Showing posts with label மூன்று - ஐந்து வயது. Show all posts
Showing posts with label மூன்று - ஐந்து வயது. Show all posts

Sunday, January 25, 2009

Rabbit's Happy டே- Kids Book review





Rabbit's Happy day
பிரிவு : ஆங்கிலப் புத்தகம்
பரிந்துரைக்கப் பட்ட வயது : நான்கு-ஏழு வயதுவரை
மூன்று - ஐந்து வயதினரும் உபயோகிக்கலாம்.




”எங்க அம்மா பிசியா இருக்காங்க, நான் என்ன பண்றது, என்கூட விளையாட யார் இருக்காங்க” என்று முயல்குட்டி சொல்லவதாக ஆரம்பிக்கும் இக்கதை, பப்புவின் சூழலை பிரதிபலிப்பதாலேயோ என்னவோ, இந்தப் புத்தகம் பப்புவிற்கு பிடித்தமானது!

கையில் பந்துடன் கேரட் செடிகளுக்கு மத்தியில் குளக்கரையில் அமர்ந்திருக்கும் முயல்குட்டி, விளையாட யாருமின்றி இருப்பதாக் நினைக்கும் வேளையில், எதிர்பாராத வண்ணம் சந்திக்கிறது பல முயல்குட்டிகளை! அதன் மீதி பொழுது எப்படி போகிறது
என்பது தான் கதை!

ஆனால், அந்த முயல்குட்டிகள் தங்களை எவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்கின்றன தெரியுமா, “we are your little brothers and sisters". நாங்கள் உன் குட்டிச்சகோதரர்கள் என்றுக் குதித்தோடி வருகின்றன இரு குட்டிகள். முயல் இப்போது சொல்லிக் கொள்ளும், மூன்று பேர்கள் இருக்கிறோம் இப்போது! திடீரென முளைக்கின்றன, இரு குட்டிச்சகோதரிகள். இப்போது முயல் சொல்லிக்கொள்ளும், மொத்தம் ஐந்து பேரென! இப்படியாக, கால்பந்து விளையாட ஒவ்வொரு அணிக்கும் ஐந்து பேராக மொத்தம் பத்து முயல் குட்டிகள் எப்படி சேர்கின்றன என்பதுதான் மொத்தக் கதையும்!

ஒருவகையில், எண்களை அறிமுகப் படுத்த உதவி செய்வதோடு, எண்ணவும் அதாவது கூட்டலை அறிமுகப்படுத்தலாம், மிக எளிய முறையில்!

சுவாரசியமான் சம்பவங்களோ, அல்லது சவாலானக் காரியங்களோ அல்லது செய்தி(moral) - இப்படியான ஒன்றை எதிர்பார்ப்பீர்களானால் அது கிடையாது. தூங்கப் போவதற்கு முன் உங்கள் 4 வயது குட்டிக்கு சொல்ல ஏற்றக் கதை..சிறிய கதை..மகிழ்ச்சியும், இதமான நினைவுகளுடனுமாக முடியும் கதை! கூடுதலாக, இது ஜொலிக்கும் தாளாலானது, குட்டிகள் விரும்பும் வண்ணம்!

Friday, November 28, 2008

தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து




தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து
தமிழில் : ஜீவா ரகுநாத்

வயது : மூன்று - ஐந்து வயதினருக்குட்பட்டது


இந்தப் புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்து என் மகளின் கண்களால் வாசிக்கத் தொடங்கினேன். 16 பக்கங்கள். முடிக்கும்போது, நானே ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

வெகு எளிமையான புத்தகம். கோட்டுச்சித்திரங்கள் போன்ற எளிமையான படங்களுடன் இயல்பான வார்த்தைகளுடன் கூடிய புத்தகம். அபுவின் பந்து உதைக்கப்படும்போது அது பயணிக்கும் திசைகளில், சுழன்று விழும் இடங்களையும் சுவைப்பட சொல்லிச் செல்கிறது ஒருவித தாள கதியில்.

திந்தக்கம் திந்தக்கம் திந்தக்கம் தா என்றும் தரிகிட்ட தகிட்ட தரிகிட்ட தகிட்ட தா என்றும் பரதத்தின் தாளத்தில் சொல்லும் பாங்கு குழந்தைகளை ஈர்ப்பதாயிருக்கிறது. சில வாக்கியங்கள் முடியும்போது ஒரே மாதிரி வார்த்தைகளால் முடிவதால், பப்புவும் என்னோடு சேர்ந்து சொல்ல ஏதுவாயிருக்கிறது. பந்து செல்லும் ஒவ்வொரு இடமும் நமது கற்பனைக்கேற்றவாறு காட்சிகளை விரிக்கலாம்.

மேலும் மெயின் கதாபாத்திரம் அபு மற்றும் பந்து. அபுவின் காலடியிலிருந்து எழும்பிய பந்து
ஊரின் பல இடங்களை சுற்றி அவனது காலடிக்கே எப்படி, யார் யாரை சந்தித்து வருகிறது என்பது கதை.

ஒவ்வொரு பக்கமும் அதிகபட்சம் 15 வார்த்தைகளில் இருப்பதால், எழுத்துக்களை கற்கும்போதும் உபயோகமாக இருக்கும். இரண்டு வயதினருக்குக் கூட படித்துக்காட்டலாம்.

குழந்தைகளுக்கு எந்தப் புத்தகம் பிடிக்குமென்று தெரிந்துக் கொள்வது எளிதல்ல. அவர்களாக படிக்க துவங்கும் வரையில், தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம் வரும்வரை பெற்றோர்களாக நாம்தான் புத்தகங்களை தெரிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. அதாவது, நாம் அவர்களுக்கு இது பிடிக்கலாமென்று எண்ணி மட்டுமே தெரிவு செய்கிறோம். அது சில சமயங்களில் சரியாகவும், சில சமயங்களில் தவறாகவும் போய்விடுகிறது. இந்த புத்தகம் அப்படி சரியான ஒன்றாக, நீண்ட நாள் நினைவில் நிற்கக் கூடியதாக இருக்கும் என நம்புகிறேன்.


மூலக்கதை மலையாளத்தில் : ஜேகப் சாம்சன் முட்டடா

பதிப்பகம் : தூலிகா

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger