hold you and fill your tummy and coo you to sleep. They never experienced the joy until they saw you but I was there the whole time loving you by faith and disciplining myself by avoiding certain food which were my favorite choice and those bitter poison like medicine was downed into my throat for your sake. Hey you came into me and changed me inside out. How true it is! Wow miracle isn’t it for many of us.

Mothers are their children’s role model. Most children learn from their mother because Mother spends more time in the nest than fathers. Then you hear this “I am not your friend” “you are not a good mom” and such nonsense (our interpretation) but if it had happened with my siblings it would have been different. We let go off our sadness and still work with these little monsters that slowly wear us off but we still have cherish them. Ridiculous it may sound yet self less.

It is hard work to put things together in the right place having toddlers around but we arrange it for them and after a while let them do it under our supervision. Was it hard? Yes. Was it fruitful? Absolutely. Hey now my son can arrange his room makes his bed and he puts his dirty clothes inside the hamper. Wow!!. Well one day after an while in kitchen came to see the white chair cushion transformed to pink. Color only on paper not on walls and furniture. The marker went on a time out and you too for misusing it. Did they learn the actions and consequences. Every time out was a learning experience for becoming a better person. Did I inspire them to try and never give up. Did I remind practice makes perfect always to ensure nothing is impossible. Every single incident was a huge learning experience for all. Did it make me an intelligent and inspiring mom? It sure did.

So, Mothers day is a day of recognition by every human being for who they are it may have been rough and barren and lot less comfortable for many. Your beginning was the end of a girl who underwent metamorphosis. It would have not been taken well by many, some would not have guided. Motherhood is perfect gift if it was not passed on to you. please, make sure you pass on to your generations. This world will be a better place for you and for me and for our generations to come.

Wednesday, May 6, 2009

சம்மர் கேர் நம்ம குட்டீஸ்கு

இந்த கொளுத்தும் கோடை பெரியவர்களான நமக்கே தாங்க முடிவதில்லை :-(
பாவம் பிஞ்சுக் குழந்தைகள்! அவர்களின் சூடு பிரச்சனைகளை சொல்லவும் தெரியாமல், அவஸ்தையை பொறுக்கவும் முடியாமல் அழும் போது நமக்கும் வேதனை தானே? :( நீர் கடுப்பு, மலச் சிக்கல்(அ) வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, உடல் எரிச்சல் போன்றவை அதிக வெப்பத்தால் குழந்தைகளையும் தாக்கும். மேலும் இந்த விளையாட்டு அம்மை நோய் தடுப்பும் அவசியம்.

இன்று பொழிலனுக்கு தடுப்பூசி போடுவதற்கு சென்ற இடத்தில் ஒரு தாய் 15 நாள் குழந்தையை வெயிலில் வைத்து அழுகையை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். அதுவோ மிகவும் அழுகிறது... ஊசி வலி, வெயில் கொடுமை, பசி... எப்படி அழாமல் இருக்கும். அது என்ன கொஞ்சம் பெரிய குழந்தையா வெளியில் வந்தால் வேடிக்கை பார்க்க.. இதைப் பார்த்து தான் எனக்கு இந்த பதிவு எழுதத் தோன்றியது...

எனக்கு தெரிந்த வரையிலும், மருத்துவர் மற்றும் பெரியோர் கூற்றுப்படியும் சில சூடு தணிக்கும் வழிகளைக் கூறுகிறேன். என் குழந்தையைப் போல் பிற குழந்தைகளும் பயனடைய வேண்டியே இந்த பதிவு.

0-6 மாதக் குழந்தைக்கு:

இவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு; அதனால் பால் கொடுக்கும் தாய்மார்கள் கீழ்காணும் ஆகாரங்களை எடுத்துக் கொள்வது நல்லது. மற்றபடி தாய்ப்பாலை மதிய வேளையிலும் இரவு படுக்கும் போதும் குழந்தையின் தொப்புள், உச்சி தலை, உள்ளங்காலில் ஒரு சொட்டு வீதம் தடவிவிடுதல் சூட்டைத் தணிக்கும்.

தயவு செய்து சிக்கன் உண்பதைத் தவிர்க்கலாமே! :)

இளநீர்

மோர்

வெந்தய களி( கடும் கோடையில் கண்டிப்பாக இதனால் சளி பிடிக்காது)

சாத்துகுடி ஜூஸ்

மாதுளை ஜூஸ்

வெறும் வயிற்றில் வெந்தயம் முழுங்கலாம்


இவற்றில் தினம் ஏதேனும் ஒன்று எடுத்துக்கொண்டாலே போதும். மேலும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

6 மாதம் முதல் 1வயது வரை:

இளநீர் 100மிலி வரை கொடுக்கலாம்

சாத்துகுடி ஜூஸ் வெண்ணீரில் கலந்தது

ஆரஞ்சு ஜூஸ் வெண்ணீரில் கலந்தது

அதிகம் புளிக்காத மோர் வெண்ணீரில் கலந்தது

மோர் சாதம்

கொதிக்க வைத்து ஆர வைத்த தண்ணீர் அதிகம் குடிக்கவைக்க வேண்டும்

வெள்ளரி பழம் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்

இவர்களுக்கு அடி வயிறு தொப்புள் மற்றும் உள்ளங்காலுக்கு தாய்ப்பாலினை தடவி விடலாம்.

இப்படி செய்தாலே வெயிலினால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைத்து குட்டிகளின் உடலை குளிர்ச்சியாக பராமரிக்கலாம்.

வாரம் இரு முறை தலைக்கு ஊற்றலாம்...ஆனால் அதிகம் வெயில் மற்றும் வியர்வை இல்லாத சமயம் குளிப்பாட்டலாம்.

எனக்கு தெரிந்த அளவு உங்களோடு பகிர்ந்துவிட்டேன். இன்னும் ஏதாவது வழிகள் இருப்பின் பின்னூட்டத்தில் கூறி அனைவருக்கும் உதவுங்கள்!

கோடைமுகாம் @ வீடு!!

மேமாதமும் வந்துவிட்டது. கொளுத்தும் கோடை. குட்டீசை சம்மர் கேம்ப் அனுப்புவது சாத்தியப்படாத (கொண்டு போய் விடுவது, கூட்டி வருவது, தேவையான பொருட்களை வாங்கி தருவது அல்லது விதவிதமான பெயர்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை கொடுத்துச் சேர்ப்பது முதலான பல காரணங்கள்) பட்சத்தில் துறுதுறு கைகளை வீட்டிலேயே பிசியாக வைக்க ஒரு சில விளையாட்டுகள்/ஆக்டிவிட்டீஸ்:

1. சதுரங்கம்/சுடோகு கற்றுக் கொடுத்து பழக்கலாம்.
2. அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் - பிடித்த விளையாட்டு, பிடித்த கலர்கள், பறவைகள்,
தலைவர்கள், புத்தகங்கள் போன்றவை.
3. படங்கள் வரைதல்
4. போர்டு விளையாட்டுகள்(snakes & ladders மாதிரி)
5. தோட்டம் அமைத்தல் ( ஒரு கோடை விடுமுறையில் kitchen garden அமைத்தோம், வெண்டைக்காய், ஏதோ ஒரு வகைக் கீரை, தக்காளி பயிரிட்டோம்.)
6. ஆங்கில எழுத்துகளை அட்டைகளில் வெட்டி ஒட்டி சீட்டுக் கட்டு தயாரித்து, வார்த்தைகள் அமைத்து விளையாடுதல்.
7. Handicrafts/கொலாஜ் செய்தல்
8. பட்டம் விடுதல்
9. புதிதாக ஏதேனும் விளையாட்டை கண்டுபிடிக்கச் சொல்லலாம்.
10. செய்திதாள் படித்தபின்,முக்கிய செய்தியாக அவர்களுக்குத் தோன்றுவதை வெட்டி ஒரு நோட்டுப்புத்தகத்தில் ஒட்டச்சொல்லலாம். கூடவே அவர்களுக்குத் தோன்றும் குறிப்புகளையும் எழுதச் சொல்லலாம்.

விடுமுறை இனிதாக அமையட்டும்! வாழ்த்துகள்!

அன்னையர் தின வரலாறு

உலகமெங்கும் அன்னையர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அன்னையர் தின வரலாறு தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. கூகுளில் தேடியதில் எனக்குக் கிடைத்தத் தகவல்கள் அனைவருக்காகவும்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கிரேக்கர்கள் கடவுளின் அன்னையான ர்கியாவை அன்னையர் தினதில் போற்றினர். பின்னர் கிறிஸ்தவர்கள் அன்னை மரியின் பெருமையைப் போற்ற ஈஸ்தர் ஞாயிறுக்கு முன்னால் இருக்கும் மூன்றாம் ஞாயிற்றை அன்னையர் தினமாகக் கொண்டாடினர். பின்பு அது எல்லா அன்னைகளுக்குமாக மாறி மதரிங் சண்டே(Mothering Sunday) என்று அழைக்கப்பட்டது. பின்பு அமெரிக்காவில் குடிப்பெயர்ந்த ஆங்கிலேயர்களால் மதரிங் சண்டே கை விடப்பட்டது.

நாம் இப்பொழுது கொண்டாடும் அன்னையர் தினம் 1907யில் ஆனா ஜர்விஸ் (Anna M Jarvis) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் தன் அன்னையை கெளரவிக்க தேசிய அன்னையர் தினம் கொண்டாடினார். முதல் அன்னையர் தினத்தில் அவர் தன் தாயின் விருப்பமான மலர்களை அனைவருக்கும் வழங்கினார். அது தூய்மைக்கும், பொருமைக்கும், இனிமைக்கும் குறியாகும். அன்னத்து அன்னையர்களையும் கெளரவிக்கும் பொருட்டு, 1914லாம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி வில்ஷனால் மே மாத இரண்டாவது ஞாயிறு தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அன்னையர்கள் தினம் பிரபலம் அடைந்தது அடுத்து, பரிசு கொடுப்பது அதிகரிக்கப்பட்டது. அன்னையர் தினத்தின் தூய்மை இந்த வியாபாரமயமாக்கலால் கெட்டுவிட்டது என ஜர்விஸ் வருந்தினார். ஆயினும் அமெரிக்கர்களால் கொண்டாடப்பட்டு இன்று உலகமெங்கும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

நாம் எல்லா அன்னைகளுக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவிப்போம். பரிசு வழங்க விருப்பப்பட்டால், அன்னைக்குப் பிடித்தப் பொருளை நம் கையால் செய்து கொடுப்போம். இது ஜர்விஸின் வருத்தை சற்றுக் குறைக்கலாம்.

அன்னையர் தின வாழ்த்துகள்.

நன்றி :
http://en.wikipedia.org/wiki/Mother's_Day
http://www.dayformothers.com/mothers-day-history/

அக்கா என்றாலும் அம்மா

எனக்கும் என் அக்காவிற்கும் சரியாக 16 1/2 வருட இடைவெளி. என் அக்காவின் திருமணத்தின் போது நான் ஒரு வயது முடியாத குழந்தை. நான் பிறந்த தருணத்தில் அம்மாவுக்கு ஜன்னி கண்டுவிட 3 மாதங்கள் அம்மா ஆஸ்பத்திரியிலேயே தங்கிவிட வேண்டிய நிலை. எனக்கு பால் பவுடர் கரைத்து பால் புகட்ட ஆரம்பித்ததிலிருந்து, என் கல்யாணத்திற்கு பாத பூஜை செய்து கொண்டது வரை என் அக்காதான். இதை எழுதும் போதே என் கண்கள் பனிக்கிறது.

