Showing posts with label சரித்திரம். Show all posts
Showing posts with label சரித்திரம். Show all posts

Wednesday, December 2, 2009

அங்கவை..சங்கவை...அவ்வை



அவ்வைப் பாட்டி பற்றி இப்போதுள்ள குழந்தைகளுக்கு பெயரைத் தவிர பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லை.

அவரைப் பற்றிய சரித்திர நிகழ்ச்சி ஒன்றை இப்போது பார்ப்போம்.

நட்பின் மகத்துவத்தைப் பற்றி கூற வேண்டுமெனில் கோப்பெருஞ்சோழன் ,பிசிராந்தையாருடன் அவ்வையார் அதியமான் கதையையும் சொல்வார்கள்.கூடவே பாரி கபிலர் கதையையும் கூறுவார்கள். அந்தப் பாரி மன்னன் கடையேழு வள்ளல்களுள் ஒருவன். பாரி பரம்பு எனும் மலை குறுநில மன்னன் .
மன்னன் என்றால் போர் இல்லாமலா? மூவேந்தர்கள் தமக்கு அடி பணியாத அல்லது கப்பம் கட்டாத குறுநில மன்னர்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டு வந்தனர் என்பது வரலாறு .அப்படி
மூவேந்தர்களுடன் நடந்த போரில் பாரி இறந்து படவே ,அவனது பெண் மக்கள் இருவரும் ஆதரவற்ற அனாதைகள் ஆயினர் என்று வரலாறு சொல்கிறது.

அந்தப் பெண்களின் பெயர்கள் அங்கவை,சங்கவை (சிவாஜி படத்தில் கூட இந்தப் பெயர்கள் வருமே! பாரியின் மகள்களின் பெயர்கள் தான் அவை)

அப்படி நிராதரவாய் வறுமையுடன் வாழும் போதும் அப்பெண்கள் யாரிடமும் அண்டிப் பிழைக்க விருப்பமற்று ஒரு அரசனின் மகள்கள் எனும் பெருமையை விடுத்து தனியே வாழ்ந்திருக்கையில் அவ்வைப்பாட்டி ஒரு நாள் அவர்களைச் சந்திக்கிறாள்.

முல்லைக்கு தேர் தந்த பாரியின் மக்களுக்கா இந்தக் கதி என அவ்வை வருத்தம் மிகக் கொண்டு அவர்களது நல வாழ்வுக்கு ஏதேனும் செய்தே தீருவது என முடிவு செய்கிறார்.

அவ்வையின் மீது பெரு மதிப்பு கொண்ட சிற்றரசன் ஒருவன் அங்கவை சங்கவியை மணந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவே அவ்வைப் பாட்டி அவர்களது திருமணத்தை முன்னின்று நடத்துகிறார்.

அவ்வேளையில் அதை எதிர்த்து மூவேந்தர்களும் படை திரட்டி வருகின்றனர். தங்களை எதிர்த்து போரில் மாண்ட அடி பணியாத பாரியின் மகள்களுக்கு அவ்வைப் பாட்டி திருமணம் செய்வித்து ஆதரிப்பதா என்ற அடங்காக் கோபம் அவர்களுக்கு .

மூவேந்தர்களும் படை திரட்டி வருவதை அறிந்த அவ்வை போர்களத்தில் அவர்களிடம் சென்று பாரியின் பெருமைகளை எடுத்துச் சொல்லி சமாதனம் செய்து எப்படி போரை நிறுத்தினார் என்பது இன்னொரு சுவையான சரித்திர நிகழ்வு.

இப்போது சொல்ல வந்த விஷயம் என்ன வென்றால்

மூவேந்தர்களும் ஒற்றுமையாய் ஒரு சமயம் இருந்தார்கள் அதற்க்கு அவ்வை பாட்டி காரணம் என்பது தான்.

அங்கவை...சங்கவியின் திருமணதிற்கு மூவேந்தர்களும் ஒற்றுமையாய் வந்து கலந்து கொண்டனர் அவ்வையின் மீது கொண்ட பெரு மதிப்பினால்.

இதற்க்கான சரித்திர ஆதாரம் .

திருமணதிற்கு வந்த சேர மன்னர் தன் பரிவாரங்களுடன் தங்கியிருந்த இடமே சேலம் என்று பின்பு மருவிற்றாம்.

அங்ஙனமே பாண்டிய மன்னர் தங்கியிருந்த இடம் வீர பாண்டி என ஆயிற்று .

சோழமன்னன் தங்கியிருந்த இடம் வீரசோழபுரம் என்று ஆயிற்று .

இந்த நிகழ்வு சரித்திரத்தில் பதியப் பட்ட ஒன்று என ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணக் கிடைத்தது.

பகிர்வுக்காக இங்கே அளித்தேன்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger