Wednesday, October 16, 2013
தொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை
Posted by Dhiyana at 11:41 PM 2 comments
Labels: குழந்தை வளர்ப்பு, சந்தனமுல்லை
Thursday, August 4, 2011
பொழிலனின் கதை நேரம்!! (ஒளி/ஒலி வடிவில்)
Posted by ஆகாய நதி at 4:19 AM 8 comments
Labels: குழந்தைகளுக்கான கதைகள்
அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி!!
குழந்தைகளின் கருத்துக்களுக்குப் பெரிதும் மதிப்பளிக்கப்படுகிறது.... இது அவர்களை இன்னும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கை உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!!
ஒரு வாரத்திற்கு ஒரே ஒரு புதிய குழந்தை பள்ளிக்கு முதன் முதல் வகுப்பிற்கு என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல முறையாகத் தோன்றுகிறது.... அந்த ஒரு வாரம் முழுவதும் அந்த குழந்தையை நன்கு கண்காணித்து, புரிதலுடன் அந்த குழந்தையை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவும் குழந்தையும் ஆசிரியருடன் எளிதில் நெருங்கிப் பழகவும் இது உதவும்.... நம் ஊரில் எப்படி என்று தெரியவில்லை.... நம் ஊரிலும் இதே வழக்கம் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.... இல்லையென்றாலும் இப்படி சில மாற்றங்கள் வந்தால் வரவேற்போம்...
இங்கே தமிழ் மொழி பயிலவும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை தமிழ் வகுப்புகள் தனி "தமிழ் பள்ளியாக" இருக்கின்றன...
ஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான் :)
Posted by ஆகாய நதி at 4:02 AM 13 comments
Labels: அனுபவம், என் குழந்தைக்கான பள்ளி
Tuesday, July 19, 2011
Sweet Moments -4
இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .
"டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !
"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"
"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."
"இரேன்ம்மா ..."
அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .
"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .
ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;
ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .
"எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி ."
"ஹேய் ...குட்டி என்னடா இது ! "எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.
"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,
"எம்பொண்ணாக்கும்! "
ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))
Posted by KarthigaVasudevan at 9:23 AM 5 comments
Thursday, February 24, 2011
குழந்தைகளின் ஆச்சரியமூட்டும் மொழிகளைக் கற்கும் திறன் - The linguistic genius of babies
எம்மாதிரி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு தமிழ்த்திறனை வளார்க்க, பிறந்ததிலிருந்தே குழந்தைகளுடன் வீடுகளில் தமிழில் மட்டுமே எந்தளவு முடியுமோ அந்தளவிற்குக் கதைப்பதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.
Posted by Anna at 4:00 PM 7 comments
Tuesday, February 22, 2011
அம்புலிமாமா
அம்புலிமாமா பழைய பதிப்புகளை இணையத்தில் பார்த்தவுடன் மகிழ்ச்சி. தமிழ் புத்தகங்கள் 1947 முதல் 2005 வரை கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், கன்னட, மலையாளம், பெங்காலி, மராட்டி, ஒரியா போன்ற முக்கிய மொழிகள் அனைத்திலும் கிடைக்கின்றன. எனக்குத் தான் இது புதிய தகவலா என்று தெரியவில்லை. என் பால்யத்தில் முக்கிய இடம் கண்டிப்பாக அம்புலிமாமாவுக்கு உண்டு. http://www.chandamama.com/archive/storyArchive.htm வில் அனைத்து பழைய எடிசன்கள் உள்ளன. விளம்பரங்களும் தனியாக உள்ளன.
இது என் ப்ளாகில் எழுதியது
Posted by Dhiyana at 11:20 AM 1 comments
Labels: தீஷு, புத்தகங்கள், புத்தகங்கள்
Friday, December 31, 2010
Sunday, December 19, 2010
மகனே லட்சுமணா !...
ஆராயாத செய்கையும் அவகாச அழுகையும் : (சிறுகதை - Moral story )
ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது மனைவியான லக்ஷ்மியும் போகாத சேத்திரங்கள் இல்லை வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஒரு குழந்தைக்காக பல காலம் தவமிருந்தனர் .ஆனாலும் அவர்களது அழகான் வீட்டில் குழந்தை இல்லாத நிலையே தொடர்ந்து நீடித்தது ,
இந்த சந்தர்பத்தில் ஒரு நாள் வயலுக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தணர் தான் வந்து கொண்டிருந்த பாதையோரம் ஒரு கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்ட காயங்களோடு துவண்டு கிடப்பதைக் காண்கிறார். அந்த கீரிப்பிள்ளைக்கு மனமிரங்கி "ஐயோ பாவம் சின்னஞ்சிறு ஜீவன் ...இதன்காயதிற்கு மருந்திடா விட்டால் அது இறந்து போகக் கூடும் என்றெண்ணி " தன வீட்டுக்கு அதை தூக்கி வந்து அதன் காயங்களுக்கு பச்சிலை வைத்துக் கட்டி போஷிக்கிறார்.
நாட்கள் நகர்கின்றன. பிள்ளையில்லாத வீட்டில் கீரி பிள்ளை ஆனது,துள்ளி விளையாடியது .அந்தணரும் அவரது மனைவியும் கீரிக்கு லட்சுமணன் என்று ஆசை ஆசையாய் பெயரெல்லாம் சூட்டி வளர்த்து வந்தனர். அவர்கள் குழந்தை வரம் வேண்டி எங்கு சென்றாலும் இப்போது கீரிப்பிள்ளையும் உடன் சென்றது சேத்ராடனங்களுக்கெல்லாம். அந்தணர் வயலுக்குப் போனால் லக்ஷ்மிக்கு துணையாய் வீட்டில் இருந்து கொண்டது கீரிப்பிள்ளை.
பழகப் பழக உற்ற துணையாய் அந்த தம்பதிகளின் வாழ்வில் சின்னதாய் ஒரு சுவாரசியம் சேர்த்துக் கொண்டிருந்தது அந்த கீரிப்பிள்ளை.
லட்ச்சுமணா என்றழைத்து விட்டால் போதும் கீரி எங்கிருந்தாலும் தலை நீட்டி எட்டிப்பார்க்கும் அந்த அளவுக்கு அந்தணர் அதை பாசமும் பரிவுமாய் பழக்கி வைத்திருந்தார்.
வராது வந்த மாமணி போல கிருஷ்ணனின் சமந்தக மணி போல இந்த அந்தண தம்பதிகள் செய்த சேத்ராட னங்களின் பலனோ இல்லை கீரி வீட்டுக்குள் நுழைந்த சுபயோக புண்யமோ மிக நீண்ட காத்திருப்பின் பலனாக அந்தணரின் மனைவி லக்ஷ்மி ஒருநாளில் கர்பவதி ஆனார்.
பத்து திங்கள் கழிந்த பின் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.பல புண்ய ஸ்தலங்களுக்கு கால் தேய நடையாய் நடந்ததன் பலனாகப் பிறந்த குழந்தை என்று எண்ணியதால் அந்தணரும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையின் மீது தங்களது உயிரை வைத்தனர்.
கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைக்கு அண்ணனானது.
அக்கம் பக்க வீடுகளில் இருந்தோறேல்லாம் ,
"இதுநாள் வரையிலும் நீங்கள் கீரிப் பிள்ளை வளர்த்ததெல்லாம் சரி தான் ,இனி அதை காட்டில் விட்டு விடுங்கள்,கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி ஒரு காட்டு விலங்கை எல்லாம் போஷித்து வருவது அத்தனை உசிதமானதல்ல,கீரிப் பிள்ளை பாம்பையே எதிர்த்து சண்டையிட்டு வெல்லக் கூடியது,என்ன தான் வீட்டில் வைத்து வளர்த்தாலும் அதன் புத்தி மாறி விடுமா?! "
என்று அந்தண தம்பதிகளை குழப்பவாரம்பித்தனர்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது ஒரு கோடைநாளில் அதற்கு ஒரு வயது முடியுந் தருவாயில் அதிகாலையில் அந்தணர் வழக்கம் போல தன குழந்தையைக் கொஞ்சி விட்டு வயலுக்குப் போகிறார்.அவரது மனைவி தன் குழந்தைக்கு அமுதூட்டி அது தூங்கியதும் தொட்டிலில் கிடத்தி விட்டு வழக்கம் போல குடிக்க தண்ணீர் சேந்தி வர அருகாமைக்கிணற்றுக்குப் போகிறார்.
வழியில் அண்டை அசலில் குழந்தை எங்கே என்று விசாரித்தவர்களிடம் எல்லாம் ;
"அவன் தூங்குகிறான்,அவனது அண்ணன் லட்சுமணன் அவனுக்கு காவலிருக்கிறான் " என்று சொல்லியவாறு செல்கிறார் அந்த அம்மாள்.
பெரிய காவல் தான் என்று முகவாயில் கை வைத்து அதிசயித்துக் கொண்டார்கள் அந்த அண்டை அசலார் அனைவரும்.
இந்தம்மால் வீடு வந்து சேரும்முன்னே வயலுக்குப் போன அந்தணர் காலை போஜனத்துக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பாதையில் முன் போலவே ஒரு கீரியைப் பார்கிறார். வெறும் கீரியை மாத்திரம் அல்ல ,இந்தக் கீரி ஒரு பாம்புடன் படு ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் பார்க்க நேர்கிறது அவருக்கு.
வீரியமிக்க அந்தச் சண்டையில் கீரி ஜெயிக்கிறது,வாயெல்லாம் ரத்தக் கரையோடு பாம்பைக் கொன்று விட்டு தலை தூக்கிப் பார்த்த அந்தக் கீரியை கண்டதும் அந்தணரும் மெல்லிய மனம் ரத்தம் கண்ட பயத்தில் சட்டென்று துணுக்குற்றுப் போகிறது .
"என் லட்சுமணன் இத்தனை பயங்கரமான கீரி இல்லை, அவன் வீட்டுக் கீரி அவனுக்கு இத்தனை ஆக்ரோஷம் எல்லாம் இருக்க சாத்தியமில்லை"
என்று தன் மனதுக்குள் பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டே பார்வை தழைத்துக் கொண்டு விடு விடுவென தனது வீட்டுக்கு நடையை எட்டிப் போடுகிறார் அந்த அந்தணர்.
வேக வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த அந்தணரின் கண்ணில் பட்ட முதல் காட்சி ...
குழந்தையின் தொட்டில் மீது வாயெல்லாம் ரத்தக் கறை படிந்து போன கீரிப்பிள்ளை லட்சுமணனின் முகம் தான்.
வழியில் கண்ட கீரி பாம்புச் சண்டையால் மனதை அலைக்கழித்த சில நிமிட பயம் மூளைக்கு ஏற அந்தணர் அதீத உணர்வுக்கு ஆட்பட்டு சுவற்றில் அலங்காரத்துக்கு சாற்றி வைத்த வாளை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்தார் தொட்டில் ஊஞ்சல் கட்டையில் அமர்ந்திருந்த லட்சுமணனை இரண்டு ஒரே போடில் துண்டுகளாகப் பிளந்தார்.
தன் எஜமானன் ... தகப்பன் ஸ்தானம் அளித்த ஆருயிர் அந்தணரின் அற்புத வாள் வீச்சில் திக்கித்து உறைந்த கண்களோடு உயிர் விட்டது கீரி.
" நீயோ என்னைக் கொன்றது !?"
தண்ணீர் குடத்தோடு வீட்டுக்குள் நுழைந்த லக்ஷ்மி அம்மாள் நிகழ்ந்த சம்பத்தில் அதிர்ந்து குடத்தை நழுவ விட்டார்.மண்குடம் உடைந்து சிதறியது நீர் வழிய வழிய....;
என்ன காரியம் செய்தீரோ என் அருமை கணவரே!
அந்தணர் பேசவில்லை அவர் ... கண்கள் பேசின ;
"ஒழிந்தாய் காட்டுக் கீர்ரியே என் குழந்தையையா கடித்தாய்! " தாவி ஓடிப் போய் தொட்டிலில் கிடந்த குழந்தையை அள்ளி எடுத்தார். தகப்பன் வாடை கண்டு மெல்லச் சிணுங்கி விழித்த குழந்தை முக மலர்ந்து சிரிக்கவும் உச்சந்தலையில் இடி விழுந்தது அந்தணருக்கு.
குழந்தைக்கு ஒன்றுமில்லையா!
அப்படியானால் லட்சுமணன்! பாதையில் கண்ட கீரி நீயோ! என் குழந்தையின் பொருட்டு உன் உயிரை மதியாது அத்தனை வீரியமாய் சண்டையிட்டது நீயே தானா!
ஐயோ லட்சுமணா....என் மகனே! உன்னை நான் கொன்றேனே!
அலறித் துடித்தார் அந்தணர்.
"ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதுண்டோ!"
மாரல் ஃஆப் தி ஸ்டோரி :
ஆராயாது ஒரு விஷயத்தை செய்து விட்டு,அதன் பலனை எண்ணி அவகாசத்தில் அழுது கொண்டே இருப்பது நல்லதல்ல,எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பே ஒன்றுக்கு இருமுறை யோசித்தே செய்தல் நலம்.
Posted by KarthigaVasudevan at 7:06 AM 7 comments
Labels: சிறுகதை, நீதிக்கதை, மகனே லட்சுமணா
Monday, November 29, 2010
கொஞ்சம் சொந்தக்(நொந்த)கதை :
எந்நேரம் வேண்டுமானாலும் விழலாம் , இன்றே ...நாளையே என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.ஆனால் இது ஒரு முக்கியமான நாள்...தருணம் . etc ...etc ,கடந்த மூன்று நாட்களாகவே என் மகள் கொஞ்சம் சோமாகத் தான் இருக்கிறாள்,
முதல் முதல் என்றால் எல்லோருக்குமே அப்படித் தான் போல.எந்நேரமும் என்னை ஒட்டிக்கொண்டே அலைகிறாள் ,
ம்மா ...ரொம்ப வலிக்குமா ?
ச்சே...ச்சே ...இல்லடா குட்டி ;
சுஷ்மிதா சொன்னாளே ரொம்ப வலிக்குமாம் ,உயிரே போற மாதிரி வலிக்குமாம்.
அதெல்லாம் இல்ல...
அவ சொன்னாளே !!! சுஷ்மி பொய் சொல்ல மாட்டா !
ஏன் ?
அவ மகர ராசியாம்
வாட்?!
ம்ம்...டி.வி ல சொன்னாங்க .
சுஷ்மி பொய் சொல்ல மாட்டான்னா ?!
இல்ல ...வாய்மை தவறாத மகர ராசி நேயர்களேன்னு...
( !!! )வேறென்ன பல்பு தான் .
அவ சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாடா குட்டிம்மா .
போம்மா நீ பொய் சொல்ற .
நானா ...ச்சே ...ச்சே ...காட் ப்ராமிஸ் .வலிக்கவே வலிக்காது ,நீ வேணா பாரேன்.
ம்மா ...
ம்ம் ...சொல்லு
ம்மா
சொல்லுடா தூங்கும் போது எவ்ளோ தடவ எழுப்புவ.
ம்மா ...
கண்ணம்மா ...ப்ளீஸ்டா ...தூங்க விட்றா ...
சொல்லிட்டு தூங்கும்மா
சரி கேளு
எப்போ பல்லு விழும்.
அது சீக்கிரம் விழுந்திரும் ,நீ தூங்கு ,காலைல கூட விழுந்தாலும் விழலாம்.
ஐயோ அப்போ என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்கல்ல.
இல்ல ..இல்ல பண்ண மாட்டாங்க.
இல்ல பண்ணுவாங்க .ஒனக்கு தெரியாது.
சரி ...சரி தூங்குடா இப்போ .
இல்ல ...எனக்கு பல்லு மறுபடி எப்போ முளைக்கும்?
சீக்கிரமாவே தான் .
அதான் எவ்ளோ சீக்கிரமா முளைக்கும்?
(தேவுடா ...என்னைக் காப்பாத்த யாருமே இல்லியா?!) பக்கத்தில் தேவ் நல்ல தூக்கத்தில் .
ஹரிணிக்கு இன்னும் கேள்விகள் இருந்தன கேட்பதற்கு .
ஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எத்தனைக்கெத்தனை சுவாரஸ்யமோ அத்தனைக்கத்தனை நொச்சுப் பிடித்த பதவியும் தான்.
:((((
இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ அந்த இத்தனூண்டு மண்டைக்குள் ( மூளைக்குள்- மூளைக்குள்னு ஏன் எழுதலைன்னு அவ நாளைக்கு வந்து கேள்வி கேட்டுடக் கூடாதே! அதுக்கு தான் இந்த அடைப்புக் குறி)
நோட்:
நான் இத்தனை கேள்விகள் கேட்டிருக்கவில்லை என் அம்மாவை , ஏழு வயதில் மனதில் உறுதி வேண்டும் படம் பார்க்க அழைத்துப் போயிருந்தார்கள் ,இடைவேளையில் தியேட்டரில் முறுக்கு வாங்கிக் கொடுத்தார்கள் அம்மாவும் சித்தியும். ;
"கடக்" முன் வரிசைப் பற்களில் ஒன்று காலி.
அப்படியே முறுக்கு பேப்பரில் சுற்றி பத்திரப்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது . ஏன் எதற்கு அப்படிச் செய்தேன் என்றெல்லாம் அப்போது கேட்கத் தோன்றியதே இல்லை .
ஆனால் இப்போதைய குழந்தைகளிடம் கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அம்மாக்களும் அப்பாக்களும் வெறுமே மேலோட்டமாகப் பதிலென்ற பெயரில் எதையாவது சொல்லி சமாதனப்படுத்தி சமாளிக்க முடியவில்லை. அவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.
Posted by KarthigaVasudevan at 9:58 PM 8 comments
Labels: கேள்விகள் ஆயிரம், சொந்தக் கதை., ஹரிணி
Monday, November 15, 2010
புத்தகங்கள்
அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
வலையில் பார்த்த சில புத்தகங்கள்..... பதிவிறக்கமும் செய்யலாம்
http://www.childrensbooksforever.com/
குழந்தைகளின் வயதுகேர்ப்ப வகைபடுத்தி இருகிறார்கள்.
அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.
Posted by Veena Devi at 4:35 PM 1 comments
Labels: குழந்தைகளுக்கான கதைகள், வீணா
Sunday, November 14, 2010
Wednesday, October 6, 2010
வாங்க!!! விளையாடலாம்
இந்த பதிவு என் தளத்தில் எழ்தியது. இங்கும் பதிகிறேன்.
என் குழந்தை எல்லா சினிமா பாட்டும் பாடும், எல்லா சீரியல் பெயரும் தெரியும் என்று பெருமை அடித்துக் கொள்ளும் அம்மாக்களை நாம் பார்த்து இருக்கிறோம். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் டிவி பார்க்கக் கூடாது. வேகமாக வளரும் அவர்கள் மூளையில், டிவியில் வேகமாக மாறி மாறி வரும் காட்சிகள் பதிந்து, பின்னாளில் அதே வேகத்தை அவர்கள் வாழ்க்கையிலும், பள்ளியிலும் எதிர்பார்த்து, கிடைக்காததால் அவர்கள் அடையும் எதிர்பலனை இங்கு காணலாம்.
அதே போல் குழந்தைகள் விளையாட வேண்டிய அவசியத்தை இங்கு காணலாம். தீஷுவிடம் அப்பா உன்னோட என்னவெல்லாம் செய்வார் என்றவுடன், அவள் சொன்னது,"கதை சொல்லுவார், யானை மாதிரி, தவளை மாதிரி, குதிரை மாதிரி போக சொல்லுவார்... என்று லிஸ்ட் நீண்டது. அம்மா என்னவெல்லாம் செய்வார் என்றவுடன் ஒன்னுமே செய்ய மாட்டாள் என்றாள். அவளுக்கு அவள் வயதுக்குப் பிடித்தது கதை கேட்பதும், விளையாடுவதும்.
யாரும் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் நான் தீஷுவுடன் கழிக்கும் என் நேரத்தைப்பதிவதன் சொந்த காரணங்கள் - ஒன்று பின்னாளில் தீஷு படித்துப் பார்ப்பாள், மற்றொன்று பதிவு எழுதி நாளாகிவிட்டாது என்பதால் எதையாவது புதிதாக யோசிக்கத்தூண்டும் எண்ணம். Childhood is a journey, not a race. நம் குழந்தையின் பயணத்தில் நாமும் பங்கு கொள்ளலாமே.
நம் குழந்தையை மகிழ்விக்க அவர்களுடன் சேர்ந்து ராக்கெட் ஸைன்ஸ் பற்றி பேச வேண்டாம். கையைப் பிடித்துக் கொண்டு வாக்கிங் போனால் போதும். குழந்தையின் டிவி நேரத்தைக் குறைத்து, அவர்களுடன் நம்முடைய நேரத்தைச் செலவிட்டு, அதை பதிவோம். நாம் எல்லாம் சேர்ந்து செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.
சேர்ந்து செய்வதற்கு என்னுடைய ஐடியா:
1. குழந்தையுடன் செய்த ஏதாவதை ஒன்றை தங்கள் தளத்தில் பதிய வேண்டும். குழந்தையுடன் சேர்ந்து செய்தது எதுவாகவும் இருக்கலாம். வாசித்தது, பேசியது, விளையாண்டது, குதித்தது, சமைத்தது, நடந்தது என எதுவாகவும். குழந்தை வயது வரம்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
2. ஒவ்வொரு புதன் கிழமையும் நான் வாங்க, விளையாடலாம் என்ற தலைப்பில் ஒரு பதிவு போடுவேன். பதிவின் முடிவில் ஒரு லிங்க் வைத்திருப்பேன். அந்த வாரம் முழுவதும் அந்த லிங்க்கில் நீங்கள் உங்கள் தளத்தில் பதிந்த இடுகையில் லிங்க்கை ஏற்றலாம். அதனால் நீங்களும் புதன் கிழமை தான் பதிவு போட வேண்டும் என்பது இல்லை. அந்த வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் பதிந்து, உங்கள் இடுகையை லிங்க்கில் ஏற்றலாம்.
3. உங்கள் இடுகையின் முடிவில் dheekshu தளத்தில் இணைத்திருப்பதைத் தெரிவித்தால், இங்கு வந்து பிறருடைய லிங்கையும் படிக்க அனைவரும் வசதியாக இருக்கும்.
நாம் இந்த சிறு முயற்சியின் மூலம், பிறரையும் பங்கு கொள்ள செய்து வளமான தலைமுறை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த முயற்சியை வேறு விதமாக செய்யலாம் என்று தோன்றினால் சொல்லுங்கள்.மாற்றிக் கொள்ளலாம்.
லிங்க் பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். எனக்கும் இது தான் முதல் முறை. தெரிந்த வரை சொல்லுகிறேன். இந்த பதிவின் முடிவிலும் லிங்க் இருக்கிறது. ஏதாவது ஒரு பதிவை பதிந்து லிங்க் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் இடுகையை இந்த லிங்கில் ஏற்றுங்கள்
Posted by Dhiyana at 6:51 AM 1 comments
Thursday, September 2, 2010
ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்
முந்தா நேற்று மருத்துவமனைக்குச் சென்றபோது ஒரு குழந்தையைச் சந்தித்தேன். பெண் குழந்தை; எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். பார்வையாளர் கூடத்துக்கும் வெளியே செருப்புகள் வைக்கும் இடத்துக்கும் இடையில் ஓடிக் கொண்டே இருந்தாள். அவள் வயதுக்குக் கொஞ்சம் வளர்த்தியான பெண். என் மகள் நேஹாவைப் பார்த்ததும், ஆசையாகத் தூக்கிக் கொண்டாள். இவளும் 'அக்கா அக்கா' என்று அவளுடன் விளையாடத் துவங்கி விட்டாள்.
நான் உள்ளே நுழைந்து அமர்வதற்குள் ஒரு நூறு வார்த்தையாவது பேசியிருப்பாள் அந்தச் சிறுமி. "ஆன்டி, உங்க பொண்ணா? ரொம்ப க்யூட்டா இருக்கா...எனக்கு இந்த மாதிரி சின்னக் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க ஸ்கூல்லயே நான் தான் ரொம்பப் பிரில்லியன்ட். என்னைத் தான் எங்க களாஸ்ல லீடர் ஆக்கி இருக்காங்க எங்க மிஸ்..."
சுவாரசியமாகவும் ஆசையாகவும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவள் அம்மாவிடம் திரும்பி, "அம்மா, நம்ப விஷயத்தை இந்த ஆன்ட்டி கிட்ட சொல்லிடலாமா....அது இல்லம்மா... அந்த இன்னொரு விஷயம்.." என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.நம்பினால் நம்புங்கள், நான் சென்று அமர்ந்து இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை.
அவர்களை முன்பின் பார்த்தது கூடக் கிடையாது.அவள் அம்மாவின் முகம் அடைந்த தர்மசங்கடத்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவள் அம்மா நன்றியுடன் ஒரு புன்னைகை பூத்தார்.
ஒரு நிமிடம் உட்காரவில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் "ஆன்டி நான் டான்ஸ் ஆடிக் காட்டவா" என்று அவள் பாட்டுக்குத தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த கைப்பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, 'யாருக்கு ஆன்ட்டி ஃபோன் பண்றீங்க?' என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.
நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தைகள் இப்படி இருப்பது இயல்பு தான்.ஆனால் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி?நான் செய்வதறியாமல் திகைத்து அவர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவர் லேசாக, "ஏய், இங்கே வா" என்றாரே ஒழிய, மற்றபடி பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப் புரியவைக்கப் படவில்லை என்பது புரிந்தது. குழந்தையின் நலனுக்காக இதைச் செய்திருக்க வேண்டியது அவசியமில்லையா?
பெரியமனுஷி போல் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவள், அவள் அம்மா, 'கொஞ்சம் இவளைப் பாத்துக்கங்க' என்று என்னிடம் விட்டுவிட்டு டாக்டரைப் பார்க்க உள்ளே சென்ற போது சின்னக் குழந்தை போல் கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிடம் தான்.திடீரென்று கண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல குதியாட்டம் போடத் துவங்கி விட்டாள்.
அவ்வப்போது, "உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை ஆன்டி" என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், "உங்க அம்மா இப்படிக் குதிக்கக் கூடாதுன்னு சொன்னாங்க இல்ல. இங்ல வந்து பாப்பா கூட உட்காரும்மா." என்றேன்.அவள் கேட்டால் தானே? இவள் போடும் ஆட்டத்தில் ஆயாசமடைந்து நேஹாவே சமத்தாக என் மடியில் உட்கார்ந்து விட்டாள் சிறிது நேரத்துக்குப் பிறகு!
அவள் அம்மா வெளியில் வரும் போது, டாக்டர் இவள் குரலைக் கேட்டு, "யாரு உங்க பொண்ணா?" என்று கேட்டார். தன்னைப் பற்றித் தான் கேட்கிறார்கள் என்று அறிந்ததும் யாரும் அழைக்காமலே உள்ளே போனவள், பதவிசாக டாக்டர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவர்கள் கேட்டதற்குச் சமத்தாகப் பதிலளித்தவள், "தேங்க்யூ மேம்" என்றபடியே வெளியில் வந்தாள்.
உண்மையில் அந்தப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பும் தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவளது செயல்கள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன.
பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் கூட சட்டென்று நெருங்கி அன்யோன்யமாவதும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். ங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவள் அம்மாவுக்கும் அவளுக்குமான ஏதோ ரகசியத்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்லட்டுமா என்றதையும் எந்த ரகத்தில் சேர்ப்பது?
உண்மையில் அவள் 'பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்' என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் பத்து வயதில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா நன்றாகக் கொடுத்திருப்பார்கள்.
அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்களுக்கு என்ன தோன்றுகிறது? Am I over reacting, just because she is some stranger's kid?
இது பற்றி சிந்தித்த போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்:அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம். இந்த இடுகையினைப் பாருங்கள். முரட்டுத்தனம் மிகுந்த ஒரு சிறுவனை ஒரு பள்ளியில் எப்படி மாற்றி இருக்கிறார்கள் என்று.
ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (attention seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்படி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?
Little women என்கிற புகழ்பெற்ற நாவலில் ஒரு சம்பவம் வரும். நான்கு மகள்கள் கொண்ட அம்மா தன் சுட்டியான கடைசி மகளிடம் பேசுவதாக: "கண்ணா உனக்கு நிறைய அறிவும் திறமைகளும் இருக்கு. அதுக்காக அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திறமையும் நீ வளர்த்துகிட்டே போனா, உன் பேச்சிலயும் உன் செய்கைகளிலுமே அது இயல்பா வெளிப்படும். நீயா வெளிச்சம் போட்டுக் காட்டறது அழகில்லை" என்று.
அப்போது அவளது அக்கா ஜோ (கதையின் நாயகி) சொல்வாள், "ஆமாம், உன் கிட்ட ஏழெட்டு தொப்பி, பத்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய போனா எப்படி இருக்கும்? அதே மாதிரி தான்" என்பாள்.போட்டிகளும் விளம்பரங்களும் அதிகரித்து வரும் இன்றைய வியாபார உலகத்தில் இந்தச் சிறு அறிவுரை (piece of wisdom) செல்லாக்காசாகி விட்டதோ?
Posted by Deepa at 2:47 PM 8 comments
Labels: Behavior, Deepa, குழந்தை வளர்ப்பு
Thursday, July 8, 2010
மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 2
ஆச்சர்யத்தில் உறைந்து போன மச்சேந்திர மனோகரனை அதிக நேரம் இம்சிக்காமல் உடனே பேச ஆரம்பித்தது மீன் ;
இளவரசனே என்னை உன் கையில் இருந்து நொடியில் கடலுக்குள் வீசு இல்லையேல் நான் அடுத்த பத்தாம் நிமிடம் வெறும் கருவாடாகிப் போவேன்,இது உண்மை ,என் சொல்படி செய்,சீக்கிரம்...சீக்கிரம் என்னை கடலுக்குள் வீசு. சொல்வதை செய் , மீன் கோபமாய் ஆணையிட்டது
மச்சேந்திரனுக்கு மீன் பேசுவது ஒரு அதிசயம் எனில் அது இவனுக்கு ஆணையிடுவது இன்னும் அதிசயமாய் தோன்றியது.
ஏ ...தங்க மீனே உன்னை பிடித்துக் கொண்டு போய் என் தங்கையின் கையில் ஒப்படைக்காவிட்டால் நான் அவளுக்கு பாசமிக்க அண்ணனாக இருக்கும் தகுதியை இழந்து விடுவேன் அதனால் வாயை மூடிக் கொண்டு என்னோடு வா.அரண்மனையின் தங்கத் தொட்டியில் உன்னை விட்டதும் பிறகு நீ பேசுவதை நான் பொறுமையாக கேட்டுக் கொள்கிறேன் .
அவன் எள்ளலாய் கையிலிருக்கும் மீனைப் பார்த்துக் கொண்டே பேசப் பேச மீன் இப்போது சுவாசமின்றி துடித்து துள்ளி துள்ளி திணற ஆரம்பித்திருந்தது .
"இ...ள...வர...சனே நான் இத்த...னை சொல்லியும் கேளா...மல் நீ தவறு செய்கிறாய் ..இதற்கான ப...ல...னை"
(அதற்குள் பத்தாம் நிமிடம் கடந்து விட தங்க மீன் காய்ந்து வெறும் கருவாடகிப் போகிறது!
மச்சேந்திர மனோகரன் சட்டென நிகழ்ந்து விட்ட இந்த காரியம் கண்டு திக்பிரமையில் அதிர்ந்து போனான்.
கப்பலின் விளிம்பை கடலுக்குள் இருந்தவாறே தலை உயர்த்தி நோக்கினான்.மீனலோஷினி இந்த தங்க மீனுக்காக எத்தனை ஆசையோடு காத்துக் கொண்டிருப்பாள் ,அவளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்ற வருத்தம் அவனை உற்சாகமிழந்து தளர்ந்து போக வைத்தது ,கையில் கருவாடாகிப் போன மீனை ஏந்திக் கொண்டு தங்கைக்கு என்ன பதில் சொல்லப் போகிறோமோ என்ற அளவில்லாத ஏமாற்றத்துடன் இளவரசன் கப்பலை நோக்கி நீந்தி நூலேணியில் கப்பலுக்குள் ஏறி இளவரசியும் மன்னனும் மற்றவர்களும் இருக்கும் இடத்துக்கு வருகிறான் .
அங்கே அவன் கண்ட காட்சி அவனை பேரதிர்ச்சியில் சில்லிட்டு உறைய வைப்பதாக இருந்தது.
என்னருமை தங்கைக்கு என்ன ஆயிற்று ? ஏன் ...இப்படி உருமாறிப் போனாள் என்று மச்சேந்திரன் தங்கை மீனலோஷினியின் அருகே விரைந்து செல்கிறான்.
இவனைப் போலவே கடலுக்குள் தங்க மீனைத் தேடச் சென்ற மற்ற சகோதரர்களும் அங்கே முன்பே வந்து விட்டபடியால் அனைவருமே ஒரே விதமான அதிர்ச்சியால் தாக்கப் பட்டு செய்வதறியாது திகைத்து போய் நின்றிருந்தனர்.
மன்னன் மற்றும் மகாராணியின் கண்களில் கண்ணீர் பெருகி ஓடுகிறது,
தனக்கு நேர்ந்த உருமாற்றத்தால் அதிர்ச்சியில் மயங்கித் துவண்டிருந்த இளவரசி மீனலோஷினி தன் அன்னையான மகாராணியின் மடியில் தலை சாய்த்திருந்தாள். தலை உடல் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது ஆ...னால்....ஆ...னால் அவளது கால்....கால்...கால்களை மட்டும் காணோம்...
எங்கே போயின இளவரசியின் கால்கள் !
இளவரசியின் கால்களுக்கு என்ன ஆயிற்று !!!
நாளை வரை காத்திருங்கள்.
தொடரும்...
Posted by KarthigaVasudevan at 9:07 AM 6 comments
Labels: கார்த்திகாவாசுதேவன் தொடர்கதை, சிறுவர் தொடர்கதை, மீன் இளவரசி மீனலோஷினி
Wednesday, July 7, 2010
சுனிதா கிருஷ்ணன் - பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்
http://sunithakrishnan.blogspot.com/
http://www.amazingwomenrock.com/ted-talks/sunitha-krishnans-fight-against-sex-slavery.html -மனம் இளகியவர்கள் இந்த விடியோவைப் பார்க்கவேண்டாம் என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
Posted by Anonymous at 7:43 PM 4 comments
Labels: சுனிதா கிருஷ்ணன், ப்ரஜவாலா, விஜி
மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 1
முன்னொரு காலத்தில் மச்சேஸ்வரம் என்றொரு நாடு இருந்ததாம்,அந்த நாட்டை மச்சேந்திரன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆண்டு வந்தான்,மன்னனுக்கும் மகாராணிக்கும் நிறையக் குழந்தைகள் இருந்தாலும் எல்லாமே ஆண் குழந்தைகளாகவே இருந்ததால் அவர்களுக்கு பெண் குழந்தை வேண்டும் எனும் ஏக்கம் நெடுநாட்களாக இருந்து வந்தது.அந்தக் கால வழக்கப்படி மன்னன் பெண்குழந்தை வேண்டி பல யாகங்களை செய்து பார்கிறான்,பல கோயில் தலங்களுக்கும் மனைவியோடும் மந்திரி பிரதாநிகளோடும் சென்று வருகிறான்,இப்படி இருக்கையில் ஏழு ஆண்குழந்தைகளுக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து அதிசயமாக அவர்களது விருப்பப்படி எட்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை மகாராணிக்குப் பிறக்கிறது.அந்தப் பெண் குழந்தைக்கு மீனலோஷினி என்று பெயரிட்டு அருமை பெருமையாக ராஜ தம்பதிகள் வளர்த்து வருகிறார்கள் .
மீனலோஷினி அவளது அண்ணன்கள் ஏழு பேரிடத்தும் மிகுந்த அன்புடையவளாக வளர்கிறாள்.தங்கை மீது ஏழு அண்ணன்களுக்கும் இருக்கும் பாசத்தை எதைக் கொண்டும் அளக்க இயலாது அத்தனை பிரியமான சகோதரர்கள் அவர்கள். மீனலோஷினி மச்சேஸ்வரத்து அரண்மனையின் செல்ல இளவரசியாக வலம் வருகிறாள். ராஜாவுக்கும் ராணிக்கும் அவளே உயிர் என்றாகி நாட்கள் நகர்கின்றன. இளவரசி வளர வளர அவளுக்கு சகல விதமான கலைகளும் ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்து அவளை தன்னிகரில்லாத பெண்ணாக உருவாக்க வேண்டும் என மன்னன் விரும்புகிறான்,அவளது அண்ணன்களும் அப்படியே விரும்புகிறார்கள்.இப்படி எல்லோரும் இன்புற்று இருக்கும் ஒருநாளில் ராஜ குடும்பத்தினர் தங்கள் நாட்டின் கடற்கரை பிரதேசம் ஒன்றிற்கு சுற்றுலா செல்கின்றனர்.
மச்சேஸ்வரம் ஒரு அழகான கடற்கரை நாடு.அந்த நாட்டைச் சுற்றிலும் மூன்று புறமும் நீலக் கடல் சூழ்ந்து கரைகள் மல்லிகைப் பூக்களாய் நுரை பொங்க அலையடித்துக் கொண்டு பார்க்க பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்,கடற்கரையை ஒட்டி மன்னன் ஏராளமான நந்தவனங்களை அமைத்து பராமரித்து வந்தான்.நந்தவனத்துப் பூக்கள் எல்லாம் கடலின் நுரையில் சிக்கி வண்ண வண்ண நுரைப்பூக்க்ளாகி கடற்கரையே வண்ணத்துப் பூச்சி போல பல வண்ணங்களுடன் கண்ணைப் பறித்ததால் இளவரசி மீனலோஷினிக்கு இந்த கடற்கரை சுற்றுலா ரொம்ப பிடித்துப் போனது.
அப்படி சுற்றுலா சென்ற பொழுதுகளில் ஒரு நாள் மிதமான வெயிலுடன் ஈராக் காற்று வீசிக் கொண்டிருந்த முற்பகல் தினத்தில் பார்க்கப் பார்க்க சலிக்காத வண்ணக் கடலை ஒரு அழகான நாவாயின்(கப்பல்) மீதிருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் இளவரசி ;அவளுக்கு அப்போது பத்து வயது இருக்கும் ,சிறுமி தான் ,அந்த வயதுக்கே உரிய விளையாட்டுத் தனமும் ,துடுக்குத் தனமும் பிடிவாதமும் கூட அவளுக்கு நிறையவே இருந்தன.செல்ல இளவரசியல்லவா! கப்பலின் முனையில் நின்று கடலை கண்களால் பருகிக் கொண்டிருந்த இளவரசி திடீரென்று கடல் நடுவே துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு தங்கக் கண்ணாடி மீனைப் பார்த்து விடுகிறாள்.
அந்த தங்கக் கண்ணாடி மீன் பார்த்தமாத்திரத்தில் இளவரசியின் கண்களைப் பறித்தது ;தங்க நிறக்கண்ணாடி போன்ற வளவளப்பான உடலெங்கும் பொடிப் பொடியான வைர செதில்களுடன் வெள்ளி நிறத்தில் பளபளக்கும் குவிந்த வாயை அடிக்கடி திறந்து திறந்து மூடிக் கொண்டு நீலக் கடல் நடுவே கண்ணிமைக்கும் நேரத்தில் இடமும் வலமுமாக குசியாக துள்ளித் துள்ளி குத்தித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த மீனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் மீனாலோஷினிக்கு நேரம் போனதே தெரியவில்லை. அவள் தொடர்ந்து பல மணி நேரங்களாக அந்த மீன் விளையாட்டையே பார்த்துக் கொண்டு தன்னை மறந்து அங்கேயே நிற்கிறாள்,மதிய உணவுக்குப் போகக் கூட விருப்பமிள்ளதவலாய் அவள் அங்கே மீன் விளையாட்டை வெடிக்க பார்த்துக் கொண்டிருப்பதை பனிப் பெண்கள் மூலம் அறிந்த ராஜ தம்பதிகளும் அவளது அண்ணன்களான ஏழு இளவரசர்களும் தாங்களே நேரில் அவளை உணவருந்த அழைக்க வருகிறார்கள் .
தாங்கள் வந்திருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் இளவரசி அந்த மீனில் லயித்திருப்பதைக் கண்ட அவளது ஏழு அண்ணன்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். தங்கைக்கு பிடித்த அந்த மீனை விட்டு அவள் கப்பலின் உள்ளே உணவருந்த வரமாட்டாள் என்று புரிந்தவர்களாய் அவர்களும் அந்த மீன் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கவே மன்னன் தன் மகளிடம் ;
"மகளே இது உணவருந்தும் நேரம் அம்மா,பசியாறி விட்டு மீண்டும் நீ மீன் விளையாட்டைப் பார்க்கலாமே " என்று அழைக்கிறார்.இளவரசி தன் தந்தை அங்கே இருப்பதை அப்போது தான் பார்க்கிறாள்.உடனே அவள்;
அப்பா எனக்கந்த மீன் வேண்டும் பிடித்து தந்தால் தான் நான் சாப்பிட வருவேன் " என்று குறும்பாய் சிரித்துக் கொண்டே கூறி விட்டு கப்பலின் விளிம்பை கையால் இறுக்கப் பற்றிக் கொண்டு குனிந்து மீண்டும் கடலையும் தங்கக் கண்ணாடி மீனையும் பார்க்க ஆரம்பித்து விடுகிறாள்.
மகளின் பிடிவாதம் அறிந்தாலும் கூட ஏனோ மகளிடம் உடனே சரி மீனை பிடித்துத் தருகிறேன் என்று சொல்லாமல் ;
"கடல் மீன்கள் சுந்தந்திர உயிர்கள் மகளே ,அவற்றை பித்து தொட்டியில் அடைத்தால் பாவமில்லையா" நீ சாப்பிட வா நான் உனக்கு தொட்டி மீன்கள் வாங்கித் தருகிறேன்,அவை தொட்டிக்குப் பழக்கமான மீன்களாயிருக்கும்,புதிதாக கடலில் சுதந்திரமாகத் திரியும் மீனை தொட்டியில் அடைத்து அதன் சுதந்திரத்தை பறிக்க வேண்டாம் " என்று மன்னன் கூறுகிறான்.
இளவரசி கேட்பாளோ இதை!
அவள் ஏமாற்றத்தில் முகம் வாடி நிற்க ;
இல்லை எனக்கந்த தங்கக்கண்ணாடி மீன் உடனே வேண்டும்,எத்தனை அழகாக துள்ளித் துள்ளி கடலுக்குள் பாய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது பாருங்கள் ,தந்தையே எனக்கந்த மீன் தான் வேண்டும் பிடித்துத் தரப் போகிறீர்களா இல்லையா! மீன் இல்லையென்றால் நான் உணவருந்த வர மாட்டேன் ,மீன் கிடைத்தால் தான் இனி சாப்பிட வருவேன் இளவரசி பிடிவாதமாய் கேட்க ;
ஏழு அண்ணன்களுக்கும் வருத்தமாகி விடுகிறது ;
அட ஒரு சாதாரண மீன் அதற்குப் போய் தங்கள் அருமைத் தங்கை பட்டினி கிடப்பதா ? என்னதான் தங்க நிறத்தில் வைரச் செதில்களுடன் அதிசய மீனாய் இருந்தாலும் தங்கள் தங்கையை விட அந்த மீனொன்றும் பெரிதில்லை..அதிசயமில்லை,அவளது விருப்பமே இங்கு முக்கியம் என்று தந்தையை சமாதானப் படுத்தி விட்டு தங்களில் ஒருவர் அந்த மீனை பிடித்து வருவதாக தங்கைக்கு வாக்களிக்கின்றனர்.
மன்னன் மீனை பிடித்துத் தர மறுத்ததால் வாடி கூம்பிப் போயிருந்த இளவரசி மீனலோஷினியின் முகம் தனது அண்ணன்களின் வார்த்தைகளைக் கேட்டு சூர்யகாந்திப் பூவாய் மலர்கிறது,அவள் சந்தோசத்தில் மீனைப் போலவே துள்ளிக் குதிக்கிறாள். உடனே ..உடனே அந்த மீனைப் பிடித்து என்னிடம் தாருங்கள் நான் அதை தங்கத் தொட்டியில் வைத்து பாதுகாப்பாய் வளர்ப்பேன் என்று குதூகலமாய் பரபரக்கிறாள்.
மூத்த அண்ணன் ராஜ குடும்பத்தின் பிரத்யேகமான நுண்ணிய வெள்ளிக் கம்பிகளால் பின்னப் பட்ட மிகப் பெரிய வலையை வீசச் சொல்லி தனது கப்பலின் மீனவப் பணியாட்களை ஏவுகிறான். வெள்ளி வலை சுழற்றிக் கொண்டு கடலில் வீசப் படுகிறது.
வண்ணமயமான கப்பல் அந்தக் கப்பல் விளிம்பில் அழகான ஆடை ஆபரணங்களுடன் வெகு அலங்காரமான ராஜ குடும்பத்தார், சூர்ய ஒழியில் தக தகக்கும் வெள்ளி வலை ,அதை சுழற்றி கடலுக்குள் வீசிய மீனவர்கள் தலையில் அணிந்திருந்த பச்சை நிற,மஞ்சள் நிற கூம்பு வடிவ தொப்பிகள் ,கப்பலுக்கு மேலே வெண் பஞ்சு மேகங்களின் மறைப்பில் மென் நீலத்தில் மங்கலாய் ஒளிரும் சூரியன் ,அந்த மேகங்களை தம் இறக்கைகளால் அடித்து விலக்கி விடப்போகும் ஆர்வத்தில் அதை நோக்கி அணி அணியாய் சிறகு விரியப் பறக்கும் பறவைகள் என அந்த காட்சி தூர இருந்து பார்க்கும் கடற்கரை மனிதர்களுக்கு வெகு உல்லாசமானதொரு மனநிலையைத் தந்து கொண்டிருந்தது.
முதல் வலை வீசி வெகு நேரம் ஆகியும் மீன் சிக்க வில்லை ,அடுத்த வலை வீசலிலும் மீன் சிக்க காணோம் ,
நேரம் கடக்க கடக்க இளவரசி முகம் சுணங்கத் தொடங்குகிறது,
அவள் முகம் வதங்கினால் பார்க்க சகிக்குமோ மன்னன் மற்றும் அண்ணன்களின் மனம் ; வலை ஒரு பக்கம் வீசுங்கள் நாங்கள் ஏழு பேரும் கடலில் இறங்கித் தேடுகிறோம் இன்னும் அந்த மீன் நமக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறதா எனப் பார்க்கலாம் என ஏழு இளவரசர்களும் நீலக்கடல் நடுவே கப்பல் விளிம்பில் இருந்து ஒருவர் பின் ஒருவராக அம்பில் இருந்து புறப்பட்ட நாண் போல குதித்து மூழ்கி தங்கக் கண்ணாடி மீனுக்காக அந்தப் பகுதி கடலையே ஒரு அலசு அலசுகிறார்கள் .
தொடர்ந்து பலமணி நேர தேடலுக்குப் பின் சூரியன் மேற்கே மலை வாயிலில் விழும் முன் சிவந்த ஒளியால் கடல் கூட செந்நீலமாய் தக தகக்கும் அந்தப் பொன்னொளியில் தன் கைகளில் தங்கக் கண்ணாடி மீனேந்தி மீனலோஷினியின் கடைசி அண்ணன் குட்டி இளவரசன் மச்சேந்திர மனோகரன் கடல் நீர் சொட்ட சொட்ட கப்பல் விளிம்பை நோக்கி நீந்தி வருகிறான்.
அவன் நீந்தி கப்பலை அடையும் முன்பு அந்த அதிசய தங்கக் கண்ணாடி மீன் திடீரென்று அவனுடன் பேசத் தொடங்குகிறது.
பேசும் மீனா!!!
மச்சேந்திர மனோகரன் ஆச்சர்யத்தில் உறைகிறான்.
தொடரும் ...
Posted by KarthigaVasudevan at 11:41 AM 6 comments
Labels: கதை, கார்த்திகாவாசுதேவன், தொடர் கதை, மீன்இளவரசி மீனலோஷினி -1, ஹரிணி