ஆஸ்பத்திரியிலிருக்கும் அம்மாவை பார்க்க, எனக்கு அதே ஆஸ்பத்திரியில் ஊசி போட என எல்லாவற்றிற்கும் என்னை அழைத்து போகுமாம் அக்கா. பாவாடை, சட்டை போட்ட ஒரு சின்னப்பொண்ணு, இவ்ளோ சின்னக்குழந்தைய தூக்கிட்டு போதே அப்படின்னு நெறைய பேர் ஆச்சரியமா பார்ப்பாங்களாம் அக்கா. அம்மா வயிற்றில் நான் இருக்கும் போதே தங்கச்சி தான் வேணும்னு சாமி கிட்ட வேண்டிக்குமாம். ஆனா அம்மா ஆண் குழந்தைதான் வேணுமுன்னு லஸ் நவசக்தி விநாயகர் கோவிலுக்கு நடந்து போய் வேண்டிகிட்டு வருவாங்களாம். இன்னும் என் அம்மாவின் இந்த வேண்டுதல் தொடருகிறது, அது எங்களனைவரின் நலன் குறித்தான வேண்டுதல்.

அக்காவுடனான என் நிறைய சின்னப்பிள்ளை நிகழ்வுகள் நிழல் போல ஞாபகத்தில். என் அன்பு மொத்தத்தில் முக்கால் பாகம் என் அக்காவிற்குதான். அக்காவை யாரும் ஒரு சொல் சொல்லக்கூடாது. மாமா அக்காவை ஒரு சொல் கடிந்து பேசினாலும், அவரோடு சரிக்கு சரி மல்லுக்கு நிற்பேன். வளர்ந்த பின் அக்காவை ஒரு வேலை செய்ய விடமாட்டேன். அம்மா எதற்காகவேனும் அக்காவிடம் சண்டை போட்டால் அம்மாவோடு பேசமாட்டேன். அக்காவிற்கு இரண்டு பிள்ளைகள் (பெண் ஒன்று, ஆண் ஒன்று) இருந்தாலும், என்னை தன் முதல் பெண் போலதான் வளர்த்தது. எந்தப் பொழுதிலும் என்னை விட்டுக்கொடுத்தது கிடையாது. என்னை மாமா ஏதேனும் சொல்லிவிட்டால், அவரோடு பேசாது. இப்படியாய் நிறைய எனக்கான அக்காவின் தருணங்கள்.

தருணங்களின் தருணமாக. அமித்து பிறந்த மறுநாள் இரவு ஆஸ்பத்திரியில், வலியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எழ முடியவில்லை, உட்கார, நிமிர என்று எதுவும் முடியவில்லை, ஜூரம் வேறு.
ஆப்பரேஷனின் முன்னர் எனிமா கொடுக்காததால், குழந்தை பின்னர் வயிறு உப்புசமாகவே இருக்க, வயிறு க்ளின் ஆக வேண்டுமென்று ஏதோ மாத்திரை கொடுக்க, அது பேதியில் முடிந்தது. ஹைய்யோ வயிறு புரட்டி புரட்டி பேதியாகிக்கொண்டிருந்தது எனக்கு. எழவே முடியவில்லை, இதில் எழுந்து எங்கு பாத்ரூம் வரை போவது. அப்போது என் அக்கா, எத்தனை முறை எனக்கு பெட் பேன் வைத்து எடுத்திருக்கும் என்று சொல்ல முடியாது. இன்னொரு பக்கம் குழந்தை எழும் போதெல்லாம் அதனை சமாதானப்படுத்தும் வேலை வேறு. பாவம் அக்கா. அந்த சூழலிலும் எனக்கு என் அக்காவை கஷ்டப்படுத்துகிறோமே என்றுதான் கண்ணீர் வருகிறது.

அக்கா, பிறப்பில் நீ எனக்கு அக்காவாக இருந்தாலும், வளர்ப்பில் நீ தான் எனக்கு அம்மா. அமித்துவிடம் நீ பெரிம்மா என்று சொல்லி கூப்பிட சொல்லும்போதெல்லாம் நான் உன்னை அம்மா என்று கூப்பிட நினைத்த ஆசையை தீர்த்துக்கொள்கிறேன்.


அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா............. மற்றும் அம்மாவுக்கும்.

அன்னையர் தின வாழ்த்துகளுடன்...

சென்னையில் வேலைக்கு சேர்ந்திருந்த நாட்கள் அவை. வாரயிறுதியில் ஆம்பூருக்கு பயணம். ஏலகிரி எக்ஸ்பிரஸ் - பெயர்தான் எக்ஸ்பிரஸே தவிர பாஸ்ஞ்சர் போலத்தான். ஆனால் அது ஒரு மினி ரங்கநாதன் தெரு மாதிரிதான். வளையல் வியாபாரத்திலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வரை எல்லாமே தங்கள் இடம் தேடி வரும். காட்பாடி தாண்டினால் கூட்டம் மிகக் குறைவாக இருக்கும். குடியாத்தம், ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ஊர்க்காரர்கள் மட்டுமே!இரண்டு வரிசைகள் தாண்டி ஓரிரு தலைகள் தென்பட்டன. வீட்டுக்கு செல்ல இன்னும் அரைமணிநேரம்தான் என்றெண்ணியபடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தேன். ரயிலின் சீரான வேகம். தாண்டிச் செல்லும் காற்று. வீட்டில் பெரிம்மா எனக்காக சப்பாத்தியும், உருளைக்கிழங்கு மசாலும், சிக்கன் ஃபிரையும் செய்துவைத்து விட்டு காத்திருப்பதாக மெஸேஜ். ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஏதாவதொன்று புதிதாக வீட்டில் இருக்கும்..எனக்கு அறிமுகப்படுத்த புது புத்தகம், பகிர்ந்துக் கொள்ள சுவையான நிகழ்வுகள் என்று என்னை அசத்துவதில் பெரிம்மாவுக்கு நிகர் பெரிம்மாதான்!! இதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்க, ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள்.

“அக்கா, நல்லாருக்கீங்களா?” - அவள்தான்!

பரிச்சயப்பட்ட முகமாக, ஆனால் யாரென்றுத் தெரியவில்லை.

“நல்லாருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க” - பேச்சுவாக்கில் தெரிந்துவிடும் என்றெண்ணியபடியே!

“நல்லாருக்கேன் அக்கா, மேடம், தம்பில்லாம் எப்படி இருக்காங்க?”

”நல்லாருக்காங்க, மெட்ராஸ்லேர்ந்தா வர்றீங்க” - யாருன்னு கேட்டுடலாமா இல்லை இன்னும் பேசினால் தெரிந்துவிடுமா என்ற தயக்கத்தில்!

”ஆமாக்கா, நான் நர்ஸிங் முடிச்சுட்டு மெட்ராஸ்லதான் வேலை செய்றேன்” - அந்த பெண்.

ஓ..கண்டுபிடித்துவிட்டேன்..பெயர் தெரியாவிட்டாலும்!

ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு இரு வரிசைகளில் ஒழுங்கு கலையாமல் உயரகிரமமாக சீருடை அணிந்துச் செல்லும் சிறுமிகள்! முன்னும் பின்னும் அவர்களைக் கவனிக்க இரு பெரியவர்கள்! எங்கள் ஊரில் இருந்த ஹோம் அது. பெற்றோர் இல்லாமல் உறவினர் உதவியுடனோ அல்லது பெற்றோரில் ஒருவர் உதவியுடனோ ஹோமில் சேர்க்கப் பட்டவர்கள்! சுருக்கமாகச் சொன்னால் வீட்டிலேயே வைத்து பராமரிக்க இயலாமல் ஹோமிற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள். எங்கள் ஊரில் மூன்று பெரிய பள்ளிகள். மேனேஜ்மெண்ட் பள்ளிகள். அதில் கிறிஸ்துவ பள்ளியைச் சார்ந்த ஹோம் அது!

நான் பள்ளிக்கு செல்லும் நேரமும் அவர்கள் செல்லும் நேரமும் இண்டர்செக்ட் ஆகும். பார்த்துக் கொண்டே கடந்துச் செல்வேன். ஒரு நாள் பெரிம்மாவிடம் கேட்டேன்,

“ஏன் அவங்கள்லாம் லைனா போறாங்க, வீட்டிலேர்ந்தே அப்படி வருவாங்களா?”

பெரிம்மா சொன்னார்கள், "ஆமா ஆச்சி, அவங்கள்லாம் ஒண்ணா ஒரே வீட்டிலே இருப்பாங்க, ஒண்ணா கிளம்புவாங்க"!

அதன்பின் ஒன்றும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. (இப்போது பெரிம்மாவுக்கு இந்நிகழ்வு நினைவில் இல்லாமலிருக்கலாம்.) ஆனால் எனக்குள் சந்தேகம் மட்டும்..எப்படி அத்தனை பேரும் ஒரே வீட்டில் இருப்பார்கள்...எப்படி குளிப்பார்கள்..சரியான நேரத்திற்கு பள்ளி செல்கிறார்கள்!



எட்டாம் வகுப்பு அரைப்பரீட்சை விடுமுறை தினத்தில் நாங்கள் அங்கே சென்று இறங்கினோம், ஆயா, நான், குட்டி,பெரிம்மா மற்றும் சாந்தா அத்தை. ஐந்து பெரிய தனித்தனி வீடுகள். ஒரு சமையலறை. பல பெரிய அக்காக்கள் காய் வெட்டிக் கொண்டிருந்தனர். இரு சமையற்கார அத்தைகள். ஒரு வார்டன். எல்லா சிறுமிகளும் அவரவர் நண்பர் குழுக்களோடு விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு சேப்பல். மரங்களுடனும் ஒரு குட்டி மைதானத்துடனும் அமைந்த ஒரு சின்னஞ்சிறு உலகம். நான் இதுவரை பார்த்திராத உலகம். பதின்மூன்று வருடங்களாக அதே ஊரிலிருந்தும் நான் அறிந்திராத உலகம். ஆதரவற்றவர்கள் என்று கதைகளில் படித்திருந்தாலும் கற்பனை செய்திருந்தாலும்!! ஒரே அறையில் பத்துச் சிறுமிகள்,ஆளுக்கொரு ட்ரங்குப் பெட்டி, ஒருவருக்கொருவர் ஆதரவாய்!

பெரியவர்கள் எல்லோரும் அலுவலக அறைக்களுக்குள் சென்றுவிட நானும் தம்பியும் மட்டும் மைதானத்தில். கூச்சலும் கொண்டாட்டமுமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மெதுவாக எங்களை சூழ்ந்துக் கொள்ளத்துவங்கினர். எங்களுக்கிடையே இருந்த பனிச்சுவர் உடைக்கப் பட்டது. ஒன்றாக விளையாட்டில் ஐக்கியமானோம்! பின் நான் பனிரெண்டாம் வகுப்பு செல்லும் வரையில் அவ்வவ்போது விடுமுறைகளில் ஒரு நாள் ஹோமுக்குச் செல்வது, அவர்களுடன் பொழுதைக் செலவிடுவது என்பது பழக்கமானது. என் பள்ளித் தோழிகளையும் அந்த ஹோம் விடுமுறைதினத்தில் சந்தித்திருக்கிறது. அந்த ஹோம் எனக்கு பல தோழிகளை கொடுத்தது. இனிமையான தருணங்களை தந்தது. அந்தத் தோழிகளில் ஒருவரைத்தான் நான் ரயிலில் சந்தித்தது. அவர்பெயர் தபித்தா, பத்தாம்வகுப்பிற்குப் பின் நர்சிங் டிப்ளமா முடித்து சென்னையில் வேலை செய்கிறார். ஆம்பூரை அடுத்த ஒரு கிராமம் அவரின் அத்தை வீடு. நெடுநாள் கழித்து தோழியைச் சந்தித்த மகிழ்ச்சி எனக்கு!

பிறந்தநாளுக்கு பப்புவை அருகிலிருந்த ஹோமுக்கு அழைத்துச் சென்று, அரைநாள் அங்கு செலவழித்ததிலிருந்து, பப்பு அவ்வப்போது “ஹோமுக்கு போகலாம்,ஆச்சி, ஹோமுக்கு போகலாமா” என்கிறாள். யோசித்துப் பார்க்கிறேன், ஒருவேளை பெரிம்மா எங்களை அழைத்துப் போகாமலிருந்தாலோ அல்லது நாங்கள் பார்க்காமல் அவர்களாகவோ உதவியைச் செய்திருந்தாலோ, எனக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. பரிதாபப்படுவதோடோ அல்லது இயன்றபோது ஒரு தொகையைக் கொடுத்துவிட்டோ குற்றவுணர்ச்சியை தடுத்துக் கொண்டிருப்பேன்.

ஆனால், நாமும் அவர்களோடு நேரம் செலவழிக்கவேண்டுமென்ற எண்ணத்தைத் தானாக என்னுள் எழ வைத்தது பெரிம்மாதான். எததனையோ விஷயங்களில், நான் பெரிம்மாவைப் போல் இருக்க வேண்டுமென நினைத்ததுண்டு. ஆனால் பப்புவும், என் பெரிம்மாவைப் போல இருக்க வேண்டுமென நினைக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று! ( This is one of those values which I would like to pass it on to pappu! )


வாழ்க்கையின் values, ஒரே நாளில் நன்னெறிக்கதைகள் மூலமாக கற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாறாக, வாழ்க்கையைப் பார்த்துத்தான் நிறையக் கற்றுக்கொள்கிறோம் என்ற உண்மையை உணர வைத்த பெரிம்மாவிற்கு நன்றி!

Happy Mother's day, Perimma & Amma and this post is for you!!

Tuesday, May 5, 2009

ம்மா

இரவு எட்டு மணி இருக்கும். ஜுனியரோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், பாஸ் குடுகுடுவென வாசக்கதவருகே ஓடிப்போய் ப்பா என்றார். ரகுவைப் பார்த்ததும் கைகள் ரெண்டையும் விரித்து தூக்கிக்கோ என்பதுபோல் சைகை செய்தார். அப்பாவைப் பார்த்ததும் அப்படி ஒரு குஷி. "அடப்பாவி நாள் முழுக்கப் பார்த்துக்கறது நான். அப்பாவைப் பார்த்தவுடனே என்னை விட்டுட்டா ஓட்ற" என்று முதுகில் (செல்லமாக) ஒன்று வைத்தேன். அந்தத் தருணம் சட்டென்று அம்மா நினைவுக்கு வந்தாள்.

பொதுவாகவே பெண் குழந்தைகள் அப்பாவிடமும், ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் அட்டாச்டாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. அம்மாவை வைத்துக்கொண்டே நான் அப்பா செல்லம் என்று சொல்லிருக்கேன். கூடவே அம்மா தப்பா எடுத்துக்கமாட்டாங்க என்ற பிட்டையும் போட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் உரைத்தது நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று. பிறந்து ஒன்றரை வருடமே ஆன என் பையன் அப்பாவைப் பார்த்து ஓடும்போதே எனக்கு என்னமோ மாதிரி இருக்கே. 24 வருஷமா நான் அப்பாவைப் பிடிக்கும் என்று சொல்லும்போது (அந்தத்தருணத்திலாவது) அம்மா எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாள். ஸாரிம்மா. இனிமே (நீ இருக்கும்போது) அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லவேமாட்டேன். உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஜூனியருக்கும் இதை சொல்லிக்கொடுக்கணும்.

அன்னையர் தின வாழ்த்துகள் அனைவருக்கும்:)

தாய்மையைக் கொண்டாடுவோம்

தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. கடவுள் ஒவ்வொருவருடனும் இருக்க இயலாது என்று தாயைப் படைத்தான் என்பார்கள். அத்தகைய தாயைக் குடும்பத்தினர் போற்ற , மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக சில நாடுகளில் கொண்டாடப் படுகிறது.



தாய்மை பெண்ணின் குணங்களை மேம்படுத்துகிறது. அவளது உலகையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்தது. ஒரு சின்ன எ.கா இந்த சிறுகதை

[அவள் அந்த குட்டிக் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள்.

"அம்மாவும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த முற்றத்தில் பாம்பு புகுந்திருந்தது. தாயை எழுப்ப எல்லோரும் சத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்... அவள் அசைவதாகத் தெரியவில்லை. நல்ல அசதி போல். சற்றுத் தொலைவில் இருந்து கம்பால் தொட்டுப் பார்த்தார்கள். அசைந்தாள் , ஆனால் எழவில்லை. ஒரு பெண், மல்லிகைப் பூவை எடுத்து அக்குழந்தையின் மேல் போட, சட்டென்று எழுந்து அந்த பெண் பூவைத் தட்டி விட்டாள்". "சினிமாத்தனமாக இருக்கு", முணுமுணுத்தவாறு, பத்திரிகையைத் தூக்கி எறிந்தாள்.இரண்டு வருடங்களுக்குப் பின்... யாரோ தொடும் உணர்ச்சியில் திடுக்கிட்டு விழித்தாள். ஜன்னலருகே கணவன் கோபத்துடன் நிற்பது தெரிந்தது. கையில் குச்சி, அவளை ஜன்னல் வழியாகத் தொட்டு எழுப்ப. "எத்தனை தடவை பெல் அடிக்கிறது. எழுந்து வந்து கதவைத் திற..." என்றான். இரண்டு வருடங்களுக்குப் பின்... சட்டென்று விழிப்பு தட்டியது. கண்கள் உடனே தொட்டிலுக்குச் சென்றது. குழந்தை விழிப்பதற்கான ஆயத்தங்களுடன் நெளிய ஆரம்பித்திருந்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தொட்டிலை ஈரமாக்கிவிட்டு அழ ஆயத்தமானாள். மெல்ல எடுத்து மார்போடு அணைக்கையில் , அந்த குட்டிக் கதை நினைவுக்கு வந்தது. "உண்மை தான்", என்று நிறைவோடு மனம் முணுமுணுத்தது.]



தாய்மை என்பது அன்பு, கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்களின் வெளிப்பாடு. ஈரைந்து மாதம் சுமந்து, அமுதூட்டி அன்புடனும் பொறுமையுடனும் போற்றி வளர்க்கும் தாய்மார்கள் அனைவருமே போற்றப்படவேண்டியவரே. இந்த தாய்மையுள்ளும் சிறப்பு கவனம் செலுத்தி தாய்மையின் பல பரிமாணங்களில் மிளிரும் தாய்மாருக்கு தனிச்சிறப்பாக வாழ்த்து கூற விரும்புகிறேன்.


- உடற்கூறால் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு அன்பும் ஊக்கமும் அளித்து உயர்த்தும் அன்புள்ளம் கொண்ட தாய்மார்கள்

- மனதால் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு அன்பால் அவர்களது திறமையை வெளிக்கொணரும் பொறுமையான தாய்மார்கள்

- பெற்றால் தான் பிள்ளையா என்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தாயன்பு ஊட்டும் கருணை மிக்க தாய்மார்கள்

- சமூகத்தில் பல எதிர்ப்புகளுக்கும் நடுவில் எந்த துணையுன்றி குழந்தைகளின் நலனுக்காகப் போராடி உயர்த்தும் சகிப்புத்தன்மை மிக்க தாய்மார்கள்


இப்படி தாய்மையின் பரிமாணங்கள் பல பல...அன்னையரை அன்னையர் தினத்தில் போற்றுவோம், என்றென்றும் கொண்டாடுவோம்.

அன்னையர் தினத்துக்காக - "முத்துச்சரம்" ராமலஷ்மி!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”முத்துச்சரம்” ராமலஷ்மி தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி ராமலஷ்மி! ”மங்கையராலே.. பொங்கிடும் அன்பு! தங்கிடும் சுபிட்சம்! என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு இதோ :-

தாய்மை என்பது அன்பின் உச்சம். உலகின் ஜனத்தொகையில் பாதியாகிய பெண்கள் அந்த உச்சத்தை அடைந்து அனுபவிப்பதாலேயே அன்பு உலகில் நிலைக்கிறது, பரவுகிறது.

அன்பின் வடிவாய்... தன் குழந்தைகளுக்காகத் தன்னையே உருக்கிக் கொள்ளும் தாயினைப் பார்த்து ஒரு பெண் சிறுமியாய் இருக்கும் போதே தானும் ஒரு மகளாய் ஒரு தமக்கையாய் ஒரு தங்கையாய் தாய்மை உணர்வில் பரிமளிக்கத் தொடங்கி விடுகிறாள்.

புகுந்த இடத்திலும் அத்தனை பேருக்கும் தாய்மையின் வடிவாய் தன்னை அர்ப்பணிக்கிறாள். அதன் பிரதிபலிப்புத்தான் ஆண் பெண் பாகுபாடின்றி குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் அன்பின் வசமாகி மனமது தெளிவாகி நல்லது கெட்டது புரிவாகி பக்குவப்பட்டு நிற்கிறார்கள். வெற்றியையும் கை வசமாக்கிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு குடியும் இவ்வாறாகத் தாய்மைக்குக் கட்டுப்பட்டு நின்றபதாலேயே அவை உயர்வதோடு, கோலும் உயர்ந்து கோனும் உயர்கிறான்.

தத்தமது குடிகளை இப்படியாக உயர்த்துகிற தாய்மாருக்கு மத்தியிலே தாய்மையே உருவான அன்னை தெரசா போன்றவர்கள் கருணைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக் காட்டாக இருந்து, சாதி மத இன பேதம் தாண்டிய பரஸ்பர அன்பு பரவிடவும் காரணமாயிருந்தார்கள். அத்தகைய பரஸ்பர அன்பே அகிலத்தின் அமைதிக்கான அடிப்படை. ஆக,

அகிலத்தின் அமைதிக்கே அடிநாதமாய்
அன்பின் பிறப்பிடமாய் உறைவிடமாய்
தன்னலமற்றதாய் தன்னிகரற்றதாய்
திகழும் தாய்மையை வாழ்த்துவோம்
போற்றுவோம் மதிப்போம்
தலைவணங்கித் துதிப்போம்.

*** *** **

Monday, May 4, 2009

அன்னையர் தினத்துக்காக - “நாச்சியார்” வல்லிசிம்ஹன்!



அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”நாச்சியார்” வல்லிசிம்ஹன் தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி வல்லிசிம்ஹன்! ”அன்னையருக்கு அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துகள்” என்று தலைப்பிடப்பட்ட அவரது கவிதை இதோ :-

அன்னை என்பவள்

அமுதம்
,

அமைதி
,

அறிவு

அடக்கம்

அன்பு
.

இத்தனையும் ஒன்றாகக் குழைத்துச் சந்தனத்தில் கரைத்துத்

தேனில்

வடிவமைத்து
,

நிமிர்ந்து நிற்க வீரம் என்னும் முதுகெலும்பையும் கொடுத்து

இறைவன் எமக்காக அனுப்பினான்
.

அந்த இறையையும் காப்பவள் அவளே
.

ஆகையால் அம்மா நீ என்றும் வாழ்

அம்மா

(தாய்மையைப் பற்றி பகிர்வதற்கு நல்லதொரு யோசனையை முன் வைத்த சந்தனமுல்லைக்கு நன்றிகள்.)

ஒரு மழை நாளின் பொழுது எழுதி ஏற்கனவே பதிவிட்ட, என் அம்மாவிற்கு சமர்ப்பித்த ஒரு கவிதை இதோ மீண்டும் இங்கே.

மழையாய் நீ, மண்ணாய் நான்





வா என்று
சொல்லும் போது
வருவதில்லை

போகிறேன்
என்று சொல்லும்போது
ஓடி வருகிறாய்

சின்னத்தூறல் போல
உன் சிணுங்கல்கள்

ஓங்கி பெய்யும்
மழை போல
உன் அழுகை

விடாமல்
கெட்டியாய்
பிடித்திருக்கும்
உன் அடத்தைப் போல
இன்னும்
இந்த மழை
நிற்காமல்...

இடியோடு பெய்யும்
மழைக்கு
இதமான தேநீர்
போல
இருக்கும்
இனிக்கும்
உனது முத்தங்கள்

உனக்கு கொறிக்க
கொடுத்தால்
ந்தா இந்ந்தா வென
எனக்கே
ஊட்டி விடுகிறாய்

என்ன சொல்ல
மழையே
மன்னிக்கவும்
மகளே

புயலாய் நீ வீசினாலும்
புன்னகைச்சாறலாய் இருந்தாலும்
இந்த இளமையிலும்
இனி வரும் முதுமையிலும்

என்றும்
உன் அன்பில்
சொட்ட சொட்ட
நனையவே
காத்திருக்கிறேன்.

என்றும்
மழை போல் நீ
பொழியவேண்டும்
அதை
நான்
மண்ணாய்
நின்று
தாங்கவேண்டும்

வாய்ப்பு கொடு
மகளே
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க..........



(டிஸ்கி: மழைநாள் விடுமுறையின் போது நான் என் பெண்ணோடு இருந்த நேரம் பார்த்து என் அம்மா என்னோடு போனில் பேசினார்கள், மழை ஜாஸ்தியா இருக்கும் நேரம், ஆபிஸிக்கெல்லாம் போகாத என்றார்கள்.

ம்மா நான் ஒன்னை நினைக்கலியே, ஆனா நீ என்ன நெனச்சிக்கிட்டியோ இருப்பியோ, எப்போதும் நினைப்பால் என்னை நனைத்துக்கொண்டே இருக்கும் என் அம்மாவிற்கு, இந்தக் கவிதை சமர்ப்பணம்)

அன்புயிர் சன்னோ...

*நன்றி முனைவர்.ரத்தினபுகழேந்தி அவர்களுக்கு. அவரின் பதிவிலிருந்து காப்பி செய்துள்ளேன், இன்னும் ஷன்னோக்கள் உருவாக்கப்படக்கூடாதென்ற எண்ணத்தில்!அவரது பதிவிற்கான சுட்டி!


அன்புயிர் சன்னோ, அன்பும் இனிமையும் நிறைந்த சுட்டிப்பெண்ணே இன்று காலை செய்தித்தாளில் உனது மரணம் பற்றி படிதேன்.மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாய், இது போல் இன்னும் பலருக்கு நிகழலாம் உன்னால் என்ன செய்ய முடியும் இது வாடிக்கையாகிவிட்டது. நீ இறப்பதற்கு முன் அந்த கடைசி விநாடிகளில் தேவதைக் கதைகளில் வருகின்ற குழந்தைகளை நேசிக்கும் அந்த தேவதையை நீ சந்தித்திருப்பாய் என்று எண்ணுகிறேன். நீ மிக பணிவாக மண்டியிட்டு கிடந்தபோது உன் முகத்தில் அரும்பிய வியர்வையையும் கண்ணீரையும் துடைத்தவள், தாங்கிக்கொள்ளும் வலிமையை கொடுத்தவள், வலியை நிறுத்தும் அந்த இரண்டு சொட்டு மந்திர நீரைக்கொடுத்தவள் அந்தக்காவல் தேவதையே. அந்த தேவதை வந்தாளா? நீ மருத்துவ மனையில் இருந்தபோது இரவு முழுவதும் உன்னுடன் தங்கினாள் இல்லையா?

இன்று காலை உன்னைப் பற்றி படித்ததிலிருந்து எங்கு நோக்கினும் உன் கண்களைக் காண்கிறேன் என் இரண்டு மகன்களைப் பார்க்கும்போது கூட. ஒரு வேளை நான் உன் கண்களில் அச்சத்தை மட்டும் காண்கிறேனோ எனத் தோன்றுகிறது. ஆனால் சுட்டெரிக்கும் வெய்யிலில் இரண்டு மணி நேரம் நீ முட்டி போட்டு குனிந்திருந்த போது உன் முதுகின் மீது சுமத்தப்பட்ட அந்த ஏழு செஙற்களை நான் அறிவேன். ஒவ்வொரு நாளும் , மக்களோடு பேசும்போதும் செய்தித்தாள்களைப் படிக்கும் போதும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் அவற்றை நான் காண்கிறேன்.

தங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்வதை விட கட்டுப்பாடாக இருக்கக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிற பெற்றோர்கள்தான் அந்த முதல் செங்கல். அநீதியை எதிர்த்துப் போராடத் தெரியாமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உன் வகுப்புத் தோழர்கள்தான் அந்த இரண்டாவது செங்கல். குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பதை விட அதிகமாக அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்பதை உணராத உன் ஆசிரியர்கள்தான் மூன்றாவது செங்கல். நெடுங்கணக்கை மனப்பாடம் செய்ய இயலவில்லை என்பதற்காக தலை நகரப் பள்ளி ஒன்றில் ஒரு சிறு குழந்தை சித்திர வதைக்கு ஆளாகி இறந்து போனதைக் கண்டுகொள்ளாத ஆனால் கட்சியின் நலனுக்காக அற்ப விசையங்களுக்கெல்லாம் வேலை நிருத்தம் செய்கிற அரசியல்வாதிகள்தான் அந்த நான்காவது செங்கல்.

ஒரு ஆசிரியர் கொடுக்கின்ற உடல் ரீதியான தண்டனையைக் குற்றமாகக் கருதாத - ஏனென்றால் அவர்களே வன் முறையில் நம்பிக்கை உடயவர்கள்- காவலர்களே ஐந்தாவது செங்கல். இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஏழைகளை நாட்டின் முக்கிய பிரச்சனையாகப் பார்க்கும் (ஏழைக் குழந்தைகளின் பள்ளியை அல்ல) மேட்டுக் குடியினரே ஆறாவது செங்கல். அந்த கடைசி செங்கல் எதுவென்று உன்னிடம் சொல்வதற்கு எனக்கு வெறுப்பாக இருக்கிறது சன்னோ. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுத்து, அதிலிருந்து வெளி நடப்பு செய்யும் துணிவைத் தராத உன் காவல் தேவதைதான் அந்த ஏழாவது செங்கல்.


இப்படி ஒரு கேடு உனக்கு நேரும் என நீ அஞ்சியிருக்க வேண்டும். உன் பணிவே உன் உயிருக்கு உலை வைக்கும் என்று கற்பனை கூட செய்திருக்க மாட்டாய். என்னருமை சன்னோ உன் இறப்பால் நான் வருந்துகிறேன். பெரியவர்களின் முட்டாள் தனத்தால் நீ சாக நேர்ந்ததை எண்ணி துக்கப்படுகிறேன். உன் மரணத்தை ஒன்றுமில்லை என்று ஆகிவிடாது. நம் இந்தியக் கல்வி முறையில் ஏதோ ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது. அது உறுவாவதற்குத் துணை புரிந்த அந்த ஏழு செங்கற்களில் ஏதோ அடிப்படையில் ஒரு கேடு இருக்கிறது என்பதை உன் மரணம் எஙளுக்கு உணர்த்தும்.

ஒரு வேளை உன் நினைவாக மக்கள் அவ்வேழு செங்கற்களைத் தூள் தூளாக நொறுக்கத் தொடங்கலாம். ஏனெனில் அந்த ஏழு கற்கள் சென்ற வெள்ளிக்கிழமை உன் முதுகில் இரூந்தது மட்டுமல்ல கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் கொண்ட, அழுவதற்கு அச்சப்படும் உன்னைப் போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகளின் முதுகின் மீது அதே கற்கள் மீண்டும் மீண்டும் ஏறுகின்றன. ஒரு வேளை நீ பட்ட துன்பத்தின் காரணமாக ஏதாவது புதிதாக உருவாகலாம்.அக்கரையுள்ள பெற்றோர்கள், அக்கரையுள்ள ஆசிரியர்கள், அகரையுள்ள அரசியல்வாதிகள், அக்கரையுள்ள காவலர்கள், ஏழைகளுக்காக கரிசனம் கொள்ளும் செல்வந்தர்கள் ஆகியோர்களால் ஒரு புதிய பள்ளி முறை உருவாகலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகள் தங்களால் சமாளிக்க முடியவில்லை என்பதற்காகத் தங்களையே குறைபட்டுக்கொள்ள மாட்டார்கள். மாறாகத் தஙளால் என்ன செய்ய முடிகிறதோ அதிலே பெருமை காண்பார்கள். தங்களுக்காக தங்களின் வகுப்புத் தோழர்களுக்காக அன்புடன் தங்கள் கைகளை உயரே தூக்கிப் பிடிப்பார்கள். என் அன்பு சன்னோ உனை நான் தவறவிட்டுவிட்டேன்.(கட்டுரையாளர் செபஸ்டியன் டேராடூனில் உள்ள லத்திகா ராய் நிறுவனத்தின் குழந்தை மருத்துவர்) நன்றி: இந்து நளிதழ் (26.04.09),மொழி பெயர்ப்பில் உதவிய அ.முதுகுன்றன், எழுதத்தூண்டிய அ.மங்கை. கற்றல் அது குழந்தைகளுக்கு இன்னும் தாங்கொணாத சுமையாகவே உள்ளது என்பதையே சன்னோ என்னும் சிருமியின் மரணம் நமக்கு உணர்த்துகிறது. மாற்று கல்வி குறித்து சிந்திப்போம்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger